ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் உருவாக்கி வரும் ரோமியோ ஜூலியட் படத்தில் இடம் பெற்றுள்ள டண்டனக்கா என துவங்கும் பாடல் தற்போது ஒரு புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த பாடல் டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவதுபோல் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த பாடலை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தரின் பிரபலமான வசனமான டண்டனக்கா எனத் தொடங்கும் இந்த பாடலை டங்கா மாரி புகழ் ரோகேஷ் எழுதியுள்ளார். டி.இமான் இசையில் அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடல் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள ஜெயம் ரவி, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் டி.ராஜேந்தர் ரசிகனாக நான் வருகிறேன். அவரின் தன்னம்பிக்கையே எனது கேரக்டராக இருக்கும். எனவேதான் டண்டனக்கா பாடலை படத்தில் இடம்பெற வைத்தேன். அதில் டி.ராஜேந்தரை அவமதிக்கும் வரிகள் இல்லை. அவரை பெருமைபடுத்துவதாகவே இருக்கும் என்றார்.
இந்த நிலையில் டண்டனக்கா பாடலை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ‘ரோமியோ ஜுலியட்’ தயாரிப்பாளர் நந்தகோபால், டைரக்டர் லஷ்மண், இமான், அனிருத் ஆகியோருக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து படப்பிடிப்பில் இருந்த டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, டண்டனக்கா பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி எனது வழக்கறிஞரிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருப்பதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
பட தயாரிப்பாளர் நந்தகோபால் கூறும்போது, டண்டனக்கா பாடலில் டி.ராஜேந்தரை கொச்சைப்படுத்தவில்லை. படத்தை பார்க்க அவர் விரும்பினால் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பாக அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம் என்றார்.
|