பாவலர் கருமலைத்தமிழாழன் மிகச் சிறந்த மரபுக்கவிஞர். அன்று குயில், காஞ்சி, கண்ணதாசன் போன்ற இதழ்களிலிருந்து இன்று தமிழகத்திலிந்தும் அயலகங்களிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் எண்ணற்ற இதழ்களில் இவரின் மரபுக்கவிதைகள் கண்மலர்ந்து தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன.
கிருட்டிணகிரியில் (கருமலை) 16.07.1951இல் பிறந்த இவர் அண்மையில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றிருக்கிறார். நானும் தம்பி, கருமலைத்தமிழாழனும் கருமலையில் 1965-70களில் ஓவியக்கவிஞர் பெருமாள்ராசு ஐயா, மற்றும் புலவர் இராமானுசம் ஐயா அவர்களின் சங்கத்தமிழ் அரவணைப்பில் சுதந்திரமாகப் பறந்து திரிந்து கவிதை வானை வட்டமிட்டவர்கள். இவரின் முதல் கவிதை 1969இல் குயில் இதழில் வெளிவந்தது. அப்பொழுது இவர் கிருட்டிணகிரி கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது நெஞ்சின் நிழல்கள், மலர்விழி, காற்றை மணந்த கவிதைகள், காவியத்தலைவன், ஒப்பனைப்பூக்கள், நீர்க்கால்கள், மண்ணும் மரபும், வீணை மத்தளமாகிறது, மரபின் வேர்கள், புதிய குறுந்தொகை, வேரின் விழுதுகள், சுவடுகள், உன்முகமாய் இரு போன்ற இருபதிற்கும் மேற்பட்ட கவிதை நூல்களின் படைப்புகளால், உன்னத பரிசுகளும், சிறப்புகளும் பெற்று ஓங்கு தமிழ்க் கவிஞனாக உலா வந்து கொண்டிருக்கிறார்.
தனக்கென்று ஒரு கொள்கை வகுத்துக்கொண்டு அதை எதற்காகவும், யாருக்காகவும், சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று வாழ்ந்து வருபவர் என்பதை அவரின் இந்த வரிகளே நமக்குக் காட்டும்.
“என் சுயத்தை யாருக்காய் இழக்க வேண்டும்
என் வழியை யாருக்காய் மாற்ற வேண்டும்
என் குறிக்கோள் என்கொள்கை அடைவ தற்கே
எவர் தடையாய் நின்றாலும் தகர்த்த ழிப்பேன்!”
உன் முகமாய் இரு (பக் 59) என்றும்
“ஏறுபோல தீமைகளை எதிர்த்தி டாமல்
எச்சில்நாய் போலிருக்க முடியா தென்னால்” (உ.இ. பக் 59)
என்றும் தன்சுயம் கெடாமல் சொந்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் கொள்கைப் பிரகடனமாய்ப் பாடியிருக்கிறார்.
தன் பெயருக்கேற்பத் தமிழையே தம் உயிராகக் கொண்டிருப்பவர். தனித்தமிழ் இதழ்களை நூலகங்களில் இடம்பெறச் செய்ய 1972இல் மறுப்பு தெரிவித்த தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலரை எதிர்த்த போராட்டத்தில் தன்னுடைய தமிழாசிரியர் பணியையே இழந்தவர். தமிழ்மொழியின் வளர்ச்சியே தமிழரின் வளர்ச்சி என்று எண்ணி மொழிப்பற்றில்லா தமிழர்க்குத் தம் கவிதைகளால் தமிழ்ப்பற்றை ஊட்டியவர்.
“செந்தமிழா நான்என்ன சொல்லிவிட்டேன்
செவ்வரளி விதைதனையா தின்னச் சொன்னேன்
சொந்தமொழி தமிழினிலே கல்வி கற்றால்
சுயசிந்தை பேரறிவு வளரு மென்றேன்” (நீர்க்கால்கள்-பக்5) என்று தமிழ்க் கல்வியே தமிழரை முன்னேற்றும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் தமிழரைச் சொற்களில் கனலேற்றிச் சுடுகிறார்.
“அம்மாவை மம்மியென்றே
அழைப்போரின் நாவறுப்பேன் துண்டுசெய்வேன்
செம்மொழியை ஏளனமாய்ச்
செப்புவோனின் தலைகொய்வேன் புதைத்திடுவேன்” (வீ.ம.பக் 22)
எனக் கூறும் இவர் தமிழ்மொழிக்குத் தீங்கிழைக்கும் தமிழர் மீது தன் சினத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார். |