1
கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன். காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன்.
என்ன யோசனை? என்றாள் தமிழ். கலைவண்ணன் மனது கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு அந்த அலைகள் இத்தனை யுகங்களாய் அப்படி என்னதான் பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக் கடல் தூரத்துவானத்துக்குத் தூரிகையில்லாமல் எப்படி வர்ணமடிக்கிறது என்று யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில் எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா. அவள் மல்லிகைக்கரம் தொட்டு மணிக்கட்டில் முத்தமிட்டான். நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப் பிரதேசங்களில் விளையாடி அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக் கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி. ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோ பஸ அலைகள் என்னை அள்ளிக் கொண்டோ டிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா, தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான் கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம். குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம். வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில் ததும்பும்போது என் படுக்கையில் நான் வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம் எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள் படபடப்பைப் பறைசாற்றின கண்களில் உடைந்துவிழுந்த மின்மினி மின்னல்கள்.
கலைவண்ணன் கரைமீண்டான். அவளை ஆதரவாய் அணைத்து அங்கவஸதிரமாய்த் தோளில் அணிந்து அவள் சுட்டுவிழி தாழும் வேளை கன்னத்தில் சுட்டுவிரல் கையெழுத்திட்டான்.
காதல் மண்டியிட்டான். காதில் ஓதினான்.
தமிழ்ரோஜா
அதைவிட சுகமாக அம்சத்வனிராகம்கூட அவள் பெயரை உச்சரித்திருக்க முடியாது.
காதல் அழைக்கும் போதுதான் பெயர்வைத்ததன் பெருமைபுரிகிறது.
அந்த சுகம் மீண்டும் அவளுக்கு வேண்டியிருந்தது. அதனால் உம் கொட்டாமலிருந்தாள்.
தமிழ்ரோஜா
- இப்போது அவன் அழைத்தது தோடிராகம்.
உம் என்றாள் தமிழ்.
தண்ணீருக்கு நீ பயந்தால் உன்னைக்கண்டு நீயே பயப்படுகிறாய் என்று அர்த்தம்.
புரியவில்லை.
உன் உடம்பு என்பதே முன்றில் இரண்டுபங்கு தண்ணீர். உன் அழகுதேகம் என்பது 65 சதம் தண்ணீர்.
மெய்யாகவா?
தமிழிடம் பொய்சொல்வேனா? விஞ்ஞானம் விளம்பக்கேள்... வாழும் உயிர்களை வடிவமைத்தது தண்ணீர். 70 சதம் தண்ணீர் - யானை. 65 சதம் தண்ணீர் - மனிதன். என் அமுதமே. உன் உடம்பில் ஓடுவது 7.2 லிட்டர் உப்புத் தண்ணீர்.
நம்ப முடியவில்லை.
உண்மைக்கு உலகம்வைத்த புனைபெயர் அதுதான்.
உடம்பில் ஏன் உப்புநீர் ஓடுகிறது?
கடற்கொடை. தாய்தந்த சீதனம். முதல் உயிர் பிறந்தது நீரில் என்பதால் ஒவ்வோர் உடம்பிலும் இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கிறது அந்த உறவுத் திரவம்.
முதல் உயிர் பிறந்தது கடலிலா? நம்புவதெப்படி நான்?
கலையின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் தமிழ். ஒருவருக்கான காற்றை இருவரும் சுவாசித்தார்கள்.
சுகபோதையிலும் கலைவண்ணன் உண்மை உளறினான்.
கடலில் பிறந்த முதல் உயிர் தண்ணீரில்தானே சுவாசித்திருக்க முடியும். அந்த மரபுரிமையின் தொடர்ச்சிதான் இன்றும் கர்ப்பத்தில் வளரும் சிசு தண்ணீர்க் குடத்தில் சுவாசிக்கிறது.
ஆகா, என்று ஆச்சரியம் காட்டிய தமிழ் அவன் முகத்தில் முள்குத்தாத பிரதேசம்தேடி முத்தமிட்டாள்.
அந்த முத்தச்சூடு உயிரெல்லாம் பரவக்கண்டவன், அவள் கழுத்தடியில் கைபதித்துக் குளிரக்குளிரக் குறுமுடி கோதினான். குழந்தையே. என் குழந்தையேஎன்று கொஞ்சினான்.
புரிகிறதா? கடல் நம் தாய். தாய்கண்டு தமிழ் அஞ்சலாமா?
தாயென்றால் பூமியை அவள் ஏன் புசிக்க வேண்டும்?
அவள் மீது குற்றமில்லை. கடலின் கீழேநகரும் பாறைகள் அவளை நகர்த்திவிடுகின்றன.
அவளுக்கா கருணையில்லை. கடல் தந்த அனுமதியால்தான் முழ்காத நிலப்பகுதி முச்சுவிட முடிகிறது.
கடல்நீர் இடம்மாறி நிலப்பரப்பில் நின்றால் எல்லா இடங்களிலும் முன்று கிலோமீட்டர் உயரம். தண்ணீர் நிற்கும்.
புள்ளிவிரம் சொல்லியே பொழுது போக்கிவிட்டீர்கள்.
சரி, நல்லவிவரம் சொல்லட்டுமா? ஒரு முத்தத்தில் எத்தனை வோல்ட் மின்சாரம்தெரியுமா?
போதும். போதும். புள்ளிவிவரப் புலியே. ஆளைவிடுங்கள்.
விடமாட்டேன். வா.
தண்ணீரில் நனை அல்லது தண்ணீரை நனை. அலையோடு விளையாடு.
தெறிக்கும் திரவநட்சத்திரங்கள் சொல்லாத இடங்களில் விழுகையில் இல்லாத அனுபவம் எழுமே.... அந்த சுகம் துய்.
எத்தனை மனிதர் கடல்பார்த்தனர்? எத்தனை மனிதர் இதில் கால்வைத்தனர்?
வா. இந்தச் சிற்றலையில் கால் வைத்து யாரும் செத்துப் போனதில்லை.
தண்ணீர் பயம் தவிர். சொட்டச் சொட்ட நனை. கிட்டத்தட்டக் குளி. நீரின் பெருமை நிறையப்பேர் அறியவில்லை. காதலி பெருமை பிரிவில். மனைவி பெருமை மறைவில். தண்ணீரின் பெருமை பஞ்சத்தில். அல்லது வெள்ளத்தில்.
நீ உணவில்லாமல் ஒருமாதம் வாழலாம். நீரில்லாமல் ஒருவாரம் வாழமுடியாது. தண்ணீர்தான் உயிர். இந்தக் கடல் அந்த உயிரின் தாய். தாயோடு தள்ளி நிற்பதா? வா.
எட்டி நின்றவளைக் கட்டிப் பிடித்தான். திமிறினாள். வாழைத்தண்டாய் ஓடிந்தாள். வாளை மீனாய் வழுக்கினாள்.
அவன் முன்னுக்கிழுத்தான். அவள் பின்னுக்கிழுத்தாள்.
வேண்டாம். இந்த விளையாட்டுமட்டும் வேண்டாம்.
என்னோடு வாழ்ந்தால் நீ நெருப்புப் பள்ளங்கள் தாண்ட வேண்டியிருக்கும். நீர்கண்டு பயந்தால் எப்படி?
நெருப்புப் பயம் இல்லை. தண்ணீர்தான் பயம். அவன் தூக்கமுயன்றான். அவள் துவண்டு விழுந்தாள்.
கைதட்டிச் சிரித்தன அலைகள். நாடகம் பார்த்தன நண்டுகள்.
சிதறிவிழுந்தவளைச் சேர்த்தெடுத்தான். அவளைச் சுமந்து அலையில் நடந்தான்.
அவளோ அந்தரத்தில் நீச்சலடித்தாள். இடுப்பளவுத் தண்ணீரில் இறக்கிவிட்டான். அஞ்சினாள். தண்ணீரின் ததும்பலில் மிரண்டாள்.
அவனை உடும்பாய்ப் பற்றினாள். அவன் உதறி ஒதுங்கினான்.
நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த அலைகள்கண்டு அலறினாள். பிரமைபிடித்துப் பேச்சிழந்தாள்.
தூரத்திலிருந்து ஒரு பேரலை அவள் பெயர் சொல்லிக் கொண்டே படைதிரட்டி வருவதாய்ப் பட்டது அவளுக்கு. அவ்வளவுதான். அவள் ஞாபகச்சங்கிலி அறுந்துவிட்டது.
அந்த முர்க்க அலையின் மோதுதலில் தன்னிலை குலைந்து தடுமாறி எழுந்து ஒருகணம் மிதந்து மறுகணம் அமிழ்ந்து மீண்டும் எழுந்து மீண்டும் விழுந்தாள். அலைகளில் தொலைந்தாள். --------------------------------------------------------------------- 2
மருத்துவமனை.
குடல் குடையும் மருந்துவாசம். துடைத்துவைத்த சோகம்.
வெள்ளைவெள்ளையாய் அவசரங்கள். ஆங்கிலத்தில் அகவும் அழகுமயில்கள்.
அறை எண் 303.
மேகத்தில் நெய்தெடுத்த மெல்லிய போர்வையின்கீழே சோர்ந்துகிடந்தது சுடிதார்ரோஜா. அவள் கண்கள் செயற்கை உறக்கச் சிறையிலிருந்தன.
பாரிஜாதப் பூவில் பட்டாம்பூச்சி உட்காருவதுபோல் படுக்கையில் பைய அமர்ந்து அன்புமகள் நெற்றிதொட்டார் அகத்தியர்.
மாலை நேரத்து வெயிலாய் அது சூடுகுறைந்து சுட்டது.
உடம்பில் இப்போது உப்புநீர் இல்லை. சுவாசப்பை சுத்தம், நுரையீரல் தரைவரை பிராணவாயு பிரயாணம். ஓய்வுதான் தேவை. உறங்கவிடுங்கள்.
செவிலியின் வெள்ளை அறிக்கை அவரை வெளியேற்றியது.
அறைக்கு வெளியே தூரத்தில் தெரிந்த துண்டுவானத்தையே பார்த்துச் சலித்த கலைவண்ணன் தன் பக்கத்திலிருந்த பூந்தொட்டியில் தன் இதயம்போல் துடிதுடிக்கும் இலைகளுக்குத் தாவினான்.
சிகரெட் புகை சிந்தனை கலைத்தது. புகைக்குப் பின்னே அகத்தியர் தோன்றினார்.
நல்ல உயரம். நாகரிகத் தோற்றம். நாற்பதுகளில் நட்சத்திரமாய்த் தொடங்கிய வழுக்கை - ஐம்பதுகளில் முழுமதியாய் முற்றுகையிட்டிருந்தது. தடித்த கண்ணாடி. தங்கஃபிரேமுக்காக மன்னிக்கலாம்.
பெருந்தொழில் அதிபர். நாடாளுமனறத்தில் - வரிபாக்கிப் பட்டியலில் வந்து வந்து போகிறவர்.
கலைவண்ணனுக்கு அவரிடம் பிடித்தது அவர் பெண். பிடிக்காதது அவர் பிடிக்கும் சிகரெட்.
தமிழை இன்னும் கொஞ்சம் மென்மையாய்க் கையாண்டிருக்கலாம் என்றார் அகத்தியர் புகைசூழ.
இப்படி நீரச்சம்கொண்டவள் என்று நினைக்கவில்லை நான்.
கனவுகள் நிஜங்களாகவும், நிஜங்கள் கனவுகளாகவும் தோன்றும், அந்தப் பள்ளிவயதில் கொடைக்கானல் ஏரியில் பள்ளித் தோழிகளோடு இவள் படகில் போனாள். அது கவிழ்ந்தது. மீட்கப்பட்டவள் இவள் மட்டும்தான். சில நாட்களில் ஏரியெங்கும் சீருடைப்பிணங்கள் மிதந்தன. அன்று கொண்ட நீரச்சம் இன்றும் தீரவில்லை.
நீரச்சம் நிரந்தர அச்சம் அல்ல. நிச்சயம் களையலாம். இல்லையென்றால் அந்தப் பயம் உடலையும் மனதையும் உள்ளிருந்தே தின்றுவிடும். இந்தத் தண்ணீர்பயத்தைத் தவிர்த்தாக வேண்டும்.
கவனம். தூசு எடுக்கும் அவசரத்தில் கருமணியே தூர்ந்துவிடக்கூடாது. எனக்கு அவள் ஒரே பெண்.
இதுதான் அடிக்கடி கேட்கும் அப்பாமொழி. ஒரே பெண் என்றால் நூறுசதம் அன்பா? இரண்டு பெண்கள் என்றால் ஆளுக்கு ஐம்பதுசதம் அன்பா? நான்கு பெண்கள் என்றால் இதயத்தை நான்காக்கி இருபத்தைந்து சதமா?
ஒரே பெண் என்றால் உயிர்ப்பாசம் வருமா? இன்னொரு பெண் இருந்தால் இவள் இறந்துபோகச் சம்மதமா?
உங்கள் ஆண்மைகலந்த அறிவுதான் என் மகளைத் தலைசாயவைத்தது. என்னைத் தலையாட்ட வைத்தது. ஆனால் தர்க்கம் வேறு. தர்மம் வேறு. சில குணங்களை எதிர்த்திடக்கூடாது. ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயல்புகளை ஏற்றுக்கொள்ளலாம். திரிபுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு நீல விழிகள் பிடிக்கும். ஆனால், தமிழ்ரோஜா விழிகள் கருமை. இருள் உறைந்த கருமை. நிறம் என்பது நிறமிகளின் வேலை. அது இயல்பு. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீரச்சம் என்பது திரிபு. அது விழியின் கருமைபோல் இயல்பானதல்ல. துணியில் அழுக்கைப்போல் திரிபானது. மனச்சலவை ஒன்றே மருந்து.
