LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கம்பர் (Kambar )

சுந்தர காண்டம்-ஊர் தேடு படலம்

 

இலங்கையின் மாட்சி
'பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த?
என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத-
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம். 1
நாகாலயங்களொடு நாகர் உலகும், தம்
பாகு ஆர் மருங்கு துயில்வென்ன உயர் பண்பு;
ஆகாயம் அஞ்ச, அகல் மேருவை அனுக்கும்
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற. 2
'மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி,
மீகாரம் எங்கணும் நறுந் துகள் விளக்கி,
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி,
பாகு ஆய செஞ் சொலவர் வீசுபடு காரம். 3
'பஞ்சி ஊட்டிய பரட்டு, இசைக் கிண்கிணிப் பதுமச்
செஞ் செவிச் செழும் பவளத்தின் கொழுஞ் சுடர் சிதறி,
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து, அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ. 4
'நான நாள் மலர்க் கற்பக நறு விரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த, தாள் ஆறுடைப் பறவை
தேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய,
வான யாறு தம் அரமியத் தலம்தொறும் மடுப்ப. 5
'குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய,
மழலை மென் மொழி, கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்,
சுழலும் நல் நெடுந் தட மணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவு அரு நிலைய, 6
'இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசுண்ணும்;
அனையது ஆம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை
நினையலாம்? அன்றி, உவமையும் அன்னதாய் நிற்கும்! 7
'மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால்;
திணியும் நல் நெடுந் திருநகர், தெய்வ மாத் தச்சன்
துணிவின் வந்தனன், தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள். 8
'மரம் அடங்கலும் கற்பகம்; மனை எலாம் கனகம்;
அரமடந்தையர் சிலதியர், அரக்கியர்க்கு; அமரர்
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர்; ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது; தவம் செய்த தவமால். 9
'தேவர் என்பவர் யாரும், இத் திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்; செய்கிலாதவர் எவர் என்னின்,
மூவர்தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!
தா இல் மா தவம் அல்லது, பிறிது ஒன்று தகுமோ? 10
'"போர் இயன்றன தோற்ற" என்று இகழ்தலின், புறம் போய்
நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,
ஆரியம் தனி ஐங் கரக் களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேவருமே, இந் நகர் தொகாத. 11
'வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது, இவ் ஊர்;
ஆழி அண்டத்தின் அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம். 12
'தழங்கு பேரியின் அரவமும், தகை நெடுங் களிறு
முழங்கும் ஓதையும், மூரி நீர் முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல் புதுக் குதலையர் நூபுரக் குரலும்,
வழங்கு பேர் அருஞ் சதிகளும், வயின்தொறும் மறையும். 13
'மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
குரகதத் தடந் தேர்இனம்அவை பயில் கொட்டில்
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடுந் துறக்கம், இந் நகர்க்கு, 14
'திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்;
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப்
பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன்
உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15
'தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறுஞ் சேறும், 
வான நாள்மலர்க் கற்பக மலர்களும், வய மாத்
தான வாரியும், நீரொடு மடுத்தலின், தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும், அவ் வேலை. 16
'தெய்வத் தச்சனைப் புகழ்துமோ? செங் கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத
தொய்யல் சிந்தையேம், யாவரை எவ்வகை துதிப்பேம்? 17
'நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடுங் காலும்,
வாரி வானமும், வழங்கல ஆகும், தம் வளர்ச்சி;
ஊரின் இந் நெடுங் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,
மேரு எங்ஙனம் விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி? 18
'முன்னம் யாவரும், "இராவணன் முனியும் என்று எண்ணி,
பொன்னின் மா நகர் மீச் செலான் கதிர்" எனப் புகல்வார்-
கன்னி ஆரையின் ஒளியினில், கண் வழுக்குறுதல்
உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார். 19
'"தீய செய்குநர் தேவரால்; அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென்" என மதியா,
காயம் என்னும் அக் கணக்கு அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் - கயிலையை எடுத்தான். 20
"கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்!" 21
'கொண்ட வான் திரைக் குரை கடல் இடையதாய், குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று, இமைக்கின்ற எழிலால்,
பண்டு அரா-அணைப் பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது, இவ் அணி நகர் அமைதி. 22
இலங்கை மாந்தரின் பெருமித செல்வ வாழ்வு
'பாடுவார் பலர் என்னின், மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள்; மற்று அவரினும் பலர் உளர், அமைதி
கூடுவாரிடை இன்னியம் கொட்டுவார்; முட்டு இல்
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார். 23
'வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்;
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர்; அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார்; தொடர்ந்தால்,
ஏனை நாகியர் அரு நடக் கிரியை ஆய்ந்திருப்பார். 24
'இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி,
உழையர் என்ன நின்று, உதவுவ நிதியங்கள்; ஒருவர்
விழையும் போகமே, இங்கு இது? வாய்கொடு விளம்பின்,
குழையும்; நெஞ்சினால் நினையினும், மாசு என்று கொள்ளும். 25
'பொன்னின் மால் வரைமேல் மணி பொழிந்தன பொருவ, 
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ் முறை உரைக்க,
பன்னி, நாள் பல பணி உழந்து, அரிதினின் படைத்தான் -
சொன்ன வானவர் தச்சன் ஆம், இந் நகர் துதிப்பான். 26
'மகர வீணையின், மந்தர கீதத்தின், மறைந்த,
சகர வேலையின் ஆர் கலி; திசைமுகம் தடவும்
சிகர மாளிகைத் தலம்தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின, முகிற் குலம் அனைத்தும். 27
'பளிக்கு மாளிகைத் தலம்தொறும், இடம்தொறும், பசுந் தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள்தோறும்,
அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன். 28
'தேறல் மாந்தினர்; தேன் இசை மாந்தினர்; செவ் வாய்
ஊறல் மாந்தினர்; இன உரை மாந்தினர்; ஊடல்
கூறல் மாந்தினர்; அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர்-அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர். 29
'எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன; ஊடலில் கனன்று
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி. 30
விளரிச் சொல்லியர் வாயினால், வேலையுள் மிடைந்த
பவளக் காடு எனப் பொலிந்தது; படை நெடுங் கண்ணால்,
குவளைக் கோட்டகம் கடுத்தது; குளிர் முகக் குழுவால்,
முளரிக் கானமும் ஒத்தது-முழங்கு நீர் இலங்கை. 31
'"எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்றுகாறும்
கிழிந்திலது அண்டம்" என்னும் இதனையே கிளப்பது அல்லால்,
அழிந்துநின்று ஆவது என்னே? அலர் உளோன் ஆதியாக
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம், அரக்கருக்கு உறையும் போதா. 32
'காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்
ஆயத்தார்; வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ? மற்றுஓர்
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல். 33
'கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்
அழல் உலாம் கண்ணும், இல்லா ஆடவர் இல்லை; அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா
மழலை யாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ. 34
'கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த - காதல்
புன் உறத் தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ,
வெள் உறுப்பு எயிற்ற, செய்ய தலையன, கரிய மெய்ய,
உள் உறக் களித்த, குன்றின் உயர்ச்சிய,-ஓடை யானை. 35
'வள்ளி நுண் மருங்குல் என்ன, வானவர் மகளிர், உள்ளம்
தள்ளுற, பாணி தள்ளா நடம் புரி தடங் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர், தாம் வெள்குகின்றார்-
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார். 36
'ஒறுத்தலோ நிற்க; மற்று, ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கிமாரும், அரக்கரும், கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும், இவ் வீதி எல்லாம். 37
'வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலின மா விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள்தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம்
அடங்கியது என்னில், என்னே! ஆழியின் ஆழ்ந்தது உண்டோ ? 38
'விற் படை பெரிது என்கேனோ? வேற் படை மிகும் என்கேனோ?
மற் படை உடைத்து என்கேனோ? வாட் படை வலிது என்கேனோ?
கற்பணம், தண்டு, பிண்டிபாலம் என்று இனைய காந்தும்
நன் படை பெரிது என்கேனோ? - நாயகற்கு உரைக்கும் நாளில்.' 39
குறுகிய வடிவுடன் அனுமன் பவளக் குன்றில் தங்குதல்
என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி-
நின்றனன்; 'அரக்கர் வந்து நேரினும் நேர்வர்' என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, அச் சரளச் சாரல்
குன்றிடை இருந்தான்; வெய்யோன் குட கடல் குளிப்பதுஆனான். 40
செறிந்த பேரிருள்
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான்,
ஆய்வினை மனத்து இலான், அறிஞர் சொல் கொளான்,
வீவினை நினைக்கிலான், ஒருவன், மெய் இலான்,
தீவினை என, இருள் செறிந்தது எங்குமே. 41
கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன்,
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை,
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனனாம் என, பொலியும் பொற்பதே. 42
அணங்கு அரா அரசர் கோன், அளவு இல் ஆண்டு எலாம்,
பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய் விடம்
உணங்கல் இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து,
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே, 43
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை,
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்,
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே, 44
இருளிலும் அரக்கர் இயங்குதல்
அவ் வழி, அவ் இருள் பரந்த ஆயிடை,
எவ் வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்;
செவ் வழி மந்திரத் திசையர் ஆகையால்,
வெவ் வழி இருள் தர, மிதித்து, மீச்செல்வார். 45
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார்; எழில்
சந்திரன் உலகினைச் சார்குவார்; சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார்; அயில்
வெந் தொழில் அரக்கனது ஏவல் மேயினார். 46
பொன்னகர் மடந்தையர், விஞ்சைப் பூவையர், 
பன்னக வனிதையர், இயக்கர் பாவையர்,
முன்னின பணி முறை மாறி முந்துவார்,
மின் இனம் மிடைந்தென, விசும்பின் மீச்செல்வார். 47
தேவரும், அவுணரும், செங் கண் நாகரும்,
மேவரும் இயக்கரும், விஞ்சை வேந்தரும்,
யாவரும், விசும்பு இருள் இரிய ஈண்டினார்,
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார். 48
சித்திரப் பத்தியின் தேவர் சென்றனர்,
'இத்துணைத் தாழ்த்தனம்; முனியும்' என்று, தம்
முத்தின் ஆரங்களும், முடியும், மாலையும்,
உத்தரீயங்களும், சரிய ஓடுவார். 49
நிலவின் பொலிவு
தீண்ட அருந் தீவினை தீக்கத் தீந்து போய்,
மாண்டு, அற உலர்ந்தது, மாருதிப் பெயர்
ஆண்தகை மாரி வந்து அளிக்க, ஆயிடை,
ஈண்டு அறம் முளைத்தென, முளைத்தது இந்துவே. 50
'வந்தனன் இராகவன் தூதன்; வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம்' என்று ஏமுறா,
அந்தம் இல் கீழ்த் திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே. 51
கற்றை வெண் கவரிபோல், கடலின் வெண் திரை
சுற்றும் நின்று அலமர, பொலிந்து தோன்றிற்றால்-
'இற்றது என் பகை' என, எழுந்த இந்திரன்
கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே. 52
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால், திரை
முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான்
சொரிந்ததே ஆம் என, துள்ளும் மீனொடும்
விரிந்தது, வெண் நிலா, மேலும் கீழுமே. 53
அருந் தவன் சுரபியே ஆதி வான்மிசை
விரிந்த பேர் உதயமா, மடி வெண் திங்களா,
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா,
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே. 54
எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில, மறித்தும் போகில,
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி, ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற, மீன் எலாம். 55
எல்லியின் நிமிர் இருட் குறையும், அவ் இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும், கவ்வின;
புல்லிய பகை எனப் பொருவ போன்றன-
மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம். 56
வீசுறு பசுங் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது,
காசு உறு கடி மதில் இலங்கைக் காவல் ஊர்த்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே. 57
இகழ்வு அரும் பெருங் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என, அனுமன் பற்றினால்,
அகழ் புகுந்து, அரண் புகுந்து, இலங்கை, அன்னவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே. 58
மதிலின் மாண்பு கண்டு அனுமன் வியத்தல்
அவ் வழி, அனுமனும், அணுகலாம் வகை
எவ் வழி என்பதை, உணர்வின் எண்ணினான்;
செவ் வழி ஒதுங்கினன், தேவர் ஏத்தப் போய்,
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான். 59
ஆழி அகழ் ஆக, அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின் மேலை வெளிகாறும் முகடு ஏறி,
கேழ் அரிய பொன் கொடு சமைத்த, கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா, மதிலை உற்றான். 60
'"கலங்கல் இல் கடுங் கதிர்கள், மீது கடிது ஏகா,
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி" எனின், அன்றால்;
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே,
விலங்கி அகல்கின்றன, விரைந்து' என, வியந்தான். 61
'தெவ் அளவு இலாத; இறை தேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண், அண்டம் இடை ஆக
எவ் அளவின் உண்டு வெளி! ஈறும் அது!' என்னா,
வெவ் வள அரக்கனை மனக் கொள வியந்தான். 62
மடங்கல் அரிஏறும் மத மால் களிறும் நாண
நடந்து, தனியே புகுதும் நம்பி, நனி மூதூர்-
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந் திசையின் வாய் அனைய - வாயில் எதிர் கண்டான். 63
'மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைந்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ?' என நினைந்தான். 64
'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்,
ஊழின் முறை இன்றி, உடனே புகும்; இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்,
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை' என்றான். 65
வாயில் காவலை அனுமன் வியத்தல்
வெள்ளம் ஒரு நூறொடு இரு நூறும் மிடை வீரர்,
கள்ள வினை வெவ் வலி அரக்கர், இரு கையும்
'முள் எயிறும் வாளும் உற, முன்னம் முறை நின்றார்;
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான். 66
சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,
கால வரி வில், பகழி, கப்பணம், முசுண்டி,
கோல், கணையம், நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,
பாலம், முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார். 67
அங்குசம், நெடுங் கவண், அடுத்து உடல் வசிக்கும்
வெங் குசைய பாசம், முதல் வெய்ய பயில் கையர்;
செங் குருதி அன்ன செறி குஞ்சியர், சினத்தோர்,
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார். 68
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்
விளக்குஇனம் இருட்டினை விழுங்கி ஒளி கால,
உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்,
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான். 69
'எவ் அமரர், எவ் அவுணர், ஏவர் உளர்,-என்னே!-
கவ்வை முது வாயிலின் நெடுங் கடை கடப்பார்?
