|
|||||
தகடூர் கோபியின் மறைவு! தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு! |
|||||
தமிழ்க்கணிமைக்கு உழைத்தவர்களில் ஒருவரான தகடூர் கோபி அவர்கள் ஞாயிறு (28-01-2018) அன்று இறைவனடி சேர்ந்தார், தமிழ்க்கணிமைக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பறியாதது. இன்று இணையத்தில், சமூக ஊடகங்களில் தமிழ் பெருமளவில் பரவி இருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் ஒரு நாளில் நடந்து விட வில்லை. இணையத்தில் தமிழ் மெல்ல, மெல்ல தான் எழுந்து நடக்கத் தொடங்கியது. சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழை இவ்வளவு எளிதாகக் கணினியிலோ, இணையத்திலோ தட்டச்சு செய்யவோ, வாசிக்கவோ முடிந்ததில்லை என்பதை இணையத்தில் அக் காலக்கட்டத்தில் இருந்து வாசிக்கும், எழுதி வரும் பலர் அறிவார்கள். அப்படியான சூழலில் சிறு சிறு செயலிகள் தன்னார்வலர்களால் ஆங்காங்கே எழுதப்பட்டது. இந்தச் செயலிகள் தமிழ் வாசிக்கவும், தட்டச்சு செய்யவும் பலருக்கும் உதவியது. இணையத்தில் தமிழ் அப்படித் தான் சிறுக, சிறுக வளர்ந்தது. யாகூ குழுமங்கள், வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் என வளரத் தொடங்கிய தமிழ் இன்று சமூக ஊடகங்கள் காலக்கட்டத்தில் இணையம் எங்கும் பரவி உள்ளது. இன்று வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இன்றைய செயலிகளைச் சில வருடங்களில் அர்த்தமற்ற ஒன்றாக மாற்றி விடுகிறது. ஆனால் அப்படியான தொழில்நுட்பங்களின் படிக்கட்டுகளில் ஏறித் தான் நாம் இந்த இடத்தை அடைந்து இருக்கிறோம் என்பது பலருக்குத் தெரியாது. தமிழுக்குச் சத்தமில்லாமல் தொண்டாற்றி விட்டு அந்த மனிதர்கள் மறையும் பொழுது தான் நாம் அவர்களை நினைத்துப் பார்க்கும் சூழ்நிலை உள்ளது. அந்த வரிசையில் தகடூர் கோபி. இது குறித்து தகடூர் கோபியின் நெருங்கிய நண்பரான முனைவர் மு.இளங்கோவன் கூறியதாவது: தமிழ்க் கணிமைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றியவரும் என் அருமை நண்பருமான தகடூர் கோபி என அழைக்கப்பெற்ற த. கோபாலகிருட்டினன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பத்தாண்டுகளாக யானும் கோபியும் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம். 14.09.2008 இல் தருமபுரியில் மருத்துவர் கூத்தரசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் யானும் கோபியும், முகுந்துவும் இணைந்து உரையாற்றிய நிகழ்வுகள் யாவும் என் மனக்கண்ணில் விரிகின்றன. கோவை இணைய மாநாடு, சிங்கப்பூர் இணைய மாநாடு என்று பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு, பேசி மகிழ்ந்துள்ளோம். கோபியின் இணையப் பணியை ஒரு நேர்காணலாக்கி, அவரின் பணிகளைத் தமிழ் ஓசை நாளிதழ் வழியாகத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்தேன்(11.01.2009). இணையம் கற்போம் என்ற என் நூலிலும் அந்த நேர்காணல் உள்ளது. இதனை மாணவர்கள் பாடமாகப் படிக்கின்றனர். இணையத்தில் எனக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கியும், தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை உடனுக்குடன் செய்தும் மகிழ்பவர். அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக கோபியைச் சந்திக்க விரும்பினேன். அவர் சிங்கையிலிருந்து விடுபட்டு, இந்தியா வந்த செய்தியைச் சொன்னார். மீண்டும் சந்திக்க ஆர்வமுடன் இருந்த நிலையில் கோபியின் மறைவு மிகப்பெரிய இழப்பாக எனக்கு அமைந்துவிட்டது. கோபி அவர்கள் மிகச் சிறந்த மொழிப்பற்றாளர். அவர் உருவாக்கிய மென்பொருள்களுக்கு அதியமான், ஔவை, தகடூர் என்று பெயர் வைத்தமை ஒன்றே அவரின் மொழிப்பற்றையும் ஊர்ப்பற்றையும் வெளிப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகளாகும். என் அருமை நண்பர் கோபியை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். தமிழ் இணையத்துறை உள்ளவரை கோபியின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும். கோபி குறித்த என் பழைய பதிவுகள்: |
|||||
by Swathi on 03 Feb 2018 9 Comments | |||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|