|
|||||
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்க தடை ! |
|||||
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும் சேமித்து வைக்கவும், விநியோகிக்கவும், விற்கவும் தடை விதிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
புகையிலை மற்றும் புகையிலைப் பொருள்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் மெல்லும் வகை புகையிலைப் பொருள்களை 2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை விதித்தது. இந்தத் தடைக்கான அறிவிக்கைகள் குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாகக் கூறி அறிவிக்கையை ரத்து செய்தது. இப்போது உணவு கலப்படத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டம் 2011 ஆகஸ்ட் முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.
தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் என்ற தனித் துறையை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின் கீழ் எந்த ஓர் உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக் கூடாது எனவும், புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது.உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின்போது குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருள்களை தடை செய்வதைப் பற்றி மாநில அரசுகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வகையில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருள்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
|
|||||
by Swathi on 09 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|