|
|||||
அரபிக்கடலில் புயல்: தமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட் |
|||||
அரபிக்கடலில் புயல் உருவாக உள்ளதால், தமிழகத்தில், 7-ந் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று மிக, மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யக்கூடும். இதனால் மீனவர்கள் 8-ந் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திற்கு அதிக மழையைத் தரும் வடக்கிழக்கு பருவமழை வருகிற 20ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒரு எச்சரிக்கையை மாநில அரசுகளுக்கு விடுத்துள்ளது. அதில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும். இதே போல கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்யும். இது அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும். தெற்கு அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம். தமிழகம், கேரளாவில் மிக, மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால், 2 மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘‘மழை குறித்து அறிவிப்பை மாவட்ட அதிகாரிகளுக்கு 4 வகையான வண்ணத்தில் தெரிவிப்போம். பச்சை என்றால், சாதாரண மழை, மஞ்சள் என்றால் கூர்ந்து கண்காணிக்க வேண்டும், ஆரஞ்சு என்றால் தயாராக இருக்க வேண்டும், சிவப்பு கலர் என்றால் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொருள்படும். அதனால் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கூறும்போது மட்டுமே ரெட் அலர்ட் கொடுக்கப்படும். இந்த கலர் மாவட்ட அதிகாரிகள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைதான். இந்த ரெட் அலர்ட் என்ற வார்த்தை தற்போது தமிழகத்துக்கு பொருந்தாது என்பதே எங்களது கருத்து. ரெட் அலர்ட் என்று கூறினால், பொதுமக்கள் பீதி அடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார். |
|||||
by Mani Bharathi on 05 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|