சலவை செய்யும் ஆர்வத்தில் சல்லிசல்லியாகிவிடக் கூடாது. அவள் மென்மையானவள்.
அப்பாக்கள் செய்யும் இரண்டாம் தவறு இது. மென்மையை நீங்கள் கற்பிக்கிறீர்கள். பெண்களின் செருப்பைக்கூட மெல்லியதோலில் வடிவமைக்கிறீர்கள். பதினாறு வயதுக்கு மேலும் பலூன்வாங்கி வருகிறீர்கள். சில்லென்று முளைக்கும் சிறகுகளைக்கூட வேண்டாத ரோமங்களென்று வெட்டி விடுகிறீர்கள். அதனால்தான் காற்று கடுமையாக அடித்தாலே பல பெண்களுக்கு ரத்தம் கசிந்துவிடுகிறது.
ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு. என் உயிரின் கடைசிச்சொட்டுவரை அவள்தான் நிறைந்திருக்கிறாள். என் நீண்ட பயணத்திற்குத் தகுதியாக அவளைத் தயாரிக்கவேண்டும்.
அவள் உங்களுக்குத் தகுதி இல்லாதவளா?
அப்படியில்லை. அன்பில் - குணத்தில் - காதலில் அவள் என்னிலும் மிக்கவள். ஆனால், என் வாழ்க்கைக்குத் தயாராய் அவள் இன்னும் வார்க்கப்படவில்லை. என்னுடையது புயல்யாத்திரை. அவள் பூஜையறைக் குத்துவிளக்கு. அணைந்து போகாமலிருப்பது எப்படி என்பதைச் சுடருக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
அகத்தியர் பேசவில்லை. தன் மெளனத்தைப் புகையாய் மொழி பெயர்த்தார். பிறகு வேர்களில் வீழாமல் இலைகளைமட்டும் நனைக்கும் சாரலாய் - கலைவண்ணன் காதுதொடாமல் தனக்குத் தானே பேசிக்கொண்டார்.
நான் தவறான இடத்தில் தலையாட்டி விட்டேனா?
காற்றில் கசிந்த வார்த்தை அவன் காதுகளில் விழுந்துவிட்டது. சுள்ளென்று ஏதோ சுட்டது. பொங்கிவழியாமல் புலனடக்கம்கொண்டான். மோனோலிசாவின் புன்னகைதிருடி உதடுகளில் ஒட்டிக்கொண்டான். மெல்ல மெல்லச் சொல்லவிழ்த்தான்.
நீங்கள் தலையாட்டியது தப்பானவனுக்கல்ல. சரியானவனுக்குத்தான். எனக்குக் கிராமத்துக் குட்டிச்சுவர் வாழ்க்கையும் தெரியும். நகரத்து நட்டசுவர் வாழ்க்கையும் தெரியும்.
எனக்குச் சோளக்கூழில் மிதக்கும் மிளகாயும் தெரியும். உங்கள் சாராயக் கிண்ணங்களில் முழ்கிமிதக்கும் பனிக்கட்டிகளும் தெரியும்.
எனக்கு மழையில் நனைந்த வைக்கோல் வாசமும் தெரியும். சொட்டுக்கு ருபாய் நூறு தந்தால் மட்டுமே மணக்கும் அரேபிய அத்தரும் தெரியும்.
செருப்பில்லாத எனது பாதத்தில் காட்டுப்பாதையில் குத்திய கருவேலமுள்ளை நகரத்துத் தார்ச்சாலையில் வந்து தேய்த்தவன் நான்.
நீங்கள் விதையில்லாத திராட்சைகளை விழுங்கி வளர்ந்தவர்கள். நான் கற்றாழைப்பழத்தின் அடியிலிருக்கும் நட்சத்திரமுள் பார்த்தவன்.
நான் சென்னை வந்தது என் அறிவுக்கு அங்கீகாரம் தேடி அல்ல. உடல் உழைப்புக்கும் முளை உழைப்புக்குமான வித்தியாசத்தின் வேர்காண வந்தேன்.
சென்னை நூலகங்களில் வாடகைதராமல் வசித்தேன். இரைப்பையைப் பட்டினியிட்டு முளைக்குப் புசித்தேன். சமுகத் தேடல் கொண்ட பத்திரிகையில் சேர்ந்தேன்.
ஒரு கல்லூரி விழாவில் உங்கள் மகளைச் சந்தித்தேன். முதன் முதலில் என் உயிர்மலரக் கண்டேன். மென்மைச் சிறையைவிட்டு அவளை மெல்ல மெல்ல மீட்க நினைக்கிறேன். ஏனென்றால் நான் பயணிப்பது மயிலிறகு பரப்பிய மல்லிகைப் பாதையல்ல. நான் சகாராவின் சகோதரன். பகல் சுடும் - இரவு குளிரும் - இதுதான் என் பயணம்.
நான் பத்திரிகைக்காரன். பேனாவின் முடிதிறந்தபோதே என் மார்பையும் திறந்துவைத்துக் கொண்டவன்...
அவன் பேசப்பேச, துடிக்கும் ரத்தம் துடிக்கிறதுஎன்று அகத்துக்குள் சிரித்த அகத்தியர் அவன் முச்சுவாங்கவிட்ட இடைவெளியைத் தனதாக்கிக் கொண்டார்.
தமிழை மணம்செய்துகொண்டால் உங்கள் பாலைவனம் கடக்கச் சொந்த விமானம் ஒன்று தந்துவிட மாட்டேனா?
சொந்தத்தில் விமானம் வாங்கலாம். அனுபவம் வாங்க முடியுமா?
உங்கள் பணம் எனக்குக் குடைவாங்கித் தரலாம். மழைவாங்கித் தர முடியுமா?
உங்கள் பணம் மின்னல். அதிலிருந்து வெளிச்சம் வரலாம். ஆனால், வெளிச்சமெல்லாம் தீபமாகுமா?
அகத்தியர் அவன் தோள்தொட்டார். அந்தத் தொடுதலில் அனுபவம் கனத்தது.
பணம் இல்லாதவன்தான் பணத்தை மதிப்பதில்லை. சொல்லிலும் உதட்டிலும் சிந்தி வழிந்தது சில்மிஷம்.
நான் பணம் உள்ளவனைத்தான் மதிப்பதில்லை. ஒவ்வொரு பணக்காரனின் ஆழத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு குற்றம் கால்கொண்டிருக்கிறது.
பணம் ஒரு விசித்திரமான மாயமான். அது தன்னைத் துரத்துபவனுக்குக் குட்டி போட்டுவிட்டு ஓடிக்கொண்டேயிருக்கிறது. குட்டிகளில் திருப்தி அடையாத மனிதன் தாய்மானைப் பிடிக்கும் வேட்டையில் தவிக்கத் தவிக்க ஓடிச் செத்துப் போகிறான்.
இந்தப் பிரபஞ்சமே எனது பெட்டி என்கிறேன் நான். இல்லை உங்கள்வீட்டுப் பெட்டிக்குள்தான் பிரபஞ்சம் என்கிறீர்கள் நீங்கள். உங்களைப் பிரபஞ்சமாய் விரியவிடுங்கள். பிரபஞ்சத்தை உங்களாய்ச் சுருக்கி விடாதீர்கள்.
எப்போதும் வெப்பம். எதிலும் ஆவேசம். எதையும் அறிவாகவே பார்க்கும் அவசரம். இது தகாது கலைவண்ணன். நீங்கள் புன்னகையைக் கழற்றிவிட்டுப் போர்வாள் தரித்திருக்கிறீர்கள்.
போர்தான். அடுத்த நூற்றாண்டு யுத்தம்தான். மிருகவாழ்க்கை மனிதனுக்குத் திரும்பும். வலிமை உள்ளது மட்டுமே தப்பிக்கும். அன்பு - அறம் - எல்லாம் அன்றில் - அன்னம் பட்டியலில் காணாமல்போகும். அடுத்த நூற்றாண்டில் எவனும் சைவனாய் இருக்கமாட்டான். நரமாமிசம் தின்பான். டீக்கடைகளின் மனிதரத்தம் விற்கும்.
இந்த நூற்றாண்டு மனமும் உடம்பும் அடுத்த நூற்றாண்டுக்காகாது.
நகரவாழ்க்கை என்னும் இந்தத் தார்ப்பாலைவனம் கடக்க தோல் - தோள் இரண்டும் தடித்திருக்கவேண்டும்.
இனி வருவது போராளிகளின் காலம். மனிதர்களோடு மனிதர்களும் - எந்திரங்களோடு எந்திரங்களும், தொடர்ந்து யுத்தம் புரியும் ஒலிகளின் நூற்றாண்டு.
அந்த யுத்தத்திற்குத் தங்களைத் தயாரித்துக் கொண்டவர்கள் மட்டுமே ஜீவிதரயிலின் அடுத்த நூற்றாண்டுப் பெட்டியில் ஏறிக் கொள்ளலாம். முடியாதவர்கள் இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே இறங்கிக் கொள்ளலாம்.
வாழ்க்கையின்மீது நீங்கள்மட்டுமே நிறைவேற்றிக்கொள்ளும் அவநம்பிக்கைத் தீர்மானம் இது.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து உயர்வது உங்கள் ஒருகரமாய்த்தானிருக்கும். இன்னொரு கரம் உயர்ந்தால் அது உங்கள் இடக்கரமாய் இருக்கலாம்.
அவ்வளவுக்கு வாழ்க்கை இன்னும் அழுகிவிடவில்லை. அழுகப் போவதுமில்லை.
வேட்டையாடுகிற வேட்டையாடப் படுகிற இரண்டு இனங்களும் உயிர்கள் தோனறிய காலந்தொட்டு உலவிக் கொண்டுதானிருக்கின்றன. ஆனால், சிங்கம் அழிந்துவிடவுமில்லை. முயல் முடிந்துவிடவுமில்லை.
வலைகளின் எண்ணிக்கை அதிகமானதற்காய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை.
ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வலைகளை அறுக்கத் தெரிந்தவைமட்டுமே வாழ்கின்றன என்கிறேன்.
நம் வாழ்க்கை முறை உடம்பை வாழையாய் வளர்த்துவிட்டது. மனதைக் கோழையாய் வளர்த்துவிட்டது. உடம்புக்கும் மனதுக்கும் ஒருமைப்பாடு இல்லை.
செருப்புக் கடித்துச் செத்துப்போகும் தேகங்களை வளர்த்துவிட்டோ ம். தந்திவந்தால் இறந்துபோகும் இதயங்களை வளர்த்துவிட்டோ ம்.
தேகம் வன்மை செய்து இதயம் செம்மை செய்யும் பயிற்சிகள் இல்லை.
இனிவரும் நூற்றாண்டுகளில் மழை நிறைய இருக்குமோ இல்லையோ - இடி நிறைய இருக்கும்.
கற்பகவிதைகள் வாங்கிக் காளான் சாகுபடி செய்யும் இந்தக் கல்விமுறையும் - ஈசல் பண்ணைகளாகிவிட்ட பல்கலைக் கழகங்களும் மாணவர்களுக்குத் தந்தனுப்புவது அடுத்த நூற்றாண்டு ஆயுதம் அல்ல கடந்த நூற்றாண்டுக் கவண்வில்.
உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல அவள் ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி
என்னிடம் விட்டுவிடுங்கள் எனக்கு அவளை இணை செய்து கொள்கிறேன்.
அகத்தியர் அவன் கண்களைக் கவனித்தார் அவற்றில் நம்பிக்கை நட்சத்திரங்கள் மிதந்து மிதந்து மின்னின.
அவனது சொல்லின் உஷணம் அவரைச் சுட்டாலும், நெல்லிக்காயின் ஆழத்திலிருக்கும் இனிப்பை நேசிப்பதுபோல் - அவன் சொல்லின் உள்ளிருக்கும் அசையாத நம்பிக்கையை ஆராதித்தார்.
என்ன அது சத்தம்?
என்னை விட்டுவிடுங்கள். தண்ணீரில் கொல்லாதீர்கள். நீங்கள் என்னை நேசிக்க வில்லை. நீங்கள் என்னை நேசிக்கவில்லை.
தமிழ் ரோஜாவின் கதறல் அவர்களின் காதுமடல் திருகியது. அவர்கள் கால்களால் பறந்தார்கள். --------------------------------------------------------------------- 3
அன்புள்ள தமிழ்ரோஜா.
இதுவரை உனக்கு நான் எந்தக் கடிதமும் எழுதியதில்லை.
கடிதம் என்பது தூரங்களின் காகித வடிவம்.
உனக்கும் எனக்கும் தூரமில்லை. உன் காதுகள் என் உதடுதொடும் தூரத்திலேயே இருந்ததால் காகிதத்தில் பேசும் அந்நியம் நேர்ந்ததில்லை.
இன்னொன்று. காதல் கடிதங்கள் உணர்ச்சியின் மத்தாப்புகளாய் இருப்பதுண்டே தவிர உண்மையின் தீபங்களாய் இருப்பதில்லை.
ஒரு காதல் கடிதம் படிக்கப்படும்போதே எண்பது சதவிகிதம் கழிக்கப்பட வேண்டும். மிச்சமிருக்கும் இருபது சதவிகிதத்தில் உணர்ச்சியின் வண்டலின்கீழே உண்மையும் கொஞ்சம் உறைந்திருக்கும்.
உலகத்தின் காதல் கடிதங்களெல்லாம் அழகானவை. ஆனால் ஆரவாரமானவை.
நிலாவில் ரத்தம் கசிவதுபோல் மீசையோடு பிறந்த குழந்தைபோல்- கவனம் ஈர்ப்பவை. ஆனால் எதார்த்தம் மீறியவை.
எனவே இடைவெளி இருந்திருந்தாலும் உனக்கு நான் எழுதியிருக்கமாட்டேன்.
