தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாற்றுமுறை சமரசத் தீர்வு மையக் கட்டடத்தை, எம்.ஆர்.சி. நகரில் அவர் இன்று திறந்து வைத்தார். அப்போது சதாசிவம் கூறியவதாவது, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பது கவலை அளிக்கிறது.பெண்கள், தாழ்த்தப்பட்டோர் அடக்குமுறை தொடர்பான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்க நீதிபதிகள் முயற்சிக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும். மேலும் ஏழைகளுக்கும் சட்டத்தின் சேவை கிடைக்கச் செய்ய வேண்டியது வழக்கறிஞர்களின் கடமை.பல நேரங்களில் ஒரு சில வழக்குகளை விசாரிப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும், இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சதாசிவம் தெரிவித்தார்.
சென்னை ஐகோர்ட்டில், வழக்காடும் மொழியாக, தமிழை கொண்டு வரவேண்டும் என்றால், தமிழ் சுருக்கெழுத்தாளர், தமிழில் சட்டநூல்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே பல கோரிக்கைகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக நான் பதவி வகித்த போது, நீதிபதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
|