LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

காணுமிடமெல்லாம் கானகத்தை கட்டியமைக்கும் தளிர்கள் அமைப்பு !!

தளிர்கள் என்ற அமைப்பு தமிழகத்தின் வனவளத்தை பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் இலக்காக கொண்டு ஜூலை 2013 இல் ஆரம்பிக்க பட்டு பணியாற்றி வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாராம் சீரிய முறையில் இருக்கவும், நாட்டின் உணவு உடை நீர் மற்றும் இதர தேவைக்கு பிறரை சார்ந்து இல்லாமல் தாமே பூர்த்தி செய்து கொள்ளவும், சுற்றுப்புற சூழல் சமநிலையில் இருக்கவும் அந்த நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு (அதாவது 33 சதவீதம்) அடர்ந்த காடுகளால் சூழ பட்டு இருக்க வேண்டும். மழைவளம், நிலவளம், மனிதவளம் இவை அனைத்தும் செழிக்கத் தேவையானது மரவளம். இதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டார்கள். ஆனால், நாகரிகம் வளர வளர தொழிற்சாலைகள் கட்டப்பட , வீடுகள் கட்டியமைக்க மற்றும் பல சுயதேவைகள் என பல காரணங்களுக்காக மரங்களை மரணிக்கச் செய்து வருகிறோம். இவ்வாறு காடுகள் சூறையாட பட்டதன் விளைவு 1910 இல் 40 சதவீதமாக இருந்த இந்திய காடுகளின் பரப்பளவு தற்பொழுது 17 சதவீதமாக குறைந்துள்ளது. 


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது முதுமொழி. மனிதக் குற்றங்களால், சுற்றுச் சூழல் வேகமாக அழிந்து வருகிறது. கார்மேகம், குளிர்ந்த காற்று, வானவில் எல்லாம் எதிர்காலத்தில் ஏட்டில்தான் இருக்குமோ என்ற கவலை உருவாகிவிட்டது. கார்மேகம் தோன்றிய வானம் தார் பாலைவனம் ஆகி வருகிற வறட்சி நிலை தோன்றிவிட்டது. உலக அளவில் மழை அதிகம் பெய்யும் இடங்களில் எல்லாம் மழை சிறிதாவது பெய்யாதா என்று ஏங்கும் நிலை உருவாகியுள்ளது. மலைகள் எல்லாம் கிரானைட் கற்களாக விலை போகின்றன. காடுகள் அழிக்கப்படுகிறது, மரங்கள் மொட்டை அடிக்கப்படுகின்றன. காடுகளில் உள்ள மரங்கள் விறகுகளாகவும் வீட்டு உபயோகப் பொருட்களாகவும் மாறுகின்றன. பெரும்பாலான காடுகள் குடியிருப்புப் பகுதிகளாகவே மாறிவிட்டன. இதனால் நாம் நாளுக்கு நாள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தித்து கொண்டிருக்கும் இன்னல்கள் சில, 


நிலத்தடி நீர் குறைந்து போனதின் விளைவு மனிதன் உயிர்வாழ ஆதாரமான குடி நீர் பற்றாக்குறை


மாதாமாதம் கிடைத்து வந்த மும்மாரி. இப்போது ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கிடைத்தலே அரிது என்கிற நிலை 


குளிர் காலங்களில் கூட சுட்டெரிக்கும் வெயில் என சீரற்ற தட்ப வெப்பம் நிலவுவது 


மழையும் இல்லை மண் வளமும் இல்லை என்பதனால் வேளாண்மை தொழில் புரிவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் உணவு பொருட்கள் உற்பத்தி குறைந்து உணவு பொருட்களின் விலையேற்றம்,


பூச்சிகளையும் புழுக்களையும் உண்டு உழவு தொழிலுக்கு உற்ற நண்பனாக விளங்கி வந்த பல பறவையிணங்கள் வாழ்விடமும் உண்ண உணவுமின்றி அழிந்தும் குறைந்து போய் கொண்டிருப்பது


