தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை. (பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)
மணக்குடவர் உரை:
தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.
தேவநேயப் பாவாணர் உரை:
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் -அறிவு முதலியவற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவராமாறு அவர் வழிநின் றொழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை -அரசர்க்குரிய வலிமைக ளெல்லாவற்றுள்ளுந் தலையானதாம்.
படை, அரண், பொருள், நட்பு முதலிய வலிமைகளால் நீக்கப் படாத தெய்வத்துன்பங்களை நீக்குதற்கும், அடையப்பெறாத வெற்றியை அடைதற்கும், உதவும் பெரியார் துணை அவ்வலிமைகளினுஞ் சிறந்தது என்பதாம்.
கலைஞர் உரை:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய்
இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக
அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
Translation
To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.
Explanation
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.