|
||||||||
மக்களவையில் தமிழ்- வழியமைத்து கொடுத்த ஜெகஜீவன்ராம்! |
||||||||
மக்களவையில் எனக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பேச வழியமைத்துக் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளான இப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார், மக்களவையில் தனது பணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன் என்று குமரி அனந்தன் கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் பனை வாரியத் தலைவருமான குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவையில் தனது பணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவைத் தலைவர் மீரா குமாரிடம் அனுமதி கேட்டிருந்தார். இது தொடர்பாக அவைத் தலைவர் மீரா குமார் அமைச்சரை அழைத்து பேசப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. நான் 1977ம் ஆண்டில் நாகர்கோவில் மக்களவை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது நான் தமிழில் கேள்வி கேட்டேன். ஆங்கிலம், இந்தியை தவிர வேறு மொழியில் கேள்வி எழுப்பாத காரணத்தால் என்னை அவையில் இருந்து பல முறை வெளியேற்றினர். நான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றதால் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபு ஜகஜீவன்ராம் தலைமையில் ஒரு மொழிக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். அப்போது, தமிழ் இந்திய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாகவும், தொன்மையானதாகவும், என் தாய் மொழியாகவும் இருப்பதால், தமிழில் கேள்வி கேட்கும் உரிமை வேண்டும் என்று சாட்சியம் அளித்தேன். அதன் பிறகு என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, தமிழில் கேள்வி கேட்கும் உரிமை ஏற்கப்பட்டது. 1978ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நான் தமிழில் கேள்வி கேட்க அது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. அன்றைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த இப்போதைய தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா என் கேள்விக்கு பதில் அளித்தார். மக்களவை ஆவணக் குறிப்பேட்டில் குமரி அனந்தன் தமிழில் கேட்ட கேள்வி என்று குறிப்பிட்டு வெளியாகி உள்ளது. இதற்காக அப்போது கருணாநிதி என்னை பாராட்டினார். எனவே மு.க. அழகிரி தம் பணியை தமிழில் ஆற்ற, எனக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பணியாற்ற வழியமைத்துக் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளான மக்களவைத் தலைவர் மீரா குமார் அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் குமரி அனந்தன். |
||||||||
by Swathi on 02 Oct 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|