இதை பொருட்டு அழிந்து போன காடுகளை மீட்டு எடுக்க தளிர்களின் சார்பில் தமிழகம் முழுவதும் மரங்களை வளர்த்து எடுக்க முடிவு செய்துள்ளோம். நன்கு கவனிக்கவும் மரங்களை நடுவது தளிர்களின் நோக்கம் அல்ல மாறாக மரங்களை வளர்ப்பது தான் தளிர்களின் இலக்கு. இந்த பசுமை தமிழகம் நோக்கி என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழத்தில் உள்ள அணைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே மரம் மற்றும் இயற்கை சார்ந்த விழிப்புணர்வை தளிர்கள் மூலம் ஏற்படுத்தி அம்மாணவர்களின் துணை கொண்டு மரங்களை வளர்த்து அணைத்து பள்ளிகளையும் பசுமை பள்ளிகளாக மாற்ற முடிவு செய்துள்ளோம். தளிர்கள் சார்பில் நடப்படும் ஒவ்வொரு மரக்கன்றுகளும் அது நல்ல வளர்ச்சியை எட்டும் வரை மாணவர்களின் துணை கொண்டு தளிர்கள் உறுப்பினர்களால் பராமரிக்கப்படும். நடப்படும் ஒவ்வொரு மரகன்றுகளும் மரங்களாக வளர்த்து எடுப்பதில் தளிர்கள் மிக தீவிரமாக செயல்படும். இதற்காக கீழ்க்கண்ட திட்டத்தை தளிர்கள் மூலம் வடிவமைக்க பட்டு பின்பற்றி வருகிறோம். 


மரம் நடுவதற்கு முன்பு அந்த பள்ளியில் மரம் வளர்ப்பதற்கு போதுமான நீர் வசதி உள்ளதா என்று தளிர்கள் சார்பில் ஆராயப்படும்

 

போதுமான நீர் வசதி உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின் மரம் நடுவதற்கான குழி 1.5x1.5x1.5 அடி என்ற கணக்கில் 10 அடி இடைவெளி விட்டு எடுக்கப்படும்


குழி எடுத்த மூன்றாவது நாளில் அணைத்து குழிகளிலும் தொழு உரம் இடப்பட்டு அடுத்து ஐந்து நாட்களுக்கு விடப்படும்


குழி வெட்டப்பட்டு குறைந்தது ஏழு நாட்கள் வரை அது அப்படியே விடப்படும், இவ்வாறு செய்வதால் மண்ணில் உள்ள சூடு குறைந்து மண்ணின் இருக்கதன்மை குறைந்து போகும். வைக்கப்படும் மரக்கன்று இறந்து போகாமால் வேர் சுலபமாக பரவ இது உதவும். 


ஏழு நாட்கள் கழிந்த பின்பு மாணவர்களிடம் மரம் மற்றும் இயற்கை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் தளிர்கள் சார்பில் நடத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்படும்.

 

மரக்கன்றுகள் வைக்கப்பட்டு இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் அணைத்து மரங்களுக்கும் தொழு உரம் இடப்படும்.


அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரின் கீழ் ஒரு மாணவர் அணி அமைத்து நடப்படும் அணைத்து மரங்களும் பராமரிக்கப்படும். 


நடப்பட்ட அணைத்து மரகன்றுகளுக்கும் சருகு, இலைகள் கொண்டு மூடாக்கு அமைத்து மண்ணின் ஈரப்பதம் குறைந்து போகாமல் பார்த்து கொள்ளப்படும். இவ்வகை நீர் வீணாவது தடுக்கபடுவதுடன் மரகன்றுகளுக்கும் தேவையான ஈரப்பதம் மண்ணில் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். மரக்கன்றுகள் நீரின்றி காய்ந்து போவது தவிர்க்கபடும்


பள்ளியில் சுற்றுசுவர் இல்லாமல் போகும் பொழுது வைக்கப்படும் மரகன்றுகளுக்கு முள்வேலி அமைக்கப்படும். இதன் வழி மரக்கன்றுகள் ஆடு மாடுகளிடம் இருந்து காப்பாற்றபடும்


மரகன்றுகளின் வளர்ச்சி தளிர்கள் உறுப்பினர்களால் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படும். 


கோடை காலங்களில் எக்காரணம் கொண்டும் மரக்கன்றுகள் நடப்படமாட்டாது மாறாக குளிர் காலத்தில் வைக்கப்பட்ட அணைத்து மரங்களுக்கும் தேங்காய் நார் கொண்டு மூடாக்கு அமைப்பது, களை எடுப்பது போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.


தளிர்கள் அமைப்பு தமிழகத்தை பசுமையாக்க மரங்களை வளர்த்து வருவதை போல், மக்களின் ஆரோக்கியத்தை பசுமையாக்க பாலிஸ் போடாத தானியங்களை விற்பனை செய்து வருகிறது. 


