பிரபல தமிழ் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை சென்னையில் காலமானார்.
வாசகர் நெஞ்சங்களில் நீங்க இடம் பிடித்த புஷ்பா தங்கதுரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாவல்களை எழுதியுள்ளார். அறிவியல், கிரைம், சமூகம் என பல தலைப்புகளில் தனக்கே உரிய சிறப்பு நடையில் இவர் எழுதிய பல நாவல்கள் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நீ நான் நிலா, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, என் பெயர் கமலா, எனது பீத்தல் குடை போன்றவை இவரது பிரபலப் படைப்புக்கள் ஆகும்.
82 வயதான புஷ்பா தங்கதுரை, திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புஷ்பா தங்கதுரை இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும், அவர் எழுதிய சிறுகதைகளிலும், நாவல்களிலும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்...
|