பள்ளம் நிரப்ப நுரைகொட்டியிருக்கமாட்டேன்.
ஆனால், இப்போது எழுதுகிறேன். ஏனென்றால், இது காதல் கடிதமல்ல. என் தன்னிலைவிளக்கம்.
உன்னைக் காதலிக்கத் தொடங்கியபிறகு ஒருநாளில் எத்தனை மணிநேரம் நான் முட்டாளாயிருக்கிறேன் என்பதன் மொத்தத் தொகுப்பு.
நான் உன்னை நேசிக்கவில்லையோ என்று உன் உணர்வுகள் உறங்கும்போது நீ உச்சரித்தாய்.
என் காதலின் எடை என்ன என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச் சொல்லிவிட முடியாது.
கத்தியால் கைகீறி ரத்தம் காட்டவும் மாட்டேன்.
நேசம்காட்ட அனுமன்போல் நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.
பின் - அடையாளம் எதுவென்பாய்.
என் வானத்தில் சூரியன் அஸதமிக்கவில்லையே. அதுதான் அடையாளம்.
எந்தப் புதுப்பேனா வாங்கினாலும் என்பெயர் எழுதிப்பார்ப்பதை மறந்துஅனிச்சைச் செயலாய் உன்பெயர் எழுதிப்பார்க்கிறேனே. அதுதான் அடையாளம்.
கவிதைகள் அடையாளம். என் கண்ணீர் அடையாளம்.
ஒருநாள் என் அறையில் நீ தவறவிட்ட உன் பூப்போட்ட கைக்குட்டை என் பூஜைப்பொருள்.
என் வீட்டுக்கண்ணாடியில் உன்படத்தை ஓரத்தில் ஒட்டி, உன் படத்தின் பக்கத்தில் என் பிம்பம் படியவைத்து ஜோடிப்பொருத்தம்கண்டு சுகம்காண்பதில் என் சிநேகமான காலைப்பொழுது செலவாகிறதென்று தெரியுமா உனக்கு?
நினைவுக் கொசுக்களால் நித்திரைதொலைந்த ஒரு நீலராத்திரியில் கால்கடுக்க நடந்து, கடற்கரை அடைந்து, நீயும் நானும் சந்தித்த இடத்தில் அனாதைக் குழந்தைகளாய் அழுதுகொண்டிருந்த உன்மல்லிகைஉதிர்வுகளை மடியோடு அள்ளிவந்து மார்போடு தழுவிக்கொண்டு விடியவிடிய விழித்துக்கிடந்தேனே. அந்த நேச உஷணத்தின் நிறமறிவாயா நீ?
என் பத்திரிகை அலுவலகத்தின் எக்ஸரே கண்ணாளர்கள் உன்னையும் என்னையும் ஊடறுத்துப் பார்த்து, தமிழ்நாட்டிலேயே தமிழ்ப்பற்று அதிகமுள்ளவன் கலைவண்ணன் மட்டும்தான் என்று கிண்டல்மொழி சுண்டுவதைக் கண்டதுண்டா நீ?
பூமியின் அடிவயிற்றில் கனன்றுகொண்டிருக்கும் அக்கினிமாதிரி என் அடிமனத்தில் கனன்றுகொண்டிருக்கும் ஆசைஅக்கினி உன்னைச் சுடவில்லையா?
என் நேசம் புரியும் முன்பு நீ என் நெஞ்சுபுரிய வேண்டும்.
உன்னை உன் வாழ்க்கைக்குத் தயாரிக்கிறேன்.
தண்ணீர்பயம் கொண்டு தள்ளிநின்றால் நாளை எப்படி வெந்நீராற்றில் விசைப்படகு விடுவாய்?
நீ சுத்தத் தங்கம்தான். நல்ல தங்கத்தில் நகைசெய்ய முடியாது. சிறிதே கலக்கவேண்டும் செம்பு.
தைரியம் செம்பு. அனுபவம் செம்பு. அதைத்தான் உன்னில் கலக்க நினைக்கிறேன்.
உன் கங்காரு மடியைவிட்டு வெளியே வா. நான் சிங்கத்தின் முதுகு... ஏறிக்கொள். முதலில் - தார்ச்சூடு காணட்டும் உன் தாமரைப்பாதம்.
உன் வெல்வெட் திரைவிட்டு வெளியே வா. குளிரில் கோணிபோர்த்துக் கூவம்கரைக் குடிசை ஒன்றில் இரவுகழி.
உன் சைவக்கோடு கட. கூறுகட்டி மீன்விற்கும் குப்பத்துக் கிழவியைச் சற்றே நகரச் சொல்லிவிட்டு ஒரு வெயில்பகலில் மீன் விற்றுப்பார்.
அரசாங்க லாரியில் தண்ணீர்பிடி. இரண்டுகுடம் வேர்வைக்குப் பிறகு ஒருகுடம் தண்ணீர் நிறைவதை உணர்.
வெள்ளிக்கரண்டியோடு பிறந்தவளுக்கு ஏன் வேலையற்றவேலைஎன்பாய்.
ஓர் ஆணியைச் சுயமாய் அடிக்கத் தெரியாதவளுக்கு வெள்ளிக்கரண்டி சொந்தமாய் இருக்கக்கூடாது. அனுபவங்கள் தடுப்பூசிகள். போட்டுக்கொள்.
அம்மைகுத்த வந்தால் கைமறைக்கும் குழந்தைபோல் அடம்பிடிக்காதே.
அனுபவங்களுக்கு உடம்பு, மனம் இரண்டையும் உட்படுத்து. தன்னைத் திருப்பிப் போடுவதன் முலம்தான் பூமி சூரியனிடம் அனுபவம் பெறுகிறது.
வசந்தம்-கோடை-மழை-குளிர்- வெயில்-புயல் என்ற அனுபவங்கள் இல்லையேல் எப்போதோ பூமி இறந்துபோயிருக்கும்.
கல்யாணச் சந்தையில் உன்னைத் துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல கல்வி. அனுபவங்களின்பால் ஆற்றுப்படுத்துவது கல்வி.
நமக்குள் ஆண்-பெண் என்ற பேதம் நம் அவசரத்தேவைக்காக மட்டும் இருக்கட்டும்.
மற்றபடி பிறப்புமுதல் இறப்புவரை உணர்ச்சியும் வலியும் ஒன்றுதான்.
ஆண் உடம்பில் ரத்தம் - 5 1/2 லிட்டர். பெண் உடம்பில் - 5 லிட்டர் என்ற பேதமிருந்தாலும் செல்களின் செயல்கள் ஒன்றுதான்.
எனவே ஆணுக்குத்தான் அதிக உரிமை. பெண்ணுக்கில்லை என்ற பிற்போக்குத்தனத்திலிருந்து பிதுங்கி வெளியே வா.
ஏ பணக்கார நத்தையே. முதலில் நீ உன் தங்கக்கூடு தகர்.
இந்தப் பிரபஞ்சமே பொதுவென்று கொள்ளாமல் மனிதர்கள் மனைப்பட்டா வாங்கும் போராட்டத்திலேயே மரித்துப்போகிறார்கள்.
பயன்படுத்தாத வானம் - பயன்படுத்தாத சூரியன் - பயன்படுத்தாத நட்சத்திரம் - பயன்படுத்தாத பூமி - பயன்படுத்தாத முளை மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த முளையைக்கூட அடுத்தவன் மனைவிமாதிரி பாவிப்பதற்குப் பயப்படுகிறான்.
இரண்டு சதவிகிதத்துக்குமேல் முளை இங்கே வேலை வாங்கப்படவில்லை.
தொண்ணூற்றெட்டு சதவிகித முளை சாகும்வரை செல்வியாகவே இருக்கிறது.
நான் என் புலன்கள் திறந்து பிரபஞ்ச எல்லைவரை பறக்கப் பிரியப்படுகிறேன். நீ மழையில் நனைந்த கிளிக்குஞ்சாய் மறுகிநின்றால் எப்படி?
சிறகு விரித்து வா. சிலிர்த்து வா.
உனக்கு நானோ எனக்கு நீயோ சுமையாகிப் போகாமல் துணையாகிப் போவோம் வா.
உனக்கு நான் துன்பம் செய்திருந்தால் என்னை நீ மன்னித்துவிடு
நான் உனக்கு நறுக்க நினைத்தென்னவோ நகம்தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது.
எப்போதும் படுத்தே கிடக்காதே. தலையணையொன்றும் மார்க்கண்டேயனின் சிவலிங்கம் அல்ல.
நம்பிக்கையின் சக்தியை உடலெங்கும் பரப்பு உன்னை உணர், என்னை நினை.
என்னை மன்னித்துவிட்டாய் என்பதன் அடையாளமாய் என் குயிலே தொலைபேசியில் கூவு.
ஆலயமணிகளையும் மாதாகோயில் மணிகளையும் விட தொலைபேசி மணியில்தான் நம் காதல் பூஜிக்கப்படுகிறது.
எப்போது கேட்கும் உன் தொலைபேசிச் சங்கீதம்?
காதலோடு........ கலைவண்ணன்
ஒருதாய் தன் குழந்தையை உறங்கவைப்பது போல் கடிதத்தின் இமை முடினான். காகிதப் பறவை சிறகடித்தது.
பத்திரிகைப் பணியை அவன் நேசிக்கிறான்.
அவனுக்கு உலகின் ஜன்னல்களை ஓசையோடு திறந்துவிட்டது பத்திரிகை.
சூரியன் - பூமி - நிலா இவற்றை அவன் வாயில் மாத்திரைகளாய்ப் போட்டு தண்ணீர் ஊற்றியது பத்திரிகை.
அந்தப் பத்திரிகையில் அவன் அதிகம் நேசிப்பது அவனுக்குத் தந்திருக்கும் சுதந்திரத்தை.
அமைப்புச் சார்புகொண்டவன் எவனும் இங்கே உண்மை சொல்லமுடிவதில்லை.
அரசு சார்ந்து - அரசியல் சார்ந்து - மதம் சார்ந்து - தத்துவம் சார்ந்து உண்மைகள் முழுப்பிரசவத்தோடு வெளிவருவதில்லை.
மக்கள் சார்பு கொண்டவன் மட்டுமே இங்கே உண்மை பேச முடியும்.
தன்னைப் போலவே தன் பத்திரிகையும் மக்கள் சார்பு கொண்டது என்ற நம்பிக்கையில்தான் அவன் அந்த நாற்காலிக்குத் தாலிக் கட்டியிருந்தான்.
ஒருவகையில் பத்திரிகையும் காதலிதான். இரண்டும் குறித்த நேரத்தில் வராவிட்டால் மாரடைப்பு வந்துவிடும்.
அந்த வாரத்தில் தனக்கான கட்டுரையை ஆதாரப்படுத்தி, அழகுபடுத்தி உண்மை களைக்காதிருக்க அங்காங்கே நகைச்சுவை தெளித்து நயம் சேர்த்தான்.
அவன் இருதயம் மட்டும் தூரத்து மேஜையில் துடித்துக் கொண்டிருந்தது.
அங்குதான் தொலைபேசி இருந்தது.
அந்த பிளாஸடிக் கூட்டுக்குள் அவன் குயில் எப்போது கூவும்?
என் காதல் பூஜையின் கோயில்மணி எங்கே?
தொலைபேசியில் ஒலிக்கும் என் தோடி ராகம் எங்கே?
தயவுசெய்து முணுமுணுக்கவும் என்று தொலைபேசி அருகே எழுதிவைத்தால் என்ன? கடைசியில் அது இசைத்தது கலைவண்ணன் கலைவண்ணன் என்றே அழைத்தது.
ஒன்றாம் மணி அடங்கி இரண்டாம் மணி முடிவதற்குள் ஓடி எடுத்தான். பெருமுச்சும் பரபரப்பும் இழைய நான் கலைவண்ணன் என்றான்.
எதிர்முனையில் கண்ணீர் பேசியது தன் தாய்மொழியில் பேசியது.
கண்ணீரின் தாய்மொழி விசும்பல்தானே? --------------------------------------------------------------------- 4
இராயபுரம் கடலோரம்.
விஞ்ஞான அன்னங்களாய் விசைப்படகுகள்.
தண்ணீர்த் தவளைகளாய்க் கட்டுமரங்கள்.
தாலாட்டும் தண்ணீர்த் தொட்டிலில் வாலாட்டும் ஒரு கடற்கொக்கு. தண்ணீரில் தங்கம்கரைக்கும் சொக்கச்சூரியன்.
கடலுக்குள் தலைதூக்கும் கரும்பாம்பாய் நீண்டுகிடந்த அந்தத் தார்ப்பாலத்தின் முடிவில் கலைவண்ணன் மார்பில் தழைந்து மடியில் மாலையாய்க் கிடந்தாள் தமிழ்ரோஜா.
அழுது அழுது கடைசியில் தூங்கிப்போகும் ஒரு குழந்தைமாதிரி விசும்பி விசும்பிக் கிடந்தவள் கண்ணீர்தீர்ந்து மெளனமானாள்.
சத்தியம்செய். இனி என் நேசத்தைச் சந்தேகிக்க மாட்டாயே.
அவளைக் காதுக்குள் காதலித்த கலைவண்ணன் அவள் அங்கங்களில் எதுவும் அவனுக்கு வெளியே வழியாதவண்ணம் வாரி எடுத்து வசதி செய்து கொண்டான்.
இரண்டு ஒட்டுமாஞ்செடிகளைக் கட்டுவதுபோல் அவளைத் தன் மார்போடு பதித்து முத்தப்பசையிட்டு ஒட்டிக் கொண்டான்.
அவள் உடம்பெங்கும் ஒரு பத்திரமான பாதுகாப்புணர்ச்சி பரவியது.
அதுதான்.
ஒவ்வொரு பெண்ணின் உயிர்த்தேவை அதுதான்.
