தமிழச்சியின் கத்தி - பகுதி 2
21. சேரிக்குள் சென்றாள்
எண்சீர் விருத்தம்
|
எட்டிஇருந் திட்டபல சேரி மக்கள் இல்லங்கள் நோக்கிஅவள் மெல்லச் சென்றே இட்டகனல் வெப்பத்தால் தோழி மாரே என்நெஞ்சு வெந்ததுண்டு தோழி மாரே மட்டற்ற நாவறட்சி தோழி மாரே வாட்டுவதால் நீர்கொடுப்பீர் தோழி மாரே எட்டுணையும் மறுப்பீரோ தோழி மாரே என்றுநடு வீதியிலே கூவி நின்றாள்.
சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து சேதிதெரிந் திடநினைத்த சேரி மக்கள் ஓரொருவ ராய்வந்தார் வௌியில்; 'அம்மா உற்றதென்ன உன்றனுக்கே? உரைக்க வேண்டும். நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்; நிலவில்லை; இந்தஇருள் தன்னில் வந்தே கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக் கொடுமைஇழைத் தவர்யாவர்? உரைப்பீர்!' என்றார்.
'திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச் சிறுதடுக்கும் இட்டுநீர் குடிக்கத் தந்த பெரியீரே! என்அருமைத் தோழி மாரே! பெருந்தீயால் சிறுவீடு வேகும் கோலம் தெருவினிலே கண்டீரே இரங்கி னீரோ? செயும்உதவி செய்தீரோ? மக்கள் கூட்டம் ஒருமுனையிற் பெற்றதீ முழுதும் தீர்க்கும் என்னுமோர் உண்மையினை மறக்க லாமோ?
குளக்கரையின் சிறிதசைவு குளத்த சைவே! கொல்புலியால் ஒருவன்இடர் பலர்க்கும் அன்றோ? இளக்காரம் தாராமல் தீமை ஒன்றை இயற்றியோ ரைஊரார் எதிர்க்க வேண்டும். களாப்புதரும் தன்னகத்தே இடங் கொடுத்தால் கவ்விவிடும் வேரினையே காட்டுப் பன்றி! விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை; வௌியானைக் கொட்டும்தே னீக்கள் வாழும்!
சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே துணைவருக்குச் சிப்பாயின் உத்தி யோகம் உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே ஒளித்துவைத்தான்; எனைவிட்டுப் பிரித்து வைத்தான். இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை எடுத்தாள எண்ணமிட்டான். சூழ்ச்சி யெல்லாம் புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப் பொசுக்கினான் நான்கலங்கிப் போவே னென்று.
தீஎரியும் நேரத்தில் தீமை வந்து சீறுகின்ற நேரத்தில் எனைஇ ழுத்துப் போய்அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை! புதைத்திருந்தேன் என்இடையில் குத்துக் கத்தி தோயுமடா உன்மார்பில் என்று காட்டித் 'தொலையில்போ' என்றேன்நான்! சென்றான் அன்னோன். நாய்குலைக்க நத்தம்பா ழாமோ சொல்வீர் நான்அடைந்த தீமைகளைச் சுருக்கிச் சொன்னேன்.
உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை உட்புறத்தை நான் அடைய வேண்டும். அங்கே துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின் றாரா? துயரின்றி இருக்கின் றாரா துணைவர்? முயல்வதே என்கடமை; உளவு தன்னை மொழிவதுதான் நீங்கள்செய்யும் உதவி' என்றாள். 'துயரோடு வந்திட்ட எம்பி ராட்டி தூங்கிடுக விடியட்டும்' என்றார் அன்னோர்.
'கண்மூட வழியிலையே! விடியு மட்டும் காத்திருக்க உயிரேது? தோழி மாரே விண்மூடும் இருட்டென்றும் பகல்தா னென்றும் வேறுபா டுளதேயோ வினைசெய் வார்க்கே? மண்மூடி வைத்துள்ள புதுமை யைப்போல் மனமூடி வைத்திருப்பார் சூழ்ச்சி! இந்தப் பெண்மூடி வைத்திடவோ என்உ ணர்வை? பெயர்கின்றேன் வழியுரைப்பீர் பெரியீர்' என்றாள்.
'கையோடு கூட்டிப்போய்க் காட்டு கின்றோம் காலையிலே ஆகட்டும்; இரவில் போனால் செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன் றாது; சிப்பாய்கள் நம்மீதில் ஐயம் கொள்வார். மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள வீட்டையோ கோட்டையையோ அறிவ தெங்கே? ஐயாவைக் காணுவதும் முடியா' தென்றார் அரிதான மாண்புடையாள் 'சரிதான்' என்றாள். |
22. மன்னனைக்கண்டாள்
தென்பாங்கு -- கண்ணிகள்
|
தேசிங்கு மன்னன் - சில சிப்பாய்க ளோடு பேசிச் சிரித்தே - தன் பெருவீடு விட்டு மாசற்ற தான - புனல் மடுவிற் குளிக்க வீசுங் கையோடு - மிக விரைவாய் நடந்தான்!
எதிர்ஓடி வந்தாள் - நல் எழிலான மங்கை. 'சுதரிசன் சிங்கன் - என் துணையைப் பிரித்தான்; மதில்வைத்த கோட்டை - தனில் வைத்தே மறைத்தான்; எதைநான் உரைப்பேன்? - அவன் எனையாள வந்தான்.
குடிபோன வீட்டை - அக் கொடியோனும் நேற்று நடுவான இரவில் - அவன் நாலைந்து பேரால் முடிவாய்ந்த மன்னா! - அனல் மூட்டிப் பொசுக்கிக் கடிதாக என்னை - அவன் கைப்பற்ற வந்தான்.
தப்பிப் பிழைத்தேன் - இதைத் தங்கட் குரைக்க இப்போது வந்தேன் - இனி என்க ணவரைநான் தப்பாது காண - நீர் தயைசெய்ய வேண்டும் ஒப்பாது போனால் - என் உயிர்போ கும்'என்றாள்.