தெவ்வர் இவர்; சேமம் இது; சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின், எனாய் விளையும்?' என்றான். 70
கருங் கடல் கடப்பது அரிது அன்று; நகர் காவற்
பெருங் கடல் கடப்பது அரிது; எண்ணம் இறை பேரின்,
அருங் கடன் முடிப்பது அரிது ஆம்; அமர் கிடைக்கின்,
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள்' என நினைத்தான். 71
அனுமன் மதில்மேல் தாவிச் செல்ல முயல்தல்
'வாயில் வழி சேறல் அரிது; அன்றியும், வலத்தோர்;
ஆயில், அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்;
காய் கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்
போய், இந் நகர் புக்கிடுவென்' என்று, ஓர் அயல் போனான். 72
இலங்கைமாதேவி அனுமனைத் தடுத்தல்
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள்-போவதின் மேலே வழி நின்றாள்,
தூண் ஆம் என்னும் தோள் உடையானை,-சுடரோனைக்
காணா வந்த கட்செவி என்னக் கனல் கண்ணாள். 73
எட்டுத் தோளாள்; நாலு முகத்தாள்; உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்;
முட்டிப் போரில், மூஉலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள்; சுமை இல்லாள்; 74
பாராநின்றாள், எண் திசைதோறும், 'பலர் அப்பால்
வாராநின்றாரோ?' என; மாரி மழையேபோல்
ஆராநின்றாள்; நூபுரம் அச்சம் தரு தாளாள்;
வேரா நின்றாள்; மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள்; 75
வேல், வாள், சூலம், வெங் கதை, பாசம், விளி சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள்; வட குன்றம்
போல்வாள்; திங்கள்-போழின் எயிற்றாள்; புகை வாயில்
கால்வாள்; காணின், காலனும் உட்கும் கதம் மிக்காள். 76
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்; அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள்; அருள் இல்லாள்;
அம் சுவணத்தின் உத்தரியத்தாள்; அலை ஆரும்
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்; 77
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள்; தெளி நூல் யாழ்
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள்; அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பாடிக் களி கூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள்; 78
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள்; அவ் ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்;-
'நில்லாய்! நில்லாய்!' என்று உரை நேரா, நினையாமுன்
வல்லே சென்றாள்; மாருதி கண்டான், 'வருக' என்றான். 79
'ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என் ஆம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன் மதில் தாவிப் பகையாதே;
போகாய்' என்றாள்-பொங்கு அழல் என்னப் புகை கண்ணாள். 80
அனுமனும் இலங்காதேவியும் உரையாடுதல்
களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள,
விளியா நின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,
'அளியால் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்;
எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு?' என்றான். 81
என்னாமுன்னம், '"ஏகு" என, ஏகாது, எதிர் மாற்றம்
சொன்னாயே? நீ யாவன் அடா? தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர், எய்தற்கு; அளி உற்றால்,
உன்னால் எய்தும் ஊர்கொல் இவ் ஊர்?' என்று, உற நக்காள். 82
நக்காளைக் கண்டு, ஐயன், மனத்து ஓர் நகை கொண்டான்;
'நக்காய்! நீ யார்? ஆர் சொல வந்தாய்? உனது ஆவி
உக்கால் ஏது ஆம்? ஓடலை?' என்றாள்; 'இனி, இவ் ஊர்
புக்கால் அன்றிப் போகலென்' என்றான், புகழ் கொண்டான். 83
இலங்காதேவியின் சிந்தனை
'வஞ்சம் கொண்டான்; வானரம் அல்லன்; வரு காலன்
துஞ்சும், கண்டால் என்னை; இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்ட கண்ணுதலைப்போல் நகுகின்றான்'
நெஞ்சம் கண்டே, கல் என நின்றே, நினைகின்றாள்; 84
இருவரும் பொருதல்
'கொல்வாம்; அன்றேல், கோளுறும் இவ் ஊர்' எனல் கொண்டாள்,
'வெல்வாய் நீயேல், வேறி' என, தன் விழிதோறும்,
வல் வாய்தோறும், வெங் கனல் பொங்க, மதி வானில்
செல்வாய்' என்னா, மூவிலைவேலைச் செல விட்டாள். 85
தடித்து ஆம் என்னத் தன் எதிர் செல்லும் தழல் வேலைக்
கடித்தான், நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன்போல்,
ஒடித்தான் கையால்-உம்பர் உவப்ப, உயர் காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென,-எண்ணம் பிழையாதான். 86
இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,
மற்றும் தெய்வப் பல் படை கொண்டே மலைவாளை
உற்று, கையால், ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றிக் கொள்ளா, விண்ணில் எறிந்தான், பழி இல்லான். 87
வழங்கும் தெய்வப் பல் படை காணாள், மலைவான்மேல்,
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்-
கழங்கும் பந்தும் குன்றுகொடு ஆடும் கரம் ஒச்சித்
தழங்கும் செந் தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள். 88
அனுமன் அறைய இலங்கைமாதேவி மண்ணில் வீழ்தல்
அடியாமுன்னம், அம் கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, 'என்னே? பெண் இவள்; கொல்லின் பிழை' என்னா,
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான்; உயிரோடும்,
இடிஏறு உண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தாள். 89
விழுந்தாள் நொந்தாள்; வெங் குருதிச் செம்புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள்; நான்முகனார்தம் அருள் ஊன்றி
எழுந்தாள்; யாரும், யாரையும், எல்லா உலகத்தும்,
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று, இவை சொன்னாள்: 90
இலங்கைமாதேவி தன் வரலாறு கூறல்
'ஐய! கேள்; வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி, இம் மூதூர் காப்பன்; இலங்கைமாதேவி என் பேர்;
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து, இந்தச் சிறுமை செய்தேன்;
"உய்தி" என்று, அளித்திஆயின், உணர்த்துவல் உண்மை' என்றாள். 91
'எத்தனை காலம் காப்பன், யான் இந்த மூதூர்? என்று, அம்
முத்தனை வினவினேற்கு, "முரண் வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம்அதனால் தீண்டிக் காய்ந்த அன்று, என்னைக் காண்டி;
சித்திர நகரம், பின்னை, சிதைவது திண்ணம்" என்றான். 92
'அன்னதே முடிந்தது; ஐய, "அறம் வெல்லும்; பாவம் தோற்கும்"
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்; உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி என்னாப் புகழ்ந்து, அவள் இறைஞ்சிப் போனாள். 93
இலங்கையுள் அனுமன் புகுதல்
வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே; விளைவும் அஃது' என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன் மதில் தாவிப் புக்கான் -
சீரிய பாலின் வேலைச் சிறு பிரை தெறித்தது அன்னான். 94
இலங்கையின் ஒளிச் சிறப்பை வியத்தல்
வான் தொடர், மணியின் செய்த, மை அறு, மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அழகை நோக்கி,
'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ?' என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான். 95
'மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா, "மிகை" என விலங்கிப் போனான்;
இம் மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன் முன் எய்தும்
மின்மினி அல்லனோ, அவ் வெயில் கதிர் வேந்தன்? அம்மா!' 96
'பொசிவுறு பசும் பொன் குன்றில், பொன் மதில் நடுவண் பூத்து,
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர், ஆர் இருள் இன்மையாலோ,
நிசிசரர் ஆயினார், இந் நெடு நகர் நிருதர் எல்லாம்? 97
நகரினுள் அனுமன் மறைந்து சென்ற வகை
என்றனன் இயம்பி, 'வீதி ஏகுதல் இழுக்கம்' என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சார,
சென்றனன் - என்ப மன்னோ - தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் என, குலவு தோளான். 98
ஆத் துறு சாலைதோறும், ஆனையின் கூடம்தோறும்,
மாத் துறு மாடம்தோறும், வாசியின் பந்திதோறும்,
காத்து உறு சோலைதோறும், கருங் கடல் கடந்த தாளான்,
பூந்தொறும் வாவிச் செல்லும் பொறி வரி வண்டின், போனான். 99
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியன்ஆய், வெளியன் ஆகி, செய்யன் ஆய், காட்டும்-காண்டற்கு
அரியன்ஆய், எளியன் ஆய், தன் அகத்து உறை அழகனேபோல். 100
அனுமன் பற்பல நிலையிலுள்ள அரக்கர்களைக் காணுதல்
ஈட்டுவார், தவம் அலால் மற்று ஈட்டினால், இயைவது இன்மை
காட்டினார் விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!-
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய, பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர்; ஆடுவார் அரக்கர் மாதர். 101
கானக மயில்கள் என்ன, களி மட அன்னம் என்ன,
ஆனைக் கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலை, தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்,
வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை- 102
'இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்,
அலத்தகத் தளிர்க்கை நோவ, அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்குற முழங்கிற்று' என்று சேடியர் கன்னிமார்கள்,
மலர்க்கையால், மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை- 103
சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை,
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை- 104
திருத்திய பளிக்கு வேதி, தெள்ளிய வேல்கள் என்ன,
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கருங் கயல், செம்மை காட்ட,
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர்போல், அரு நறவு அருந்துவாரை- 105
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள,
தூதுளங் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல்அம் கள் உண்டார்போல், முறை முறை களிக்கின்றாரை- 106
வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறுங் கலவை பூசி,
அற்புத வடிக் கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொற்
கற்பகம் கொடுக்க வாங்கி, கலன் தெரிந்து அணிகின்றாரை- 107
புலி அடு மதுகை மைந்தர் புதுப் பிழை உயிரைப் புக்கு
நலிவிட, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவுடை மருங்குல் மின்னின் அலமர, சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும்தோறும், மயிர்ப் புளகு உறுகின்றாரை- 108
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து, வாய் வெண்மை ஊறி,
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப, வேர் பொடிப்ப, தூய
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கி, கணவரைக் கனல்கின்றாரை- 109
ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110
நலன் உறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் இலா முளரிச் செங் கேழ்
மலர்மிசை மலர் பூத்தென்ன, மலர்க்கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை- 111
ஏதிஅம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை, உயிர் இலா உடலின் சாய்வார்,
மா துயர்க் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர் வந்து துடிக்கின்றாரை- 112
சங்கொடு, சிலம்பும், நூலும், பாத சாலகமும் தாழ,
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றி,
கொங்கு அலர் கூந்தல், செவ் வாய், அரம்பையர் பாணி கொட்டி
மங்கல கீதம் பாட, மலர்ப் பலி வகுக்கின்றாரை- 113
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க்
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழை தொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழை தொடர் மஞ்ஞை என்ன, விழாவொடு வருகின்றாரை- 114
பள்ளியில், மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி,
ஒள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மெள்ளவே இமையை நீக்கி, அஞ்சன இழுது வேய்ந்த 
கள்ள வாள் நெடுங் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை- 115
ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள, ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அருங் கதவு அடைக்கின்றாரை- 116
கின்னர மிதுனம் பாட, கிளர் மழை கிழித்துத் தோன்றும்
மில் என, தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப் பலாண்டு இசை பரவ, பண்ணைப்
பொன் நகர் வீதிதோறும், புது மனை புகுகின்றாரை- 117
கோவையும் குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப,
தேவர் நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்ப,
பாவையர் குழாங்கள் சூழ, பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூற, புது மணம் புணர்கின்றாரை- 118
அனுமன் கும்பகருணனைக் காணுதல்
இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். 119
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது; உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது; இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட, அலைக்கல் ஆன்றது. 120
அன்னதன் நடுவண், ஓர் அமளி மீமிசை,
பன்னக அரசு என, பரவைதான் என,
துன் இருள் ஒருவழித் தொக்கது ஆம் என,
உன்ன அருந் தீவினை உருக் கொண்டென்னவே, 121
முன்னிய கனை கடல் முழுகி, மூவகைத்
தன் இயல் கதியொடு தழுவி, தாது உகு
மன் நெடுங் கற்பக வனத்து வைகிய
இன் இளந் தென்றல் வந்து இழுகி ஏகவே. 122
வானவர் மகளிர் கால் வருட, மா மதி
ஆனனம் கண்ட, மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு, காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்
தூ நிற நறுந் துளி முகத்தில் தூற்றமே. 123
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,
வாசலின் புறத்திடை நிறுவி, வன்மையால்,
நாசியின் அளவையின் நடத்த, கண்டவன்
கூசினன்; குதித்தனன், விதிர்த்த கையினான். 124
பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழ் இல் வெங் கொடியவன் உயிர்ப்பு-கேடு இலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே. 125
பகை என, மதியினைப் பகுத்து, பாடு உற
அகை இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என,
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே, 126
தடை புகு மந்திரம் தகைந்த நாகம்போல்,
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் -
கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து, அயல்
புடை பெயரா நெடுங் கடலும் போலவே. 127
இராவணனோ எனச் சினந்து பின் அவன் அல்லன் என அறிந்து அனுமன் சினம் தணிதல்
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, 'அரக்கர்
கோ எனா நின்ற குணம்இலி இவன்' எனக் கொண்டான்;
கா வல் நாட்டங்கள் பொறி உக, கனல் எனக் கனன்றான்;
'ஏவனோ இவன்? மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான்!' 128
குறுகி நோக்கி, மற்று, 'அவன் தலை ஒருபதும், குறித்த
இறுகு திண் புயம் இருபதும், இவற்கு இலை' என்னா,
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெங் கனலி,
அறிவு எனும் பெரும் பரவைஅம் புனலினால், அவித்தான். 129
பிற இடங்களில் தேடல்
அவித்து நின்று, 'எவன் ஆயினும் ஆக' என்று, அங்கை
கவித்து, 'நீங்கிடச் சில பகல்' என்பது கருதா,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன், அனையவன் உறையுளைக் கடந்தான். 130
மாட கூடங்கள், மாளிகை ஒளிகை, மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்
நாடி ஏகினன் - இராகவன் புகழ் எனும் நலத்தான். 131
மணி கொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் என, புகை என, கலக்கும்;
நுணுகும், வீங்கும்;-மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?-
அணுவில் மேருவில் ஆழியான் எனச் செலும், அனுமன். 132
அனுமன் வீடணன் மாளிகை புகுதலும், அவன் நல்லன் எனத் தேர்ந்து செல்லுதல்
ஏந்தல், இவ் வகை, எவ் வழிமருங்கினும் எய்தி,
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்,
வேந்தர், வேதியர், மேல் உளோர், கீழ் உளோர், விரும்பப்
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான். 133
'பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்து, பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது' என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான். 134
உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்;
'குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன்' எனக் கொண்டான்;
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒரு சிறைச் சென்றான்;
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடைப் புக்கான். 135
இந்திரசித்தின் வீரப் பொலிவை வியந்து மேலே போதல்
முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம் பல கடந்து, தன் மனத்தின் முன் செல்வான்,
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான். 136
ஏதி ஏந்திய தடக் கையர், பிறை எயிறு இலங்க
மூதுரைப் பெருங் கதைகளும் பிதிர்களும் மொழிவார்,
ஓதில், ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர்,
காது வெஞ் சினக் களியினர், காவலைக் கடந்தான். 137
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறுவகை முகமும்,
திக்கு நோக்கிய புயங்களும், சில கரந்தனையான்
ஒக்க, நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப்
புக்கு நோக்கினன் - புகை புகா வாயிலும் புகுவான். 138
'வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?-
அளையில் வாள் அரி அனையவன் - யாவனோ? அறியேன்;
இளைய வீரனும், ஏந்தலும், இருவரும், பலநாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது' என உணர்ந்தான். 139
'இவனை இன் துணை உடைய போர் இராவணன், என்னே,
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் எனப் புகறல்?
