|
|||||
பெண்களின் மறுவாழ்வுக்கு உதவி வரும் சுனிதா கிருஷ்ணனுக்கு மதுரா மாமனிதர் விருது !! |
|||||
மதுரா மாமனிதர் விருது 2014 சிறந்த மனிதநேய சேவை செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘மதுரா மாமனிதர் விருது’ ரூபாய் ஒரு இலட்சம் மதுரா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. கடந்த 01.11.2014 சனிக்கிழமையன்று சென்னை பிரஸ் கிளப், அரசினர் தோட்டம், சேப்பாக்கம், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவ்விருதினை மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட்., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ‘கலைமாமணி’ வீ.கே.டி.பாலன் அவர்கள், பிரஜ்வாலா நிறுவனர் டாக்டர் சுனிதா கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு, ஆயக்குடி அமர்சேவா சங்க நிறுவனத் தலைவர் - திரு. இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அன்பு பாலம் அமைப்பு - திரு.பா. கல்யாணசுந்தரம், சென்னை பாஸிடிவ் உமன் நெட்வொர்க் தலைவர் - திருமதி பி.கௌசல்யா, அக்ஷ்யா டிரஸ்ட் நிறுவனர் - திரு. நாராயணன் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த விழாவில், மதுரா மாமனிதர் விருது பெற்ற சுனிதா கிருஷ்ணன் பற்றிய ஒரு அறிய தொகுப்பு, 1972-ல் பிறந்த சுனிதா கிருஷ்ணன் ஒரு சமூகப் போராளி. பிரஜ்வாலா (Prajwala) என்கிற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் தலைமைச்செயலர் மற்றும் கூட்டு நிறுவனர். இந்த அமைப்பு பாலியல் வன்கொடுமை என்னும் படுகுழியில் வீழ்ந்து விட்ட பெண்களை மீட்டெடுத்து புனர் வாழ்வளித்து சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் பெற்று கௌரவத்துடன் வாழ வழி வகுக்கிறது. சுனிதா ஓர் அறிவார்ந்த - அற்புதமான - குழந்தை என்பது, அவரின் எட்டாவது வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்த போதே புலனாயிற்று. தனது 12-ம் வயதில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத - மனித உரிமைகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு பள்ளி நடத்தத் துவங்கினார். தனது 15-வது வயதில் தலித் சமூகத்துக்காக ஒரு நவீன கல்வி இயக்கத்தைத் துவங்கி நடத்தி வந்த போது எட்டு மனித மிருகங்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம்தான் இப்போது இவர் ஆற்றி வரும் அரிய சேவைகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்தது. சுனிதா தன் பள்ளிப்படிப்பை பெங்களூரு, மும்பை, டெல்லி, மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பாகத்திலுள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் தொடர்ந்தார். பெங்களூரு தூய ஜோசஃப் கல்லூரியில் சுற்றுச் சூழல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். பிறகு மங்களூர் ரோஷ்னி நிலையா என்ற கல்விக் கூடத்தில் மருத்துவம் மனோதத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த சமூக சேவை மேலாண்மையில் (MSW) முதுகலை பட்டம் பெற்றார். அதன் பிறகு சமூக சேவை பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்துக்கான கள ஆய்வுக்காக பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை முறைகளை கருப்பொருளாக எடுத்தக் கொண்டார். 