|
|||||
தமிழக மாணவர்கள் போராட்டம் பற்றி மத்திய அரசு கவலை ஏன்? |
|||||
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தின் வரைவு தற்போது உறுப்பு நாடுகளின் பார்வைக்கு சுழற்சியில் விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதுடன், முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரி மற்றும் கலை–அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியா இன்னும் முடிவு எடுக்கவில்லை. இது மத்திய அரசுக்கு எதிராக பரவலான எதிர்ப்பு அலைகளை உருவாக்கி வருகிறது. இந்தப் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் பிற கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள். சிங்கள அரசால் அங்கு வாழுகிற தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். டெல்லி மேல்–சபையிலும் இந்தப் பிரச்சினை கேள்வி நேரத்தின்போது எதிரொலித்தது. தி.மு.க.திருச்சி சிவா : ‘‘இலங்கையில் மனித உரிமை மீறல் என்பது நெடுங்காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தால் தமிழகம் பற்றி எரிகிறது. மாணவர்களை அமைதிப்படுத்துகிற வகையில் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு முடிவான வாக்குறுதியை தர வேண்டும். ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’’. அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் மைத்ரேயன்: ‘‘ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு முயற்சிகள் நடக்கின்றன. 22–ந்தேதிக்கு பின்னர் மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரம் அடையும். எனவே அமெரிக்க தீர்மானம் வலுவுள்ளதாக அமையத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்’’. பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா:‘‘தமிழ்நாட்டில் நடந்து வருகிற மாணவர்கள் போராட்டம் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. சபையின் உணர்வுகளை நான் வெளியுறவுத்துறை மந்திரியிடம் கூறுவேன்’’. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்: இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது கவலை அளிக்கிறது. தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இலங்கையில் வாழ்கிற தமிழ் இன மக்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான் அரசின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அத்தனையையும் மத்திய அரசு எடுக்கும். இலங்கை அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். நியாயமான பங்களிப்பு செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டவர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம்.. இதில் இறுதி முடிவு எடுத்தவுடன் அது பற்றி சபைக்கு தெரிவிக்கப்படும்.(போர்க்குற்றங்கள் தொடர்பாக) பாரபட்சமற்ற, சுதந்திரமான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்படவேண்டும். இந்தியா இதில் உறுதியாக உள்ளது. |
|||||
by MAYIL on 15 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|