சிவனை, நான்முகத்து ஒருவனை, திரு நெடுமால் ஆம்
அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ? 140
என்று, கைம் மறித்து, 'இடை நின்று காலத்தை இகப்பது
அன்று; போவது' என்று, ஆயிரம் ஆயிரத்து அடங்காத்
துன்று மாளிகை ஒளிகள் துரிசு அறத் துருவிச்
சென்று தேடினன், இந்திரசித்தினைத் தீர்ந்தான். 141
அக்கன் மாளிகை கடந்து போய், மேல், அதிகாயன்
தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி,
தக்க மந்திரத் தலைவர் மா மனைகளும் தாவிப்
புக்கு நீங்கினன், இராகவன் சரம் என, புகழோன். 142
இடைநகர் அகழியைக் கண்ட அனுமனின் வியப்பு
இன்னர் ஆம் இரும் பெரும் படைத் தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்,
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்,
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான். 143
தனிக் கடக் களிறு என ஒரு துணை இலான் தாய
'பனிக் கடல் பெருங் கடவுள் தன் பரிபவம் துடைப்பான்,
இனி, கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது' என்று, இசைத்தான் -
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன், அகழியைக் கண்டான். 144
'"பாழி நல் நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல்" பல பேர்,
ஊழிக்காலம் நின்று, உலகு எலாம் கல்லினும் உலவாது;
ஆழி வெஞ் சினத்து அரக்கனை அஞ்சி, ஆழ் கடல்கள்
ஏழும், இந் நகர் சுலாயகொலாம்' என, இசைத்தான். 145
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,
'தாய வேலையின் இரு மடி விசைகொடு தாவிப்
போய காலத்தும் போக்கு அரிது' என்பது புகன்றான் -
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான். 146
இடைநகர் அகழியின் ஏற்றம்
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழத்
தூக்கினாலன்ன தோயத்ததுஆய், துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை,
வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ? 147
ஆனை மும் மதமும், பரி ஆழியும்,
மான மங்கையர் குங்கும வாரியும்,
நானம் ஆர்ந்த நறைக் குழல் ஆவியும்,
தேனும், ஆரமும், தேய்வையும், நாறுமால், 148
உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்,
அன்னம், கோழி, வண்டானங்கள், ஆழிப்புள்,
கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்,
சென்னம், காகம், குணாலம், சிலம்புமே. 149
நலத்த மாதர் நறை அகில், நாவியும்,
அலத்தகக் குழம்பும், செறிந்து, ஆடிய
இலக்கணக் களிறோடு, இள மெல் நடைக்
குலப் பிடிக்கும், ஓர் ஊடல் கொடுக்குமால். 150
நறவு நாறிய நாள் நறுந் தாமரை
துறைகள்தோறும் முகிழ்த்தன தோற்னுமால் -
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ? 151
பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும், வெள்ளமும், மெய் தெரியாது, மேல் -
தெளிந்த சிந்தையரும், சிறியார்களோடு
அளிந்தபோது, அறிதற்கு எளிது ஆவரோ? 152
நீலமே முதல் நல் மணி நித்திலம்,
மேல கீழ, பல் வேறு ஒளி வீசலால்,
'பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ?' என, காட்டுமே. 153
அகழியைக் கடந்து நகரினுள் அனுமன் தேடுதல்
அன்ன வேலை அகழியை, ஆர்கலி 
என்னவே கடந்து, இஞ்சியும், பிற்பட,
துன்ன அருங் கடி மா நகர் துன்னினான்;
பின்னர் எய்திய தன்மையும், பேசுவாம்: 154
கரிய நாழிகை பாதியில், காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம் பதி,
ஒருவனே, ஒரு பன்னிரு யோசனைத்
தெருவு மும்மை நூறாயிரம் தேடினான். 155
இலங்கையில் நடு நிசி
வேரியும் அடங்கின; நெடுங் கடல் விளம்பும்,
பாரியும் அடங்கின; அடங்கியது பாடல்;
காரியம் அடங்கினர்கள், கம்மியர்கள்; மும்மைத்
தூரியம் அடங்கின; தொடங்கியது உறக்கம். 156
இறங்கின, நிறம் கொள் பரி; ஏமம் உற எங்கும்
கறங்கின, மறம் கொள் எயில் காவலர் துடிக் கண்;
பிறங்கு இணர் நறுங் குழலர் அன்பர் பிரியாதோர்,
உறங்கினர், பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார். 157
வடம் தரு தடங் கொள் புய மைந்தர், கலவிப் போர்
கடந்தனர்; இடைந்தனர், களித்த மயில் போலும்
மடந்தையர் தடந் தன முகட்டிடை மயங்கிக்
கிடந்தனர்; நடந்தது, புணர்ச்சி தரு கேதம். 158
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்;
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்;
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்,
தூம நறையின் துறை பயின்றிலர், துயின்றார். 159
பண் இமை அடைத்த, பல கள்-பொருநர் பாடல்;
விண் இமை அடைத்தென, விளைந்தது இருள்; வீணை
தண் இமை அடைத்தன; தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன; அடைத்தன கபாடம். 160
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தென்றல், உணர்வு உண்டு அயல் உலாவ,
சொரிந்தன கருங் கண், வரு துள்ளி தரு வெள்ளம்;
எரிந்தன, பிரிந்தவர்தம் எஞ்சு தனி நெஞ்சம். 161
இளக்கர் இழுது எஞ்ச, விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல், பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்க அரிய ஆசை உற வீசா,
விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம். 162
நித்தம் நியமத் தொழிலர் ஆய், நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்;
மத்த மத வெங் களிறு உறங்கின; மயங்கும்
பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரிது என ஆம்? 163
அகநகரினுள் சென்று அனுமன் தேடுதல்
ஆய பொழுது, அம் மதில் அகத்து, அரசர் வைகும்
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவிப் போய்,
தீயவன் இருக்கை அயல், செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் - வினைப் பகையை வென்றான். 164
போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களா,
தாரகைக் குழுவின் தழுவித் தொடர்,
நாரியர்க்கு உறைவு ஆம், இடம் நண்ணினான். 165
முயல் கருங் கறை நீங்கிய மொய்ம் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்,
இயக்கர் மங்கையர், யாவரும் ஈண்டினார்,
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான். 166
தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்,
இழைந்த நூலினும், இன் இளங்காலினும்,
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்-
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான். 167
இராவணனுக்கு உரிய இயக்க மாதர்களின் நிலைமை
அத்திரம் புரை யானை அரக்கன்மேல்
வைத்த சிந்தையர், வாங்கும் உயிர்ப்பிலர்,
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற,
சித்திரங்கள் என, இருந்தார் சிலர். 168
அள்ளல் வெஞ் சர மாரனை அஞ்சியோ?
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?
கள்ளம் என்கொல்? அறிந்திலம் - கண் முகிழ்த்து,
உள்ளம் இன்றி, உறங்குகின்றார் சிலர். 169
பழுது இல் மன்மதன் எய் கணை பல் முறை
உழுத கொங்கையர், ஊசல் உயிர்ப்பினர்,
'அழுது செய்வது என்? ஆணை அரக்கனை
எழுதலாம்கொல்?' என்று, எண்ணுகின்றார் சிலர். 170
'ஆவது ஒன்று அருளாய்; எனது ஆவியைக்
கூவுகின்றிலை; கூறலை சென்று' எனா,
பாவை பேசுவதுபோல், கண் பனிப்பு உற,
பூவையோடும் புலம்புகின்றார் சிலர். 171
ஈரத் தென்றல் இழுக மெலிந்து, தம்
பாரக் கொங்கையைப் பார்த்தனர்; பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் நினைந்து, உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர். 172
நக்க செம் மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில், பல் பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்,
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர். 173
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். 174
கவ்வு தீக் கணை, மேருவைக் கால் வளைத்து,
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து, தம் மா முலை வவ்விய
செவ்வி கண்டு, குலாவுகின்றார் சிலர். 175
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆவினான் புகழ், அம் கை நரம்பினால்
நாடி, நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர். 176
இராவணனின் உரிமை மகளிராம் அரக்கியரின் நிலைமை
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய்,
அனையவன் குலத்து ஆயிழையார் இடம்
நினைவின் எய்தினன் - நீதியின் எய்தினான். 177
எரி சுடர் மணியின் செங் கேழ் இள வெயில் இடைவிடாது
விரி இருள் பருகி, நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவும் நீங்க, ஆசையும் தாமுமே ஆய்,
ஒரு சிறை இருந்து, போன உள்ளத்தோடு ஊடுவாரும். 178
நகை எரிக் கற்றை நெற்றி நாவி தோய்ந்தனைய ஓதி,
புகை எனத் தும்பி சுற்ற, புது மலர்ப் பொங்கு சேக்கை
பகை என ஏகி, யாணர்ப் பளிங்குடைச் சீதப் பள்ளி,
மிகை ஒடுங்காத காம விம்மலின், வெதும்புவாரும். 179
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக,
குவியும் மீன் ஆரம் ஆக, மின் கொடி மருங்குல் ஆக,
கவிர் ஒளிச் செக்கர் கற்றை ஓதியா, மழை உண் கண்ணா,
அவிர் மதி நெற்றி, ஆக, அந்தி வான் ஒக்கின்றாரும். 180
பானல் உண் கண்ணும் வண்ணப் படி முறை மாற, பண்ணைச்
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர,
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி,
வான மீன் கையின் வாரி, மணிக் கழங்கு ஆடுவாரும். 181
உழை உழைப் பரந்த வான யாற்றுநின்று, உம்பர் நாட்டுக்
குழை முகத்து ஆயம், தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி,
இழை தொடுத்து இலங்கும் மாடத்து, இடை தடுமாற ஏறி,
மழை பொதுத்து, ஒழுகு நீரால், மஞ்சனம் ஆடுவாரும். 182
'பன்னக அரசர் செங் கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி, 
இன் உயிர்க் கணவன் ஈந்தான்; ஆம்' என, இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆக,
பொன் அணி பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும். 183
தென் நகு குடம், உள்-பாடல், சித்தியர் இசைப்ப, தீம் சொல்
பன்னக மகளிர் வள் வார்த் தண்ணுமைப் பாணி பேண,
பொன்னகர்த் தரளப் பந்தர், கற்பகப் பொதும்பர், பொன்-தோள்
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் 184
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண் கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர், செய்வது ஓரார்,
வீணையும், குழலும், தம்தம் மிடறும், வேற்றுமையின் தீர்ந்த,
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உகப் பாடுவாரும். 185
தண்டலை வாழை அன்ன குறங்கிடை, அல்குல் தட்டில்,
கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோர, கூர்ங் கள்
உண்டு அலமந்த கண்ணார், ஊசலிட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீச, குரவையில் குழறுவாரும். 186
நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி,
பிச்சரின் பிதற்றி, அல்குல் பூந் துகில் கலாபம் பீறி,
குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள, குழுக் கொண்டு ஈண்டி,
சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும். 187
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற, அறிவு தள்ளி,
பயிர் உற, 'தெய்வம் என் மேல் படிந்தது; பார்மின்!' என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர் நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து ஒடுங்குவாரும். 188
இத் திறத்து அரக்கிமார்கள் ஈர்-இரு கோடி ஈட்டம்
பத்தியர் உறையும், பத்திப் படர் நெடுந் தெருவும் பார்த்தான்;
சித்தியர் உறையும் மாடத் தெருவும் பின்னாகச் சென்றான்;
உத் திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான். 189
விஞ்சை மகளிரின் நிலை
வளர்ந்த காதலர், மகரிகை நெடு முடிஅரக்கனை வரக் காணார்,
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட, உயிரொடு தடுமாறி,
களம் தவா நெடுங் கருவியில், கைகளில், செயிரியர், கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக, அலமரலுறுகின்றார். 190
'புரியும் நல் நெறி முனிவரும், புலவரும், புகல் இலாப் பொறைகூர, 
எரியும் வெஞ் சினத்து இகல் அடு கொடுந் திறல் இராவணற்கு, எஞ் ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர்' என வயிர்த்து ஒரு பகை கொடு, பனித் திங்கள்
சொரியும் வெங் கதிர் துணை முலைக் குவை சுட, கொடிகளின் துடிக்கின்றார் 191
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை, திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலை முன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாட் கண்கள் சிவப்புற நோக்கினர்; வயிர்த்தனர்; உயிர்க்கின்றார் 192
அனுமன் மண்டோ தரியைக் கண்டு, 'சீதையோ' என ஐயுற்று, தெளிதல்
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு-இரண்டு அமை கோடித்
தூய மாளிகை நெடுந் தெருத் துருவிப் போய், தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம். 193
கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாவினன், 'காரணம் கடை நின்றது;
உண்டு வேறு ஒரு சிறப்பு; எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது!' என, வியப்புற்றான். 194
அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, ஆதியர், மலர்க் காமன்
சரம் பெய் தூணிபோல் தளிர் அடி தாம் தொட, சாமரை பணிமாற,
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர், காமரம் கனி யாழின்
நரம்பின் இன் இசை செவி புக, நாசியில் கற்பக விரை நாற,- 195
'விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும், கீழ்மையர் வெகுள்வுற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது?'என்று ஐயுறு பீழையால்,பெருந்தென்றல்,
உழையர் கூவ, புக்கு, 'ஏகு' என, பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்-
'பழையம் யாம்' என, பண்பு அல செய்வரோ பருணிதர், பயன் ஓர்வார்? 196
இன்ன தன்மையின், எரி மணி விளக்கங்கள் எழில் கெடப் பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைப்புறத் துயில்வுறு தையலை, தகைவு இல்லான்,
'அன்னள் ஆகிய சானகி இவள்' என அயிர்த்து, அகத்து எழு வெந் தீ,
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து, இவை சொன்னான்: 197
'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க;
அற்பு வான் தளை இற் பிறப்புஅதனொடும் இகந்து தன் அருந் தெய்வக்
கற்பு நீங்கிய கனங் குழை இவள் எனின், காகுத்தன் புகழோடும்
பொற்பும் யானும்,இவ் இலங்கையும் அரக்கரும்,பொன்றுதும் இன்று'என்றான். 198
'மானுயர்த் திரு வடிவினள் அவள்; இவள் மாறு கொண்டனள்; கூறின்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை' என்றான். 199
'இலக்கணங்களும் சில உள என்னினும், எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு' என்று, எடுத்து அறைகுவது, இவள் யாக்கை;