'சுதரிசன் சிங்கன் - நம் சுபேதாரும் ஆவான்; இதை அவன்பாலே - சொல் ஏற்பாடு செய்வான். இதையெ லாம்சொல்ல - நீ ஏனிங்கு வந்தாய்? சதையெலாம் பொய்யே - இத் தமிழருக்' கென்றான்.
தேசிங்கு போனான் - சில சிப்பாய்கள் நின்று 'பேசினால் சாவாய் - நீ பேசாது போடி. வீசினாய் அரசர் - வரும் வேலையில் வந்தே பேசாது போடி' - என்று பேசியே போனார்.
என்ற சொற்கேட்ட - அவ் வேந்தி ழைதீயில் நின்ற வள்போல - ஒரு நெஞ்சம் கொதித்து 'நன்று காண்நன்று! - மிக நன்று நின்ஆட்சி! என்றே இகழ்ந்து - தணல் இருகண் கள்சிந்த
படைவீடு தன்னை - அவள் பலவீதி தேடி கடைசியிற் கண்டு - நீள் கதவினைத் தட்டி 'அடையாத துன்பம் - இங் கடைகின்ற என்னை விடநேர்ந்த தென்ன? - நீர் விள்ளூவீர்' என்றாள்.
'கொண்டோன் இருக்க - அவன் கொடுவஞ் சகத்தால் பெண்டாள எண்ணி - மிகு பிழைசெய்த தீயன் உண்டோ என்அத்தான் - அவன் உம்மோடு கூட? எண்ணாத தென்ன - எனை? இயம்புவீர்' என்றாள்.
'உள்ளி ருக்கின்றீர் - என் உரைகேட் பதுண்டோ? விள்ளு வீர்'என்றாள் - அங்கு விடை ஏதுமில்லை. பிள்ளை போல்விம்மிப் - பெரும் பேதையாய் மாறி தெள்ளு நீர்சிந்தும் - கண் தெருவெ லாம்சுற்ற
கோட்டையை நீங்கி - அக் கோதையாள் சேரி வீட்டுக்கு வந்து - தன் வெறுவாழ் வைநொந்து மீட்டாத வீணை - தரை மேலிட் டதைப்போல் பாட்டொத்த சொல்லாள் - கீழ்ப் படுத்துக் கிடந்தாள்! |
23. இருமாதரும் அழைத்தார்கள்
தென்பாங்கு -- கண்ணிகள்
|
'எப்படி இங்குவந்தாய்? - சுப்பம்மா எழுந்திரு விரைவாய். இப்படி நீஇளைத்தாய் - அவர்கள் இன்னல் புரிந்தாரோ? செப்படி அம்மாநீ - உனக்கோர் தீமையும் வாராமல் மெய்ப்படியேகாப்போம் - எமது வீட்டுக்கு வா'என்றனர்.
முருகியுங் குப்பும் - இப்படி மொழிந்து நிற்கையிலே 'வருவது சரியா - உங்களின் வழக்கம் கண்டபின்னும்? தெரியும் சென்றிடுவீர்' - என்றுமே சேயிழை சொல்லிடவே அருகில் நில்லாமல் - அவர்கள் அகன்று விட்டார்கள். |
24. சேரித்தலைவன் செங்கான்
எண்சீர் விருத்தம்
|
சேரிவாழ் செங்கானை இரண்டு பேரும் தெருவினிலே தனியிடத்தில் கூட்டி வந்து சேரிக்கு நீதலைவன் உன்வீட் டில்தான் சேயிழையும் இருக்கின்றாள். அவள்இப் போதில் ஆரையுமே வெறுக்கின்றாள். நல்ல தெல்லாம் அவளுக்குப் பொல்லாங்காய்த் தோன்றும் போலும். நேரில்அவள் கற்பழிக்கச் சிலபேர் செய்த நெறியற்ற செய்கையினால் வெறிச்சி யானாள்.
இங்கேயே இருக்கட்டும் சமையல் செய்தே இவ்விடத்தில் அனுப்புகின்றோம்; சாப்பி டட்டும். அங்கிருக்கும் அதிகாரி சொன்ன தாலே அனுப்புவதாய்ச் சம்மதித்தோம். இதையெல் லாம்நீ மங்கையிடம் சொல்லாதே! சொல்லி விட்டால் மறுபடிநீ பெருந்துன்பம் அடைய நேரும். இங்கேவா இதையும்கேள்; அவள்இ ருக்கும் இல்லத்தில் மற்றவர்கள் இருக்க வேண்டாம்.'
என்றந்த இருமாதர் சொல்லக் கேட்ட இணக்கமுறும் செங்கானும் உரைக்க லுற்றான்: 'அன்றைக்கே யாமறிந்தோம் இவைகள் எல்லாம் அதிகாரி கள்கலந்த செயல்க ளென்று! நின்றதில்லை அவ்விடத்தில்! நெருங்கி வந்து நீயார்என் றொருவார்த்தை கேட்ட தில்லை. சென்றுவரு வீர்;நீங்கள் சொன்ன தைப்போல் செய்கின்றேன்' என்றுரைத்தான்; சென்றார் தீயர். |
25. செங்கான் உண்ண அழைத்தான்
தென்பாங்கு -- கண்ணிகள்
|
ஆனைத் தலைப் பாறையாம் - அத னண்டையில் அல்லி மலர்ப் பொய்கையாம் மேனி முழுக் காட்டியே - வரு வாயம்மா வெம்பசி தீர்ப்பா யம்மா. கூனல் அவரைப் பிஞ்சு - பொறித் தோம்;சுரைக் கூட்டு முடித்தோம் அம்மா; ஏனம் நிறை வாகவே - கருணைக் கிழங் கிட்டுக் குழம்பும் வைத்தோம்.
