என்ஜினியரிங் முடித்து விட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கு அவர்களுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை புராஜெக்ட்களாக செய்து கொடுத்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார் நகுல்.
கல்லூரி மாணவியான ஐஸ்வர்யா ததும் அவரது குழுவினரும், தனது புராஜெக்ட்டுக்காக நகுலின் உதவியை நாடுகிறார்கள். நகுலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை சீற்ற சூழலிலும் சிக்கல் இல்லாத செல்போன் சிக்னல் என்ற வித்தியாசமான புராஜெக்ட்டை ஐஸ்வர்யாவுக்கு செய்து கொடுக்க, அதில் இம்ப்ரஸ் ஆகும் ஐஸ்வர்யா நகுலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார். படத்தில் இன்னொரு ஹீரோவான தினேஷ் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக வருகிறார். அவரை தற்கொலைக்கு முயன்றவர் என தவறாக நினைத்து அவருக்கு தன்னம்பிக்கைக்கான கவுன்சிலிங் கொடுக்கிறார் பிந்து மாதவி.
பிந்துமாதவியின் கவுன்சிலிங் தினேஷின் ,மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால், பிந்து மாதவியோ இந்த காதலை ஏற்க மறுக்கிறார். தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டால் தான் உன்னை மறந்துவிடுவதாக தினேஷ் கூறுகிறார். இதற்காக பயிற்சி எடுக்கும் பிந்துமாதவி அதில் தோல்வி அடைந்து தினேஷை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
தன் காதலை தினேஷிடம் சொல்ல அவரைத் தேடி அவர் பணிபுரியும் இடத்திற்கு செல்லும் பிந்து மாதவி தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார். அந்த பள்ளத்திற்கு மேலே இருக்கும் கல் ஒன்று பள்ளத்திற்குள் விழ தயாராக இருக்கிறது. எனவே, உடனடியாக தனது போனில் தினேஷை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்.
இந்நிலையில், கால் டாக்சி டிரைவரான சதீஷின் டாக்சியில் வெடிகுண்டு ஒன்றை வைக்கும் தீவிரவாதி ஓருவன், அதை செல்போன் மூலமாக இயக்கி சென்னையின் முக்கிய இடத்தில் வெடிக்க வைக்க சதி செய்கிறான்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒருங்கே நடந்து கொண்டிருக்கும்போது, சென்னையில் சூரியப்புயல் காரணமாக செல்போன் டவர்கள் எல்லாம் செயலிழந்து போகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ப்ராஜெக்ட் பற்றி அறியும் செல்போன் நிறுவனங்கள், தற்போது உருவாக்கி உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக நகுல் உதவியை நாடுகிறார்கள்.
இறுதியில் செயல் இழந்த செல்போன் டவர்களை எல்லாம் நகுல் உயிர்பித்தாரா? பிந்து மாதவி பள்ளத்தில் இருந்து உயிர் பிழைத்து தனது காதலை தினேஷிடம் தெரிவித்தாரா? தீவிரவாதி வைத்த வெடிகுண்டு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நகுல் இந்த படத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.
ரியல் எஸ்டேட் ஏஜென்டாக வரும் தினேஷ் கழுத்துல டை, கையில் பை, வாயில் பொய்... எனும் ரீதியில் இஷ்டத்துக்கு அடித்துவிட்டு... புதிய பிளாட்டுகளை விற்பனை செய்யும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.
ஐஸ்வர்யா தத்திற்கு குறைவான கட்சிகள் என்றாலும் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்.
தினேஷுக்கு ஜோடியாக வரும் பிந்து மாதவி நடிப்பில் மீண்டும் முத்திரை பதித்திருக்கிறார்.
சதீஷுக்கும் ஒரு ஜோடியை கொடுத்து அவருக்கு ஒரு தனி டிராக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். நகுலின் அம்மாவாக வரும் ஊர்வசி சொல்லும் சயின்ஸ் வார்த்தைகளும், விளக்கமும் சூப்பர்.
தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' ஒரு முறை பார்க்கலாம்...
|