அந்த இதம்... அந்தக் கதகதப்பான உத்தரவாதம்... அந்தத் தடம்பதியாத தடவல்... பாசம் குழைத்த ஸபரிசம்...
ஒவ்வொரு பெண்ணின் உள்ளாசை அதுதான்.
பெரிதும் பெண்கள் ஆராதிப்பது அதிரப்புணரும் அந்நிகழ்வை அல்ல.
அவர்கள் அதிகம் விரும்புவது இந்த நேசம் நிஜம் என்னும் நினைப்பை.
அவர்கள் பெரிதும் பிரியப்படுவது பின்கழுத்தில் விரல்பதித்துக் கூந்தல் ஆழத்தில் செய்யும் கோதுகையை.
பூக்களுக்குச் சுளுக்கெடுப்பதுபோல் விரல்களுக்குச் சொடுக்கெடுக்கும் அந்த வேடிக்கையை.
தனக்குரியவனின் முடிகொண்ட மார்பில் முகம் புதைத்து விழித்துக்கொண்டே உறங்கும் ஒரு மயக்கநிலையை.
அந்த மனோநிலையில் மயங்கிக் கிடந்தாள் தமிழ்ரோஜா.
இமைகளை விழியிலிருந்தும் தன்னை அவன் மார்பிலிருந்தும் விலக்கிக்கொள்ள விரும்பாமல் வினவினாள்.
எனக்கு ஏனிந்த வெயில்குளியல்?
காதலரைச் சுடுவதில்லை என்பது காலங்காலமாய் நிலவிவரும் சூரியத் தீர்மானம்.
எப்போதும் என்னை இங்கேதான் அழைக்கிறீர்கள். மெரீனா பிடிக்காதா?
அவன் அவள் கன்னத்துக்கும் உதட்டுக்கும் இரண்டங்குல இடைவெளியில் பதில் பேசினான்.
மெரீனா - திருமணத்தின்மீது நம்பிக்கையில்லாதவர்கள் சந்திக்கும் இடம்.
அவள் தளும்பிச் சிரித்ததில் அவள் கன்னம் அவன் உதட்டில் விழுந்தது.
சரி... சாந்தோம்?
அது காதல்மீதே நம்பிக்கையில்லாதவர்கள் சந்திக்கும் இடம்.
ஓகோ. இது?
நம்பிக்கைமீது நம்பிக்கை உள்ளவர்கள் சந்திக்கும் இடம்.
ஓர் அலை ஓங்கி எழுந்துவந்து கைதட்டிவிட்டு மீண்டும் கடலுக்குள் போனது.
அந்த அலைஓசை அச்சத்தில் அவன் உடம்புக்குள் ஓடிஒளிவதுமாதிரி அவனுக்குள் ஒட்டி ஒடுங்கினாள் அவள்.
ஓ, கடலே. நீ இன்னும் சில அலைகளை அடுத்தடுத்து எனக்காக அனுப்பிவைக்கக் கூடாதா?
புல்லாங்குழலின் காதில் உதடு ஊதுவதைப் போல அவன் அவள் காதில் குறைந்த குரலில் குனிந்து பேசினான்.
உனக்குப் பிடித்த ஒரு செய்தியும் பிடிக்காத ஒரு செய்தியும் சொல்லட்டுமா?
ஒருமுறை கண்திறந்து ம்... சொல்லிவிட்டு மறுபடி முடிக்கொண்டாள்.
உனக்குப் பிடித்த செய்தி... நீ கடைசிப் பரீட்சை எழுதியதும் தேர்வு மண்டபத்திலேயே நம் திருமணம்.
சரி, பிடிக்காத செய்தி?
கடலுக்குள் நம் முதலிரவு.
அய்யோ.
அவள் அவனை நிஜமாய்க் கிள்ளிப் பொய்யாய் அழுதாள்.
தூரத்தில் கரையோரத்து விசைப்படகு ஒன்று கடல்புக எத்தனித்துக் கொண்டிருந்தது.
அதன் எந்திரஓசை, ஓரத்தில் மேய்ந்த மீன்களையெல்லாம் ஆழத்தில் அனுப்பிவைத்தது.
கலைவண்ணன் மீண்டும் கடல்பார்த்தான். மடியில் கிடக்கும் புதையலை மறந்துபோனான்.
அவள் அவனை உதறி எழுந்தாள். ஊடல் கொடி பிடித்தாள்.
உண்மையில் நீங்கள் நேசிப்பது கடலையா? - என்னையா?
உன்னைத்தான். நிச்சயமாய் உன்னைத்தான். கடலைவிட மதிப்புடையவள் என் காதலியே நீதான்.
கடலைவிட மதிப்புடையவளா? அவள் கண்விரிந்தாள்.
ஆமாம். ஒரு டன் கடல்தண்ணீர் 0.000004 கிராம் தங்கம் வைத்திருக்கிறது.
ஆனால், 72 சதவிகிதம் மட்டுமே தண்ணீர் கொண்ட உடலில் நீ 50 கிலோ கிராம் தங்கமல்லவா வைத்திருக்கிறாய்.
நான் உன்னைக் காதலிப்பேனா? கடலைக் காதலிப்பேனா?
அவள் காதுகள் முடிக் கத்தினாள். போதும். போதும். உங்கள் புள்ளிவிவரம் போதும்.
கடலுக்குள் நுழைவதற்குத் தூரத்து விசைப்படகு துடித்துக் கொண்டிருந்தது. நான் கடல்பார்த்தபோதும் உன் கண்பார்த்தபோதும் மட்டும் பிரமித்திருக்கிறேன் தமிழ்.
நீலக்கடல்பற்றி நிறையப் படித்தேன். உன்னைப் படித்துக்கொண்டேயிருக்கிறேன்.
என் ஒவ்வொரு கனவிலும் உலாவரும் கடல் தேவதை நீதான்.
நீ கடல். நான் பூமி.
என் மீது உன் அலைகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறாய்.
நீதான் என்மீது புயல்வீசுகிறாய். நீதான் என்மீது மழைதூவுகிறாய்.
ஒவ்வொரு நாளும் என் ஓரக்கரைகளை அரித்து அரித்து என்னை உன் உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறாய்.
கடல் இல்லையென்றால் வானுக்கு நிறமில்லை. நீ இல்லையென்றால் என் வாழ்க்கைக்கு நிறமில்லை.
நீ கடல். நான் பூமி என்பது வெறும் உவமை அல்ல. உண்மை.
சூரிய வெப்பத்தை உடனே உள்வாங்கி உடனே வெளிவிடுகிறது பூமி. உடனே கொதித்து உடனே குளிர்ந்துவிடும் என்னைப் போல.
சூரிய வெப்பத்தை மெல்லமெல்ல உள்வாங்கி மெல்லமெல்ல வெளிவிடுகிறது கடல் - அணு அணுவாக அன்புவயப்பட்டு உயிர்நிறையக் காதலிக்கும் உன்னைப் போல.
கலைவண்ணனுக்குப் புனைபெயர் கடல்மைந்தன் என்று வைக்கலாம்.
நான் மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனும் கடலின் மைந்தன்தான். ஒவ்வொரு பெண்ணும் கடலின் புத்திரிதான். ஒன்றை மறந்தேன். இன்னொரு வகையிலும் நீதான் கடல். நான்தான் பூமி.
எந்த வகையில்?
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர் இருந்தும் மிச்சமுள்ள பூமி, தாகத்தால் தவிக்கிறதே... அதைப்போல - அமிர்தப் பாத்திரமாய் நீ அருகிருந்தும் தாகப்பட்ட மனசு தவியாய்த் தவிக்கிறதே.
தள்ளியிருந்த தமிழ்ரோஜா தாவும் குழந்தையாய் அருகில் வந்தாள்.
அதுதான் எனக்கும் ஆச்சரியம். தண்ணீர் இவ்வளவிருந்தும் தாகம் ஏன் தீரவில்லை?
புள்ளிவிவரம் சொன்னால் பொறுத்துக்கொள்வாயா? கொள்வேன்.
சொல்வேன். பூமியின் தண்ணீரில் 97 சதம் கடல்கொண்ட நீர். உப்பு நீர். குடிக்க உதவாத நீர்.
மிச்சமுள்ள 3 சதம்தான் நிலம்கொண்ட நீர். அதில் 1 சதம் தண்ணீர் துருவப்பிரதேசங்களில் பனிமலைகளில் உறைந்துகிடக்கிறது.
1 சதம் தண்ணீர் கண்டுகொள்ள முடியாத ஆழத்தில், மொண்டுகொள்ள முடியாத பள்ளத்தில் கிடக்கிறது. மனிதகுலம் பயன்படுத்துவதெல்லாம் மிச்சமுள்ள 1 சதத்தைத்தான்.
அய்யய்யோ. அந்த 1 சதமும் தீர்ந்துவிட்டால்?
தீராது. தண்ணீர் பூமிக்கு வெளியே போய்விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் பருகுவது பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீரைத்தான். தண்ணீரும் காதலைப்போலத்தான். அதன் முலகங்கள் அழிவதில்லை.
தூரத்து விசைப்படகு தண்ணீர் கிழிக்கத் தயாரானது. கிழக்கு நோக்கித் தன் முக்கை மொத்தமாய்த் திருப்பியது.
கலைவண்ணன் கரையில் இருந்துகொண்டே மீண்டும் கடலில் முழ்கினான். விழித்துக்கொண்டே கனவில் பேசினான்.
கடல். அது ஒரு தனி உலகம். பள்ளிகொண்ட விஸவருபம். எண்பத்தையாயிரம் உயிர்வகை கொண்ட உன்னத அரசாங்கம்.
அடுத்த நூற்றாண்டு உணவுத்தேவையின் அமுதசுரபி.
முத்துக்களின் கர்ப்பப்பை. பவளங்களின் தொட்டில்.
மங்கனீஷ பாறைகளின் உலோக உலகம். பெட்ரோல் ஊற்றின பிறப்புறுப்பு. கலங்கள் நகரும் திரவத்திடல். அது கவிஞர்களின் கனா. விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடம். ஞானிகளின் தத்துவம்.
விசைப்படகு அந்தக் காதலர்பாலம் கடந்துதான் கடல்புக வேண்டும்.
இப்போது ததும்பித் ததும்பி அவர்களை நோக்கித் தவழ்ந்து வந்தது அந்த டீசல்பறவை.
தூரத்துச் சித்தரங்களாய் அதன் விளிம்பில் சில மீனவர்கள்.
படகு நெருங்க... நெருங்க...
ஓ.... அவனுக்குத் தெரிந்தவர்கள். அவனை நேசிப்பவர்கள்.
மீனவர் போராட்டத்தில் கைதாகி அவன் எழுத்துக்களால் மீட்கப்பட்டவர்கள். அவர்களும் அவனைக் கண்டுகொண்டார்கள்.
கலைவண்ணன். கலைவண்ணன்.
எந்திரஓசை கிழத்துக் குரலெடுத்துக் கூவினார்கள்.
அவன் மடியில் படுத்துக்கிடந்தவள் வெடித்துப் பூத்தாள்.
விசைப்படகை வெறித்துப் பார்த்தாள். பிறகு கண்களால் கேள்விகேட்டு மெளனம் காத்தாள்.
கண்ணிமைக்காத கலைவண்ணன் - தோழர்கள். என் மீனவத் தோழர்கள் என்றான்.
என்ன பேனாக்காரரே. கடலோடு போய்விடுவோம். வாருங்களேன்.
விசைப்படகிலிருந்து வீசிய அழைப்பு காற்றுவழி மிதந்து கரையேறியது.
பாலம் நோக்கியே படகும் வந்தது.
காதலியே. தமிழ்ரோஜா. கடல்சென்று வருவோமா?
கண்ணடித்துச் சிரித்தான் கலைவண்ணன்.
அய்யோ.
அவள் பெங்குவின் பறவைபோல் பின்வாங்கினாள்.
கொஞ்சதூரம் போகலாம், சுத்தமான காற்று சுகமான தாலாட்டு, தரையில் விழுந்த ஆகாயமாய்க் கடல்பார்க்கலாம்.
ஓராயிரம் பறவைகளின் ஊர்வலம் பார்க்கலாம் உடனே திரும்பலாம்.
கால்கள் பின்னுக்கிழுக்க - அச்சத்தில் முகம் வியர்க்க - வேண்டாம் அந்த விபரீதம் என்று விலகி ஓடினாள்.
படகு பக்கத்தில் வந்துவிட்டது.
கலைவண்ணனைப் பார்த்துக் கத்தினார்கள். கடலுக்குள் போய்வருவோம் மீன்விருந்து வைப்போம் மாலைக்குள் கரைசேர்ப்போம் ஒரே கதியில் உரைநடையில் பாடினார்கள்.
படகு நின்றது பாலம் உரசி.
தயவுசெய்து வா தமிழ் கலை கெஞ்சினான்
வேண்டாம் வேண்டாம் மாட்டேன. மாட்டேன்.
அவள் சுடுமணலில் விழுந்த ஒற்றை மழைத்துளியாய் ஓடி மறையப்பார்த்தாள்.
நீங்களும் வாருங்கள் தங்கையும் வரட்டும் அழைப்புக் குரல்கள் அதிகமாயின.
இப்படி அஞ்சினால் எப்படி? பாதுகாப்பான பயணம் இது. சின்னச்சின்ன அனுபவங்கள் வேண்டாமா? சிறகடி என்னோடு. வா தமிழ். வா.
அவள் சுருங்கினாள் இவன் நெருங்கினான்.
அவள் அஞ்சி விழித்தாள் இவன் கெஞ்சி அழைத்தான்.
அவள் விழித்தாள். இவன் அள்ளினான்.