சென்று வருவா யம்மா - புன லாடியே தின்று துயில்வா யம்மா. என்றுசெங் கான் சொல்லவே - அந்த ஏந்திழை ஏகினள் நீரா டினாள். அன்னவள் சோறுண் டனள் - அவள் நெஞ்செலாம் அன்னவன் மேல் வைத்தனள். தின்பன தின்றா னதும் - அந்தச் சேயிழை செங்கா னிடம் கூறுவாள்:
'உண்டு களைப்பா றினோம் - மற வேனையா உரைப்பது கேட்பீ ரையா. அண்டி இருந்தேன் உமை - ஒரு நாளுமே அன்பு மறவே னையா; சண்டிச் சுதரி சன்சிங்க் - இன்றி ராவிலும் தையல் எனைத் தேடியே கொண்டதன் எண்ணத் தையே - நிறை வேற்றிடக் கூசிட மாட்டா னையா.
அம்மையும் அப்பாவும் நீர் - என எண்ணினேன் ஆன துணை செய்குவீர்' இம்மொழி கள்கூறி னாள் - அந்த ஏந்திழை! இயம்பிடு கின்றான் செங்கான்: 'எம்மைத் துரும் பாகவே - நினைக் கின்றனர் இங்கே அதிகா ரிகள் வெம்மைக் கொடும் பாம்புபோல் - அவர் சீறுவார் வெள்ளையை வெள்ளை என்றால்!
தீய வடநாட் டினர்! - இவர் ஏதுக்கோ செஞ்சியில் வந்தா ரம்மா. நாயும் பிழைக்கா தம்மா - இவர் ஆட்சியில் நல்லவர் ஒப்பா ரம்மா. தீயும் புயற் காற்றுமே - இவர் நெஞ்சிலே செங்கோல் செலுத்து மம்மா. ஓயாது மக்கட் கெல்லாம் - இடை யூறுதான் உண்டாயிற் றம்மா' என்றான். |
26. சோற்றில் நஞ்சு
தென்பாங்கு -- கண்ணிகள்
|
'உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே உண்ணக் கொடுத்து விடடி! - அடி கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால் கொல்லாது; சோற்றில் இடடி!
தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக் கெண்டை விழிகள் சுழலும்; - அடி தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில்நௌி உண்டாக மண்ணில் உழலும்.
இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு;வி ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச் செந்தேன் உதட்டுமங்கை தின்பாள் ஒளிந்திருந்து வந்தே நுழைகுவேன் கண்ணே!'
அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத் தந்த மயக்க மருந்தைக் - குப்பும் அந்தி உணவொடுக லந்து கொடுத்துவிட்டு வந்தாள் திரும்பி விரைந்தே. |
27. உண்ண எழுந்தாள்
பஃறொடை வெண்பா
|
குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட செப்புக்குண்டான் சோற்றைச் செய்த கறிவகையைச் சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான். யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால் நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக் கொஞ்சம் இருட்டியதும் கோழி அடைந்தவுடன் கூப்பிட்டான் நங்கையினை. 'ஏன்?'என்றாள் கோதையும். 'சாப்பிடம்மா' என்றுமே சாற்றினான். அப்போது கள்ளர்கள் போலே இருமாதர் கண்உறுத்தே உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார். சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்! நங்கை எழுந்தாள் நலிந்து. |
28. நஞ்சுண்டு வீழ்ந்தாள்
தென்பாங்கு -- கண்ணிகள்
|
வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான் வட்டித்துக் கூப்பிட்ட போது சூழ நடந்தசுப் பம்மா - தன் துணைவன் நினைப்போடு வந்தாள்! ஆழும் அலைகட லுக்குள் - சூழல் ஆயிரம் வாய்த்திடக் கூடும்; ஏழைத் துணைவனை எண்ணி - நையும் ஏந்திழை எப்படிக் காண்பாள்?
சோற்றினை உண்டனள் நங்கை - நீர் தூக்கிப் பருகிய பின்னர் காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள் கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம் மாற்றம் அடைந்தது! கண்ணில் - ஒளி மாறி மயங்கி விழுந்தாள். சோற்றில் 'மயக்க மருந்தா?' - என்று சொல்லி விழுந்தனள் மண்ணில்!
தன்னிலை தன்னைவிட் டோட - அதைத் தான்தொடர்ந் தேபற்றி வந்து மின்னல் அசைவது போலத் - தன் மேனி தள்ளாட எழுந்தாள். சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று திம்மனை எண்ணி விழுந்தாள். பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில் புக்கு மறைந்திடு முன்னே
மெல்லிடை யில்வைத்த கத்தி - தனை மென்கையி னால்தொட்டுப் பார்த்தாள். சொல்லினில் தீயைக் கலந்து - சில சொற்களைச் சொல்லினள் மெல்ல: 'கல்லிடை நார்உரிக் கின்றான்! - அனற் காற்றினில் நீர்வேண்டு கின்றான். வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன் வாழ்வினை மீட்பவர் இல்லை!'
இவ்வுரை சொன்ன மறத்தி - மயக் கேறினள்; மெய்ம்மறந் திட்டாள்! செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி தீர்ந்தன! வேர்வையின் நீரில் அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை ஆர்ந்தது போற்கருங் கூந்தல் எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந் திட்டது கட்டுக் குலைந்தே!
செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன செய்வதென் றேஅறி யாமல் அங்கும்இங் கும்பறந் தோடி - வீட்டின் அக்கம்பக் கம்சொல்லப் போனான். சிங்கனைக் கண்டனன்! 'ஏடா - செங்கான் செல்'என்று கூறினன் சிங்கன். செங்கான் பயந்து நடந்தான் - அந்தச் சின்னக் குடிசையின் பின்னே.
சிங்கன்அவ் வீட்டில் நுழைந்தான் - உற்ற சேதிகள் யாவும் தெரிந்தான். அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன் அண்டினன்! மற்றவர் இல்லை. பொங்கிற்று வானில் முழக்கம்! - மின்னல் பொல்லாங்கு காட்டிற்று! நல்ல மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும் வண்ணம் பொழிந்தது மாரி!