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇ, சில மாற்றங்கள் பறைகின்றாள்;
உலக்கும் இங்கு இவள் கணவனும்; அழிவும், இவ்வியன் நகர்க்கு உளது!' என்றான். 200
இராவணன் மனையுள் அனுமன் புகுதலும், தீக்குறி காணலும்
என்று உணர்ந்துநின்று ஏமுறும் நிலையினில், 'நிற்க இத் திறன்' என்னா,
பின்று சிந்தையன் பெயர்ந்தனன்; அம் மனை பிற்பட, பெரு மேருக்
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகைதன்னில்
சென்று புக்கனன், இராவணன் எடுப்பு அருங் கிரி எனத் திரள் தோளான். 201
நிலம் துடித்தன; நெடு வரை துடித்தன; நிருதர்தம் குல மாதர்
பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,
வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்
கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள். 202
புக்கு நின்று, தன் புலன் கொள நோக்கினன்; பொரு அருந் திரு உள்ளம்
நெக்கு நின்றனன்; 'நீங்கும், அந்தோ இந்த நெடு நகர்த் திரு!' என்னா,
'எக் குலங்களின் யாவரே ஆயினும், இரு வினை எல்லோர்க்கும்
ஒக்கும்; ஊழ் முறை அல்லது, வலியது ஒன்று இல்' என, உணர்வுற்றான். 203
துயிலும் இராவணனைக் கண்ட அனுமன் சினந்து அவனைக் கொல்ல நினைத்தல்
நூல்-பெருங்கடல் நுணங்கிய கேள்வியன், நோக்கினன்; மறம் கூரும்
வேல்-பெருங்கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில்,
பால்-பெருங்கடல் பல் மணிப் பல் தலைப் பாப்புடைப் படர் வேலை
மால்-பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன், துயில்வானை- 204
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட, இரவு எனும் பெயர் வீய,
முழை கொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்,
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி,முன்,துயில்வது ஓர் தகையானை- 205
ஆய பொன்-தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய வெண் கவரித் திரள் இயக்கிட, சுழி படு பசுங் காற்றின்,
மீய கற்பகத் தேன்துளி விராயன வீழ்தொறும், நெடு மேனி
தீய, நல் தொடிச் சீதையை நினைதொறும் உயிர்த்து, உயிர் தேய்வானை- 206
குழந்தை வெண் மதிக் குடுமியின் நெடு வரை குலுக்கிய குலத் தோளைக்
கழிந்து புக்கு, இடை கரந்தன, அனங்கன் வெங்கடுங் கணை பல பாய,
உழந்த வெஞ் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற
பழந் தழும்பினுக்கு இடை இடையே, சில பசும் புண்கள் அசும்பு ஊற, 207
சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசுந் தென்றல்,
ஏந்து காம வெங் கனல் உயிர்த்து, இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற, 
காந்தள் மெல் விரல் சனகிமேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட,
பாந்தள் நீங்கிய முழை என, குழைவுறு நெஞ்சு பாழ்பட்டானை- 208
கொண்ட பேர் ஊக்கம் மூள, திசைதொறும் குறித்து மேல்நாள்
மண்டிய செருவில், மானத் தோள்களால் வாரி வாரி
உண்டது தெவிட்டி, பேழ் வாய்க் கடைகள்தோறு ஒழுகிப் பாயும்
அண்டர் தம் புகழின் தோன்றும், வெள் எயிற்று அமைதியானை- 209
வெள்ளி வெண் சேக்கை வெந்து, பொறி எழ, வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்க,
கள் அவிழ் மாலைத் தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப,
ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை- 210
தே இயல் நேமியானின், சிந்தை மெய்த் திருவின் ஏக,
பூ இயல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானை,
காவி அம் கண்ணிதன்பால் கண்ணிய காதல் நீரின்,
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை- 211
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,
நகும் தகை முகத்தன், காதல் நடுக்குறு மனத்தன், 'வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே
புகுந்தனள் அன்றோ?' என்று, மயிர் புறம் பொடிக்கின்றானை- 212
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூறுமேனும்,
குன்று ஒழித்து ஒரு மாக் குன்றின் அரிதின் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன்-தோள் மணந்து, அரு மயிலே அன்னார்,
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக, அரிய தோள் ஒழுக்கினானை- 213
தழுவா நின்ற கருங் கடல்மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன, மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய்,
முழு வானவர்ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை- 214
தோடு உழுத தார் வண்டும், திசை யானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,
மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள,
கோடு உழுத மார்பானை, கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி,
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை- 215
கண்டனன்; காண்டலோடும், கருத்தின் முன் காலச் செந் தீ
விண்டன கண்கள்; கீண்டு வெடித்தன, கீழும் மேலும்;-
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான்-
திண் தலை பத்தும், தோள்கள் இருபதும், தெரிய நோக்கி. 216
'தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என்
தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய், முடியேனே! 217
'நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான்? நன்னுதலைப்
பிடித்து, வாழ் அரக்கனார், யான் கண்டும் பிழைப்பாரோ?
ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,
முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக!' 218
ஆய்ந்து பார்த்து, அனுமன் கோபம் தணிதல்
என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரனும் பிசைந்து, எழுந்து,
நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான், 'நேமியோன் பணி அன்றால்;
ஒன்று ஊக்கி, ஒன்றுஇழைத்தல், உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்;
பின் தூக்கின், இது சாலப் பிழை பயக்கும்' எனப் பெயர்ந்தான். 219
ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர்எனினும்,
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ?-
மூலம் பார்க்குறின், உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்,
காலம் பார்த்து, இறை வேலை கடவாத கடல் ஒத்தான். 220
'இற்றைப் போர்ப் பெருஞ் சீற்றம் என்னோடும் முடிந்திடுக;
"கற்றைப் பூங் குழலாளைச் சிறை வைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது, ஒரு குரங்கு" என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்குக் குறை உண்டாம்' என, குறைந்தான் 221
அந் நிலையான், பெயர்த்த் உரைப்பான்; 'ஆய் வளைக் கை அணிஇழையார்
இந் நிலையானுடன் துயில்வார் உளர்அல்லர்; இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை; பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்!' 222
சீதையைக் காணாமையால் இலங்கையை அழித்து, தானும் மாள அனுமன் எண்ணுதல்
என்று எண்ணி, 'ஈண்டு இனி ஓர் பயன் இல்லை' என நினையா,
குன்று அன்ன தோளவன்தன் கோமனை பிற்பட, பெயர்ந்தான்;
நின்று எண்ணி உன்னுவான், 'அந்தோ! இந் நெடு நகரில்
பொன் துன்னும் மணிப் பூணாள் இலள்' என்ன, பொருமுவான். 223
'கொன்றானோ கற்பு அழியாக் குல மகளை? கொடுந் தொழிலால்
தின்றானோ? எப் புறத்தே செறிந்தானோ, சிறை? சிறியேன்
ஒன்றானும் உணரகிலேன்; மீண்டு, இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு, இக் கொடுந் துயரம் போகாதால். 224
'"கண்டு வரும்" என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக் கோன்,
"கொண்டு வரும்" என்று இருக்கும்; யான் இழைத்த கோள் இது வால்;
புண்டரிக நயனத்தான்பால், இனி, யான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது, யான் வாளா விளிவேனோ? 225
'"கண்ணிய நாள் கழிந்துளவால்; கண்டிலமால் கனங்குழையை;
விண் அடைதும்" என்றாரை ஆண்டு இருத்தி, விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன்; இனி முடியாது இருப்பேனோ?
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால். 226
'ஏழு நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இவ் இலங்கை
வாழும் மா மன் உயிர், யான் காணாத மற்று இல்லை;
ஊழியான் பெருந் தேவி ஒருத்தியுமே யான் காணேன்;
ஆழி தாய், இடர்-ஆழியிடையே வீழ்ந்து, அழிவேனோ? 227
'வல் அரக்கன்தனைப் பற்றி, வாயாறு குருதி உக,
கல் அரக்கும் கரதலத்தால், "காட்டு" என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும், இவ் ஊரும்,
மெல் அரக்கின் உருகி உக, வெந் தழலால் வேய்கேனோ? 228
'வானவரே முதலோரை வினவுவெனேல், வல் அரக்கன்-
தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்,
ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ்வண்ணம் தெரிகேனோ?
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்? 229
'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, "இலங்கையில், அத்
திருவைக் கண்டனென்" என்றான்; அவன் உரையும் சிதைந்ததால்;
கரு வைக்கும் நெடு நகரைக் கடலிடையே கரையாதே,
உருவைக் கொண்டு, இன்னமும் நான், உளென் ஆகி உழல்கேனோ? 230
'"வடித்து ஆய் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறிய,
பிடித்தான் இவ் அடல் அரக்கன்" எனும் மாற்றம், பிழையாதால்;
எடுத்து ஆழி இலங்கையினை இருங் கடல் இட்டு, இன்று, இவனை
முடித்தாலே, யான் முடிதல் முறை மன்ற!' என்று உணர்வான். 231
தேடி அலைந்த அனுமன் ஒரு சோலையைக் காணல்
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய், தன்
உள் உறையும் ஒருவனைப்போல், எம் மருங்கும் உலாவுவான்;
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்,
கள் உறையும் மலர்ச் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 232
மிகைப் பாடல்கள்
'அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று, அகல் வான்
கண்ட, அத் தனிக் கடி நகர் நெடு மனை; கதிர்கட்கு
உண்டு, அ(வ்) ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடின், தம் முன்
விண்ட வாய்ச் சிறு மின்மின் என்னவும் விளங்கா. 15-1
வானும் நிலனும் பெறுமாறு, இனி, மற்றும் உண்டோ -
கானும், பொழிலும், இவை செங் கனகத்தினாலும்,
ஏனைம் மணியாலும் இயற்றியவேனும், யாவும்
தேனும், மலரும், கனியும், தரச் செய்த செய்கை? 17-1
'ஊறு மிகவே உறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல் அரக்கர் புரி தீமைஅது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறு பிறிது இல்' என மதித்தான். 71-1
'கண்ட வனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல் செறிப்பான், வானரம் என்றும் கொளல் அன்றே;
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்;
சண்டை கொடுத்தும் கொள்வன்' எனத் தான் சலம் உற்றாள். 84-1
ஆயவன் அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள், 'முன்நாள்
மாய மா நகரம் தன்னை வகுத்து, அயன் என்னும் மேலாம்
தூயவன் என்னை நோக்கி, "சுந்தரி! காப்பாய்" என்று, ஆங்கு,
ஏயினன், இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற, 91-1
இத் திறம் அனந்த கோடி இராக்கதக் குழுவின் உள்ளார்
தத்தம செய்கை எல்லாம் தனித் தனி நோக்கி, தாங்காது,
'எத் திறம் இவர்தம் சீரை எண்ணுவது?' எனவே, அண்ணல்
உத்தமன் தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான். 118-1
கிடந்தனன், வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம் திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே. 121-1
குடம் தரும் செவிகளும், குன்றம் நாணுறத் 
தடந் தரு கரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர் இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன், அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான். 127-1

இலங்கையின் மாட்சி
'பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த?என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத-வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம். 1
நாகாலயங்களொடு நாகர் உலகும், தம்பாகு ஆர் மருங்கு துயில்வென்ன உயர் பண்பு;ஆகாயம் அஞ்ச, அகல் மேருவை அனுக்கும்மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற. 2
'மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி,மீகாரம் எங்கணும் நறுந் துகள் விளக்கி,ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி,பாகு ஆய செஞ் சொலவர் வீசுபடு காரம். 3
'பஞ்சி ஊட்டிய பரட்டு, இசைக் கிண்கிணிப் பதுமச்செஞ் செவிச் செழும் பவளத்தின் கொழுஞ் சுடர் சிதறி,மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து, அரக்கியர் வடித்தஅம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ. 4
'நான நாள் மலர்க் கற்பக நறு விரை நான்றபானம் வாய் உற வெறுத்த, தாள் ஆறுடைப் பறவைதேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய,வான யாறு தம் அரமியத் தலம்தொறும் மடுப்ப. 5
'குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய,மழலை மென் மொழி, கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்,சுழலும் நல் நெடுந் தட மணிச் சுவர்தொறும் துவன்றும்நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவு அரு நிலைய, 6
'இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்தமனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசுண்ணும்;அனையது ஆம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவைநினையலாம்? அன்றி, உவமையும் அன்னதாய் நிற்கும்! 7
'மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால்;திணியும் நல் நெடுந் திருநகர், தெய்வ மாத் தச்சன்துணிவின் வந்தனன், தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள். 8
'மரம் அடங்கலும் கற்பகம்; மனை எலாம் கனகம்;அரமடந்தையர் சிலதியர், அரக்கியர்க்கு; அமரர்உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர்; ஒருவர்தரம் அடங்குவது அன்று இது; தவம் செய்த தவமால். 9
'தேவர் என்பவர் யாரும், இத் திரு நகர்க்கு இறைவற்குஏவல் செய்பவர்; செய்கிலாதவர் எவர் என்னின்,மூவர்தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!தா இல் மா தவம் அல்லது, பிறிது ஒன்று தகுமோ? 10
'"போர் இயன்றன தோற்ற" என்று இகழ்தலின், புறம் போய்நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,ஆரியம் தனி ஐங் கரக் களிறும், ஓர் ஆழிச்சூரியன் தனித் தேவருமே, இந் நகர் தொகாத. 11
'வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது, இவ் ஊர்;ஆழி அண்டத்தின் அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவிஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம். 12
