ஈன்ற செஞ்சூழல் கவர்வழி பிழைத்த வெறிவிழிப் பிணர்மருப்பு ஆமான் கன்றினை மென்னடைக் குழைசெவி பெறாவெறுங் கரும்பிடி கணிப்பணைக் கவட்டும் மணற்சுனைப் புறத்தும் தழைக்குற மங்கையர் ஐவனம் அவைக்கும் (5)
உரற்குழி நிரைத்த கல்லறைப் பரப்பும் மானிட மாக்கள் அரக்கிகைப் பட்டென நாச்சுவை அடுக்கும் உணவு உவவாது வைத்துவைத் தெடுக்கும் சாரல் நாடன் அறிவும் பொறையும் பொருள்அறி கல்வியும் (10)
ஒழுக்கமும் குலனும் அமுக்கறு தவமும் இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே வெடிவால் பைங்கண் குறுநரி இனத்தினை ஏழிடம் தோன்றி இனன்நூற்கு இயைந்து வீதி போகிய வால்வுளைப் பரவி (15)
ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி அந்தணன் கொண்டோற்கு ஏகும் குறியுடை நன்னாள் அன்னையர் இல்லத்து அணிமட மங்கையர் கண்டன கவரும் காட்சி போல வேலன் பேசி மறிசெகுத்து ஓம்பிய (20)
காலம் கோடா வரைவளர் பண்டம் வருவன வாரி வண்டினம் தொடர கண்கயல் விழித்து பூத்துகில் மூடி குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து கருங்கால் மள்ளர் உழவச் சேடியர் (25)
நிரைநிரை வணங்கி மதகெதிர் கொள்ள தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும் வையை மாமாது மணத்துடன் சூழ்ந்த கூடல் பெருமான் பொன்பிறழ் திருவடி நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல (30)
சலியாச் சார்பு நிலைஅற நீங்கி அரந்தை யுற்று நீடநின் றிரங்கும் முருந்தெயிற் றிளம்பிறைக் கோலம் திருத்திய திருநுதல் துகிர்இளங் கொடியே (34)
|