1996-ல் ஹைதராபாதின் மெஹபூப் - கி - மெஹந்தி என்னும் இடத்திலுள்ள சிவப்பு விளக்கு பகுதியல் வசித்து வந்தவர்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அதன் விளைவாக விபச்சாரத்தின் பிடியில் சிக்கி இருந்த ஆயிரக் கணக்கான பெண்கள் வீடு வாசல்கள் இல்லாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். தன்னோடு சம சிந்தனையுள்ள கிறிஸ்துவ மத போதகரான சகோ: ஜோஸ் வெட்டுக்காட்டிலை இணைத்துக் கொண்டு ஓர் இடைக்காலப் பள்ளிக்கூடத்தை பாலியல் தொழிலாளிகள் காலி செய்த இடத்திலேயே நிறுவினார். அதன் மூலம் இளைய தலைமுறை பெண்கள் பெண் வாணிபக் கொடுமையில் சிக்காமல் பார்த்துக் கொண்டார். ஆரம்ப காலத்தில், பிரஜ்வாலா நிலையத்தின், அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தன் நகை நட்டுகளையும், பிறகு வீட்டின் பண்ட பாத்திரங்களையும் கூட விற்றார். இன்று பிரஜ்வாலா, தடுத்தல் - மீட்டெடுத்தல் - மறு வாழ்வு - சமூகத்தோடு மீள் உறவு - விழிப்புணர்வு அறிவுரைகள் என்கிற ஐந்து தூண்களின் மீது கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. இந்த அமைப்பு, தார்மீக - பொருளாதார - சட்ட ரீதியான சமூக ஆதரவையும், பாதுகாப்பையும் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு வழங்குவது மட்டுமல்ல. அதற்குக் காரணமான சதிகாரக் கும்பலையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கிறது. இன்றைய தேதி வரை பிரஜ்வாலா, பெண் வாணிபக் கொடுமைக்கு உள்ளான 9,500 துர்பாக்கிய சாலிகளை மீட்டெடுத்து - மறுவாழ்வு வழங்கி - அரியசேவை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சேவையை அளவிட்டுப் பார்த்தால் பெண் வாணிபத்துக்கு எதிராகப் போராடுவதிலும், இத்தைய பெண்களுக்கு புகலிடம் கொடுப்பதிலும் உலகத்திலேயே இதுதான் மிகப் பெரிய அமைப்பு என்பது காணக்கூடியதாக இருக்கிறது. இந்தத் துறையில் ஆரம்பத்தில் கால் பதித்த டாக்டர் சுனிதா, விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா ஒரு சக்தி வாய்ந்த நல்ல ஊடகம் என்பதை உணர்ந்து. அதிலும் சமூகம் சார்ந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தி, 14 ஆவணப் படங்களை தயாரித்துள்ளார். அவற்றின் கருத்தியல் - பிரதியாக்கம் - அத்தனையும் இவரது கை வண்ணம்தான். HIV/AIDS - பால்ய விவாஹம் - உறவுகளுக்குள்ளேயே பொருந்தாத திருமணம் - விபச்சாரம் - பெண் வாணிபம் - மதக்கலவரம் - ஆகியவை இந்த ஆவணப் படங்களின் கருப்பொருளாக இருந்துள்ளன. தனக்கு ஏற்பட்ட வலி, அதனால் எழுந்த கோபம் ஆகியவற்றை தன்னுடைய சக்தியாக - பலமாக - சேகரித்துக் கொண்டு தன் கரங்களில் திகழும் இந்த மாபெரும் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துள்ளர். அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தளத்திலும் சமூகத்தின் மெத்தனம் - அலட்சியம் - பாலியல் வன் கொடுமைகளை சகித்துக் கொள்வது போன்ற பொறுப்பற்ற சுபாவத்தின் உச்சி முடியைப் பிடித்து உலுக்குகின்றார். உங்களை எது இயக்குகிறது என்று அவரிடம் கேட்டால், தயங்காமல் வருகிறது பதில், “நான் மீட்டெடுத்த குழந்தைகளின் புன்னகைக்காக நான் வாழ்கிறேன், “நான் மீட்டெடுத்த குழந்தைகளின் புன்னகைக்காக நான் வாழ்கிறேன், அவர்களது கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசிப்பதை காண்பதற்காக அவர்களது கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசிப்பதை காண்பதற்காக நான் வாழ்கிறேன்” நான் வாழ்கிறேன்” என்கிறார்.... |
|||||
by Swathi on 19 Nov 2014 0 Comments | |||||
Tags: Sunitha Krishnan Social Activist Sunitha Krishnan Madura Maa Manidhar Award மதுரா மாமனிதர் விருது பிரஜ்வாலா Prajwala | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|