'தழங்கு பேரியின் அரவமும், தகை நெடுங் களிறுமுழங்கும் ஓதையும், மூரி நீர் முழக்கொடு முழங்கும்;கொழுங் குழல் புதுக் குதலையர் நூபுரக் குரலும்,வழங்கு பேர் அருஞ் சதிகளும், வயின்தொறும் மறையும். 13
'மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்தகுரகதத் தடந் தேர்இனம்அவை பயில் கொட்டில்இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,நரகம் ஒக்குமால் நல் நெடுந் துறக்கம், இந் நகர்க்கு, 14
'திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்;அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப்பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன்உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15
'தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறுஞ் சேறும், வான நாள்மலர்க் கற்பக மலர்களும், வய மாத்தான வாரியும், நீரொடு மடுத்தலின், தழீஇயமீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும், அவ் வேலை. 16
'தெய்வத் தச்சனைப் புகழ்துமோ? செங் கண் வாள் அரக்கன்மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாததொய்யல் சிந்தையேம், யாவரை எவ்வகை துதிப்பேம்? 17
'நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடுங் காலும்,வாரி வானமும், வழங்கல ஆகும், தம் வளர்ச்சி;ஊரின் இந் நெடுங் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,மேரு எங்ஙனம் விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி? 18
'முன்னம் யாவரும், "இராவணன் முனியும் என்று எண்ணி,பொன்னின் மா நகர் மீச் செலான் கதிர்" எனப் புகல்வார்-கன்னி ஆரையின் ஒளியினில், கண் வழுக்குறுதல்உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார். 19
'"தீய செய்குநர் தேவரால்; அனையவர் சேரும்வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென்" என மதியா,காயம் என்னும் அக் கணக்கு அறு பதத்தையும் கடக்கஏயும் நன் மதில் இட்டனன் - கயிலையை எடுத்தான். 20
"கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலிமறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையாஅறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்!" 21
'கொண்ட வான் திரைக் குரை கடல் இடையதாய், குடுமிஎண் தவா விசும்பு எட்ட நின்று, இமைக்கின்ற எழிலால்,பண்டு அரா-அணைப் பள்ளியான் உந்தியில் பயந்தஅண்டமேயும் ஒத்து இருந்தது, இவ் அணி நகர் அமைதி. 22
இலங்கை மாந்தரின் பெருமித செல்வ வாழ்வு
'பாடுவார் பலர் என்னின், மற்று அவரினும் பலரால்ஆடுவார்கள்; மற்று அவரினும் பலர் உளர், அமைதிகூடுவாரிடை இன்னியம் கொட்டுவார்; முட்டு இல்வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார். 23
'வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்;ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர்; அவரைச்சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார்; தொடர்ந்தால்,ஏனை நாகியர் அரு நடக் கிரியை ஆய்ந்திருப்பார். 24
'இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி,உழையர் என்ன நின்று, உதவுவ நிதியங்கள்; ஒருவர்விழையும் போகமே, இங்கு இது? வாய்கொடு விளம்பின்,குழையும்; நெஞ்சினால் நினையினும், மாசு என்று கொள்ளும். 25
'பொன்னின் மால் வரைமேல் மணி பொழிந்தன பொருவ, உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ் முறை உரைக்க,பன்னி, நாள் பல பணி உழந்து, அரிதினின் படைத்தான் -சொன்ன வானவர் தச்சன் ஆம், இந் நகர் துதிப்பான். 26
'மகர வீணையின், மந்தர கீதத்தின், மறைந்த,சகர வேலையின் ஆர் கலி; திசைமுகம் தடவும்சிகர மாளிகைத் தலம்தொறும் தெரிவையர் தீற்றும்அகரு தூமத்தின் அழுந்தின, முகிற் குலம் அனைத்தும். 27
'பளிக்கு மாளிகைத் தலம்தொறும், இடம்தொறும், பசுந் தேன்துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள்தோறும்,அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி,களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன். 28
'தேறல் மாந்தினர்; தேன் இசை மாந்தினர்; செவ் வாய்ஊறல் மாந்தினர்; இன உரை மாந்தினர்; ஊடல்கூறல் மாந்தினர்; அனையவர்த் தொழுது, அவர் கோபத்துஆறல் மாந்தினர்-அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர். 29
'எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்கறுத்த மேனியில் பொலிந்தன; ஊடலில் கனன்றுமறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சிகுறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி. 30
விளரிச் சொல்லியர் வாயினால், வேலையுள் மிடைந்தபவளக் காடு எனப் பொலிந்தது; படை நெடுங் கண்ணால்,குவளைக் கோட்டகம் கடுத்தது; குளிர் முகக் குழுவால்,முளரிக் கானமும் ஒத்தது-முழங்கு நீர் இலங்கை. 31
'"எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்றுகாறும்கிழிந்திலது அண்டம்" என்னும் இதனையே கிளப்பது அல்லால்,அழிந்துநின்று ஆவது என்னே? அலர் உளோன் ஆதியாகஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம், அரக்கருக்கு உறையும் போதா. 32
'காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்ஆயத்தார்; வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றாமாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ? மற்றுஓர்தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல். 33
'கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்அழல் உலாம் கண்ணும், இல்லா ஆடவர் இல்லை; அன்னார்குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றாமழலை யாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ. 34
'கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த - காதல்புன் உறத் தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ,வெள் உறுப்பு எயிற்ற, செய்ய தலையன, கரிய மெய்ய,உள் உறக் களித்த, குன்றின் உயர்ச்சிய,-ஓடை யானை. 35
'வள்ளி நுண் மருங்குல் என்ன, வானவர் மகளிர், உள்ளம்தள்ளுற, பாணி தள்ளா நடம் புரி தடங் கண் மாதர்,வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர், தாம் வெள்குகின்றார்-கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார். 36
'ஒறுத்தலோ நிற்க; மற்று, ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்துஇறுத்தலும் எளிதாம்? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே?கறுத்த வாள் அரக்கிமாரும், அரக்கரும், கழித்து வீசிவெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும், இவ் வீதி எல்லாம். 37
'வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்கடங்களும், கலின மா விலாழியும், கணக்கு இலாதஇடங்களின் இடங்கள்தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம்அடங்கியது என்னில், என்னே! ஆழியின் ஆழ்ந்தது உண்டோ ? 38
'விற் படை பெரிது என்கேனோ? வேற் படை மிகும் என்கேனோ?மற் படை உடைத்து என்கேனோ? வாட் படை வலிது என்கேனோ?கற்பணம், தண்டு, பிண்டிபாலம் என்று இனைய காந்தும்நன் படை பெரிது என்கேனோ? - நாயகற்கு உரைக்கும் நாளில்.' 39
குறுகிய வடிவுடன் அனுமன் பவளக் குன்றில் தங்குதல்
என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி-நின்றனன்; 'அரக்கர் வந்து நேரினும் நேர்வர்' என்னா,தன் தகை அனைய மேனி சுருக்கி, அச் சரளச் சாரல்குன்றிடை இருந்தான்; வெய்யோன் குட கடல் குளிப்பதுஆனான். 40
செறிந்த பேரிருள்
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான்,ஆய்வினை மனத்து இலான், அறிஞர் சொல் கொளான்,வீவினை நினைக்கிலான், ஒருவன், மெய் இலான்,தீவினை என, இருள் செறிந்தது எங்குமே. 41
கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன்,எரித்தலை அந்தணர் இழைத்த யானையை,உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறைபுரித்தனனாம் என, பொலியும் பொற்பதே. 42
அணங்கு அரா அரசர் கோன், அளவு இல் ஆண்டு எலாம்,பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய் விடம்உணங்கல் இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து,இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே, 43
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்பெண்மை நீங்காத கற்புடைய பேதையை,திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்,வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே, 44
இருளிலும் அரக்கர் இயங்குதல்
அவ் வழி, அவ் இருள் பரந்த ஆயிடை,எவ் வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்;செவ் வழி மந்திரத் திசையர் ஆகையால்,வெவ் வழி இருள் தர, மிதித்து, மீச்செல்வார். 45
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார்; எழில்சந்திரன் உலகினைச் சார்குவார்; சலத்துஅந்தகன் உறையுளை அணுகுவார்; அயில்வெந் தொழில் அரக்கனது ஏவல் மேயினார். 46
பொன்னகர் மடந்தையர், விஞ்சைப் பூவையர், பன்னக வனிதையர், இயக்கர் பாவையர்,முன்னின பணி முறை மாறி முந்துவார்,மின் இனம் மிடைந்தென, விசும்பின் மீச்செல்வார். 47
தேவரும், அவுணரும், செங் கண் நாகரும்,மேவரும் இயக்கரும், விஞ்சை வேந்தரும்,யாவரும், விசும்பு இருள் இரிய ஈண்டினார்,தா அரும் பணி முறை தழுவும் தன்மையார். 48
சித்திரப் பத்தியின் தேவர் சென்றனர்,'இத்துணைத் தாழ்த்தனம்; முனியும்' என்று, தம்முத்தின் ஆரங்களும், முடியும், மாலையும்,உத்தரீயங்களும், சரிய ஓடுவார். 49
நிலவின் பொலிவு
தீண்ட அருந் தீவினை தீக்கத் தீந்து போய்,மாண்டு, அற உலர்ந்தது, மாருதிப் பெயர்ஆண்தகை மாரி வந்து அளிக்க, ஆயிடை,ஈண்டு அறம் முளைத்தென, முளைத்தது இந்துவே. 50
'வந்தனன் இராகவன் தூதன்; வாழ்ந்தனன்எந்தையே இந்திரன் ஆம்' என்று ஏமுறா,அந்தம் இல் கீழ்த் திசை அளக வாள் நுதல்சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே. 51
கற்றை வெண் கவரிபோல், கடலின் வெண் திரைசுற்றும் நின்று அலமர, பொலிந்து தோன்றிற்றால்-'இற்றது என் பகை' என, எழுந்த இந்திரன்கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே. 52
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால், திரைமுரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான்சொரிந்ததே ஆம் என, துள்ளும் மீனொடும்விரிந்தது, வெண் நிலா, மேலும் கீழுமே. 53
அருந் தவன் சுரபியே ஆதி வான்மிசைவிரிந்த பேர் உதயமா, மடி வெண் திங்களா,வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா,சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே. 54
எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூ மழைமண்ணிடை வீழ்கில, மறித்தும் போகில,அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி, ஆய் கதிர்விண்ணிடைத் தொத்தின போன்ற, மீன் எலாம். 55
எல்லியின் நிமிர் இருட் குறையும், அவ் இருள்கல்லிய நிலவின் வெண் முறியும், கவ்வின;புல்லிய பகை எனப் பொருவ போன்றன-மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம். 56
வீசுறு பசுங் கதிர்க் கற்றை வெண் நிலாஆசுற எங்கணும் நுழைந்து அளாயது,காசு உறு கடி மதில் இலங்கைக் காவல் ஊர்த்தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே. 57
இகழ்வு அரும் பெருங் குணத்து இராமன் எய்தது ஓர்பகழியின் செலவு என, அனுமன் பற்றினால்,அகழ் புகுந்து, அரண் புகுந்து, இலங்கை, அன்னவன்புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே. 58
மதிலின் மாண்பு கண்டு அனுமன் வியத்தல்
அவ் வழி, அனுமனும், அணுகலாம் வகைஎவ் வழி என்பதை, உணர்வின் எண்ணினான்;செவ் வழி ஒதுங்கினன், தேவர் ஏத்தப் போய்,வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான். 59
ஆழி அகழ் ஆக, அருகா அமரர் வாழும்ஏழ் உலகின் மேலை வெளிகாறும் முகடு ஏறி,கேழ் அரிய பொன் கொடு சமைத்த, கிளர் வெள்ளத்துஊழி திரி நாளும் உலையா, மதிலை உற்றான். 60
'"கலங்கல் இல் கடுங் கதிர்கள், மீது கடிது ஏகா,அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி" எனின், அன்றால்;இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே,விலங்கி அகல்கின்றன, விரைந்து' என, வியந்தான். 61
'தெவ் அளவு இலாத; இறை தேறல் அரிது அம்மா!அவ்வளவு அகன்றது அரண், அண்டம் இடை ஆகஎவ் அளவின் உண்டு வெளி! ஈறும் அது!' என்னா,வெவ் வள அரக்கனை மனக் கொள வியந்தான். 62
மடங்கல் அரிஏறும் மத மால் களிறும் நாணநடந்து, தனியே புகுதும் நம்பி, நனி மூதூர்-அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணைக்கடுந் திசையின் வாய் அனைய - வாயில் எதிர் கண்டான். 63
'மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்ஊர் புக அமைந்த படுகால்கொல்? உலகு ஏழும்சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?நீர் புகு கடற்கு வழியோ?' என நினைந்தான். 64
'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்,ஊழின் முறை இன்றி, உடனே புகும்; இது ஒன்றோ?வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்,ஆழி உள ஏழின் அளவு அன்று பகை' என்றான். 65
வாயில் காவலை அனுமன் வியத்தல்
வெள்ளம் ஒரு நூறொடு இரு நூறும் மிடை வீரர்,கள்ள வினை வெவ் வலி அரக்கர், இரு கையும்'முள் எயிறும் வாளும் உற, முன்னம் முறை நின்றார்;எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான். 66
சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,கால வரி வில், பகழி, கப்பணம், முசுண்டி,கோல், கணையம், நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,பாலம், முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார். 67
அங்குசம், நெடுங் கவண், அடுத்து உடல் வசிக்கும்வெங் குசைய பாசம், முதல் வெய்ய பயில் கையர்;செங் குருதி அன்ன செறி குஞ்சியர், சினத்தோர்,பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார். 68
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்விளக்குஇனம் இருட்டினை விழுங்கி ஒளி கால,உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்,இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான். 69
'எவ் அமரர், எவ் அவுணர், ஏவர் உளர்,-என்னே!-கவ்வை முது வாயிலின் நெடுங் கடை கடப்பார்?தெவ்வர் இவர்; சேமம் இது; சேவகனும் யாமும்வெவ் அமர் தொடங்கிடின், எனாய் விளையும்?' என்றான். 70
கருங் கடல் கடப்பது அரிது அன்று; நகர் காவற்பெருங் கடல் கடப்பது அரிது; எண்ணம் இறை பேரின்,அருங் கடன் முடிப்பது அரிது ஆம்; அமர் கிடைக்கின்,நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள்' என நினைத்தான். 71
அனுமன் மதில்மேல் தாவிச் செல்ல முயல்தல்
