இன்றைய தமிழ் சினிமாவின் நிலை படுமோசமாக இருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகைகள் நித்யா மேனன், ராதிகா சரத்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீப்ரியாவும் நானும் குழந்தை பருவம் முதலே நண்பர்கள். சினிமாவில் அவர் ஒரு நடிகையாக நன்றாக நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு புத்திசாலி பெண் என்று அவரை குறிப்பிடலாம். ஆனால், அவர் அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டார். ஒரு பெண்ணாக இருந்து சினிமாவில் செலவு பண்ணுவது என்பது ரொம்பவும் கஷ்டம். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். இப்போது ஸ்ரீப்ரியாவும் அதையெல்லாம் சமாளித்து, சமூக உணர்வோடு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். இன்று வரும் பெரும்பாலான படங்களில் டாஸ்மாக் காட்சிகளும், ஹீரோ காலையில் எழுந்ததும் எந்த பெண்ணை சைட் அடிப்பது என்று பேசுவது, அப்பாவை மகன் இழிவாக பேசுவது போன்ற வசனங்கள் நிறைந்த படங்களாகவே வருகின்றன. முன்பெல்லாம் சில்க் ஸ்மிதா பாட்டு ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் சொல்வார்கள். இப்போது அது டாஸ்மாக் காட்சியாக வருகிறது. டாஸ்மாக்கில் குடிக்கிற மாதிரி ஒரு காட்சியாக வைக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது. அவற்றையும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இருந்தாலும், வித்தியாசமான படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன என ராதிகா பேசினார்.
|