பாலிஸ் போடாத தானியங்ள் விற்பனை குறித்து தளிர்கள் அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது, 


உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தானியங்கள் சாப்பிட ஆசைபட்டால், கண்டிப்பாக பாலிஷ் போடாத சிறு தானியங்களை மட்டுமே உண்ணுங்கள். சத்துக்கள் அனைத்தும் அகற்றப்பட்ட வெள்ளை நிற தானியங்கள் என்ற பெயரில் விற்கப்பட்டு கொண்டிருக்கும் கழிவுகளை இயன்றளவு ஒதுக்கி விடுங்கள். உணவு பொருட்களின் பின் நடந்து கொண்டிருக்கும் இருக்கும் அரசியலை தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்,


எதற்காக உணவு தானியங்கள் பாலிஷ் போடப்படுகிறது ? 


அதற்கு பின் ஒளிந்து கிடக்கும் கொள்ளையை அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா ? 


Hull என்பது நெல்லின் மீது இருக்கும் உமி, இதை நம்மால் உணவாக எடுத்து கொள்ள முடியாது. அடுத்த பகுதியான Bran என்பதில் தான் Protein, Fibre, Minerals, Calcium, Iron என அத்தனை சத்துக்களும் அடங்கி உள்ளது. இந்த பகுதிதான் பாலிஷ் என்ற பெயரால் நீக்கப்பட்டு வெள்ளை தீட்டபடுகிறது. அடுத்த பகுதிதான் கடைகளில் விற்கப்படும் வெள்ளை நிற சிறுதானியங்கள். இந்த நெல்லை மண்ணில் மீண்டும் விளைவிக்க உதவும் பகுதிதான் Germ. பாலிஷ் என்ற பெயரில் இந்த Bran என்னும் பகுதிதான் நீக்கபடுகிறது, அரிசியில் இருந்து நீக்கபடும் இந்த பகுதி எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா நண்பர்களே ? Google பக்கத்திற்கு சென்று Bran Products என்று தேடி பாருங்கள். பின்பு உங்களுக்கே தெரியும். இது சிறு தானியங்களுக்கு மட்டுமல்ல, அரிசி மற்றும் கோதுமைக்கும் பொருந்தும்.


ஒரு கிலோவில் இருந்து எடுக்கப்படும் Bran பகுதியை கொண்டு மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் பொருளும் உங்களிடமே விற்கபடுகிறது. இதை விட இன்னும் அதிக விலைக்கு. இது தான் நுகர்வு கலாச்சாரத்தின் உச்சகட்ட மோசடி.


சிறு தானியங்கள் என்பன எவை:


கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, வரகு, பனிவரகு, சாமை, குதிரைவாலி


சிறு தானியங்கள் உண்பதனால்/விளைவிப்பதனால் மனிதர்களுக்கு என்ன நன்மை:


1) நமது அன்றாட உணவுகளாக மாறி போன அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் சிறு தானியங்களிலே உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்களான புரத சத்து(Protein), நார் சத்து (Fibre), இரும்பு சத்து (Iron), சுண்ணாம்பு சத்து (Calcium) மற்றும் கனிம சத்து(Minerals) ஆகியவை அதிகமாக உள்ளன.


2) மேலே குறிப்பிட்டுள்ள சிறு தானியங்கள் அனைத்தும் மாணவரி நிலங்களில் விளைய கூடிய பயிர்கள், எந்த நோய் தாக்குதலும் இன்றி எதிர்ப்பு சக்தியுடன் வளர கூடிய பயிர்களாகும். ஆகவே நோய் தாக்குதலுக்கு பூச்சி கொல்லி மருந்துகள் எதையும் தெளிக்க தேவை இல்லை. அதனால் பொருளாதார ரீதியில் பூச்சி கொல்லிக்கான செலவுகள் இதனை விளைவிக்கும் விவசாயிக்கு மிச்சம். 


3) அதே வேளையில், பூச்சி கொல்லி என்ற பெயரில் எந்த ஒரு நஞ்சும் கலக்காத உணவை உட்கொள்கிறோம் என்பது இதனை உணவாக உண்பவர்க்கு நன்மை.


