|
|||||
அமெரிக்காவில் தமிழ்க்கல்வி வளர்ப்போம் ! |
|||||
அமெரிக்காவில் சிறப்புடன் நடந்து வரும் தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கிணைந்து பொதுப்பாடத்திட்டம் வகுக்கவேண்டும்; அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக அங்கீகரிக்கப்படவேண்டும்; இணையம், கணினி வாயிலாக இன்னும் முனைப்பாக தமிழ்க்கல்வியை அமெரிக்க மண்ணில் முன்னெடுத்துச் செல்லவேண்டும்; என்பதுபோன்ற இலக்குகளைக்கொண்டு அமெரிக்க மண்ணில் பல தமிழ்ப்பற்றாளர்கள் நீண்ட காலமாக முயன்று வருகிறார்கள்.
இந்நோக்கங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக “அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம் (American Tamil Academy) என்ற பெயரில் லாபநோக்கற்ற அமைப்பொன்றைத் தொடங்கியிருக்கிறோம். அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள், மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் அன்பர்கள் சேர்ந்து எடுத்திருப்பதே இம்முயற்சி. பல தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்களும் சென்ற ஆண்டு நவம்பர் 30ம் தேதி மேரிலாந்தில் கூடி இவ்வமைப்பு துவங்கப்பட்டது. குறிப்பாக மேரிலாந்து, வடகரோலைனா, அட்லாண்டா, மினசோட்டா, மிசொளரி, பென்சில்வேனியா, நியூஜெர்சி, டெலவேர் போன்ற மாநிலங்களில் நடைபெறும் தமிழ்ப்பள்ளிப் பொறுப்பாளர்கள் இம்முயற்சியில் பங்கு கொண்டார்கள்.
அமைப்பின் தற்காலிக பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பாளர்களுக்கிடையே பல பல்வழி அழைப்புக் கூட்டங்கள்(conference calls) நடத்தப்பட்டன., நேரிடையாக பிலடெல்பியா வட்டாரத்தில் ஒருமுறை கூடி தற்காலிகமாக ஒரு பொது பாடத்திட்டம் வகுத்து அதற்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தில் சேர்ந்துள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடங்களை கற்பிக்கும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனுபவங்களையும், திருத்தங்களையும் பெற்று அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக புத்தகங்களை அச்சிட்டு 2011ம் ஆண்டு பேரவை விழாவில் வெளியிட இருக்கிறோம்.
அமைப்பின் தற்காலிக பொறுப்பாளர்கள்: அரசு செல்லைய்யா, சிவக்குமார், இரவி பழனியப்பன், சிவானந்தம், பொற்செழியன், இரவி சண்முகம் ஆவார்கள். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர். வாசு அரங்கநாதன் தமது மேலான யோசனைகளைத் தெரிவித்து பல வகையில் இம்முயற்சிக்கு துணைபுரிகிறார்கள். அமைப்பைத் துவக்கும் முயற்சியிலும், மற்றும் இணைய தளங்களை உருவாக்கும் முயற்சியில் முனைவர் சொர்ணம் சங்கர் பெரிதும் உதவுகிறார்.
அமைப்பின் முயற்சிகளுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மிகப்பெரும் அளவில் உதவி வருகிறது. 2009 ஆண்டு கனெக்டிகட் பகுதியில் நிகழ்ந்த பேரவை ஆண்டுவிழாவில், அமைப்பினர் கூடிப்பேச வகைசெய்ததையும், தொடர்ந்து பேரவைத் தலைவர் மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள் பல்வேறு வகையில் உதவுவதையும், மிகுந்த நன்றிப்பெருக்குடன் நினைவு கூறுகிறோம்.
”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற அய்யன் திருவள்ளுவர் வாக்கிற்கிணங்க அமைப்பின் முயற்சிகளுக்குப் பொருள் தேவை என்ற வேண்டுகோள் வைத்தவுடன் பேரவை அமைப்பின் வாயிலாகவும், தனியார் நன்கொடை பெற்றும் $1600 டாலர்களை தமிழ்க்கல்விக் கழகத்திற்கு வழங்கியது மிகப்பெரும் உதவி. இவ்வுதவி பொருளாக மட்டுமின்றி, கல்விக்கழக அமைப்பிற்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாகவும் இருக்கிறது.
அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தின் அடுத்த கூட்டம் மார்ச் மாதம் வடகரோலைனா மாநிலத்திலோ அல்லது ஓகையோ மாநிலத்திலோ நடக்க முயற்சி செய்கிறோம். அக்கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். கூட்டம் பற்றிய முழு விவரங்களை விரைவில் தெரிவிப்போம். இவ்வமைப்பில் உங்களின் உதவி மிக மிக அவசியம். உங்களின் மேலானா யோசனைகள், உழைப்பு, பொருளுதவி அனைத்தையும் நாடி நிற்கிறோம்.
”கடல்போலச் செந்தமிழைப் பெருக்கவேண்டும்” என்ற பாரதிதாசனின் வரிகளையும், ”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் வரிகளையும் அமெரிக்க மண்ணில் மெய்ப்பிக்கும் இம்முயற்சி வெற்றி பெறும் என்பதற்கான நல்ல அறிகுறிகள் தெரிகின்றன.
அமெரிக்க மண்ணில் செயலாற்றும் அனைத்து தமிழ்ப்பற்றாளர்களும், தமிழ்க்கல்வி ஆர்வலர்களும் ஒருங்கிணையவேண்டும். நாம் இணைந்தால் மிகவிரைந்து தமிழ்க்கல்வி வளர்க்கமுடியும். தமிழ்க்கல்வி வளர்க்கும் முயற்சிக்கு துணையிருங்கள், தோள்கொடுங்கள் என்று மீண்டும் மீண்டும் உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! |
|||||
by Swathi on 27 Nov 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|