அங்கே அரங்கேறியது ஓர் அகிம்சை இம்சை அவளை மார்போடு அள்ளி கவனமாய்க் கால்வைத்து விசைப்படகில் குதித்தான். தாலாட்டும் படகில் தடுமாறி விழுந்தான்.
வீழ்வது அவனாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் தமிழ் காயப்படாமல் கட்டிக்கொண்டான்.
அவள் உள்ளாடிய அச்சத்தில் ஊமையானாள். மீனவர்கள் கைதட்டி ஒலிஎழுப்ப கிலிகொண்டது கிளி.
பயப்படாதே தமிழ். பார் என் தோழர்களை. அவர் பாண்டி இவர் பரதன் இவர் இசக்கி அவர் சலிம்.
எல்லோரையும் அவள் வேர்த்த முகத்தோடு வெறித்துப் பார்த்தாள்.
அவளை அவர்களுக்கு அறிமுகம் செய்தான்
இவள்தான் தமிழ்ரோஜா. இப்போது மனைவிபோல் இருக்கும் என் காதலி. பின்னாளில் காதலிபோல் இருக்கப்போகும் என் மனைவி.
விசைப்படகு விரைந்து படபடத்தது தமிழ்ரோஜா இதயம் இரண்டுமடங்கு துடிதுடித்தது. ---------------------------------------------------------------------
--------------------------------------------------------------------- 5
கண்விழித்துப் பாரடி என் காதல்தமிழே. இமைகொண்டு கண்ணுக்கும் கரம்கொண்டு முகத்துக்கும் இரட்டைக்கதவுகள் இட்டுக் கொண்டவளே.
இப்போது வங்காள விரிகுடாவில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
மேலே நீலவானம் - நீளவானம். கீழே நீலக்கடல் - நீளக்கடல்.
தண்ணீரில் அங்கங்கே வெள்ளைவெள்ளையாய்க் கவிதை எழுதும் கடற்காற்று.
சரி. சரி. கண்திறந்துபார். சமுத்திரம் உனக்குக் கீழே.
பிளாஸடிக் வலைகளின்மேலே நைந்து குலைந்து நலிந்துகிடந்தவள் விலக்கவில்லை விழித்திரைகளை.
தலைசுற்றியது தமிழுக்கு.
அவள் அடிவயிற்றில் மெல்ல மெல்லப் பெரிதானதொரு குமட்டல் குமிழி.
புதிய விருந்தாளிகள் வந்திருக்கும் புளகாங்கிதத்தில் அலைமீன்கள் ஆனார்கள் மீனவர்கள்.
வராதவர்கள் வந்திருப்பதால் விழாத மீன்கள் விழும்.
நம்பிக்கைமொழி பேசி நடனமாடினார்கள்.
காதலர் தனிமைக்குப் பின்பக்கம் தந்துவிட்டு முன்பக்கச் சுக்கான் அறையில் மொத்தமானார்கள்.
தன் சொற்பொழிவுக்குக் கடல் கைதட்டுவதாய்க் கருதிய களிப்போடு இன்னும் அதிகமாய் ஓசையிட்டது விசைப்படகு.
காதலியை மடியில்போட்டவன் கண்களைக் கடலில் போட்டான்.
கண்ணுக்கெட்டிய மட்டும் கடலோ கடல்.
இது வியப்பின் விசாலம். பூமாதேவியின் திரவச்சேலை. ஏ தமிழா. உன் புலமைகண்டு புல்லரிக்கிறேன். இதன் பரப்பை வியந்தாய். பரவை என்றாய். ஆழம் நுழைந்தாய். ஆழி என்றாய். ஆற்றுநீர் - ஊற்றுநீர் - மழைநீர் முன்றால் ஆனதென்று முந்நீர் என்றாய்.
வியந்துகிடந்தவன்உடைந்துகிடந்தவளை மடியில் அள்ளி ஒட்டவைத்தான்.
ஏ தமிழ். என்ன இது? திற, கண்களைத் திற. கண்களால் கடல்விழுங்கு. விசைப்படகு விரையும்போது கடலோடு ஒரு வெள்ளிவீதி பார்.
அன்பு கொண்டவர்களைக் காணும்போது துயரம் மெல்லமெல்ல மறைவதுமாதிரி - தூரத்துக்கரை மெல்ல மெல்லத் தொலைவது பார்.
ததும்பும் தண்ணீர் ஊஞ்சல்மேலே அழகுப் பறவைகள் ஆடுவதுபார்.
தப்பு செய்துவிட்டுவந்த கணவர்கள், தாழ்திறவாக் கதவுகளுக்கு வெளியே நிற்பதுபோல் - துறைமுகத்துக்குள் அனுமதியில்லாத கப்பல்கள் தூரத்தில் நிற்பது பார்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கடற்பட்டாம் பூச்சிகளாய் மிதக்கும் கட்டுமரங்கள் பார்.
காசுக்கு மனம்மாறும் வஞ்சகர்களைப் போல அங்கங்கே நிறம்மாறும் கடல்பார்.
நீ ஏன் பயப்படுகிறாய்?
தன்னைக் கடைந்து கடைந்து கடந்துவிட்டானே என்று கடல்தான் மனிதனைப் பார்த்து பயப்படுகிறது.
அவளை அவன் மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் மலர்த்தப் பார்த்தான்.
ஆனால், தன் புலன்களைப் பூட்டிக்கொண்டவள் திறக்கவேயில்லை.
ஆடும் படகு ஆடஆட அடிவயிறு அழுத்தியது அவளுக்கு.
நிறந்தெறியாத பூச்சிகள் நெற்றிப் பொட்டில் பறந்தன.
உள்ளே வளர்ந்து வளர்ந்து உடையப்பார்த்தது குமட்டல்குமிழி.
முகம்தூக்கிப் பார்த்தபோது அவன் கையில் பிசுபிசுத்தது அவள் கண்ணீர்.
அழுகிறாயா? கடல்நீரை மேலும் கரிக்கவைக்கிறாயா? கடலில் 3.6 சதம் உப்பு முன்னமே இருக்கிறது. அதுபோதும். எங்கே... உன் இதழ்நீர் துப்பு. இனிக்கட்டும் கடல்.
ஏன் இப்படி என்னைச் சோதிக்கிறீர்கள்? அவள் எழுத்துக்கூட்டி விசும்பினாள்.
அவன் சின்முறுவல் பூத்தான்.
தன்மேல் விழும் மண்ணைச் சோதனை என்று சொன்னதுண்டா விதை?
உளியின் உரசலைச் சோதனை என்று சொன்னதுண்டா சிலை?
இது பயிற்சி. முளைக்கவைத்து முழுமையாக்கும் முயற்சி.
சோதனை என்று சொல்லாதே பெண்ணே. சொடுக்கு, விரலுக்குச் சோதனை அல்ல.
அவள் வயிற்றில் புறப்பட்ட வாந்தி நெஞ்சில் வந்து நின்றுவிட்டது.
தன்னிரு கரங்களால் அவள் தலைதாங்கித் தவித்தாள்.
துவண்ட கொடிகண்டு துடித்தான் அவனும்.
இது கடல்நோய். ஒருவகையில் இது ஒவ்வாமை. முதன்முதலாய்க் கடல்புகும் பலருக்கு இது வரவே வரும். கலங்காதே. சின்னச் சின்னச் சிரமங்களுக்கு உன் உடம்பை உட்படுத்து.
எனக்கிது தேவைதானா?
அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீர் வாயில் விழுந்ததில் வார்த்தை நனைந்தது.
தேவைதானா என்று கேட்டிருந்தால் தீயை அறிந்திருக்க முடியுமா? குரங்கிலிருந்து மனிதன் குதித்திருக்க முடியுமா? தூரத்தை நெருக்கியிருக்க முடியுமா? நேரத்தைச் சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான் முட்டைக்குள் இருக்கும் உயிரை முச்சுவிடவைக்கிறது.
தேவைதான் உலக உருண்டைக்கு ஒரேபகல் கொண்டுவர யோசிக்கிறது.
உணர்வுகளின் தேவை காதல். உணர்ச்சிகளின் தேவை காமம். உலகத்தின் தேவை உழைப்பு.
இந்தத் தேவைகளின் வெவ்வேறு வடிவங்களே வாழ்க்கை.
பெண்மீது காதலும் வெற்றிமீது வெறியும் இல்லையென்றால் இன்னும் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்.
அவன் பேச்சுக்குக் காதுகொடுத்தது காற்று மட்டும்தான்.
அவளால் தாங்கமுடியவில்லை. ஒவ்வாத சூழல். உடன்படவில்லை உடம்பு. ஏதோ ஒரு திசையில் - ஆனால் மிகமிகப் பக்கத்தில் மரணம் மையம்கொண்டிருப்பதாய்ப்பட்டது அவளுக்கு.
என்னைக் கொல்லாதீர்கள். படகைத் திருப்புங்கள். படபடப்பாய் வருகிறதெனக்கு.
அவன் இரு கரங்களாலும் அவள் முகம் அள்ளினான். வசதி இல்லாத இடங்களிலும் வளைத்து வளைத்து முத்தமிட்டான்.
இடைவேளையில் பேசினான்.
இது ஓர் அனுபவம். படபடப்பு என்பது உயிருக்கு நேரும் உயர்ந்த அனுபவம். படபடப்பு இல்லையென்றால் பரிணாமம் இல்லை.
முதன் முதலில் நிலாவுக்கு மனிதனைக் கொண்டு சென்ற விண்வெளிக்கலம் பூமிக்குத் தெரியாத நிலாவின் மறுபக்கத்தில் சுற்றத்தொடங்க - விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒலித்தொடர்பு அறுந்துபோக - முப்பத்து முன்று நிமிடம் பூமியின் இதயம் படபடக்கவில்லையா?
மைனஸ 27 டிகிரியில் - எவரெஸட் உச்சிதொட இன்னும் நானூறடிதான் இருக்கையில் - அந்த தூரம் கடக்கும்வரைக்கும் ஆக்சிஜன் இருக்குமா என்று ஹிலாரி ஐயம் கிளப்ப டென்சிங்கின் இதயம் படபடக்கவில்லையா?
வடதுருவம் தொடும் முயற்சியில் ஏழுமுறை விழுந்து ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு விரல் இழந்து எட்டாம் முறையும் தன் முயற்சி தொடர்ந்து, ஸலெட்ஜ வண்டிகள் சிதறிப்போக, இழுக்கும் நாய்கள் இறந்துபோக இதுதானோ தன் கடைசிப் பயணம் என்று வெற்றிக்குச் சற்றுதூரத்தில் விரக்தியில் நின்றபோது எட்வின்பியரியின் இதயம் படபடக்கவில்லையா?
இன்னும் பத்துநாட்களில் கண்ணுக்குக் கரைதெரியாவிட்டால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டும் என்று மாலுமிகள் போர்க்கொடி பிடிக்க அந்த ஒன்பதாம் ராத்திரியில் கொலம்பஸின் இதயம் படபடக்கவில்லையா?
அவர்களைவிடவா ஆபத்து உனக்கு?
அவர்கள் உயிரைப் பணயம்வைத்துப் பயணம் செய்தவர்கள்.
நீ சுகமாக இருக்கிறாய்.
தாய்க்குரங்கின் பிடியிலிருக்கும் குட்டியைப்போல் நீ என் மடியில் பத்திரமாயிருக்கிறாய்.
பதறிப்பதறிச் சிதறிப் போகாதே. எழு தமிழ். எழு.
ஒரு பேரலையின் உசுப்பலில் விசைப்படகு ஆபத்தான ஆட்டமொன்றாட - அந்த அதிர்வலைகள் அவள் உள்ளுக்குள் பரவிஉசுப்ப - அவளுக்கு வந்துவிடும் போலிருந்தது வாந்தி. அவள் தரைமேல் மீனாய் வலைமேல் உருண்டாள்.
தாளாமல் துடித்தவளைத் தாவிஎடுத்து அவலம் கொள்ளாதே தமிழ். இது ஓர் அனுபவம் என்றான்.
வேண்டாம். எனக்கிந்த அனுபவம் வேண்டாம். அவள் சட்டை பிடித்துலுக்கிச் சத்தமிட்டாள்.
அவனோ ஏசுவின் மலைப்பிரசங்கம் மாதிரி அலைப்பிரசங்கம் ஆரம்பித்தான்.
பாவம். வயதுக்கு வந்த குழந்தை நீ. அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை. நம் வாழ்க்கைமுறை தீர்மானிக்கபட்ட அனுபவங்களையே நம்மீது திணித்தது.
யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக்கொள்ளுமாறு நம்மீது துப்பியது.
ஆகவே தாத்தாக்களின் நகல்களாகவே தமிழன் தயாரிக்கப்பட்டான்.
எனவே பல நூற்றாண்டுகளாக இந்த இனம் இருந்த இடத்திலேயே இருந்தது.
சாதிக்கும் முளையிருந்தும் சோதிக்கும் முயற்சி இல்லை.
வாழ்நாளில் 66,000 லிட்டர் தண்ணீர் குடித்தான். ஆயுளில் முன்றில் ஒருபங்கு தூங்கினான். நான்குகோடி முறை இமைத்தான். நாலரை லட்சம் டன் ரத்தத்தை இதயத்தால் இறைக்கவைத்தான். 35 ஆயிரம் கிலோ உணவு - அதாவது எடையில் இந்திய யானைகள் ஏழு தின்றான். மரித்துப் போனான்.
இதற்குத்தானா மனிதப்பிறவி?
யாருக்கும் இங்கே குறைந்தபட்ச லட்சியம்கூட இல்லை.
நமக்கேனும் வேண்டாமா? இற்றுப்போன பழைய இரும்புவேலிகளைச் சற்றே கடக்கவேண்டாமா?
ரத்தம்பார்த்தாலே மயங்கிவிழும் ஒரு தலைமுறையை மீட்கவேண்டாமா?
