|
|||||
5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை! |
|||||
5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்துள்ள முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணி புரிந்து வருகிறார். அவருடைய மகன் மதுரம் ராஜ்குமார். அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 10 வயது சிறுவனான அவர், நொடிப் பொழுதில் கவிதை படைக்கிறார். இவரை இளம்கம்பன் என்றே சொல்லலாம். கவிதை எழுதுவதில் உலக சாதனை படைத்து, 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே "மதிப்புறு முனைவர்" பட்டம் பெற்று பலரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். மதுரம் ராஜ்குமாருக்கு, பொம்மை களோடு விளையாடி பொழுது போக்கும் இளம் வயதிலேயே கவிதை எழுதும் தனித்திறன் தானாய் வந்திருக்கிறது. அன்பு,அழுகை, இன்பம், துன்பமென எந்த நிகழ்வையும் கவிதையாக்கும் மதுரம் ராஜ்குமாரின் ஆற்றலைக் கண்டறிந்த பெற்றோரும், ஆசிரியர்களும் அவரை ஊக்கப்படுத்தி உள்ளனர். இதனால், 4 ஆம் வகுப்பு படிக்கும் போதே, "பள்ளி', "மகிழ்ச்சி', "கோபம்', "பட்டம்' உள்ளிட்ட 55 தலைப்புகளில் ரத்தினச்சுருக்கமாய் நல்ல கவிதைகளைப் படைத்தார். அவருடைய கவிதைகளைத் தொகுத்த பெற்றோர், "நல் விதையின் முதல் தளிர்' என்ற தலைப்பில் கவிதைகளை நூலாக வெளியிட்டனர். அந்த நூலுக்குப் பாராட்டுகளும், பல்வேறு அமைப்பின் விருதுகளும் குவிந்தன. மதுரம் ராஜ்குமாரின் திறனறிந்த "யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற நிறுவனம், கவிதை எழுதுவதில் இதுவரை எந்த சிறுவனும் நிகழ்த்தாத உலக சாதனையை நிகழ்த்துவதற்கு மதுரம் ராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கடந்த டிசம்பர் மாதம் 11ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பலரும் கொடுத்த பல்வேறு விதமான தலைப்புகளில் 173 கவிதைகளை எழுதி உலக சாதனை படைத்தார். மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்பினர் பலரும் இச் சிறுவனை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தனர். விடுமுறை தினங்களில் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று கவிதை பாடி வரும் இச்சிறுவனுக்கு "வாழப்பாடி இலக்கியப் பேரவை' இளங்கம்பன் விருது வழங்கி கௌரவித்தது. மதுரம் ராஜ்குமாரின்கவிப்புலமை கண்ட சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், ஏப்ரல் 14- ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் "மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கி பாராட்டியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மற்றும் பலரின் வாழ்த்துகளையும் மதுரம் ராஜ்குமார் பெற்று உள்ளார். தமிழ்த் தொலைக்காட்சிகள், பண்பலைகளில் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் வெகு பிரபலமாகிப் போன இச்சிறுவனின் அபரிமித கவியாற்றலும், ஆர்வமும், மன உறுதியும், இவரது பெற்றோர்களின் உந்துதலும், ஊக்கமும், பிற துறைகளிலும் சாதிக்கத் துடிக்கும் சிறுவர், சிறுமியருக்கு நடைமுறை எடுத்துக்காட்டாக மாறியுள்ளது என்றால், அதில் மிகையில்லை. "எனது மகனை தனியார் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 2 ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தக் கூட முடியாமல் போனதால், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பில் சேர்த்தேன். இந்த மாற்றமும் கூட எனது மகன் இளங்கவிஞராக மாறியதற்கு ஒரு காரணமானது மறுக்க முடியாத உண்மை ஆகும். எவ்விதத் திணிப்பும் இல்லாததால் மனதில் தோன்றுகின்ற கேள்விகளுக்கு விடை காண்பதற்கு அரசுப் பள்ளியும், ஆசிரியர்களும் உதவியாக இருந்தனர். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத எங்கள் குடிசை வீட்டில், பாரதியார், பாரதிதாசன் கவிதைப் புத்தகங்கள் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களுக்குப் பஞ்சமில்லை. நான்காம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுக்குமாறு எனது மகன் மதுரம் ராஜ்குமார் கேட்டதற்கு, நீயே உன் மனதில் தோன்றியதை எழுதிக் கொடு என்றேன். இது தான் இன்று, என் மகன் உலக சாதனை படைத்த கவிஞராக மாறியதற்கு அடித்தளமாக அமைந்ததாகக் கருதுகிறேன்'' என்றார் மதுரம் ராஜ்குமாரின் தந்தை செல்வக்குமார். "நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும், எனது பெற்றோர் சளைக்காமல் பதிலைத் தேடித் தந்தனர். சிறுவயதிலேயே நான் கவிதை நூல் வெளியிட்டு உலக சாதனை படைப்பதற்கும், பல விருதுகளைப் பெறுவதற்கும், தமிழறிஞர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தாய் மொழிக்கு என்னால் முடிந்த புகழைப் பெற்றுக் கொடுப்பேன். கவிதையில் மட்டுமின்றி கல்வியில் சாதிப்பதே என் எதிர்கால லட்சியம்'' என்கிறார் இளங்கம்பன் மதுரம் ராஜ்குமார். 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே முனைவர் பட்டம் பெற்று தமிழுக்குப் பெருமை சேர்த்த மதுரம் ராஜ்குமாரை, வலைத்தமிழ் பெரிதும் வாழ்த்துகின்றது. |
|||||
by Mani Bharathi on 28 Jun 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|