காட்டை முறித்திடும் காற்றும் - அவன் கையை முறிப்பது போலே தோட்டத்து வாசலி னோடு - சென்று தூள்பட வைத்தது வீட்டை! கூட்ட மலர்ச்சிறு கொம்பை - வையம் கும்பிடத் தக்கஓர் தாயைத் தீட்டுப் படாத நெருப்பை - விரல் தீண்டக் கடித்திடும் பாம்பை
ஒட்டுற வில்லா வடக்கன் - உல கொத்தது காணாத தீயன் எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர் 'ஏஏ' எனச்சொல்லி ஏசக் கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக் கோதை கிடந்திட்ட போது தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! சிங்கன்!
பொழுது விடிந்திட வில்லை! - இன்னும் பொற்கோழி கூவிட வில்லை! எழுந்து வௌியினிற் சென்றான் - மாதர் இருவர் இருந்திடும் வீட்டில் நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை நோக்கி யிருந்தஅச் செங்கான் அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப் பம்மாவைக் கண்டிட நின்றான்.
போயிற்று மங்கை மயக்கம்! - இன்னும் பொழுதோ வெளுத்திட வில்லை. போயிற்று மானம்! உணர்ந்தாள் - உடல் போயிற்று! நல்லுயிர் தானும் போயிற்றுப் போவதன் முன்னே - சென்று போக்கிடு வேன்அவ னாவி! வாயிலில் நின்ற செங்கானைச் - 'சிங்கன் வந்ததுண் டோ?'என்று கேட்டாள்.
'உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில் உருண்டதும் கண்டேன் துடித்தேன். கண்டதும் இப்பாழும் கண்தான் - இக் கையில் வலியில்லை தாயே. அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர் அச்சிங்கன் உள்ளே நுழைந்தான். அண்டையில் நில்லாது போடா - என்ற அவன்சொல்லை மீறா திருந்தேன்.
இருட்டோடு வௌிவந்த சிங்கன் - அவன் இங்கிருந் தேபுறப் பட்டான். புரட்டனோ டேகினேன் நானும் - கால் பொத்தென்ற சத்தமில் லாமல்! திருட்டு நடைகொண்ட குப்பு - வீடு சென்றனன் நானிங்கு வந்தேன். கருத்துக் கலங்கினேன் தாயே! - என் கடமையை நான்செய்ய வில்லை.
சேரியெல் லாமிதைச் சொன்னேன். - அவர் சீறிக் குதித்தனர் தாயே! சேரியின் மக்களைப் பாரீர்! - இதோ தீயெனச் சீறிநிற் கின்றார். ஊரும் கிளம்பிடும் தாயே! - மொழி ஒன்றுசொல் வீர்இந்த நேரம் வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த வடக்கரை' என்றனன் செங்கான்.
ஓடினள் சிங்கனை நோக்கி - உடன் ஓடினர் சேரியின் மக்கள்! ஓடினன் செங்கானும் அங்கே - உம் உம்என்று தட்டினள் கதவை. நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின் நடுநின்ற அவன்மார்பு நடுவைச் சாடிப் புகுந்ததே கத்தி! - குத்திச் சாய்த்தனள் பெண்இந்நி லத்தில்!
காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான் கையோடி ருந்திட்ட தாலே 'பாம்புகாள் ஒழியுங்கள்!' என்றான் - இரு பழிமாத ரும்தீர்ந்து போனார். தேம்பாத அழுகையும், நீரின் - துளி தெரியாத கண்களும் கொண்டாள் வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை விடியாத முன்னமே சேர்ந்தாள்.
கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங் கொட்டாவி விட்டுக் கிடந்தார். பாட்டையைப் பார்க்க்கவே யில்லை - உயிர்ப் பாவையும் காவல் கடந்தாள். கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக் கோலமல் லால்விழிப் பில்லை. பூட்டும் படைவீடு கட்குள் - நெடும் புன்னை மரத்திற்கு நேரில்
தன்கணவன் சேர்படை வீடும் - முற்றும் சாத்திக் கிடந்ததைக் கண்டாள். 'என்னுயிர்ப் பொருளே திறப்பீர்! - கதவை இன்னுமோ தூக்கம்என் அத்தான்? ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும் உள்ளம் படைத்தனன் கேளீர்! என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை ஈடழித் தான்வெறும் பேடி!
செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத் தீண்டிட்ட தீயனைக் கொன்றேன். அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன் ஆவிதான் போய்ச்சேரு முன்னே! எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை என்னென்ன செய்தனன்? காணேன்! அந்தோ எனக்கூவி மங்கை - அவள் அங்குமிங் கும்பறக் கின்றாள். |
29. மன்னன் வந்தான்
எண்சீர் விருத்தம்
|
காட்டுதீப் போலேசு பேதார் சாவு கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும் கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப் போட்டிருந்த சுபேதரைச் சிப்பாய் மார்கள் புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான். கேட்கலுற்றான் 'என்னஇது என்ன?' என்றே கிட்டஇருந் தோரெல்லாம் 'தெரியா' தென்றார்.
'படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால் படுகொலைசெய் தோன்யாவன்?' என்று கேட்டான் 'படைவீரன் அல்லாது பிறரே என்றால் பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக் கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல் காத்திருந்தோன் என்னசெய்து கொண்டி ருந்தான்? நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ!
போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப் புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்; விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்; கேட்டுகொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால் கேடில்லை செப்பிடுவீர் உண்மை தன்னை! வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ! மற்றென்ன மற்றென்ன?' எனத்து டித்தான்!
கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு கூறத்தான் முடியுமோ? 'அந்தோ அந்தோ! காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக் கடல்போன்ற அன்புடையான் என்னி டத்தில்! நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில் உயிரின்றிக் கிடக்கின்றான் எவன் செய்தானோ?