எழுந்து உட்கார். துன்பமென்பது மனதின் பிரமை. மனதை மாற்றுத்திசையில் ஆற்றுப்படுத்து. தும்மல் - காதல் - வாந்தி முன்றும் வந்தால் அடக்கலாகாது. அதன்போக்கில் விட்டுவிடு.
அவள் மெல்ல அசைந்தாள். கவிழ்ந்துகிடந்தவள் நிமிர்ந்து எழுந்தாள். கண்திறந்து கடல்பார்த்தாள்.
நடுக்கடல் கண்ட திடுக்கிடல் கண்ணில் தெரிந்தது.
முச்சு - நம்பிக்கை இரண்டையும் மெல்ல மெல்ல உள்ளிழுத்தாள்.
கடைவிழியில் ஆடிய கண்ணீருக்கு நங்கூரமிட்டாள்.
ஓங்கியடித்த ஓர் அலை விசைப்படகின் விளிம்பு தாண்டி திடதிரவமாய் அவள்மீது விழுந்தபோது ஓ வென்றலறினாள் ஓசையோடு. நன்றாய் நனைந்துவிட்டாள்.
கலைவண்ணன் தொடாத பாகமெல்லாம் கடல்தண்ணீர் தொட்டுவிட்டது.
ஓடிவந்தனர் உள்ளிருந்தோர்
என்ன.... என்னவாயிற்று? பாண்டியும் இசக்கியும் படபடத்தார்கள்.
ஒன்றுமில்லை. அலை...
உள்ளே ஓடிய சலீம் துவைக்கவேண்டிய ஒரு துண்டைத் துடைத்துகொள்ள நீட்டினான்
பரவாயில்லை. கடல்நோய் கொண்டவர்கள் நனைந்தால் நல்லதுதான். இசக்கி அனுபவம் சொன்னான்.
தண்ணீர் சொட்டச்சொட்ட தானே தலைதாங்கிக் தமிழ்ரோஜா அழுதாள். அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது? கடல்மீன் அழுத கதைதான்.
ஒரு கண்ணில் பாசம் ஒரு கண்ணில் பரிதாபம் மீனவர்பார்வை நிலைகுலைந்தவள் மீது நிலைத்தது.
ஆவேசமாய் நிமிர்ந்தவள் - இப்போதே கரைதிரும்ப வேண்டும் என்றாள் அழுதவிழி துடைத்தபடி
மீன் விழுந்தாலும் விழாவிட்டாலும் மாலைக்குள் கரைசேர்ப்போம் என்றான் பாண்டி
அலையில் இந்தப் படகு கவிழ்ந்துவிட்டால்?
கவிழாது. கவிழ்ந்தாலும் எங்கள் உயிர் கொடுத்து உங்கள் உயிர்காப்போம் தங்கையே. தடித்த எழுத்துக்களில் பேசினான் இசக்கி.
விடவில்லை அவள்.
டீசல் தீர்ந்துவிட்டால்?
தீராது 2800 லிட்டர் கொள்ளும் கலத்தில் இரண்டாயிரம் லிட்டர் அடைத்திருக்கிறோம் நம்பிக்கை சொன்னான் பாண்டி
படகைத் திருப்ப முடியுமா - முடியாதா? அவள் கரைக்கே கேட்குமாறு கத்தினாள்.
யாரும் பேசவில்லை.
முட்டிக்கொண்ட இரண்டு அலைகள் எட்டிமோத தஞ்சாவூர் பொம்மையாய்த் தலையாட்டியது படகு.
அவள் வயிற்றுக்குள் வட்டமிட்ட குமட்டல்குமிழி வளர்ந்து வளர்ந்து - நெஞ்சு கடந்து - தொண்டைதொட்டு - வெளியேறியது. அவள் வலையெல்லாம் நனைய வாந்தியெடுத்தாள்
கலைவண்ணன் தன் கட்டைவிரல் பதித்து அவள் நெற்றிப்பொட்டை அழுத்தினான் மீனவர் பதறினர.
சலீம் மட்டும் கலைவண்ணனைக் கேட்டேவிட்டான் தங்கை வாந்தியெடுக்கும்படி அப்படி என்ன செய்தீர்கள்? --------------------------------------------------------------------- 6
உள்ளே எதையும் ஒளிக்காதே. துணிந்துவிடு. துப்பிவிடு.
ஆசையைத் துப்பு. ஞானம் வரும். அச்சம் துப்பு. வீரம் வரும். ரகசியம் துப்பு. தூக்கம் வரும்.
அவள் அடிவயிற்றில் உழன்ற வாந்தி துப்பினாள். அழுத்தம் குறைந்தது. அமைதி வந்தது. நெற்றியில் அடித்த சம்மட்டி நின்றேவிட்டது. மழை நின்ற பின்னால் இலை சொட்டும் துளிபோல தலைபாரம் வடிந்தது, சொட்டுச் சொட்டாய்.
அவள் வலை நனைய வாந்தியெடுத்தது கண்டு பதறிய மீனவர் சிதறி ஓடினர். காணாமல் போன வேகத்தில் மீண்டும் கண்ணில் தெரிந்தனர்.
பரதன் கையில் குடிதண்ணீர் பாண்டி கையில் கோப்பைத் தேநீர்.
இதற்குத் தேநீர்தான் மருந்து.
குடி தாயே. குடி.
- இசக்கி வைத்திய வார்த்தை சொன்னான்.
பருகினாள் அவள். பாலில்லாத தேநீர். அவள் களைப்பை மாற்றும் கறுப்புத் தாய்ப்பால்.
துவண்ட கொடியைத் தோளில் அணைத்து வாந்தியெடுத்த வாய்க்கடை துடைத்து விரிந்த குழலை விரல்கொண்டளைந்து காதலிதுயரம் கண்களால் அளந்து அவள் கண்ணோரம் சிதறிய கண்ணீர் துடைத்த கலைவண்ணன் இப்போது பரவாயில்லையா..? - என்றான் இதமாக.
புலவர்க்கு மட்டுமே புரியும் சில தமிழ்ச்சொற்கள் மாதிரி - அவனுக்கு மட்டுமே புரியும்படி ஒரு புன்னகை புரிந்தாள்.
அந்தப் பாலைவனச்சாரல் கண்டு பளிச்சென்று மலர்ந்தவன் - எல்லாரும் ஜோராக ஒருமுறை கைதட்டுங்கள். தமிழ் புன்னகைக்கிறாள். தமிழ் புன்னகைக்கிறாள். - என்று தன்னைமறந்து கத்தினான்.
அவர்கள் குழந்தைகளாய்ச் சிரித்தார்கள். குதூகலமானார்கள். மார்கழிமாத வெயில் மறைவதற்குள் துணிகாய வைக்கத் துடிக்கும் ஒரு சலவைக்காரியைப் போல அந்தப் புன்னகை மறைவதற்குள் அவளைக் கரைசேர்த்துவிடக் கருதினார்கள். மின்னல்வேகத்தில் மீன்பிடிக்க ஆயத்தமானார்கள்.
பாண்டி கட்டளையிட்டான்.
பரதா. விசைப்படகின் வேகம் குறை. இந்த இடத்தின் ஆழம் அறி. இரும்புக் குண்டை நுனியில்கட்டிய பிளாஸடிக் கயிறு எடு. வீசு கடலில். விடு. விடு. போகட்டும். அது தரைதொட்ட உணர்வு தட்டுப்படுகிறதா? இப்போது எடு. ஆழக்கயிற்றின் நீளம் அள. எத்தனை பாகம்?
இசக்கி அளந்து சொன்னான். பதினான்கு பாகம்...
பதினான்கு பாகமா? பரவாயில்லை - இருபத்தைந்து மீட்டர். இறக்கு, இறக்கு. வலைகளை இறக்கு. அய்யா பேனாக்காரரே. அம்மா தமிழ்ரோஜா. ஓரமாய் ஒதுங்குங்கள். வலையோடு சேர்த்துக் கடலோடு எங்கள் இரும்புவடம் இறங்கும். தலையில் மோதலாம். தள்ளியிருங்கள்.
ஏ இசக்கி. ஏ சலீம். வலைவிரிய வசதியாய்ப் பக்கப்பலகை இறக்கு. கவனம். ஒவ்வொரு பலகையும் தொண்ணூறு கிலோ. நகர்த்திவிட்டு நகராவிட்டால் முகத்தைப் பிய்க்கும்.
மீன் விழும் முன்னே நீ விழக்கூடாது. சுறாக்கள் உன்னைச் சுவைத்துவிடக் கூடாது. அப்புறம் உன் வைப்பாட்டிக்கெல்லாம் நான் வாழ்வுதர முடியாது. இரும்புவடத்தில் வேகம் இருக்கு. பக்கப் பலகையைப் பார்த்து இறக்கு...
கடலில் எறிந்த வலை காணாமல் போக - மிதந்த மிதவைகள் அமிழ்ந்துபோக - பக்கப்பலகைகளின் பாரம் அழுத்த ஆடிக்காற்றில் பாவாடையாய் அகலப்பட்டது வலை.
விழித்த விழி விழித்தபடி வியந்துநின்ற தமிழ் ரோஜா -
படகுக்கு வால்முளைத்த மாதிரி வலை மிதந்து கொண்டே வருமா? என்றாள்
ஆமாம். கடலின் தரையை வலை தடவிக்கொண்டே வரும். வலைநீளும் எல்லைக்குள் எந்த மீன் வந்தாலும் அது வலைப்படும். வலையில் மாட்டிய மீனும் அரசியல்வாதியிடம் மாட்டிய பணமும் ஒன்றுதான். சிக்கினால் மீளாது.
வெண்கல உண்டியலில் வெள்ளிக்காசுகளாய்த் ததும்பிச் சிரித்தாள் தமிழ்ரோஜா.
இதுவல்லவோ நான் எதிர்பார்த்தது. இதுவல்லவோ என் மனம் கேட்டது. இதற்காகவல்லவோ நான் தண்ணீரில் தவமிருப்பது.
சிரி பெண்ணே சிரி. இந்தக் கடல் இத்தனை யுகமாய் எத்தனை சிரித்ததோ அத்தனைச் சிரிப்பையும் மொத்தமாய்ச் சிரி...
சுக்கான் அறையில் பரதன். சமையல் அறையில் சலீம். விசைப்படகின் வெளித்தளத்தில் அணில் மனிதர்களாய் - பாண்டியும் இசக்கியும்.
விசித்திர வாழ்க்கை இவர்களுக்கு என்றாள் தணிந்த குரலில் தமிழ்.
இல்லை. வேதனை வாழ்க்கை இவர்களுக்கு என்றான் தடித்த குரலில் கலை.
விளங்கவில்லை.
உனக்கு மட்டுமில்லை. உலகுக்கே விளங்கவில்லை. இவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள். காற்றை எதிர்த்துக் கடல் கிழித்தவர்கள். கிழக்கிலும் மேற்கிலும் நம் நாகரிகத்தை நடவுசெய்தவர்கள்.
பூமியின் மையக்கோட்டுக்கு மேலே போனவர்கள். ஆனால் இன்னும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்.
மனிதனின் முதல்தொழில் மீன்பிடித்தல்தான். வேட்டையே மீன் வேட்டையில்தான் ஆரம்பித்தது.
இன்னும் பசிபிக் தீவுகளில் சில பழங்குடிகள் அம்பு தொடுத்துத்தான் மீன் பிடிக்கிறார்கள்.
அந்தப் பழந்தொழில் செய்த இனம் இன்னும் பழையதாகவே இருக்கிறது.
இந்த மீன்நாற்றத்தில் முக்கு முடிக்கொள்கிற சில மனிதர்களைப் போலவே - இவர்களைப் பார்த்துக் கண்முடிக் கொண்டது காலமும்.
இயற்கை தாலாட்டினால் இந்தக் கடல் இவர்களுக்குத் தொட்டில். இயற்கை தள்ளிவிட்டால் இந்தக் கடல் - கல்லறை.
கரை மீண்டால் இவர்கள் மீன்தின்னலாம். கரை மீளாவிட்டால் இவர்களை மீன்தின்னும்.
வேட்டையாடு. அல்லது ஆடப்படு.- இதுதான் இந்தத் தண்ணீரில் எழுதப்பட்ட அழியாத வாசகம்.
அதோ பார். இந்த உப்புக் காற்றில் துருப்பிடித்துவிட்டது இரும்புவடம்.
சுக்கான் இரும்பில் துரு. சமைக்கும் அடுப்பில் துரு. நட்ட கம்பியில் துரு. விசைப்படகின் விளிம்பில் துரு. இன்னும் துருப்பிடிக்காதிருப்பது இவர்களின் எலும்பு மட்டும்தான்.
அவன் பேச்சிலிருந்த உண்மையும் உள்ளார்ந்த கண்ணீரும் தடுமாறவைத்தன தமிழை.
இப்போது புரிகிறது. என் வாழ்க்கை எவ்வளவு மெல்லியதென்று. என் வீட்டுக் கூண்டுக்கிளிகூட எவ்வளவு பத்திரமாயிருக்கிறது? என் வாழ்க்கை என் சாப்பாட்டு மேஜைக்கே வந்துவிடுகிறது. ஆனால், இவர்களோ கரையில் தொலைத்த வாழ்க்கையைக் கடலில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மெல்லிய வாழ்க்கை என் வாழ்க்கை. பனித் துளிக்குள் பள்ளிகொள்ளும் வாழ்க்கை. என் குரோட்டன்ஸ - என் செல்ல நாய் - ஆயிரம் டாலர் இலைகளின் மேலே அள்ளித் தெளித்த புள்ளிகள் - காற்றாடும் மொட்டைமாடி - கண்ணடிக்கும் நட்சத்திரம் - சுருக்கம் விழாத படுக்கை - சுதந்திரமான குளியல் - கைநிறையக்காசு - பைநிறையக் கனவுகள் - இந்த சந்தோஷவட்டத்தில் நான் செளகரியமாயிருக்கிறேன்.
