|
|||||
தமிழ் கையெழுத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ்., வழிகாட்டும் மக்கள் பாதை அமைப்பு கின்னஸ் சாதனை! |
|||||
தமிழ் கையெழுத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பு கின்னஸ் சாதனை படைத்து உள்ளது. சமூக மாற்றம் ஏற்பட்டால் அரசியல் மாற்றம் தானாக நிகழும் என்று கூறி 'மக்கள் பாதை' என்னும் அமைப்பைத் தொடங்கி, சகாயம் ஐ.ஏ.எஸ், சமூக மாற்றத்திற்கான பணிகளை சகாயம் செய்து கொண்டு இருக்கிறார். மக்கள் பாதை அமைப்பு சமூக மாற்றத்திற்காகவும், எளியோரின் வாழ்வை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உங்களுக்கு எது முக்கியம்- ஐ.ஏ.எஸ். பதவியா அல்லது தமிழா என்று கேட்டால் தமிழ்தான் முக்கியம் என்று கூறியவர் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆங்கில மோகத்தால், தமிழின் அழிவைக் கண்டு வருந்தி, தமிழை மீட்டெடுக்கும் முயற்சியாக மக்கள் பாதை திட்டங்களில் ஒன்றான "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று ஒரு திட்டத்தின் கீழ் தமிழ் கையெழுத்து இயக்கத்தை நடத்தத் தொடங்கினார். தன் பெயரை தமிழில் கையெழுத்து இடுவதைக் கூட அவமானமாக கருதும் தலைமுறைக்கு, தமிழில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல தன்மானம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த இயக்கத்தின் தோக்கமாக அமைந்தது. உலகின் மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள், உலகின் மூத்த மொழி மட்டுமல்லாமல் முதன்மை மொழியான தமிழ் மொழியின் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தமிழ் கையெழுத்து இயக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எஸ்.ஐ.ஜி.ஏ. தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் கையெழுத்து திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழ்ச் சான்றோர்களின் வழித்தோன்றல்கள், தமிழ் மீது பற்றுக் கொண்டவர்கள், பொதுமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி ஐ.ஏ.எஸ். தலைமையில், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியான சகாயம் ஐ.ஏ.எஸ். முன்னிலையில் இந்த விழா நடந்தது. இதில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழ் கையெழுத்து கின்னஸ் சாதனை முயற்சியும் மேற்கொண்டனர். இதில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமிழில் கையெழுத்திட்டனர். கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழை மக்கள் பாதை அமைப்பிடம் அளித்துள்ளனர். சகாயம் ஐ.ஏ.எஸ். சிந்தனையில் தோன்றிய இம்முயற்சியால் தமிழ் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றால் அதில் மிகையில்லை. |
|||||
by Mani Bharathi on 20 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|