தாய்மொழி தமிழ் வழி சமூகம், வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் இவையடங்கிய முழுமையான வாழ்வியற் கல்வியை உளத்தியல் அடிப்படையில் பயிற்றுவித்து, அனைத்து உரிமையுடன் கூடிய வளமான ஒப்புரவுத் தமிழ்க் குமூகத்தைப் படைப்பது’’
(ஆ) செயல் திட்டங்கள்
1. தமிழகத்தில் வணிக நோக்கின்றி கல்விப்பணி ஆர்வத்தால் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தத் தொடங்கப்பெறும் தாய்த்தமிழ்க் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்தல்.
2. தாய்த்தமிழ்க் கல்வி நிறுவனங்களுக்கு பொதுவான பாடத்திட்டத்தை உருவாக்குதல், செயல்படுத்துதல்.
3. ஆசிரியர்களுக்குத் திசைமுகப் பயிற்சியும் பணியிடைப் பயிற்சியும் முழுமையான ஆசிரியப் பயிற்சியும் வழங்குதல்.
4. தாய்த்தமிழ்க் கல்வி நிறுவனங்களுக்கு அரசு ஏற்பிசைவு முதலியவற்றிற்கு வழிகாட்டுதல், ஆவண செய்தல்.
5. பாட நூல்கள், பயிற்சி நூல்கள் உருவாக்குதல், வெளியிடுதல்.
6. இதற்கான நிதியமைப்பினை உருவாக்குதல், பேணுதல்.
7. தமிழ்வழிக் கல்வி வெற்றி பெற அனைத்து நிலைகளிலும் இயன்ற வழிகளிலெல்லாம் பாடாற்றுதல்.
(இ) தாய்த்தமிழ்க் கல்விப்பணி உருவாக்கம்
‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற முழக்கத்துடனும் தாய் தன் குழந்தைக்கு அமுதூட்டுவது போல் அமைந்த இலட்சினையுடனும் 1993 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் தோழர் தியாகு அவர்களால் முதல் தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கப் பெற்றது. இப்பள்ளியைத் தொடர்ந்து 1995 இல் மேட்டூர் அணை, திருப்பூர் சின்னதானங்குப்பம், 1996 இல் செக்கடிக்குப்பம், 1997 இல் கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களிலும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பெற்றன.
1997-&98 ஆம் ஆண்டில் 6 பள்ளிகளாக இருந்த நிலையில் 1998&99 ஆம் ஆண்டில் மேலும் 7 பள்ளிகள் தொடங்கப்பெற்று 13 பள்ளிகளானது. இந்நிலையில் இதுவரை தொடங்கி நடத்தப்பெற்று வரும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் இனித் தொடங்கவிருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் முகமாக 30.05.1998 இல் கோபிச்செட்டிப்பாளையம் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அனைத்துப் பள்ளிகளின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ‘தாய்த்தமிழ்க் கல்விப்பணி’ அமைப்பு உருவாக்கப்பட்டது.
(ஈ) தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் வெற்றி
* தமிழிய நோக்கில் நடத்தப் பெறுகின்றன. தமிழ்த் தொண்டுணர்வோடு வணிக நோக்கின்றி செயல்படுகின்றன.
* குழந்தைகளுக்கான உளவியல் அணுகுமுறையோடு விரும்பியேற்கும் விளையாட்டு, பாடல் முறையில், இயன்ற துணைக் கருவிகளைக் கொண்டு கற்பித்தல் நடைபெறுகின்றது.
* ஆங்கிலப் பள்ளிகளைப் போன்று தண்டனை, அச்சுறுத்தல் தன்மைகள் இல்லை. மாணவர்களின் தன்மதிப்பை மதித்து அவர்களின் தன்மான உணர்வை வளர்க்கிறோம்.
* மாணவர்களுக்கான தேர்வு மதிப்பீடுகளில் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தர வரிசைபோடும் முறையைத் தவிர்க்கிறோம். மாறாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் தேர்வுமுறையைப் பின்பற்றுகிறோம்.
* மழலை வகுப்பிலிருந்தே (மூன்று அகவை முடிந்தபின் மெட்டு, மலர் வகுப்புகள்) மாணவர்களுக்கு தனித்தமிழ்ச் சொற்களை கற்றுத் தருகிறோம். தமிழறிஞர், சமூகச் சிந்தனையாளர் குறித்த செய்திகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனால் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களும் தனித்தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்கிறார்கள்.
* தமிழர் வாழ்வியல் முறை, ஒழுக்கம், பிறரை மதித்து நடத்தல், குடும்ப உறவுகளைப் பேணுதல், இயற்கை சார்ந்த வாழ்வு ஆகியன குறித்து கற்றுத் தருகிறோம்.