ஆனால், இவர்களுக்காக நான் இரக்கப்பட முடியும். என்னால் இவர்களாக இருக்க முடியாது. என் சுவாச உறுப்புகள் தரைக்கு மட்டுமே ஏற்றவை. தண்ணீருக்குள் தள்ளாதீர்கள்.
அவள் சத்தமிட்டுப் பேசவில்லை. ஆனால் அவள் கருத்து உரத்துநின்றது. உண்மை சொல்கிறேன் உணர்ந்து சொல்கிறேன் என்ற உறுதி இருந்தது.
வாடிய கீரையைத் தண்ணீர்தெளித்து வைப்பது மாதிரி வாடிய அவள் முகத்தில் வேர்வை தெளித்தது வெயில்.
தன் கசங்காத கைக்குட்டையில் அவளின் கசங்கிய முகம்துடைத்தான்.
தாயின் முதுகைக் கட்டிக் கொண்டு முதன்முதலாய் யானைபார்க்கும் ஒரு குழந்தையைப் போல் கலைவண்ணன் முதுகைக் கவசமாய்க் கொண்டு அவள் கடல்பார்த்தாள்.
பார்த்து வியந்து பயந்தவள் பதறிச் சொன்னாள்.
அய்யய்யோ. இதில் விழுந்தால்?
அவ்வளவுதான். குன்றில் தொலைந்த குன்றிமணிதான். கடலில் விழுந்த கடுகுதான்...
அவள் செல்லக் கேள்விகளால் சீண்டினாள்.
இப்போது புயலடித்தால்?
அடிக்காது. புயல் நல்ல விருந்தாளி. சொல்லாமல் வருவதில்லை...
திடீரென்று கடலுக்குள் எரிமலைகள் வெடித்தால்?
வங்காளவிரிகுடாவில் அதற்கு வசதி இல்லை. இது இந்துமகாசமுத்திரத்தின் குழந்தை. பெரும்பாலும் ஆழமில்லை. எரிமலைகள் எங்குமில்லை.
பர்மாக் கரையோரம் செடுபா தீவுகளில் சின்னச் சின்ன எரிமலைகள் உண்டு. ஆனால், அவை அனல் கக்குவதில்லை. மணல் கக்கும்.
முன்னாளில் இது கடல் என்றுகூடக் கருதப்படவில்லை. கங்கைஏரி என்பதுதான் இதன் சின்ன வயதுச் செல்லப்பெயர்...
விசைப்படகில் ஓட்டைவிழுந்து விறுவிறுவென்று நீர்புகுந்து மொத்தத்தில் எல்லாரும் முழ்கிவிட்டால்?
கவலைகொள்ளாதே கண்ணே. ஓர் அலையின் முதுகில் ஏறிக்கொண்டு உலகம் சுற்றி வருவோம்...
அவள் சலவைநிலவாய்ச் சட்டென்று சிரித்தாள்.
அலை முதுகில் ஏறிக்கொண்டால் உலகம் சுற்ற முடியுமா?
ஆமாம். தென்கடலில் தோன்றும் பேரலைகள் இருபத்துநான்கு மணி ஐம்பது நிமிடத்தில் உலகத்தைச் சுற்றிவிட்டு ஓடிவந்துவிடுகின்றன. அப்படி எனக்கும் உனக்கும் ஓர் இலவச அலை கிடைக்காதா? சுற்றும் உலகத்தை நீர்வழியே சுற்றிவரமாட்டோ மா?
எனக்கு மீண்டும் தலைசுற்றுகிறது... அவளைத் தாங்கிப்பிடித்துத் தலைமுடிதடவி விசைப்படகின் விளிம்பில் சாய்த்து நெற்றியில் அன்பு தடவி ஆதரவு செய்தான்.
இரண்டுமணி நேர இடைவெளிக்குப் பிறகு மீனவர்கள் வலையிழுத்தார்கள். நீரில் கிடந்த இரும்புவடங்கள் எந்திரச் சுழற்சியில் ஏறின மேலே.
அமிழ்ந்த மிதவை மீண்டும் மிதக்க - பக்கப் பலகைகள் பளிச்சென்று தெரிய - மீனவர்கள் இழுக்க இழுக்க நீள வலைகள் நிறைத்தன படகை.
எந்த முகத்திலும் உற்சாகமில்லை. வலையில் மீன்பட்ட அறிகுறி இல்லை.
வலையில் அங்கங்கே ஒட்டிவந்த பச்சைப்பாசி, அது தரைதடவி வந்ததென்றே தடயம் சொன்னது.
கலைவண்ணன் முகத்தில் கவலைக்கோடு.
அரசனை யாசித்து வெள்ளைவேட்டியோடு போன புலவன் அழுக்குவேட்டியோடு திரும்பி வந்ததைப்போல மீன்பிடிக்கப் போன வலை பாசி பிடித்தல்லவா வந்திருக்கிறது. தமிழ்ரோஜாவும் தவித்துப் போனாள்.
முழுவலையும் இழுத்து முடித்தார்கள். இல்லை. பெருமீன்கள் இல்லை.
ஏழைக்கிழவியின் சுருக்குப்பையில் முலையில் அங்கங்கே முடங்கிக் கிடக்கும் சில்லறைகளைப்போல வலையின் ஆழத்தில் சில சில்லறை மீன்கள் சேர்ந்திருந்தன.
வலை உதறினார்கள்.
வா வா தமிழ். வந்துபார்...
அவள் தட்டுத் தடுமாறிக்கொண்டே ஆடும்படகில் ஓடிவந்தாள்.
தட்டை மீன்கள் குட்டி மீன்கள் உருளைஉயிர்கள் பெயரிடப்படாத சில பிண்டப் பிராணிகள் சின்னச் சின்ன ஜெல்லி மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆக்டோ பஸகள் .. குதித்தும் ஊர்ந்தும் நகர்ந்தும் தவழ்ந்தும் பல வண்ணங்களில் படங்காட்டின.
சரியாய் விழவில்லை - பாண்டி
சமையலுக்கே காணாதே - சலீம்
இன்னொரு முறை வலைபோட நேரமில்லை தங்கை பாவம் தாங்காது கரை திரும்ப வேண்டியதுதான் - இசக்கி.
எல்லார் முகத்திலும் கவலை வலைவரித்து. கலைவண்ணன் தமிழ்ரோஜாவைத் தனியே அழைத்தான்.
அவள் உள்ளங்கைகளைத் தன் கன்னங்களில் ஒற்றிக் கொண்டு சொன்னான்.
இதோ பார் தமிழ். முப்பது கிலோ மீட்டர் கடல் கடந்து வந்தபிறகு வெறுங்கையோடு கரைதிரும்புவது காலவிரயம் - காசுவிரயம்- டீசல் விரயம். பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொள். இன்னொரு வலைவீச்சுக்கு வாய்ப்புக்கொடு ... - அவன் கெஞ்சினான்
தலையை அழுத்திப் பிடித்து உட்கார்ந்தவள் சற்றுநேரப் போராட்டத்திற்குப் பிறகு சரி,,, என்றாள்.
உப்புக்கரித்த அவள் கன்னத்தில் இனிக்க இனிக்க முத்தமிட்டான்.
மீண்டும் பிளாஸடிக் கயிறு இறக்கி ஆழம் அறியப்பட்டது. இப்போது இருபத்திரண்டு பாகம் - நாற்பது மீட்டர் மீண்டும் இரும்புவடம் இறங்க - பக்கப்பலகை குதிக்க - வலைகள் மறைய - மிதவைகள் அமிழ நிகழ்த்தப்பட்டது இரண்டாம் வலைவீச்சு.
இந்தமுறை மீன் விழும் என்றான் பாண்டி
எப்படி? என்றான் கலை.
ஆழமறியும் இரும்புக்குண்டு தரைதொடும் போது தரை சகதியா பாறையா என்று சொல்லும் தரை பாறையாயிருந்தால் மீன் வீழாது. சகதியாயிருந்தால் மீன் வீழும். வலை முதலில் விரிந்தது பாறையில்.
இப்போது விரிந்திருப்பது சகதியில் மீன் விழும்
அவன் நினைத்ததும் நடந்தது, நினைக்காததும் நடந்தது,
அவன் நினைத்தபடி - விரித்த வலையில் மீன்கள் விழத் தொடங்கின.
அவன் நினைக்காத ஒன்றும் நிகழ்ந்தது.
எந்திரத்திற்கு டீசல் விநியோகத்தைச் சீர்செய்து அனுப்பும் டைமிங் பிளேட் உடைந்து விசைப்படகு நின்று விட்டது.
அது- நீலக்கடலில் கறுப்பு இரவு கவியும் நேரம். --------------------------------------------------------------------- 7
அய்யய்யோ. படகு பழுதா..? ஓடுமா..? ஓடாதா..?
கரையோடு சேருமா..? - இல்லை கடலோடு முழ்குமா..?
அப்போதே சொன்னேன். உதவாது இந்த உயிர் விளையாட்டு என்றேன்.
அனுபவம்.. அனுபவம்.. என்றீர்கள்.
கடைசியில் வாழ்வா, சாவா என்ற அனுபவத்திற்கல்லவா வரவழைத்துவிட்டீர்கள்..?
தீக்குச்சி கொளுத்தி விளையாடும் குழந்தைகள் முங்கில் காட்டுக்குள் சிக்கிக் கொண்டது மாதிரி இந்த விளையாட்டுப் பயணம் வினையாகவல்லவா முடிந்துவிட்டது. சொல்லுங்கள், சொல்லுங்கள்... இது படகா - இல்லை நாம் மிதந்து வந்த கல்லறையா..?
கோழிக்கூண்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் - பக்கவாட்டில் இறக்கையடித்துப் படபடக்கும் கோழி மாதிரி - அவள் பயந்து நடுங்கிப் பதறி ஒடுங்கிப் பட்டாசுபாஷை பேசினாள்.
அமைதி. அமைதி. அவசரப்படாதே. குடியும் முழுகிவிடாது. படகும் முழ்கிவிடாது. கொஞ்சம் பொறு...
அவளை அமைதிப்படுத்தியவன் நின்ற படகின்மேல் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்த பாண்டியை நிறுத்தி, படகில் என்ன பழுது..? என்றான்.
எந்திரத்துக்கு எண்ணெய்வரத்து நின்று விட்டது. எந்திரத்துக்கு வரும் எண்ணெய்க்கு அழுத்தம் கொடுத்தனுப்பும் டைமிங் பிளேட் உடைந்துவிட்டது. நல்லவேளை. மாற்றுத்தகடு இருக்கிறது. மாற்றத் தெரிந்த பரதனும் இருக்கிறான். மாற்றிவிடலாம்...
எவ்வளவு நேரமாகும்..?
இரண்டு மணியாகலாம்...
இரண்டு மணி நேரமா - அல்லது இரவு இரண்டு மணியா..? - தமிழ்ரோஜா தடுத்துக் கேட்டாள்.
பயம் வேண்டாம் தாயே. இரண்டு மணி நேரம்தான்...
அவன் போய்விட்டான்.
மீண்டும் தமிழ்ரோஜா விட்ட இடத்திலிருந்து புலம்ப ஆரம்பித்தாள்.
முடியாது. இதைப் பழுதுபார்க்க முடியாது. விடியாது. இதோ, வந்து கொண்டிருக்கும் இரவு விடியாது. இந்தப் படகு கரைசேர்வது இருக்கட்டும்... நம் உயிர்போன உடலாவது கரைசேருமா..? சொல்லுங்கள் கலைவண்ணன். சொல்லுங்கள்...
இரு கைகளாலும் அவன் மார்பில் மாறி மாறிக் குத்தி, அவன் உணர்ச்சி காட்டாததால் தன் முகத்தையும் அவன் மார்பில் முட்டி முட்டி அழுதாள்.
அவன் அவளைத் தீண்டாமல் பேசினான்.
இதோ பார். இது மிகை. வாழ்வைக் கற்பனை செய். சாவைக் கற்பனை செய்யாதே...
பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம் வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே.
உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில் விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே...
இன்பத்தைக் கற்பனை செய்து பார். துன்பத்தை எதார்த்தமாய்ப் பார்.
படகு பழுதானதொரு சின்னஞ்சிறு செய்தி...
உடனே இதுதான் வாழ்வின் கடைசி இரவென்று கருகிப் போகாதே...
இன்பத்தை இரண்டாய்ப் பார். துன்பத்தைப் பாதியாய்ப் பார்...
அவளுக்கு உறுதி ஊட்டும் பாவனையில் ஒலி குறைந்த தொனியில் அவன் சொல்லச் சொல்ல, அவள் கண்கள் சொட்டுச் சொட்டாய்த் தமிழ்ப் பேசின.
கண்ணீர்... திட உணர்ச்சிகளின் திரவமொழி.
ஏய். என்ன இது..? ஓர் இடைவேளைக்குப் பிறகு இது கண்ணீரின் இரண்டாம் பாகமா..?
நீ எப்படி இப்படித் தண்டுவடம் இல்லாத புழுவாய்த் தயாரானாய்..?
நீ கர்ப்பத்தின் சுவர்களை உதைத்து உதைத்து வெளிவந்த குழந்தையா..? இல்லை - முட்டையின் ஓடுகளை முட்டாமல் வெளிவந்த குஞ்சா..?
புராணங்கள் சொல்லும் பெண்களின் பழைய கலவைகளை விட்டு வெளியே வா...
என்ன கலவை அது என்ற பாவனையில், அவள் தன் கண்ணீர்க் கண்களை உயர்த்திக் கேட்டாள்.
