தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை இன்னும் நான்கு வாரங்களில் முறைப்படுத்தி நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் 10,000 ருபாய் அபராதமும் விதித்துள்ளது. கடந்த 2007–ம் ஆண்டு முதல் ஆட்டடோ,ரிக்சா கட்டணங்களை தமிழக அரசு முறைப்படுத்தி நிர்ணயிக்காததால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி, ராமமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.கடந்த மே மாதம் 6–ந் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை 2 மாதங்களுக்குள் முறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.இந்த வழக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, ஆனால் ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யாமல் மேலும் இரண்டு மாத கால அவகாசம் கோரியது. இதனை கண்டித்த நீதிபதிகள், அடுத்த 4 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயம் செய்யும் படியும், இந்த வழக்கை தொடர்ந்த
மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழங்குமாறு உத்தரவிட்டனர்.
|