ஈரோடு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 2 தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது. இந்த விவகாரத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூரைச் சேர்ந்த தியாகராஜன், இவரது தம்பி செந்தில்குமார், வழக்கில் முக்கிய குற்றவாளியான பாலன்(எ)ஸ்ரீதர்ராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீதர்ராஜ் இன்று ஈரோடு ஜே.எம். 2வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றார். இந்நிலையில், தியாகராஜன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தனது தம்பி செந்தில்குமாருக்காக ஆந்திராவைச் சேர்ந்த ராவ் என்பவரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து வினாத்தாளை வாங்கியதாக கூறியுள்ளார். ராவ் என்பவர் யார் என தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். வினாத்தாள் வெளியாவதை தடுக்க டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்கள் அனைத்தும் ஆந்திராவில் அச்சடிக்கப்படுவது வழக்கம். ஆனால், அங்கிருந்து வினாத்தாள்கள் முறைகேடாக வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|