சிறு தானியங்களால் சூழலுக்கு என்ன நன்மைகள்:


1) சிறு தானியங்கள் அணைத்தும் வறட்சி தாங்கி எந்த ஒரு நிலத்திலும் எந்த ஒரு சூழலிலும் வளர கூடிய பயிர்கள். அதிகம் நீர் தேவை இருக்காது. ஆகையால் நமது நிலத்தடி நீரை அதிகம் வீணாக்காமல் சத்து மிகுந்த உணவினை விளைவிக்க முடியும். ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது ஒரு கிலோ நெல் விளைவிப்பதற்கு 4000 லிட்டர் நீர் எடுத்து கொள்ளபடுகிறது, ஆனால் அதை விட சத்துகள் மிகுந்த மேலே கூறிய தானியங்கள் ஒரு கிலோ விளைவிக்க வெறும் 300 லிட்டர் நீரே போதுமானது என்று.


2) நமது நீர் தேவைக்கு நமது அண்டைய மாநிலங்களை சார்ந்திருப்பது சற்று குறையும். 


3) நமது சூழலில் வாழக்கூடிய பூச்சிக்களில் சிலவற்றே நமக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ஆகும், மற்ற பூச்சிகள் நமக்கு மகரந்த சேர்க்கை, மற்ற பூச்சிகளை உணவாக உண்டு அதன் எண்ணிகையை கட்டுபடுத்துதல் என்று நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளே. ஆனால் நாம் பூச்சி கொல்லிகள் தெளிக்கும் பொழுது அணைத்து பூச்சிகளையும் கொன்று குவிக்கிறோம். மேலே குறிப்பிட்டது போல பூச்சி கொல்லி எதுவும் தெளிக்க தேவை இல்லை என்பதனால் இந்த தவறுகள் தடுக்கபடுகின்றன.


4) சிறு தானியங்கள் எந்த மண்ணிலும் எளிதாக வளரக்கூடிய பயிர்வகை. எந்த செயற்கை உரங்களையும் மண்ணுக்கு இடப்பட தேவை இல்லை. அதனால் மண் வளம் சூரையாடப்படாமல், மண்ணை உரங்களால் மலடாக்கும் செயலும் தவிர்க்க படுகிறது. 


5) நீர் இல்லை, மண் வளம் இல்லை என்று வெறும் நிலங்களாக விட்டு வைக்காமல் அணைத்து நிலங்களும் பயன்பாட்டுக்கு வரும்.


6) இயற்கை வாழ்வியல் முறை என்பது சூழலுக்கு எந்த ஒரு தீய விளைவினையும் ஏற்படுத்தாத இயற்கை விவசாயம் என்பதிலே தொடங்குகிறது. அந்த இயற்கை விவசாயம் மண்ணிற்கும் இந்த தட்பவெட்ப நிலைக்கும் ஏற்ற பயிரை பயிரிடுவதில் தான் தொடங்குகிறது. அந்த வகையில் பார்க்கும் பொழுது சிறு தானியங்களே நமக்கு ஏற்ற உணவு வகைகளாகும், மற்றும் இந்த மண்ணிற்கு ஏற்ற பயிர் வகைகள் ஆகும்.


எந்த வகையான சிறு தானியங்களை நாம் உணவாக எடுத்து கொள்ள வேண்டும்:


இன்று சிறு தானிய உணவுகள் உண்பது எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ஒரு நவீன நாகரீக வெளிப்பாடாக மாறிக்கொண்டு வருகிறது. அதாவது அனைவரும் ஏதோ ஒரு வணிக வளாகத்திற்கு சென்று பேக்கட்களில் அடைத்து வைக்கபட்டிருக்கும் தானியங்களை வாங்கி உணவாக உட்கொண்டு விட்டால் நாமும் சத்துள்ள உணவை உட்கொண்டு விட்டோம் என்ற புரிதலில் மட்டுமே இருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல நண்பர்களே.


இந்த சிறு தானியங்களில் இரு வகை உள்ளன, 


- ஒன்று பாலிஷ் போடப்பட்ட அதாவது உணவாக எடுத்து கொள்ள இயலாத உமி மற்றும் அதே வேளையில் தானியத்திற்கு மேலிருக்கும் ஒரு பகுதி நீக்கப்பட்ட தானியம். 


- மற்றொன்று பாலிஷ் போடாமல் தானியத்திற்கு மேலிருக்கும் உணவாக எடுத்து கொள்ள இயலாத உமி மட்டும் நீக்கப்பட்ட தானியம்.


