மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும் நகைத்தொகை கூட்டிக் கவைத்தெழு சொல்லும் அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும் இருமனப் பொய்உளத்து ஒருமகள் தன்னை கரியோன் கடுப்பத் துகில்கவர்ந் தொளிர்அலர் (5)
விதியினும் பன்மைசெய் முகன்படைத்து அளவாச் சோதியின் படைக்கண் செலஉய்த்து அரும்புசெய் முண்டக முலையில் சாந்தழித்து அமைத்தோள் எழுதிய கழைக்கரும்பு எறிந்துநூல் வளர்த்த கோதை வகைபரிந்து மணிக்கலன் கொண்டு (10)
கழைத்தோள் நெகிழத் தழைவுடல் குழையத் திரையினைத் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்து ஒள்நிற வேங்கையின் தாதும் பொன்னும் சுண்ணம் அவைகலந்து திமிர்ந்துடல் தூற்றி வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி (15)
இறால்புணர் புதுத்தேன் ஈத்துடன் புணரும் அவ்வயின் மறித்தும் அன்னவள் தன்னுடன் கெழுமிய விழவுள் புகுமதி நீயே கவைநாக் கட்செவி அணந்திரை துய்த்த பாசுடற் பகுவாய்ப் பீழைஅம் தவளையும் (20)
பேழ்வாய்த் தழல்விழித் தரக்கடித்து அவிந்த நிலம்படர் தோகைக் குலம்கொள் சேதாவும் அவ்வுழி மாத்திரை அரைஎழு காலை திருநுதற் கண்ணும் மடமகள் பக்கமும் எரிமழு நவ்வியும் பெறும்அருள் திருவுருவு (25)
எடுத்துடன் அந்தக் கடுக்கொலை அரவினை தீவாய்ப் புலியினை திருந்தலர் நகைப்ப எடுத்தணி பூண உரித்துடை உடுப்ப முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்ப தருவன அன்றி மலரவன் அவன்தொழில் (30)
நாரணன் ஆங்கவன் கூருடைக் காவல் சேரத் துடைக்கும் பேரருள் நாளினும் முத்தொழில் தனது முதல்தொழில் ஆக்கி ஒருதாள் தாரைகொள் முக்கவைச் சுடர்வேல் தலைஇருந்து அருங்கதி முழுதுநின் றளிக்கும் (35)
திருநகர்க் காசிப் பதியகத்து என்றும் வெளியுறத் தோன்றிய இருள்மணி மிடற்றோன் நேமியங் குன்றகழ் நெடுவேற் காளையன் தன்பரங் குன்றம் தமர்பெறு கூடற்கு இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும் (40)
பெரும்புனல் ஊர! எம்இல் அரும்புனல் வையைஅம் புதுநீர் அன்றே. (42)
|