'வாயில் வழி சேறல் அரிது; அன்றியும், வலத்தோர்;ஆயில், அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்;காய் கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்போய், இந் நகர் புக்கிடுவென்' என்று, ஓர் அயல் போனான். 72
இலங்கைமாதேவி அனுமனைத் தடுத்தல்
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர்வாழ்நாள் அன்னாள்-போவதின் மேலே வழி நின்றாள்,தூண் ஆம் என்னும் தோள் உடையானை,-சுடரோனைக்காணா வந்த கட்செவி என்னக் கனல் கண்ணாள். 73
எட்டுத் தோளாள்; நாலு முகத்தாள்; உலகு ஏழும்தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்;முட்டிப் போரில், மூஉலகத்தை முதலோடும்கட்டிச் சீறும் காலன் வலத்தாள்; சுமை இல்லாள்; 74
பாராநின்றாள், எண் திசைதோறும், 'பலர் அப்பால்வாராநின்றாரோ?' என; மாரி மழையேபோல்ஆராநின்றாள்; நூபுரம் அச்சம் தரு தாளாள்;வேரா நின்றாள்; மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள்; 75
வேல், வாள், சூலம், வெங் கதை, பாசம், விளி சங்கம்,கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள்; வட குன்றம்போல்வாள்; திங்கள்-போழின் எயிற்றாள்; புகை வாயில்கால்வாள்; காணின், காலனும் உட்கும் கதம் மிக்காள். 76
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்; அரவு எல்லாம்அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள்; அருள் இல்லாள்;அம் சுவணத்தின் உத்தரியத்தாள்; அலை ஆரும்அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்; 77
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள்; தெளி நூல் யாழ்அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள்; அறை தும்பிகந்தாரத்தின் இன் இசை பாடிக் களி கூரும்மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள்; 78
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்நல்லாள்; அவ் ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்;-'நில்லாய்! நில்லாய்!' என்று உரை நேரா, நினையாமுன்வல்லே சென்றாள்; மாருதி கண்டான், 'வருக' என்றான். 79
'ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என் ஆம்?பாகு ஆர் இஞ்சிப் பொன் மதில் தாவிப் பகையாதே;போகாய்' என்றாள்-பொங்கு அழல் என்னப் புகை கண்ணாள். 80
அனுமனும் இலங்காதேவியும் உரையாடுதல்
களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள,விளியா நின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,'அளியால் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்;எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு?' என்றான். 81
என்னாமுன்னம், '"ஏகு" என, ஏகாது, எதிர் மாற்றம்சொன்னாயே? நீ யாவன் அடா? தொல் புரம் அட்டான்அன்னாரேனும் அஞ்சுவர், எய்தற்கு; அளி உற்றால்,உன்னால் எய்தும் ஊர்கொல் இவ் ஊர்?' என்று, உற நக்காள். 82
நக்காளைக் கண்டு, ஐயன், மனத்து ஓர் நகை கொண்டான்;'நக்காய்! நீ யார்? ஆர் சொல வந்தாய்? உனது ஆவிஉக்கால் ஏது ஆம்? ஓடலை?' என்றாள்; 'இனி, இவ் ஊர்புக்கால் அன்றிப் போகலென்' என்றான், புகழ் கொண்டான். 83
இலங்காதேவியின் சிந்தனை
'வஞ்சம் கொண்டான்; வானரம் அல்லன்; வரு காலன்துஞ்சும், கண்டால் என்னை; இவன் சூழ் திரை ஆழிநஞ்சம் கொண்ட கண்ணுதலைப்போல் நகுகின்றான்'நெஞ்சம் கண்டே, கல் என நின்றே, நினைகின்றாள்; 84
இருவரும் பொருதல்
'கொல்வாம்; அன்றேல், கோளுறும் இவ் ஊர்' எனல் கொண்டாள்,'வெல்வாய் நீயேல், வேறி' என, தன் விழிதோறும்,வல் வாய்தோறும், வெங் கனல் பொங்க, மதி வானில்செல்வாய்' என்னா, மூவிலைவேலைச் செல விட்டாள். 85
தடித்து ஆம் என்னத் தன் எதிர் செல்லும் தழல் வேலைக்கடித்தான், நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன்போல்,ஒடித்தான் கையால்-உம்பர் உவப்ப, உயர் காலம்பிடித்தாள் நெஞ்சம் துண்ணென,-எண்ணம் பிழையாதான். 86
இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,மற்றும் தெய்வப் பல் படை கொண்டே மலைவாளைஉற்று, கையால், ஆயுதம் எல்லாம் ஒழியாமல்பற்றிக் கொள்ளா, விண்ணில் எறிந்தான், பழி இல்லான். 87
வழங்கும் தெய்வப் பல் படை காணாள், மலைவான்மேல்,முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்-கழங்கும் பந்தும் குன்றுகொடு ஆடும் கரம் ஒச்சித்தழங்கும் செந் தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள். 88
அனுமன் அறைய இலங்கைமாதேவி மண்ணில் வீழ்தல்
அடியாமுன்னம், அம் கை அனைத்தும் ஒரு கையால்பிடியா, 'என்னே? பெண் இவள்; கொல்லின் பிழை' என்னா,ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான்; உயிரோடும்,இடிஏறு உண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தாள். 89
விழுந்தாள் நொந்தாள்; வெங் குருதிச் செம்புனல் வெள்ளத்துஅழுந்தா நின்றாள்; நான்முகனார்தம் அருள் ஊன்றிஎழுந்தாள்; யாரும், யாரையும், எல்லா உலகத்தும்,தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று, இவை சொன்னாள்: 90
இலங்கைமாதேவி தன் வரலாறு கூறல்
'ஐய! கேள்; வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆகஎய்தி, இம் மூதூர் காப்பன்; இலங்கைமாதேவி என் பேர்;செய் தொழில் இழுக்கினாலே திகைத்து, இந்தச் சிறுமை செய்தேன்;"உய்தி" என்று, அளித்திஆயின், உணர்த்துவல் உண்மை' என்றாள். 91
'எத்தனை காலம் காப்பன், யான் இந்த மூதூர்? என்று, அம்முத்தனை வினவினேற்கு, "முரண் வலிக் குரங்கு ஒன்று உன்னைக்கைத்தலம்அதனால் தீண்டிக் காய்ந்த அன்று, என்னைக் காண்டி;சித்திர நகரம், பின்னை, சிதைவது திண்ணம்" என்றான். 92
'அன்னதே முடிந்தது; ஐய, "அறம் வெல்லும்; பாவம் தோற்கும்"என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்உன்னிய எல்லாம் முற்றும்; உனக்கும் முற்றாதது உண்டோ?பொன் நகர் புகுதி என்னாப் புகழ்ந்து, அவள் இறைஞ்சிப் போனாள். 93
இலங்கையுள் அனுமன் புகுதல்
வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே; விளைவும் அஃது' என்று,ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்பூரியர் இலங்கை மூதூர்ப் பொன் மதில் தாவிப் புக்கான் -சீரிய பாலின் வேலைச் சிறு பிரை தெறித்தது அன்னான். 94
இலங்கையின் ஒளிச் சிறப்பை வியத்தல்
வான் தொடர், மணியின் செய்த, மை அறு, மாட கோடிஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அழகை நோக்கி,'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்தோன்றினன் கொல்லோ?' என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான். 95
'மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்றமெய்ம்மையை உணர்ந்து, நாணா, "மிகை" என விலங்கிப் போனான்;இம் மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன் முன் எய்தும்மின்மினி அல்லனோ, அவ் வெயில் கதிர் வேந்தன்? அம்மா!' 96
'பொசிவுறு பசும் பொன் குன்றில், பொன் மதில் நடுவண் பூத்து,வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்துஅசைவு இல் இவ் இலங்கை மூதூர், ஆர் இருள் இன்மையாலோ,நிசிசரர் ஆயினார், இந் நெடு நகர் நிருதர் எல்லாம்? 97
நகரினுள் அனுமன் மறைந்து சென்ற வகை
என்றனன் இயம்பி, 'வீதி ஏகுதல் இழுக்கம்' என்னா,தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சார,சென்றனன் - என்ப மன்னோ - தேவருக்கு அமுதம் ஈந்தகுன்று என, அயோத்தி வேந்தன் புகழ் என, குலவு தோளான். 98
ஆத் துறு சாலைதோறும், ஆனையின் கூடம்தோறும்,மாத் துறு மாடம்தோறும், வாசியின் பந்திதோறும்,காத்து உறு சோலைதோறும், கருங் கடல் கடந்த தாளான்,பூந்தொறும் வாவிச் செல்லும் பொறி வரி வண்டின், போனான். 99
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணிப் பித்திப் பத்திசொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால், காலின் தோன்றல்,கரியன்ஆய், வெளியன் ஆகி, செய்யன் ஆய், காட்டும்-காண்டற்குஅரியன்ஆய், எளியன் ஆய், தன் அகத்து உறை அழகனேபோல். 100
அனுமன் பற்பல நிலையிலுள்ள அரக்கர்களைக் காணுதல்
ஈட்டுவார், தவம் அலால் மற்று ஈட்டினால், இயைவது இன்மைகாட்டினார் விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!-பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய, பூ நீர்ஆட்டுவார் அமரர் மாதர்; ஆடுவார் அரக்கர் மாதர். 101
கானக மயில்கள் என்ன, களி மட அன்னம் என்ன,ஆனைக் கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,தேன் உகு சரளச் சோலை, தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்,வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை- 102
'இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்,அலத்தகத் தளிர்க்கை நோவ, அளந்து எடுத்து அமைந்த பாடல்கலக்குற முழங்கிற்று' என்று சேடியர் கன்னிமார்கள்,மலர்க்கையால், மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை- 103
சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தம்தம்சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை,வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமைகந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை- 104
திருத்திய பளிக்கு வேதி, தெள்ளிய வேல்கள் என்ன,கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கருங் கயல், செம்மை காட்ட,வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காமஅருத்திய பயிர்க்கு நீர்போல், அரு நறவு அருந்துவாரை- 105
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள,தூதுளங் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்தகாதல்அம் கள் உண்டார்போல், முறை முறை களிக்கின்றாரை- 106
வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனிபொற்பு அளவு இல்லா வாசப் புனை நறுங் கலவை பூசி,அற்புத வடிக் கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொற்கற்பகம் கொடுக்க வாங்கி, கலன் தெரிந்து அணிகின்றாரை- 107
புலி அடு மதுகை மைந்தர் புதுப் பிழை உயிரைப் புக்குநலிவிட, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,மெலிவுடை மருங்குல் மின்னின் அலமர, சிலம்பு விம்மிஒலிபட, உதைக்கும்தோறும், மயிர்ப் புளகு உறுகின்றாரை- 108
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து, வாய் வெண்மை ஊறி,துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப, வேர் பொடிப்ப, தூயவெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்கள்ளிடைத் தோன்ற நோக்கி, கணவரைக் கனல்கின்றாரை- 109
ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூயவேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110
நலன் உறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்முலை உறு கலவை தீய, முள் இலா முளரிச் செங் கேழ்மலர்மிசை மலர் பூத்தென்ன, மலர்க்கையால் வதனம் தாங்கி,அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை- 111
ஏதிஅம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,தாது இயங்கு அமளிச் சேக்கை, உயிர் இலா உடலின் சாய்வார்,மா துயர்க் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,தூதியர் முறுவல் நோக்கி, உயிர் வந்து துடிக்கின்றாரை- 112
சங்கொடு, சிலம்பும், நூலும், பாத சாலகமும் தாழ,பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றி,கொங்கு அலர் கூந்தல், செவ் வாய், அரம்பையர் பாணி கொட்டிமங்கல கீதம் பாட, மலர்ப் பலி வகுக்கின்றாரை- 113
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க்குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,முழை தொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரிமழை தொடர் மஞ்ஞை என்ன, விழாவொடு வருகின்றாரை- 114
பள்ளியில், மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி,ஒள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,மெள்ளவே இமையை நீக்கி, அஞ்சன இழுது வேய்ந்த கள்ள வாள் நெடுங் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை- 115
ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள, ஏகி,ஆவியும் தாமுமே புக்கு, அருங் கதவு அடைக்கின்றாரை- 116
கின்னர மிதுனம் பாட, கிளர் மழை கிழித்துத் தோன்றும்மில் என, தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து,பன்னக மகளிர் சுற்றிப் பலாண்டு இசை பரவ, பண்ணைப்பொன் நகர் வீதிதோறும், புது மனை புகுகின்றாரை- 117
கோவையும் குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப,தேவர் நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்ப,பாவையர் குழாங்கள் சூழ, பாட்டொடு வான நாட்டுப்பூவையர் பலாண்டு கூற, புது மணம் புணர்கின்றாரை- 118
அனுமன் கும்பகருணனைக் காணுதல்
இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சைமுயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். 119
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது; உம்பரின்வாசவன் மணி முடி கவித்த மண்டபம்ஏசுற விளங்கியது; இருளை எண் வகைஆசையின் நிலைகெட, அலைக்கல் ஆன்றது. 120
அன்னதன் நடுவண், ஓர் அமளி மீமிசை,பன்னக அரசு என, பரவைதான் என,துன் இருள் ஒருவழித் தொக்கது ஆம் என,உன்ன அருந் தீவினை உருக் கொண்டென்னவே, 121
முன்னிய கனை கடல் முழுகி, மூவகைத்தன் இயல் கதியொடு தழுவி, தாது உகுமன் நெடுங் கற்பக வனத்து வைகியஇன் இளந் தென்றல் வந்து இழுகி ஏகவே. 122
வானவர் மகளிர் கால் வருட, மா மதிஆனனம் கண்ட, மண்டபத்துள் ஆய் கதிர்க்கால் நகு, காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்தூ நிற நறுந் துளி முகத்தில் தூற்றமே. 123
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,வாசலின் புறத்திடை நிறுவி, வன்மையால்,நாசியின் அளவையின் நடத்த, கண்டவன்கூசினன்; குதித்தனன், விதிர்த்த கையினான். 124
பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்கேழ் இல் வெங் கொடியவன் உயிர்ப்பு-கேடு இலாவாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே. 125
பகை என, மதியினைப் பகுத்து, பாடு உறஅகை இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என,புகையொடு முழங்கு பேர் உயிர்ப்புப் பொங்கியநகை இலா முழு முகத்து எயிறு நாறவே, 126
தடை புகு மந்திரம் தகைந்த நாகம்போல்,இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் -கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து, அயல்புடை பெயரா நெடுங் கடலும் போலவே. 127
இராவணனோ எனச் சினந்து பின் அவன் அல்லன் என அறிந்து அனுமன் சினம் தணிதல்
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, 'அரக்கர்கோ எனா நின்ற குணம்இலி இவன்' எனக் கொண்டான்;கா வல் நாட்டங்கள் பொறி உக, கனல் எனக் கனன்றான்;'ஏவனோ இவன்? மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான்!' 128