மன்னவரோ அறிவீரோ எனகேட் கின்றார் வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால் என்னவரு மோஅறியேன்; வழிதான் என்ன?' என்றுபல வாறெண்ணி இருக்கும் போது 'மன்னவரே பணிகின்றேன்' என்று கூறி வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன்: 'என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி என்றனுக்கு தெரிந்தவற்றைக் கூறு கின்றேன்:
திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில் தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்! அம்மட்டே அவனோடு வீடு சென்றான்; அங்கோர்நாள் விருந்துண்டான். அவன் மனைவி செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில் சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள் திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத் திரும்பியும்பார்ப் பவளில்லை; சுதரிசன் சிங்க்
திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டித் திம்மனுக்கு வேலைதரு வதாகச் சொன்ன சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான். அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை! அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை! திம்மனையும், வஞ்சியையும் சுபேதார் செஞ்சிச் சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே!
குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன் கூத்திமார் இருவரையும் அவர்க ளோடு நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான். நானுரைக்கும் அப்பெண்கள் இப்பி ணங்கள்! அப்பரே இதுதான்நான் அறிவேன்' என்றான். 'அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத் துப்பியது காயுமுன்னே!' என்று தேசிங்க் துடிதுடித்தான் நெருப்புப்பட் டவனைப் போலே. |
30. திம்மன் நான் என்றான்
எண்சீர் விருத்தம்
|
'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன். 'தெரியவில்லை' என்றார்கள் சிப்பாய் மார்கள். 'திம்மனெங்கே?' எனக்கேட்டான் பின்னும் மன்னன். 'நான்தான்'என் றெதிர்வந்தான் தமிழத் திம்மன். 'திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார் சிப்பாய்வே லையுனக்குச் செப்பாய்' என்றான். திம்மன்'இவ ரே'என்றான் பிணத்தைக் காட்டி. தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான்.
பொய்யுடையைச் சுதரிசன்சிங்க் திம்ம னுக்குப் போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன் மெய்பதைத்தல் இல்லாமல் 'திம்மா! இந்த மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன்?' என்றான். 'செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான்; செத்திருப்பான். நள்ளிரவில் செஞ்சி வந்தேன் வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை வீட்டிலிருந் திவ்விடத்தில் அழைத்து வந்தான்.
இதுவரைக்கும் வௌிச்செல்ல வில்லை' என்றான். 'உன்மனைவி எங்'கென்றான் தேசிங்க் மன்னன்! 'அதுஎனக்குத் தெரியாதே' என்றான் திம்மன்! 'அவளுக்கு வேறுதுணை உண்டோ?' என்றான். 'புதியஊர், துணையில்லை' என்றான் திம்மன். 'பொய்ஒன்றும் கூறாதே' என்றான் மன்னன். பதறியே 'பொய்யல்ல' என்றான் திம்மன். 'பழஊராய் இருந்திட்டால் பத்தி னிக்கே
பலதுணைவர் இருப்பாரோ?' என்றான் மன்னன். 'பலஉறவோர் துணையிருப்பார்' என்றான் திம்மன். 'தலையுருண்டு போகுமடா திம்மா! அந்தத் தமிழச்சி இருப்பிடத்தைக் காட்ட வேண்டும்! *நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர் நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர். இன்னோன் கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக் கூத்தியையும் பிடிப்பீர்'என் றுரைத்தான் மன்னன்.
*இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது.
'அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர்! தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி! தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம் அமைத்துவிட்டு போயினாள். அவளின் பேரை அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும்! தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள் தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால்
நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை. நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன் தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத் தெரிவிப்பாய். எங்குள்ளாள்? செங்குத் தாக வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில். வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத் தான்மறைந்து போனாளா? வாழ்கின் றாளா? சாற்றுவாய்" எனத்திம்மன் வாய்ப தைத்தான்.
அருகிருந்த சிப்பாய்கள் இருவர் திம்மன் இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார். குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்! கூர்வாளை உயர்த்திநடந் தார்சிப் பாய்கள். பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில் பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆ லின்கீழ் தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும் சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார். |
31. அத்தான் என்றெதிர் வந்தாள்
எண்சீர் விருத்தம்
|
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள். 'அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்; உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம் சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று தோன்றியது. மறைந்துவிட்டான்; தேடிச் சென்று குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார் கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.
பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற பெருநினைப்பால் வடநாட்டார் தமிழர் தம்மை வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார். மறம்வீழும்! அறம்வாழும்! என்ப தெண்ணார். தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்; தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை. வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை வடநாட்டான் எடுத்துப்போய் விடஒண் ணாது.
முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ? கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை. எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு பறித்துவிட எவராலும் ஆவ தில்லை.
செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல் திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை. பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப் படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ? வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர். வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு. சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே!
தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான். தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான். வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள் பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப் பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான். மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.
கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள் காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச் செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத் தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள் மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான். விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை. ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர் ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!'
என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல் இருகத்தி வாங்கினார் திம்மன், செங்கான். குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார். கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள். 'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள். 'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன். 'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை. 'நாட்டுக்கு நல்லதொண்டாம்' என்றான் திம்மன்.
'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால் தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத் தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்! சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்! 'புதுமைதான் புதுமைதான்' என்றான் திம்மன்! இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார். 'இவ்விடந்தான் நஞ்சுண்டேன்' என்றாள் நங்கை!
'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்! மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து சோர்ந்ததுவும் இவ்விடந்தான்' என்று ரைத்தாள். 'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப் போட்டழைத்த திவ்விடந்தான் போலும்! பெண்ணே வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய் வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!'
என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்: 'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள் கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா! நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி! நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே! அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!
தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான். துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை! ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை. அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான். நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன். நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.
'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில் ஊன்றியது தமிழச்சி கத்தி என்று உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி ஊராளும் அரசறிய உலகம் காண துரையே!நீ ருங்காண அவனின் மார்பில் சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்! திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத் திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!'
