தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க பார் கோடு ரசீது முறை விரைவில் துவங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6,800க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் போலி மது விற்பனை, மது பாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பது, மதுவை அதிக விலைக்கு விற்பது போன்ற செயல்களில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடுவதாக, தமிழக குடிகாரர்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர். இதனை அடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பது, உறுதி செய்யப்பட்டது. மேலும் முறைகேடு செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க பார் கோடு பில்லிங் மெஷின் கருவியை மதுக்கடைகளில் பொறுத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், மதுபாட்டில்களில் அச்சடிக்கப்பட்டுள்ள, அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல், மதுபாட்டில்களை விற்க முடியாது. மதுபாட்டில்களில் கலப்படம் செய்யும் மதுக்கடை ஊழியர்கள், மதுபாட்டில் மூடியின் வழியாக சிரிஞ்ச் மூலம் மதுவை எடுத்து, காலி மதுபாட்டில்களில் நிரப்புகின்றனர். தண்ணீர், புகையிலை நீர் போன்றவற்றை அதில் கலந்து விற்கின்றனர். இந்த "ஸ்கேனர்' பில்லிங் கருவி மூலம், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மதுபாட்டில்களை மீண்டும் "ஸ்கேன்' செய்தால், அதை கம்ப்யூட்டர் ஏற்று கொள் ளாது என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|