ஆம்பூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளிப் பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய 3 வயது சிறுமி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் எம்பேசோ மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார் மாணவி சுஜிதா. பள்ளி முடிந்த உடன் இவர் தனது சகோதரியுடன் பள்ளி பேருந்தில் மாராபட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்தை விட்டு கீழே இறங்கும் போது, ஓட்டுனர் பேருந்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி சுஜிதா பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
மாணவி உயிரிழந்ததற்கு டிரைவரின் கவனக் குறைவே காரணம் என்று கூறப்படுகிறது. மாணவியின் மரணம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலையூர் மாணவி பேருந்தில் இருந்த ஓட்டையில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எல்.கே.ஜி மாணவியின் மரணம் ஆம்பூர் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
|