என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான். இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே! ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள் உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக் குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும் கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள் இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்; 'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்
தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை. அமைவான குரலாலே கூறு கின்றாள்; 'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும். நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால் நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள் நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள் நற்றமிழக் கையாலே கொன்று போட்டு
திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க! செய்வீர்கள் இதை'என்று சொல்லக் கேட்ட பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப் பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத் தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின் தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்கு! பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான். பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.
பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால் உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை! உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரேசென்று வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால் வந்துசொல்ல வேண்டுகின்றேன்' என்றான் திம்மன். சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத் தனியாக உலவினான் புலியைப் போலே! |
32. மறவர் திறம் பாடு
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
|
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம் கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே! ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே.
அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல் மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ!
தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே இன்னார் இனியார் எனயாதும் பாராமல் பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!
நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத் தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்: கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே!
ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர் ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே!
ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர் பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத் தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே! |
33. குதிரைவீரர் வருகின்றார்கள்
எண்சீர் விருத்தம்
|
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று! நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம் தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம் தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும் நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை நாற்புறமும் சுற்றினார். அடுத்தி ருந்த கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்; குலைக்கின்ற நாய்கள்போல் கூவிப் பார்த்தார்.
சேரியிலே வாழுமக்கள் கிழக்கில் தோன்றும் செங்கதிரை வயற்புறத்தில் கண்டார்; பின்னர் ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார். ஒருவரும்அங் கில்லையெனில் புதுமை யில்லை. நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார் நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில் ஓரிளையான் மற்றவர்பால் 'குற்ற வாளி ஒருவனையும் நாம்பிடிக்க விலையே' என்றான்.
பெரியசிப்பாய் கூறிடுவான்: 'நாமெல் லாரும் பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்! ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும் கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில் கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார். தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம் தக்கபடி சாத்துப்படி' என்று சொன்னான்.
இன்னொருவன் கூறுகிறான்: 'அந்த மன்னர் இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்ப தற்குக் கன்னக்கோல் காரார்போல் வரவும் கூடும் கால்சோர்ந்து நாம்உட்கார்ந் திருத்தல் தீதே' என்றுரைத்தான். இதைகேட்ட திம்ம னுக்கும் இளங்கிளியாள் சுப்பம்மா வுக்குந் தோன்றும் புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்! பூவாயைத் திறக்கவில்லை காத்தி ருந்தார். |
34. மேற்பார்வையாளன்
தென்பாங்கு -- கண்ணிகள்
வெட்டிக்குத் திச்சாய்க்கக் கட்டுக்கத் தியோடு |
வெள்ளைக் குதிரையில் |
ஏறித் - தலைக் |
கட்டோடு வந்தனன் |
சீறி! |
எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை |
ஏங்கிட வைப்பவன் |
போலே - இமை |
கொட்டாமல் பார்த்தனன் |
மேலே! |
சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர் |
துள்ளிஎ ழுந்தங்குத் |
தாவிச் - சிரித் |
திட்டனர் அன்னோனை |
மேவி! |
திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது |
தேசிங்கு வந்தனன் |
என்றே - திம்மன் |
பட்டாவை ஏந்தினன் |
நன்றே! |
சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென |
உற்றுவி ழித்தசுப் |
பம்மா - அங்குச் |
சற்றும்இ ருப்பாளோ |
சும்மா? |
வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட |
மேற்கிளை விட்டுக் |
குதித்தாள் - பகை |
அற்றிட நெஞ்சம் |
கொதித்தாள். |
சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை |
துள்ளி யெழுந்தன |
மெய்கள் - அங்கே |
அற்று விழுந்தன |
கைகள் |
முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும் |
கண்டனன் அவ்வதி |
காரி - கண்டு |
தெற்றென வீழ்ந்தனன் |
பாரில் |
உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில் |
ஒழிந்தது வேஅவன் |
ஆவி - கண்ட |
ரற்றினர் சிப்பாய்கள் |
மேவி. |
மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும் |
மாய்ந்தனன் மண்ணில் |
விழுந்து - கண் |
ணுற்றனள் இன்பக் |
கொழுந்து. |
சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும் |
தோகை பதைத்ததும் |
கண்டார் - கைப் |
பற்றிட எண்ணமே |
கொண்டார். |
பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர் |
பாய்ந்தனர் அன்னவள் |
மேலே - மிகச் |
சிற்றின நாய்களைப் |
போலே! |
35. அவள் பிடிப்பட்டாள்
எண்சீர் விருத்தம்
|
திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள் சேயிழையாள் பிடிப்பட்டாள் பகைவ ராலே! அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்! 'மெய்ம்மைநெறி எய்தினீர். தேசிங் கென்னும் வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ?' என்றாள். மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்; முடிவடைந்த தென்பணியும்' என்று சொன்னாள். |
36. தேசிங்குக்குச் சேதி எட்டிற்று
தென்பாங்கு -- கண்ணிகள்
|
செஞ்சிப் பெருங்கோயில் - தன்னிலே தேசிங்கு வீற்றிருந்தான். அஞ்சி அருகினிலே - இருந்தார் அமைச்சர் மற்றவர்கள். பஞ்சு பெருந்தீயைப் - பொசுக்கப் பார்த்தும் இருப்பீரோ? செஞ்சிப் படிமிதித்தார் - இங்குள்ள சிப்பாய் தனைமடித்தார்.
சென்று பிடித்தாரோ? - அல்லது செத்து மடிந்தாரோ? ஒன்றும் தெரியவில்லை--நடந்த தொன்றும் தெரியவில்லை. என்று துடிதுடித்தான் - தேசிங்கன். இருவர் சிப்பாய்கள் நின்று தலைவணங்கி - அவ்விடம் நிகழ்ந்தவை உரைப்பார்.
