அமெரிக்கா, ரஷியா மற்றும் ஜப்பான் போன்ற 15 நாடுகள் கூட்டாக சேர்ந்து சர்வதேச விண்வெளியில் ஆய்வு கூடம் ஒன்றை விண்வெளியில் அமைத்துள்ளது. இது பூமியில் இருந்து 385 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்காக சுமார் ரூ. 5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆய்வு கூடம் அமைக்கும் பணிக்கு விண்வெளி வீரர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் சர்வதேச விண்வெளி மையம் சென்றார். அவருடன் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ மற்றும் ஜப்பானைச் சேர்ந்த அகிகிகோ ஹோசிடே ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்களுக்கு முன்பு விண்வெளி ஆய்வு கூடம் ரஷிய வீரர் ஜென்னடி படால்கா பொறுப்பில் இருந்தது. தற்போது அவரது தலைமையில் பணியாற்றிய 3 பேரும் பூமிக்கு திரும்பி விட்டதால் ஆய்வுகூட பொறுப்பு சுனிதா வில்லியம்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளி ஆய்வு கூட பொறுப்பை ஏற்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
|