குறுகி நோக்கி, மற்று, 'அவன் தலை ஒருபதும், குறித்தஇறுகு திண் புயம் இருபதும், இவற்கு இலை' என்னா,மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெங் கனலி,அறிவு எனும் பெரும் பரவைஅம் புனலினால், அவித்தான். 129
பிற இடங்களில் தேடல்
அவித்து நின்று, 'எவன் ஆயினும் ஆக' என்று, அங்கைகவித்து, 'நீங்கிடச் சில பகல்' என்பது கருதா,செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்கவிக்கு நாயகன், அனையவன் உறையுளைக் கடந்தான். 130
மாட கூடங்கள், மாளிகை ஒளிகை, மகளிர்ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்நாடி ஏகினன் - இராகவன் புகழ் எனும் நலத்தான். 131
மணி கொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,கணிகொள் நாளத்தில், கால் என, புகை என, கலக்கும்;நுணுகும், வீங்கும்;-மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?-அணுவில் மேருவில் ஆழியான் எனச் செலும், அனுமன். 132
அனுமன் வீடணன் மாளிகை புகுதலும், அவன் நல்லன் எனத் தேர்ந்து செல்லுதல்
ஏந்தல், இவ் வகை, எவ் வழிமருங்கினும் எய்தி,காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்,வேந்தர், வேதியர், மேல் உளோர், கீழ் உளோர், விரும்பப்போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான். 133
'பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்து, பசுந்தேன்துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத்தோர்பால்வெளித்து வைகுதல் அரிது' என, அவர் உரு மேவி,ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான். 134
உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்;'குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன்' எனக் கொண்டான்;செற்றம் நீங்கிய மனத்தினன், ஒரு சிறைச் சென்றான்;பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடைப் புக்கான். 135
இந்திரசித்தின் வீரப் பொலிவை வியந்து மேலே போதல்
முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்சிந்துரம் பயில் வாய்ச்சியர், பலரையும் தெரிந்து,மந்திரம் பல கடந்து, தன் மனத்தின் முன் செல்வான்,இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான். 136
ஏதி ஏந்திய தடக் கையர், பிறை எயிறு இலங்கமூதுரைப் பெருங் கதைகளும் பிதிர்களும் மொழிவார்,ஓதில், ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர்,காது வெஞ் சினக் களியினர், காவலைக் கடந்தான். 137
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறுவகை முகமும்,திக்கு நோக்கிய புயங்களும், சில கரந்தனையான்ஒக்க, நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப்புக்கு நோக்கினன் - புகை புகா வாயிலும் புகுவான். 138
'வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?-அளையில் வாள் அரி அனையவன் - யாவனோ? அறியேன்;இளைய வீரனும், ஏந்தலும், இருவரும், பலநாள்உளைய உள்ள போர் இவனொடும் உளது' என உணர்ந்தான். 139
'இவனை இன் துணை உடைய போர் இராவணன், என்னே,புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் எனப் புகறல்?சிவனை, நான்முகத்து ஒருவனை, திரு நெடுமால் ஆம்அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ? 140
என்று, கைம் மறித்து, 'இடை நின்று காலத்தை இகப்பதுஅன்று; போவது' என்று, ஆயிரம் ஆயிரத்து அடங்காத்துன்று மாளிகை ஒளிகள் துரிசு அறத் துருவிச்சென்று தேடினன், இந்திரசித்தினைத் தீர்ந்தான். 141
அக்கன் மாளிகை கடந்து போய், மேல், அதிகாயன்தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி,தக்க மந்திரத் தலைவர் மா மனைகளும் தாவிப்புக்கு நீங்கினன், இராகவன் சரம் என, புகழோன். 142
இடைநகர் அகழியைக் கண்ட அனுமனின் வியப்பு
இன்னர் ஆம் இரும் பெரும் படைத் தலைவர்கள் இருக்கைப்பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்,கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்,சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான். 143
தனிக் கடக் களிறு என ஒரு துணை இலான் தாய'பனிக் கடல் பெருங் கடவுள் தன் பரிபவம் துடைப்பான்,இனி, கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது' என்று, இசைத்தான் -கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன், அகழியைக் கண்டான். 144
'"பாழி நல் நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல்" பல பேர்,ஊழிக்காலம் நின்று, உலகு எலாம் கல்லினும் உலவாது;ஆழி வெஞ் சினத்து அரக்கனை அஞ்சி, ஆழ் கடல்கள்ஏழும், இந் நகர் சுலாயகொலாம்' என, இசைத்தான். 145
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,'தாய வேலையின் இரு மடி விசைகொடு தாவிப்போய காலத்தும் போக்கு அரிது' என்பது புகன்றான் -நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான். 146
இடைநகர் அகழியின் ஏற்றம்
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழத்தூக்கினாலன்ன தோயத்ததுஆய், துயர்ஆக்கினான் படை அன்ன அகழியை,வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ? 147
ஆனை மும் மதமும், பரி ஆழியும்,மான மங்கையர் குங்கும வாரியும்,நானம் ஆர்ந்த நறைக் குழல் ஆவியும்,தேனும், ஆரமும், தேய்வையும், நாறுமால், 148
உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்,அன்னம், கோழி, வண்டானங்கள், ஆழிப்புள்,கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்,சென்னம், காகம், குணாலம், சிலம்புமே. 149
நலத்த மாதர் நறை அகில், நாவியும்,அலத்தகக் குழம்பும், செறிந்து, ஆடியஇலக்கணக் களிறோடு, இள மெல் நடைக்குலப் பிடிக்கும், ஓர் ஊடல் கொடுக்குமால். 150
நறவு நாறிய நாள் நறுந் தாமரைதுறைகள்தோறும் முகிழ்த்தன தோற்னுமால் -சிறையின் எய்திய செல்வி முகத்தினோடுஉறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ? 151
பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளிவிளிம்பும், வெள்ளமும், மெய் தெரியாது, மேல் -தெளிந்த சிந்தையரும், சிறியார்களோடுஅளிந்தபோது, அறிதற்கு எளிது ஆவரோ? 152
நீலமே முதல் நல் மணி நித்திலம்,மேல கீழ, பல் வேறு ஒளி வீசலால்,'பாலின் வேலை முதல் பல வேலையும்கால் கலந்தனவோ?' என, காட்டுமே. 153
அகழியைக் கடந்து நகரினுள் அனுமன் தேடுதல்
அன்ன வேலை அகழியை, ஆர்கலி என்னவே கடந்து, இஞ்சியும், பிற்பட,துன்ன அருங் கடி மா நகர் துன்னினான்;பின்னர் எய்திய தன்மையும், பேசுவாம்: 154
கரிய நாழிகை பாதியில், காலனும்வெருவி ஓடும் அரக்கர்தம் வெம் பதி,ஒருவனே, ஒரு பன்னிரு யோசனைத்தெருவு மும்மை நூறாயிரம் தேடினான். 155
இலங்கையில் நடு நிசி
வேரியும் அடங்கின; நெடுங் கடல் விளம்பும்,பாரியும் அடங்கின; அடங்கியது பாடல்;காரியம் அடங்கினர்கள், கம்மியர்கள்; மும்மைத்தூரியம் அடங்கின; தொடங்கியது உறக்கம். 156
இறங்கின, நிறம் கொள் பரி; ஏமம் உற எங்கும்கறங்கின, மறம் கொள் எயில் காவலர் துடிக் கண்;பிறங்கு இணர் நறுங் குழலர் அன்பர் பிரியாதோர்,உறங்கினர், பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார். 157
வடம் தரு தடங் கொள் புய மைந்தர், கலவிப் போர்கடந்தனர்; இடைந்தனர், களித்த மயில் போலும்மடந்தையர் தடந் தன முகட்டிடை மயங்கிக்கிடந்தனர்; நடந்தது, புணர்ச்சி தரு கேதம். 158
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்;காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்;பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்,தூம நறையின் துறை பயின்றிலர், துயின்றார். 159
பண் இமை அடைத்த, பல கள்-பொருநர் பாடல்;விண் இமை அடைத்தென, விளைந்தது இருள்; வீணைதண் இமை அடைத்தன; தழங்கு இசை வழங்கும்கண் இமை அடைத்தன; அடைத்தன கபாடம். 160
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்துஉரிஞ்சி வரு தென்றல், உணர்வு உண்டு அயல் உலாவ,சொரிந்தன கருங் கண், வரு துள்ளி தரு வெள்ளம்;எரிந்தன, பிரிந்தவர்தம் எஞ்சு தனி நெஞ்சம். 161
இளக்கர் இழுது எஞ்ச, விழும் எண் அரு விளக்கைத்துளக்கியது தென்றல், பகை சோர உயர்வோரின்;அளக்கரொடு அளக்க அரிய ஆசை உற வீசா,விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம். 162
நித்தம் நியமத் தொழிலர் ஆய், நிறையும் ஞானத்துஉத்தமர் உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்;மத்த மத வெங் களிறு உறங்கின; மயங்கும்பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரிது என ஆம்? 163
அகநகரினுள் சென்று அனுமன் தேடுதல்
ஆய பொழுது, அம் மதில் அகத்து, அரசர் வைகும்தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவிப் போய்,தீயவன் இருக்கை அயல், செய்த அகழ் இஞ்சிமேயது கடந்தனன் - வினைப் பகையை வென்றான். 164
போர் இயற்கை இராவணன் பொன் மனைசீர் இயற்கை நிரம்பிய திங்களா,தாரகைக் குழுவின் தழுவித் தொடர்,நாரியர்க்கு உறைவு ஆம், இடம் நண்ணினான். 165
முயல் கருங் கறை நீங்கிய மொய்ம் மதிஅயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்,இயக்கர் மங்கையர், யாவரும் ஈண்டினார்,நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான். 166
தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்,இழைந்த நூலினும், இன் இளங்காலினும்,நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்-விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான். 167
இராவணனுக்கு உரிய இயக்க மாதர்களின் நிலைமை
அத்திரம் புரை யானை அரக்கன்மேல்வைத்த சிந்தையர், வாங்கும் உயிர்ப்பிலர்,பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற,சித்திரங்கள் என, இருந்தார் சிலர். 168
அள்ளல் வெஞ் சர மாரனை அஞ்சியோ?மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?கள்ளம் என்கொல்? அறிந்திலம் - கண் முகிழ்த்து,உள்ளம் இன்றி, உறங்குகின்றார் சிலர். 169
பழுது இல் மன்மதன் எய் கணை பல் முறைஉழுத கொங்கையர், ஊசல் உயிர்ப்பினர்,'அழுது செய்வது என்? ஆணை அரக்கனைஎழுதலாம்கொல்?' என்று, எண்ணுகின்றார் சிலர். 170
'ஆவது ஒன்று அருளாய்; எனது ஆவியைக்கூவுகின்றிலை; கூறலை சென்று' எனா,பாவை பேசுவதுபோல், கண் பனிப்பு உற,பூவையோடும் புலம்புகின்றார் சிலர். 171
ஈரத் தென்றல் இழுக மெலிந்து, தம்பாரக் கொங்கையைப் பார்த்தனர்; பாதகன்வீரத் தோள்களின் வீக்கம் நினைந்து, உயிர்சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர். 172
நக்க செம் மணி நாறிய நீள் நிழல்பக்கம் வீசுறு பள்ளியில், பல் பகல்ஒக்க ஆசை உலக்க உலந்தவர்,செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர். 173
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். 174
கவ்வு தீக் கணை, மேருவைக் கால் வளைத்து,எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்வவ்வு சாந்து, தம் மா முலை வவ்வியசெவ்வி கண்டு, குலாவுகின்றார் சிலர். 175
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்றுஆவினான் புகழ், அம் கை நரம்பினால்நாடி, நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர். 176
இராவணனின் உரிமை மகளிராம் அரக்கியரின் நிலைமை
இனைய தன்மை இயக்கியர் ஈண்டியமனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய்,அனையவன் குலத்து ஆயிழையார் இடம்நினைவின் எய்தினன் - நீதியின் எய்தினான். 177
எரி சுடர் மணியின் செங் கேழ் இள வெயில் இடைவிடாதுவிரி இருள் பருகி, நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,அரிவையர் குழுவும் நீங்க, ஆசையும் தாமுமே ஆய்,ஒரு சிறை இருந்து, போன உள்ளத்தோடு ஊடுவாரும். 178
நகை எரிக் கற்றை நெற்றி நாவி தோய்ந்தனைய ஓதி,புகை எனத் தும்பி சுற்ற, புது மலர்ப் பொங்கு சேக்கைபகை என ஏகி, யாணர்ப் பளிங்குடைச் சீதப் பள்ளி,மிகை ஒடுங்காத காம விம்மலின், வெதும்புவாரும். 179
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக,குவியும் மீன் ஆரம் ஆக, மின் கொடி மருங்குல் ஆக,கவிர் ஒளிச் செக்கர் கற்றை ஓதியா, மழை உண் கண்ணா,அவிர் மதி நெற்றி, ஆக, அந்தி வான் ஒக்கின்றாரும். 180
பானல் உண் கண்ணும் வண்ணப் படி முறை மாற, பண்ணைச்சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர,மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி,வான மீன் கையின் வாரி, மணிக் கழங்கு ஆடுவாரும். 181
உழை உழைப் பரந்த வான யாற்றுநின்று, உம்பர் நாட்டுக்குழை முகத்து ஆயம், தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி,இழை தொடுத்து இலங்கும் மாடத்து, இடை தடுமாற ஏறி,மழை பொதுத்து, ஒழுகு நீரால், மஞ்சனம் ஆடுவாரும். 182
'பன்னக அரசர் செங் கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி, இன் உயிர்க் கணவன் ஈந்தான்; ஆம்' என, இருத்தி, விஞ்சைமன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆக,பொன் அணி பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும். 183
தென் நகு குடம், உள்-பாடல், சித்தியர் இசைப்ப, தீம் சொல்பன்னக மகளிர் வள் வார்த் தண்ணுமைப் பாணி பேண,பொன்னகர்த் தரளப் பந்தர், கற்பகப் பொதும்பர், பொன்-தோள் இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் 184
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண் கண்சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர், செய்வது ஓரார்,வீணையும், குழலும், தம்தம் மிடறும், வேற்றுமையின் தீர்ந்த,பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உகப் பாடுவாரும். 185
தண்டலை வாழை அன்ன குறங்கிடை, அல்குல் தட்டில்,கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோர, கூர்ங் கள்உண்டு அலமந்த கண்ணார், ஊசலிட்டு உலாவுகின்றகுண்டலம் திரு வில் வீச, குரவையில் குழறுவாரும். 186
நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி,பிச்சரின் பிதற்றி, அல்குல் பூந் துகில் கலாபம் பீறி,குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள, குழுக் கொண்டு ஈண்டி,சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும். 187
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற, அறிவு தள்ளி,பயிர் உற, 'தெய்வம் என் மேல் படிந்தது; பார்மின்!' என்னா,உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர் நீட்டி,மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து ஒடுங்குவாரும். 188
இத் திறத்து அரக்கிமார்கள் ஈர்-இரு கோடி ஈட்டம்பத்தியர் உறையும், பத்திப் படர் நெடுந் தெருவும் பார்த்தான்;சித்தியர் உறையும் மாடத் தெருவும் பின்னாகச் சென்றான்;உத் திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான். 189
விஞ்சை மகளிரின் நிலை