திம்மனும் சுப்பம்மா - எனுமோர் சேயிழை யும்எதிர்த்தார். நம்மவர் சிற்சிலபேர் - இறந்தார். நம்அதி காரியின்மேல் திம்மன் அவன்பாய்ந்தான் - ஒருசொல் செப்பினன் அப்போது 'செம்மையில் என்னிடமே - சிக்கினாய் தேசிங்கு மாய்க'என்றான்
என்றுசிப் பாய்உரைத்தார் - தேசிங்கன் 'என்னை மடிப்பதுதான் அன்னவ னின்நினைப்போ? - சரிதான் அப்படியா அடடே! இன்று பிழைத்தேன்நான் - அடடே என்றுபு கன்றவ னாய்ப் 'பின்னும் நடந்ததென்ன? - இதனைப் பேசுக' என்றுரைத்தான்.
திம்மன் மடிந்துவிட்டான் - மனைவி சேயிழை சிக்கிவிட்டாள். செம்மையில் அன்னவளின் - இரண்டு செங்கையைப் பின்இறுக்கி நம்மவர் இவ்விடத்தை - நோக்கியே நடத்தி வருகின்றார். திம்மன் மனைவியைப்போல் - கண்டிலோம் திறத்தில் என்றுரைத்தார். |
37. சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள்
தென்பாங்கு -- கண்ணிகள்
|
கோட்டைநெடும் வாயிலினைக் குறுகி விட்டார் - அந்தக் கோதையை நடத்திவரும் கூட்ட மக்களும்! போட்டிறுக்கிப் பின்புறத்தில் கட்டிய கையும் - முகில் போற்பரவி மேற்புரளும் நீண்ட குழலும் தீட்டிவைத்த வேலின்முனை போன்ற விழியும் - வந்து சீறுகின்ற பாம்பையொத்த உள்ளமும் கொண்டாள் 'கோட்டையினில் யாரிடத்தில் கொண்டு செல்கின்றீர் - என்னைக் கூறிடுவீர்' என்றவுடன் கூறு கின்றனர்:
'ஆளுபவர் தேசிங்கெனக் கேட்ட தில்லையோ? - அவர் அவ்விடத்தில் வீற்றிருத்தல் கண்ட தில்லையோ? தோளுரத்தை இவ்வுலகம் சொன்ன தில்லையோ? - என்று சொன்னமொழி கேட்டனள் வியப்ப டைந்தனள். 'ஆளுகின்ற தேசிங்கென நாங்கள் நினைத்தோம் - அவன் அங்குவந்த பேர்வழியை ஒத்தி ருந்ததால்! வாளுக்கிரை ஆனவனை நாங்கள் அறியோம் - அந்த மன்னன்நினை வாய்அவனை வெட்டி மடித்தோம்.
செஞ்சியினி லேஇருக்கும் செந்த மிழர்கள் - பெற்ற தீமையின்னும் தீரவில்லை. என்க ணவரோ செஞ்ச்ிமன்னன் தீர்ந்தனன் இனித் தமிழர்க்கே - ஒரு தீங்குமில்லை என்னும்உளப் பாங்கொடு சென்றார். செஞ்சியினை ஆளுகின்ற அவ்வ டக்கரை - என் செவ்விழிகள் காணும்;என்கை காண வசமோ? மிஞ்சும்என்றன் ஆவல்நிறை வேறுவ துண்டோ? - என மெல்லிஅவள் நெஞ்சில்வெறி கொண்டு நடந்தாள். |
38. தேசிங்கு முன் வந்தாள்
எண்சீர் விருத்தம்
|
புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த விடுமூச்சுப் புகைசிந்தக் குறித்துப் பார்த்த எதிர்ப்பான பார்வையினாள்! அலையுங் கூந்தல் இருட்காட்டில் நிலவுமுகம் மறைந்து தோன்றக் கொதிக்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வாள்போல் கொலுமுன்னே வந்துநின்றாள். அவ்வ டக்கன் உதிர்க்கின்ற கனல்விழியால் அவளைப் பார்த்தான். அப்பார்வை அற்றொழிய உறுத்திப் பார்த்தாள்! |
39. முற்றிய பேச்சு
தென்பாங்கு -- கண்ணிகள்
|
'உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான் உன்னை அனுப்பிவைத்தான்? மண்ணிடை மாண்டானே - தெரியா மனிதன் உன்உறவா? எண்ணும்என் ஆட்சியிலே - செய்ததேன் இந்தக் கலகமடீ? திண்மை உனக்குளதோ?' - என்றந்தத் தேசிங்கு சொன்னவுடன்,
'பொய்யினைச் சொல்வதில்லை - தமிழர் பொய்த்தொழில் செய்வதில்லை. மெய்யினைச் பேசுதற்கும் - தமிழர் மெய்பதைத் திட்டதில்லை. கையினில் வாளாலே - உனது காவல் தலைவன்தலை கொய்தவர் யார்எனிலோ - எனையே கொண்டவர் என்றறிவாய்!
யாரும் அனுப்பவில்லை - எமையே இட்டுவந் தான்ஒருவன் சேரியில் ஓர்குடிசை - தந்துமே தீய இருமாதர் கோரிய வேலைசெய்வார் - எனவே கூட இருக்கவிட்டான். சீரிய என்துணைக்கே - அவன்ஓர் சிப்பாய் உடைகொடுத்தான்.
கோட்டைக் கழைத்தேகித் - திரும்பக் கூட்டிவ ராதிருந்தான். வீட்டில்என் சோற்றினிலே - மயக்கம் மிஞ்சும் மருந்தையிட்டான். ஆட்டம் கொடுத்ததுடல் - உணர்வும் அற்ற நிலையினிலே காட்டு மனிதன்அவன் - எனது கற்பை அழித்தானே!
கற்பை அழித்தானே - தன்னைத்தான் காத்துக்கொள் ளும்திறமை அற்பனுக் கில்லைஅன்றோ! - திறமை ஆருக்கி ருக்கவில்லை? வெற்பை இடித்துவிடும் - உனது வீரத்தை யும்காணும் நிற்க மனமிருந்தால் - நின்றுபார் நெஞ்சைப் பிளக்கும்என்கை!
