|
|||||
ஆசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்வி அதிகாரி காலில் விழுந்து கதறியழுத மாணவிகள்! |
|||||
ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள், முதன்மைக் கல்வி அதிகாரி காலில் விழுந்து கதறியழுதனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், அசோக்குமார், கருணாகரன், கோபி ஆகியோரும் கலந்து கொண்டனர். டிச. 30க்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடடிவக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த நிலையில், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1ம் தேதி செயல்முறைத் தேர்வு நடந்தது. அப்போது ஸ்ரீதர் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் வரவில்லை. அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், செயல்முறை தேர்வை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியை மீரா மற்றும் போலீசார் சமரசத்தை ஏற்று 2 மணி நேரத்துக்குப்பின் மாணவிகள் தேர்வு எழுதச் சென்றனர். தொடர்ந்து 2-ம் தேதி செய்முறை தேர்வுக்கு மாணவிகள் வந்தனர். அப்போது, புதிய ஆசிரியை வரவே மாணவிகள் மதியம் 12 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமையாசிரியை மீரா, செங்கம் கல்வி மாவட்ட அதிகாரி கந்தசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை மாணவிகள் ஏற்காததால், முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் போன் மூலம் மாணவிகளிடம் பேசினார். அதிலும் சமரசம் ஏற்படவில்லை. திடீரென ஒரு மாணவி மயங்கி விழுந்தார். கல்வி அதிகாரி அறிவுரைப்படி மாற்றப்பட்ட ஆசிரியர்கள் 4 பேரையும் அங்கு வரவழைத்தனர். அவர்கள் மாணவிகளிடம், போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்தனர். பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மிரட்டியும் மாணவிகள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் நேரில் வந்தார். அப்போது மாணவிகள், அவரது காலில் விழுந்து கதறி அழுது, 4 ஆசிரியர்களையும் இதே பள்ளியில் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றனர். அவர், ‘யாராவது தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களா, அரசு உத்தரவுப்படிதான் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள், அரசுக்கு அனுப்புகிறோம், போராட்டத்தை கைவிட்டு தேர்வுக்கு செல்லுங்கள்’’ என்றார். மேலும், யாருக்கும் டிசி வழங்கக்கூடாது என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மாணவிகள் ஆசிரியர்களை மாற்றம் செய்யக்கூடாது என மனு எழுதி கொடுத்து விட்டு தேர்வுக்கு சென்றனர். இதேபோல் திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம் காரணமாக அங்கு மாணவர்கள் கதறியழுததும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. |
|||||
by Mani Bharathi on 06 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|