வளர்ந்த காதலர், மகரிகை நெடு முடிஅரக்கனை வரக் காணார்,தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட, உயிரொடு தடுமாறி,களம் தவா நெடுங் கருவியில், கைகளில், செயிரியர், கலைக் கண்ணால்அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக, அலமரலுறுகின்றார். 190
'புரியும் நல் நெறி முனிவரும், புலவரும், புகல் இலாப் பொறைகூர, எரியும் வெஞ் சினத்து இகல் அடு கொடுந் திறல் இராவணற்கு, எஞ் ஞான்றும்பரியும் நெஞ்சினர் இவர்' என வயிர்த்து ஒரு பகை கொடு, பனித் திங்கள்சொரியும் வெங் கதிர் துணை முலைக் குவை சுட, கொடிகளின் துடிக்கின்றார் 191
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை, திரிந்து சிந்தனை சிந்த,முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலை முன்றில்இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,மறுகு வாட் கண்கள் சிவப்புற நோக்கினர்; வயிர்த்தனர்; உயிர்க்கின்றார் 192
அனுமன் மண்டோ தரியைக் கண்டு, 'சீதையோ' என ஐயுற்று, தெளிதல்
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு-இரண்டு அமை கோடித்தூய மாளிகை நெடுந் தெருத் துருவிப் போய், தொலைவு இல் மூன்று உலகிற்கும்நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம். 193
கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாவினன், 'காரணம் கடை நின்றது;உண்டு வேறு ஒரு சிறப்பு; எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது!' என, வியப்புற்றான். 194
அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, ஆதியர், மலர்க் காமன்சரம் பெய் தூணிபோல் தளிர் அடி தாம் தொட, சாமரை பணிமாற,கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர், காமரம் கனி யாழின்நரம்பின் இன் இசை செவி புக, நாசியில் கற்பக விரை நாற,- 195
'விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும், கீழ்மையர் வெகுள்வுற்றால்,பிழைகொல் நன்மைகொல் பெறுவது?'என்று ஐயுறு பீழையால்,பெருந்தென்றல்,உழையர் கூவ, புக்கு, 'ஏகு' என, பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்-'பழையம் யாம்' என, பண்பு அல செய்வரோ பருணிதர், பயன் ஓர்வார்? 196
இன்ன தன்மையின், எரி மணி விளக்கங்கள் எழில் கெடப் பொலிகின்றதன்னது இன் ஒளி தழைப்புறத் துயில்வுறு தையலை, தகைவு இல்லான்,'அன்னள் ஆகிய சானகி இவள்' என அயிர்த்து, அகத்து எழு வெந் தீ,துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து, இவை சொன்னான்: 197
'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க;அற்பு வான் தளை இற் பிறப்புஅதனொடும் இகந்து தன் அருந் தெய்வக்கற்பு நீங்கிய கனங் குழை இவள் எனின், காகுத்தன் புகழோடும்பொற்பும் யானும்,இவ் இலங்கையும் அரக்கரும்,பொன்றுதும் இன்று'என்றான். 198
'மானுயர்த் திரு வடிவினள் அவள்; இவள் மாறு கொண்டனள்; கூறின்,தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்குமீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை' என்றான். 199
'இலக்கணங்களும் சில உள என்னினும், எல்லை சென்று உறுகில்லாஅலக்கண் எய்துவது அணியது உண்டு' என்று, எடுத்து அறைகுவது, இவள் யாக்கை;மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇ, சில மாற்றங்கள் பறைகின்றாள்;உலக்கும் இங்கு இவள் கணவனும்; அழிவும், இவ்வியன் நகர்க்கு உளது!' என்றான். 200
இராவணன் மனையுள் அனுமன் புகுதலும், தீக்குறி காணலும்
என்று உணர்ந்துநின்று ஏமுறும் நிலையினில், 'நிற்க இத் திறன்' என்னா,பின்று சிந்தையன் பெயர்ந்தனன்; அம் மனை பிற்பட, பெரு மேருக்குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகைதன்னில்சென்று புக்கனன், இராவணன் எடுப்பு அருங் கிரி எனத் திரள் தோளான். 201
நிலம் துடித்தன; நெடு வரை துடித்தன; நிருதர்தம் குல மாதர்பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள். 202
புக்கு நின்று, தன் புலன் கொள நோக்கினன்; பொரு அருந் திரு உள்ளம்நெக்கு நின்றனன்; 'நீங்கும், அந்தோ இந்த நெடு நகர்த் திரு!' என்னா,'எக் குலங்களின் யாவரே ஆயினும், இரு வினை எல்லோர்க்கும்ஒக்கும்; ஊழ் முறை அல்லது, வலியது ஒன்று இல்' என, உணர்வுற்றான். 203
துயிலும் இராவணனைக் கண்ட அனுமன் சினந்து அவனைக் கொல்ல நினைத்தல்
நூல்-பெருங்கடல் நுணங்கிய கேள்வியன், நோக்கினன்; மறம் கூரும்வேல்-பெருங்கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில்,பால்-பெருங்கடல் பல் மணிப் பல் தலைப் பாப்புடைப் படர் வேலைமால்-பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன், துயில்வானை- 204
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலிஇழைகளோடு நின்று இள வெயில் எறித்திட, இரவு எனும் பெயர் வீய,முழை கொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்,தழை கொள் தோளொடு தலை பல பரப்பி,முன்,துயில்வது ஓர் தகையானை- 205
ஆய பொன்-தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்றுதூய வெண் கவரித் திரள் இயக்கிட, சுழி படு பசுங் காற்றின்,மீய கற்பகத் தேன்துளி விராயன வீழ்தொறும், நெடு மேனிதீய, நல் தொடிச் சீதையை நினைதொறும் உயிர்த்து, உயிர் தேய்வானை- 206
குழந்தை வெண் மதிக் குடுமியின் நெடு வரை குலுக்கிய குலத் தோளைக்கழிந்து புக்கு, இடை கரந்தன, அனங்கன் வெங்கடுங் கணை பல பாய,உழந்த வெஞ் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்றபழந் தழும்பினுக்கு இடை இடையே, சில பசும் புண்கள் அசும்பு ஊற, 207
சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசுந் தென்றல்,ஏந்து காம வெங் கனல் உயிர்த்து, இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற, காந்தள் மெல் விரல் சனகிமேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட,பாந்தள் நீங்கிய முழை என, குழைவுறு நெஞ்சு பாழ்பட்டானை- 208
கொண்ட பேர் ஊக்கம் மூள, திசைதொறும் குறித்து மேல்நாள்மண்டிய செருவில், மானத் தோள்களால் வாரி வாரிஉண்டது தெவிட்டி, பேழ் வாய்க் கடைகள்தோறு ஒழுகிப் பாயும்அண்டர் தம் புகழின் தோன்றும், வெள் எயிற்று அமைதியானை- 209
வெள்ளி வெண் சேக்கை வெந்து, பொறி எழ, வெதும்பும் மேனிபுள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்க,கள் அவிழ் மாலைத் தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப,ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை- 210
தே இயல் நேமியானின், சிந்தை மெய்த் திருவின் ஏக,பூ இயல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானை,காவி அம் கண்ணிதன்பால் கண்ணிய காதல் நீரின்,ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை- 211
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,நகும் தகை முகத்தன், காதல் நடுக்குறு மனத்தன், 'வார் தேன்உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளேபுகுந்தனள் அன்றோ?' என்று, மயிர் புறம் பொடிக்கின்றானை- 212
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூறுமேனும்,குன்று ஒழித்து ஒரு மாக் குன்றின் அரிதின் சேர் கொள்கை போல,வன் தொழில் கொற்றப் பொன்-தோள் மணந்து, அரு மயிலே அன்னார்,ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக, அரிய தோள் ஒழுக்கினானை- 213
தழுவா நின்ற கருங் கடல்மீது உதயகிரியில் சுடர் தயங்கஎழுவான் என்ன, மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய்,முழு வானவர்ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்மழு வாள், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை- 214
தோடு உழுத தார் வண்டும், திசை யானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள,கோடு உழுத மார்பானை, கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி,தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை- 215
கண்டனன்; காண்டலோடும், கருத்தின் முன் காலச் செந் தீவிண்டன கண்கள்; கீண்டு வெடித்தன, கீழும் மேலும்;-கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான்-திண் தலை பத்தும், தோள்கள் இருபதும், தெரிய நோக்கி. 216
'தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என்தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய், முடியேனே! 217
'நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான்? நன்னுதலைப்பிடித்து, வாழ் அரக்கனார், யான் கண்டும் பிழைப்பாரோ?ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக!' 218
ஆய்ந்து பார்த்து, அனுமன் கோபம் தணிதல்
என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரனும் பிசைந்து, எழுந்து,நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான், 'நேமியோன் பணி அன்றால்;ஒன்று ஊக்கி, ஒன்றுஇழைத்தல், உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்;பின் தூக்கின், இது சாலப் பிழை பயக்கும்' எனப் பெயர்ந்தான். 219
ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர்எனினும்,சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ?-மூலம் பார்க்குறின், உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்,காலம் பார்த்து, இறை வேலை கடவாத கடல் ஒத்தான். 220
'இற்றைப் போர்ப் பெருஞ் சீற்றம் என்னோடும் முடிந்திடுக;"கற்றைப் பூங் குழலாளைச் சிறை வைத்த கண்டகனைமுற்றப் போர் முடித்தது, ஒரு குரங்கு" என்றால், முனை வீரன்கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்குக் குறை உண்டாம்' என, குறைந்தான் 221
அந் நிலையான், பெயர்த்த் உரைப்பான்; 'ஆய் வளைக் கை அணிஇழையார்இந் நிலையானுடன் துயில்வார் உளர்அல்லர்; இவன் நிலையும்புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை; பூவைநல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்!' 222
சீதையைக் காணாமையால் இலங்கையை அழித்து, தானும் மாள அனுமன் எண்ணுதல்
என்று எண்ணி, 'ஈண்டு இனி ஓர் பயன் இல்லை' என நினையா,குன்று அன்ன தோளவன்தன் கோமனை பிற்பட, பெயர்ந்தான்;நின்று எண்ணி உன்னுவான், 'அந்தோ! இந் நெடு நகரில்பொன் துன்னும் மணிப் பூணாள் இலள்' என்ன, பொருமுவான். 223
'கொன்றானோ கற்பு அழியாக் குல மகளை? கொடுந் தொழிலால்தின்றானோ? எப் புறத்தே செறிந்தானோ, சிறை? சிறியேன்ஒன்றானும் உணரகிலேன்; மீண்டு, இனிப் போய் என் உரைக்கேன்?பொன்றாத பொழுது, எனக்கு, இக் கொடுந் துயரம் போகாதால். 224
'"கண்டு வரும்" என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக் கோன்,"கொண்டு வரும்" என்று இருக்கும்; யான் இழைத்த கோள் இது வால்;புண்டரிக நயனத்தான்பால், இனி, யான் போவேனோ?விண்டவரோடு உடன் வீயாது, யான் வாளா விளிவேனோ? 225
'"கண்ணிய நாள் கழிந்துளவால்; கண்டிலமால் கனங்குழையை;விண் அடைதும்" என்றாரை ஆண்டு இருத்தி, விரைந்த யான்எண்ணியது முடிக்ககிலேன்; இனி முடியாது இருப்பேனோ?புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால். 226
'ஏழு நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இவ் இலங்கைவாழும் மா மன் உயிர், யான் காணாத மற்று இல்லை;ஊழியான் பெருந் தேவி ஒருத்தியுமே யான் காணேன்;ஆழி தாய், இடர்-ஆழியிடையே வீழ்ந்து, அழிவேனோ? 227
'வல் அரக்கன்தனைப் பற்றி, வாயாறு குருதி உக,கல் அரக்கும் கரதலத்தால், "காட்டு" என்று காண்கேனோ?எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும், இவ் ஊரும்,மெல் அரக்கின் உருகி உக, வெந் தழலால் வேய்கேனோ? 228
'வானவரே முதலோரை வினவுவெனேல், வல் அரக்கன்-தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்,ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ்வண்ணம் தெரிகேனோ?ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்? 229
'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, "இலங்கையில், அத்திருவைக் கண்டனென்" என்றான்; அவன் உரையும் சிதைந்ததால்;கரு வைக்கும் நெடு நகரைக் கடலிடையே கரையாதே,உருவைக் கொண்டு, இன்னமும் நான், உளென் ஆகி உழல்கேனோ? 230
'"வடித்து ஆய் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறிய,பிடித்தான் இவ் அடல் அரக்கன்" எனும் மாற்றம், பிழையாதால்;எடுத்து ஆழி இலங்கையினை இருங் கடல் இட்டு, இன்று, இவனைமுடித்தாலே, யான் முடிதல் முறை மன்ற!' என்று உணர்வான். 231
தேடி அலைந்த அனுமன் ஒரு சோலையைக் காணல்
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய், தன்உள் உறையும் ஒருவனைப்போல், எம் மருங்கும் உலாவுவான்;புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்,கள் உறையும் மலர்ச் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 232
மிகைப் பாடல்கள்
'அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று, அகல் வான்கண்ட, அத் தனிக் கடி நகர் நெடு மனை; கதிர்கட்குஉண்டு, அ(வ்) ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடின், தம் முன்விண்ட வாய்ச் சிறு மின்மின் என்னவும் விளங்கா. 15-1
வானும் நிலனும் பெறுமாறு, இனி, மற்றும் உண்டோ -கானும், பொழிலும், இவை செங் கனகத்தினாலும்,ஏனைம் மணியாலும் இயற்றியவேனும், யாவும்தேனும், மலரும், கனியும், தரச் செய்த செய்கை? 17-1
'ஊறு மிகவே உறினும், யானும் அமர் தேரேன்,தேறல் இல் அரக்கர் புரி தீமைஅது தீர்வுற்று,ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,மாறும் மதி வேறு பிறிது இல்' என மதித்தான். 71-1
'கண்ட வனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,கொண்டல் செறிப்பான், வானரம் என்றும் கொளல் அன்றே;அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்;சண்டை கொடுத்தும் கொள்வன்' எனத் தான் சலம் உற்றாள். 84-1
ஆயவன் அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள், 'முன்நாள்மாய மா நகரம் தன்னை வகுத்து, அயன் என்னும் மேலாம்தூயவன் என்னை நோக்கி, "சுந்தரி! காப்பாய்" என்று, ஆங்கு,ஏயினன், இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற, 91-1
இத் திறம் அனந்த கோடி இராக்கதக் குழுவின் உள்ளார்தத்தம செய்கை எல்லாம் தனித் தனி நோக்கி, தாங்காது,'எத் திறம் இவர்தம் சீரை எண்ணுவது?' எனவே, அண்ணல்உத்தமன் தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான். 118-1
கிடந்தனன், வடவரை கிடந்தபோல்; இருதடம் புயம் திசைகளை அளக்கத் தாங்கியஉடம்பு உறு முயற்சியின் உறங்கினான், கடைஇடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே. 121-1
குடம் தரும் செவிகளும், குன்றம் நாணுறத் தடந் தரு கரங்களும், தாளும், தாங்குறாக்கிடந்தது ஓர் இருள் எனக் கிடந்துளான்தனைஅடைந்தனன், அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான். 127-1

by Swathi   on 23 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.