குற்றம் புரிந்தவர்யார்? - உனது கோலை இகழ்ந்தவர்யார்? கற்பை இகழ்ந்தவர்யார்? - உனது கருத்தை மேற்கொண்டவன்! சொற்கள் பிழைபுரிந்தாய் - 'அடியே' என்றெனைச் சொல்லுகின்றாய். நற்றமிழ் நாட்டவரை - இகழ்தல் நாவுக்குத் தீமை' என்றாள்.
'சென்றஉன் கற்பினுக்கே - எத்தனை சிப்பாய்க ளைமடித்தாய்?' என்று வினவலுற்றான் - அதற்கே ஏந்திழை கூறுகின்றாள்: 'என்னருங் கற்பினுக்கே - உன்னரும் இன்னலின் ஆட்சியையும் உன்னரும் ஆவியையும் - தரினும் ஒப்பில்லை' என்றுரைத்தாள்.
'இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை ஆள்வதை ஏனிகழ்ந்தாய்? இந்து மதத்தவன்நான் - மதத்தின் எதிரி நானல்லவே! சொந்த அறிவிழந்தாய் - பிறரின் சூதையும் நீஅறியாய். இந்தத் தமிழ்நாட்டில் - பிறரின் இன்னல் தவிர்ப்பவன்நான்.'
சொல்லினன் இம்மொழிகள் - சுப்பம்மா சொல்லுகின் றாள்சிரித்தே: 'தில்லித் துருக்கரையும் - மற்றுமொரு திப்புவின் பேரினையும் சொல்லிஇத் தென்னாட்டைப் - பலபல தொல்லையில் மாட்டிவிட்டார்; மெல்ல நுழைந்துவிட்டார் - தமிழரின் மேன்மைதனை அழித்தார்.
அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல் ஆரும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கவில்லை - பிறகும் இருக்கப் போவதில்லை. அன்று தொடங்கிஇந்தத் - தமிழர் அன்புறு நாடுபெற்ற இன்னலெல் லாம்வடக்கர் - இழைத்த இன்னல்கள்' என்றுரைத்தாள்.
'ஆளும் நவாபினையோ - தமிழர் ஆரும் புகழுகின்றார்; தேளென அஞ்சுகின்றார் - செஞ்சியின் தேசிங்கின் பேருரைத்தால்! நாளும் வரும்;வடக்கர் - தொலையும் நாளும் வரும்;அதைஎம் கேளும் கிளைஞர்களும் - விரைவில் கிட்டிட வேண்டும்'என்றாள். |
40. தேசிங்கு சினம்
எண்சீர் விருத்தம்
|
'நாள்வரட்டும் போகட்டும்; ஆனால் இந்த நலமற்ற தமிழர்மட்டும் வாழ மாட்டார். தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை; சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு! நாள்வரட்டும் எந்தநாள்? தமிழர் வெல்லும் நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள் வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?' என்றான்.
'தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்; தமிழர்க்கு மறமில்லை; நன்று சொன்னாய். இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால் சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்! உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்! எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்; எச்சிலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய்.
யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்! இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்! நீமற்றும் உன்நாட்டார் வளர்ச்சி எய்தி நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்! தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள் துளிகூட ஒழுக்கமில்லாப் பாண்டு மக்கள்! நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால் நடுநிலைமை அறிவீர்கள்! அடங்கு வீர்கள்!
வஞ்சகத்தைத் தந்திரத்தை மேற்கொள் ளாத வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார். அந்த வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்: நெஞ்சத்தால் தமிழ்நாட்டார் வென்றார்; அந்த நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய். கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும் கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன் றேகேள்.
ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்! அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்; காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான் கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை! காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்; கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி! தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு தூங்கிவிழித் தால்உடையோன் உரிப்பான் தோலை!
அறம்எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்! அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும். பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்! முறைதெரியா முட்டாளே! திருந்தச் சொன்னேன் முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே. சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம் செப்படா' என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.
கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக் கண்ணாலே எச்சரிக்கை செய்து மன்னன் 'இட்டுவா கொலைஞரைப்போய்! இதையும் கேட்பாய் எல்லார்க்கும் எதிரினிலே பொது நிலத்தில் பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து பழிகாரி இவளுள்ளம் துடிக்கு மாறு வெட்டுவிப்பாய் ஒருகையை; மறுநாட் காலை வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றா நாளில்
முதுகினிலே கழியுங்கள் சதையைப் பின்னர் மூக்கறுக்க! காதுபின்பு; ஒருகை பின்பு; கொதிநீரைத் தௌித்திடுக இடைநே ரத்தில்; கொளுத்துங்கள் குதிகாலை! விட்டு விட்டு வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை; மந்திரியே உன்பொறுப்பு நிறைவே றச்செய்! இதுஎன்றன் முடிவான தீர்ப்பே!' என்றான். எதிர்நின்ற தமிழச்சி இயம்பு கின்றாள்:
'மூளுதடா என்நெஞ்சில் தீ!தீ! உன்றன் முடிவேக மூளுதடா அக்கொ டுந்தீ! நீளுதடா என்நெஞ்சில் வாள்!வாள்! உன்றன் நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்! நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே! ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை! அன்புமனை யாள்பிரிவாள் உன்னை! உன்னை!'
என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்! எல்லாரும் சுப்பம்மா நிலைமை தன்னை ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளு டம்பில் ஒளிகண்டார்; கரும்புருவம் ஏறக் கண்டார். குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே! குரல்வளையின் கீழ்நோக்கி மூச்சை ஆழ்த்தி நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்! நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்!
பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்! பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை கண்டார்! 'ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன்?' என்றான். இரக்கத்தை 'வா'என்றான். அன்பை நோக்கி 'ஆச்சியே எனக்கருள்வாய்' என்று கேட்டான். 'அறமேவா' எனஅழைத்தான்! அங்கே வேறு பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்! பிறகென்ன? தேசிங்கு தேசிங்கேதான். |
முற்றும்.
|