செய்வாய் கிரகத்தை ஆராய இந்தியா சார்பில் அனுப்பப்பட மங்கள்யான் செயற்கைக்கோளை நிலை நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு சரிசெய்யப்பட்டுள்ளது.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் என்ற திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில், செவ்வாய் கிரகத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை உருவாக்கி, கடந்த நவம்பர், 5ம் தேதி, விண்ணில் ஏவியது. பெங்களூருவில் உள்ள, "பீன்யா' கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நவம்பர், 7ம் தேதி அதிகாலை, பூமியில் இருந்து, 28,814 கி.மீ., உயரம்; 8ம் தேதி அதிகாலை, 40, 186 கி.மீ., உயரம்; 9ம் தேதி, 71,623 கி.மீ., உயரம் என, மங்கள்யான் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை, 2:06 மணிக்கு, நான்காவது கட்டமாக, ஒரு லட்சம் கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தும் பணி துவங்கியது. ஆனால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, செயற்கைகோள் அடையவில்லை.
மங்கள்யான் செயற்கைக்கோள் நிலைநிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து, இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், மங்கள்யான் செற்கைக்கோளில் உள்ள ராக்கெட் தன் செயல்பாட்டை பாதியிலேயே, நிறுத்திக் கொண்டதால், "மங்கள்யான்' செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாமல் போனது. இந்நிலையில் இன்று அதிகாலை, 5:03 மணிக்கு, செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட் இயக்கப்பட்டு, ஒரு லட்சம் கி,மீ., உயரத்தில் செயற்கை கோள் நிலை நிலைநிறுத்தப்பட்டது. மேலும், இந்த திட்டம் 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும், டிசம்பர் முதல் தேதி, செவ்வாய் கிரகத்துக்கான பாதையில், மங்கள்யான் தன் பயணத்தை துவங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானி கூறியுள்ளார்.
|