தமிழக அறநிலையத்துறையின், கீழ் 36 ஆயிரத்து 451 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 669 ஏக்கர் ஈர நிலம், இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 226 ஏக்கர் வறண்ட நிலம், 20 ஆயிரத்து 746 ஏக்கர் மானாவாரி நிலம், 36 ஆயிரத்து 627 ஏக்கர் காலியிடம், 22 ஆயிரத்து 599 கட்டடம் ஆகியவை உள்ளன.
கோவில்களில் பணியாற்றும் குருக்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு விவசாயம் பார்த்து பிழைப்பு நடத்த, ஆங்கிலேயர் காலத்தில், கோவில் நிலம் வழங்கப்பட்டது. பல ஆண்டாக, கோவில் நிலத்தை பயன்படுத்தியதால், பட்டாவில், குறிப்பிட்ட கோவிலின் பெயரோடு, குருக்கள் மற்றும் கோவில் ஊழியர்களின் பெயரும் சேர்ந்தது. இப்படி கோவில் நிலத்தை, பலரும் ஆக்கிரமித்துள்ளனர்.
கோவில் நிலங்களை, தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஆனால், கோவில் ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்களால், கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வாடகை தராமல் ஏமாற்றியதாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, 11 ஆயிரத்து 644 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து கோவில் நிலங்களையும், அறநிலையத் துறை பெயரில் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
|