ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மெகா ஊழல்வாதிகளின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில் மோடி, ராகுல், ப.சிதம்பரம், அழகிரி, ஜி.கே.வாசன், மாயவதி, முலாயம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஊழல் புரிந்த மாநில தலைவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என்றும், அவர்களுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சுபாஷ் வாரே தெரிவித்துள்ளார். இதனால் மாநில அரசியல் கட்சி தலைவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
|