* தமிழகம் பற்றிய செய்திகள், உணவு முறைகள், தமிழ் மருத்துவ முறைகள், தமிழ்ப் பண்பாடு, கலை (நாட்டுப்புற நடனங்கள், பாடல்கள், பிற கலைகள்) கற்றுத் தருகிறோம். திருக்குறளை சிறப்பு நிலையில் கற்றுத் தருகிறோம்.
* அறிவு வழிபட்ட கற்பித்தல் முறையைப் பின்பற்றி அனைத்தையும் பகுத்தறியும் தன்மையை மாணவரிடையே உண்டாக்குகிறோம். தன்னம்பிக்கையும், தற்சார்பு தன்மையும் உடையவராக மாணவர்களை உருவாக்க முயற்சிக்கிறோம்.
* அரசுப் பள்ளிகளில் 40 மாணவருக்கு 1 ஆசிரியர் என்பது பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கையிலான வரையறை. இவ்வறையறை நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆங்கிலப் பள்ளிகளில் இவ்வரையறை எதுவும் இல்லை. தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் வகுப்புக்கு 25 மாணவர் என்ற வரையறை பின்பற்றப்படுகிறது.
* குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே தாய் தந்தை இருவரது பெயரையும் முன்னெட்டாக சேர்த்தே பதிவு செய்கிறோம். குழந்தைகள் தாய், தந்தை பெயரையும் சேர்த்தே சொல்லப் பயிற்றிவிக்கிறோம்.
* இவை வணிக நோக்குடைய ஆங்கிலப் பள்ளிகளிலிருந்தும், அரசு நடத்தும் பள்ளிகளிலிருந்தும் வேறுபட்ட தனித்துவமான நமது பள்ளிகள் செயல்பாடுகளாகும்.
(உ) நீண்டகால செயல்திட்டங்கள்
1. தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் இலக்கை அடைய கல்வியாளர்கள், சமூகவியலாளர்கள், தமிழறிஞர்கள், இவர்கள் அடங்கிய ‘கல்விக் குழு’ அமைத்து மாற்றுக்கல்வித் திட்டத்தை உருவாக்கி தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் நடைமுறைக்கு கொண்டுவருதல்.
2. தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தொடக்கப் பள்ளி அளவிலேயே தற்பொழுது இயங்குகின்றன. கல்விப் பணியின் இலக்கையடைய குறை அளவாகவாவது நடுநிலைப்பள்ளியாக உயர்த்துதல். தொடர்ந்து, மாவட்டத்திற்கு ஒரு பள்ளியையாவது மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தி உண்டு & உறைவிடப் பள்ளியாக இயங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
3. தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் கற்றல் கற்பித்தல் முறையை மேலும் செழுமைப்படுத்திடவும் ஆசிரியர்கள் நிரந்தரமாக பணியாற்றவுமான ஒரு நிலையை அடைய தாய்த்தமிழ்க் கல்விப்பணியின் சார்பில் ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி முறையாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
4. தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த கற்பிக்கும் கருவிகளை தாய்த்தமிழ்க் கல்விப்பணியே உற்பத்தி செய்து பள்ளிகளுக்கு வழங்குதல்.
5. தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் தமிழர் கலையை வளர்த்தெடுக்கும் வகையில் முறையாக அக்கலைகளைக் கற்பிக்க தனியே இதற்கென ஒரு கவின்கலைப் பள்ளியைத் தொடங்கி பயிற்சி அளித்தல்.
6. தமிழறிஞர்களின் வரலாற்றைத் தொகுத்து நூலாக வெளியிடுதல், தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் தமிழறிஞர்களின் வரலாற்றை துணைப்பாடமாக வைத்து முறையாக மாணவர்களுக்குக் கற்பித்தல்.
7. தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் தமிழர்களின் விளையாட்டுக்களை முறையாகப் பயிற்றுவித்து தமிழக அளவில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டியை நடத்துதல்.
8. தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் பயின்று வெளிவரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் மேலை நாடுகளில் வாழும் தமிழர்களோடும் தமிழ் அமைப்பு களோடும் தொடர்பை ஏற்படுத்தி அவ்வமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி மேலைநாடுகளில் பணிபுரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
9. தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் முறையா கவும், சரியாகவும் ஆங்கிலத்தைக் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், ஒவ்வொரு தாய்த்தமிழ்ப் பள்ளியிலும் ஆங்கில ஆய்வகத்தை ஏற்படுத்துதல்.
10. தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் கணினிக் கல்வியை நடைமுறைப்படுத்தவும் கணினி வழி கற்பித்தல் முறையை கொணரவுமான செயல்திட்டத்திற்கு ஒவ்வொரு பள்ளியிலும் கணினி மையத்தை உருவாக்குதல்.
ப.தமிழ்க்குரிசில்
செயலாளர், தாய்த்தமிழ்க் கல்விப்பணி
|