மேலே கூறப்பட்ட அணைத்து சத்துக்களும் (நார், புரதம், கனிமம், சுண்ணாம்பு, இரும்பு) உமிக்கு பிறகு இந்த தானியத்தின் மேல் இருக்கும் பகுதியிலே உள்ளது. ஆனால் இந்த மேலிருக்கும் பகுதி நீக்கப்பட்டு, அணைத்து சத்துகளும் எடுத்து வீசப்பட்ட பாலிஷ் போட்ட தானியங்களே பெருவாரியான விற்பனை கூடங்களில் இன்று கிடைக்கிறது. இவற்றை நீங்கள் எளிதில் கண்டு கொள்ளலாம். அதாவது எந்த ஒரு சிறு தானியமும் வெள்ளை நிறத்தில் இருக்காது. சத்துகள் நிறைந்த மேல் பகுதி நீக்கப்பட்டு பாலிஷ் போடப்பட்ட அணைத்து தானியங்களும் வெள்ளை நிறத்தில் மட்டுமே காணப்படும். இவ்வகையான தானியங்களை வாங்கி உண்பது ஒரு பழத்தை எடுத்து அதில் இருக்கும் சதையை எரிந்து விட்டு வெறும் கொட்டையை உண்பதற்கு ஈடாகும்.


சரி எதற்காக இவ்வாறு பாலிஷ் போடபடுகிறது என்று உற்று நோக்கினால் இரண்டே இரண்டு காரணங்கள் தான் நண்பர்களே. 


முதலாவது மேலிருக்கும் உமியை மட்டுமே நீக்குவது சற்று வேலை அதிகம், இரண்டாவது உமியை மட்டும் நீக்கி வைத்தால் இந்த தானியங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பயன்படுத்தி விட வேண்டும். இல்லையெனில் வண்டுகளும் சில பூச்சிக்களும் வந்து விடும். இங்கு நாம் சற்று உற்று கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. இங்கு பூச்சிகள் வருவதை தடுப்பதற்காக பாலிஷ் போட படுவதில்லை. மாறாக பூச்சிகள் வராமல் இருந்தால் மட்டுமே வியாபாரிகளால் அதிக நாள் இந்த தானியங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முடியும். இரண்டாவது உங்களுடைய பகுத்தறிவை பயன்படுத்துவதற்கான ஒரு தருணம், ஓர் அறிவு என்று, இரண்டு அறிவும் என்றும் மனிதனால் சொல்ல கூடிய பூச்சிகள் மற்றும் வண்டுகளுக்கு தெரிகிறது பாலிஷ் போடப்பட்ட தானியங்களில் நாம் உண்பதற்கான சத்துக்கள் எதுவும் இல்லை என்பது. அதனால் இவற்றை அவை சாப்பிடுவது இல்லை. ஆனால் ஆறறிவு என்று ஆர்பரித்து கொண்டிருக்கும் நாம் தான் சிலரின் சுயநலன்களுக்காக சத்துக்கள் நீக்கப்பட்ட பாலிஷ் போடப்பட்ட சிறு தானியங்களை வாங்கி உண்கிறோம். 


மேலே குறிப்படப்பட்டுள்ள அத்தனை சத்துகளும் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சிறு தானியங்கள் சாப்பிட முற்பட்டால், நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒன்று கட்டாயம் பாலிஷ் போடாத, உமி மட்டும் நீக்கப்பட்ட சிறு தானியங்களே. இதனை கண்டுபிடிப்பதும் மிக எளிது. பாலிஷ் போடாத எந்த ஒரு சிறு தானியமும் வெள்ளை நிறத்தில் இருக்காது. மாறாக அந்தந்த தானியதிற்கே உரிய வண்ணங்களில் மட்டுமே காணப்படும். 


வாசகர்களுக்கு சிறு தானியம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருப்பின் 7299428570 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் ஐயங்களை தெரிவியுங்கள்.  


sd.balasubramani@gmail.com

by Swathi   on 26 May 2014  0 Comments
Tags: Thalirgal   Thalirgal Amaippu   Evergreen Tamilnadu   தளிர்கள் அமைப்பு   தளிர்கள்   சிறு தானியங்கள்     
 தொடர்புடையவை-Related Articles
காணுமிடமெல்லாம் கானகத்தை கட்டியமைக்கும் தளிர்கள் அமைப்பு !! காணுமிடமெல்லாம் கானகத்தை கட்டியமைக்கும் தளிர்கள் அமைப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.