இது கேள். இந்தியப் புராணம் சொல்கிறது. எல்லாம் படைத்து முடித்த பிரம்மன், கடைசியாய்ப் பெண்ணைப் படைக்க முயன்றபோது தேவையான முலகங்கள் தீர்ந்திருக்கக் கண்டான்.
யோசித்தான். படைத்து வைத்த ஒவ்வொன்றிலும் பங்கெடுத்தான்.
நிலாவின் வட்டமுகத்தை - வளர்ந்த கொடியின் வளைவு நெளிவுகளை - புல்லின் மெல்லிய அதிர்வுகளை - நாணலின் மென்மையை - பூக்களின் மலர்ச்சியை - மானின் பார்வையை- உதயசூரியனின் உற்சாகத்தை - மேகத்தின் கண்ணீரை - காற்றின் அசைவை - முயலின் அச்சத்தை - மயிலின் கர்வத்தை - தேனின் இனிமையை - புலியின் கொடுரத்தை - நெருப்பின் வெம்மையை - பனியின் தன்மையை - குயிலின் கூவலை - கொக்கின் வஞ்சகத்தை - கிளியின் இதயத்தை - சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச் சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.
நான் பெண். சுதந்திரமான பெண். நான் அச்சப்படுவதற்கும் அழுவதற்கும்கூட எனக்குச் சுதந்திரமில்லையா..?
அவன் அவள் கண்ணீரைத் தொட்டுக்கொண்டு சிரித்தான்.
அறியாப்பெண்ணே. அழுகையும் அச்சமும் தீர்ந்தநிலைதான் சுதந்திரம்.
இதோ பார்... பூமி உருண்டை இன்னொரு நூற்றாண்டுக்குள் சுற்றப்போகிறது.
பெண் மாறிக் கொண்டிருக்கிறாள்.
தலையணை உறைமாற்ற மட்டுமே தயாரிக்கப்பட்ட பெண், துப்பாக்கிகளுக்குத் தோட்டா மாற்றத் தயாராகிவிட்டாள்.
மாறிவிடு. நீயும் மாறிவிடு.
உடைந்த தகடு கழற்றிப் புதிய தகடு பொருத்தும் முயற்சியில் பரதன் முனைந்திருக்க - பாண்டியும் இசக்கியும் சேர்த்து அவனுக்கு ஆறு கரங்களானார்கள்.
நீலவானத்தில் ஜெட்விமானம் விட்டுப்போன புகை திட்டுத்திட்டாய்த் தெரிவது மாதிரி, இருள் கவியும் கடல்மீது அங்கங்கே வெள்ளலைகள்...
இருபத்துமுன்று ஆண்டுகளாய் அவள் சந்திக்காத ஓர் இரவு அவளைச் சந்திக்க வந்தபோது - அவள் மெய்யாகவே மிரண்டு போனாள்.
படமெடுத்துச் சீறும் பாம்பாய் ஓசையோடு வீசும் வாடைக்காற்று.
விசைப்படகில் வெளிச்சம்விழும் கடற்பரப்பைத் தவிர சுற்றிக் கறுப்புச்சுவர் எழுப்பி நிற்கும் இரவு.
வானத்தில் அணைந்து அணைந்து எச்சரிக்கும் நட்சத்திரங்கள்.
நிலாவைப் பெற்றெடுப்பதற்குப் பிரசவ வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.
அலைகளின் தளுக்.. தளுக்.. ஓசைகளில் தளும்பி ஆடும் படகு.
இவையெல்லாம் அவள் அச்சத்தை மெள்ள மெள்ள அதிகரித்தன.
அழுது அழுது கண்கள் சிவந்தும் கண்ணீர் உறைந்தும் போனவள் - இன்னும் எவ்வளவு நேரமாகும்..? என்றாள் குழந்தையாய்க் குழைந்து குழைந்து.
இன்னும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம்...
அதுவரை என்ன செய்யலாம்..?
கண்முடித் தியானம் செய்வோம். கவிதை செய்வோம். நீ அனுமதித்தால் காதலிப்போம்.
விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்கக் கூடாது. நகம் வெட்டும் நேரம் மிச்சம் என்று நினைத்துக்கொள்வோம்.
படகு பழுதானதென்றால் பதறிக் கொண்டிருக்கக் கூடாது.
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்குக் குறிப்பெடுப்போம்...
இப்படி ஒரு தைரியம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது..?
கல்வியோடு வாழ்க்கையைக் கல்யாணம் செய்தபோது கிடைத்தது.
ஒரு ஜப்பானியக் கவிதை சொல்வேன் - கேட்டுக் கொள்வாயா..?
சொல்லுங்கள்... சோதனைகளை அனுபவிக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன்.
எரிந்துவிட்டது வீடு இனி தெளிவாய்த் தெரியும் நிலா...
- இந்தக் கவிதையை வாழ்க்கைப்படுத்தக் கற்றுக்கொண்டேன்.
தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல் துன்பம் எடையிழந்தது.
தங்கத்தின் துருவல்களைச் சேகரித்தே ஒரு நகை செய்து விடுவதுபோல், கஷடங்களைச் சேகரித்தே நாம் கலைசெய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கலையின் முதல் எதிரி பசி... முதல் நண்பனும் அதுதான். ஓ. உனக்குப் பசிக்கிறதா..?
அந்த நேரத்தில் அந்தப் படகில் ஒரே ஓர் ஆறுதல் சலீமின் சமையல் வாசனைதான்.
வாந்தி கண்ட தமிழ்ரோஜா, பகல் முழுவதும் தேநீர் தவிர எதையும் அருந்தவில்லை.
அவளோடு அவள் பட்டினியைப் பங்கிட்டுக் கொண்டவனும் அதுவரை எதுவும் அருந்தவில்லை.
சாப்பிடுங்கள்... எங்களுக்கே பசிக்கிறதே. உங்களுக்குப் பசிக்காதா..?
சோற்றின் முக்கால்பாகத்தை மீன்குழம்பில் முழ்கடித்து, தட்டேந்தி நின்றான் சலீம்.
ஆனால், அதில் மீன்துண்டு கிடக்கக் கண்டு, உயிருள்ள பாம்பைக் கண்டதுபோல் தன்னைப் பின்னிழுத்துக் கொண்டாள் தமிழ்ரோஜா.
மன்னித்துவிடுங்கள் சலீம். தமிழ் - சைவம்... என்றான் கலைவண்ணன்.
அப்படியானால் மீன் அசைவமா..? என்றான் சலீம்.
தயவுசெய்து போய்விடுங்கள். என்னால் தாங்கமுடியவில்லை... - முகத்தையும் முக்கையும் முடிக்கொண்டாள் தமிழ்ரோஜா.
வெறும் சோறு... வெறும் ரசம்... தரமுடியுமா தமிழுக்கு..?
இப்போதே தருகிறேன்... என்ற சலீம். ஒரு தட்டைக் கலைவண்ணன் கையில் தந்தான். மறுதட்டை ஏந்திக்கொண்டான். ததும்பும் படகில் தடுமாறாமல் ஓடினான்.
சோற்றில் ரசமுற்றிச் சுடச்சுடக் கொண்டு வந்தான். தமிழுக்குப் பசித்தது. தட்டை வாங்கிக் கொண்டாள். உடனே சாப்பிடாமல் உற்று உற்றுப் பார்த்தாள். தட்டிலிருந்த பிசுக்கு அவளைப் புசிக்க விடவில்லை.
தூக்கம் வந்தால் தலையணை தேவையில்லை. பசி வந்தால் சுத்தம் தேவையில்லை.
அவள் பிசுக்கை மறந்தாள். பிசைந்தாள். ரசமே சோறாய் - சோறே ரசமாய் மாறும் ரசவாதம் நிகழ்ந்தது.
ஒருவாய் அள்ளி உண்டாள்.
மென்ற சோற்றை விழுங்கவிடாமல் உள்ளே ஏதோ உறுத்தியது.
சமையலறையில் பாண்டி சலீமைத் திட்டிக் கொண்டிருந்தான்.
மீன்கரண்டியை ரசத்தில் போடாமல் உனக்குப் பரிமாறவே தெரியாதா..?
அவ்வளவுதான். தமிழ்ரோஜா தன் குடலைத் தவிர, எல்லாவற்றையும் மொத்தமாய்த் துப்பிவிட்டாள்.
தட்டை வீசியெறிந்தாள்.
அது வங்காள விரிகுடாவில் விழுந்தது.
தயவுசெய்து என்னையும் இந்தக் கடலில் எறிந்துவிடுங்கள்...
அவள் சத்தத்தில் - அப்போதுதான் தூங்கப்போன கடல் துடித்து எழுந்தது. --------------------------------------------------------------------- 8
வாழ்வின் மர்மம்தான் வாழ்வின் ருசி.
நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான் அதன் சுவை.
எதிர்பாராத வெற்றிதான் மனித மகிழ்ச்சி.
தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்தான் மனிதன் அதன் முன்நிமிஷம் வரைக்கும் முயற்சியில் இருக்கிறான்.
மரணத் தேதி மட்டும் மனிதனுக்குத் தெரிந்துவிட்டால் மரணம் வருமுன்பே அவன் மரித்துப் போவான்.
வாழ்க்கையும் ஒருவகையில் கண்ணீரைப் போலத்தான். இரண்டும் எதிர்பாராமல் வருவதில்தான் பெருமை.
சரியாகிவிட்டது. டைமிங் பிளேட் பழுதுபார்த்தாகிவிட்டது...
அவிழ்ந்த லுங்கி தெரியாமல் ஆடிக் குதித்துக் கத்தினான் சலீம்.
படகுக்குள் அதுவரைக்கும் கோமாவில் கிடந்த சந்தோஷம் அங்குலம் அங்குலமாய் அசையத் தொடங்கியது.
கறுத்த முகங்களில் மகிழ்ச்சி நுரைத்தது.
அந்தத் தடித்த இரவுக்கும் வாடைக் காற்றுக்கும் அந்தச் செய்தி மட்டுமே ஆறுதல்.
மாலையின்றி மேளமின்றிப் பரதனுக்குப் பாராட்டு விழா.
கலைவண்ணன் ஓடிப்போய் அவன் கைகுலுக்கினான்.
அதில் - எண்ணெய்ப் பிசுக்கில் ஊறிய அழுக்கு.
அதனாலென்ன.
உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு. உழைப்பவன் கையில் அழுக்கும் தங்கம்.
நாங்கள் படித்தவர்கள்தாம். ஆனால். பழுதுபார்க்கப் பயன்படவில்லை எங்கள் படிப்பு. நீங்கள் படிக்காதவர்தான். ஆனால் பழுதுபார்த்துக் கொடுத்தது உங்கள் பயிற்சி. நன்றி பரதன். நன்றி...
தன் அழுக்குக் கையை இழுத்துக்கொண்டு பரதன் சிரித்தான்.
பிரசவத்தில் முதலில் தலைநீட்டும் குழந்தையைப் போல - துண்டுமுகம் காட்டியது தூரத்துநிலா.
சரி. சரி. கரைக்குத் திருப்புங்கள் படகை. வாடைக்காற்று வாட்டுகிறது. தங்கை தாங்காது. மீன் விழாவிட்டால் பரவாயில்லை. இவர்களைக் கரைசேர்த்துத் திரும்பி வருவோம்...
- பாண்டியின் கரகரப்பான ஆணைகேட்டுச் சுறுசுறுப்பான படகு நங்கூரம் களையத் தயாரானது.
கலைவண்ணன் முகத்தில் கவலை கப்பியது.
பாண்டி. மீன் விழுந்திருக்குமா..?
விழுந்திருக்காது...
ஏன்..?
படகுதான் நின்றுவிட்டதே... வலை பயணப்பட வில்லையே.
கண்களைக் கடலுக்கும் காதுகளை அவர்கள் பேச்சுக்கும் கடன் கொடுத்திருந்தாள் தமிழ்ரோஜா.
தலைதாழ்த்திப் பேசினான் கலை.
மன்னிக்க வேண்டும். எங்களால் உங்களுக்கு இன்னல். உங்கள் படகில் துன்பம் ஜோடியாய்க் குதித்துவிட்டது...
பரவாயில்லை பேனாக்காரரே. திரும்பி வந்து மீன்பிடித்துக் கொள்கிறோம்...
இருவரும் மெளனமானார்கள். வாடைக்காற்று மட்டும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தது.
மீன் விழவேண்டுமென்றால் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்..?
எதிர்பாராத குரல்கேட்டு இருவரும் திரும்பினார்கள்.
- கேட்டவள் தமிழ்ரோஜா.
இது உண்மைதானா என்று கண்களை உருட்டி உருட்டிப் பார்த்த பாண்டி -
இன்னும் ஐந்தாறு கிலோமீட்டர் போக வேண்டியிருக்கும்... என்றான்.
போகலாம்... இவ்வளவு தூரம் வந்துவிட்டோ ம். மீன்பிடித்துக்கொண்டே போகலாம். படகை முன்னோக்கிச் செலுத்துங்கள்...
நிஜந்தானா இது..? நிலைகுத்தி நின்றான் கலைவண்ணன்.
பேசுவது தமிழா..?. இல்லை, பெருங்கனவின் குரலா..?.
பகலெல்லாம் உணவு கொள்ளாமல் வண்ணம் உதிர்ந்து கிடக்கும் என் வசீகரச் சித்திரம் தோழர்களின் வயிறு வாடக்கூடாதென்று வாய்திறந்து பேசியதா..?
மற்றவர் நலனுக்காகத் தன் துயர் பொறுக்கும் தன்னல மறுப்பு இருக்கும் வரைக்கும் காற்றும் மழையும் பூமியிலிருக்கும். கடல்கள் தங்கள் கரைதாண்டாதிருக்கும்.
தன் மெளனவிரதத்தைச் சத்தமிட்டு முடித்துக்கொண்ட விசைப்படகு ஒரு போர்க்கோபத்தோடு புறப்பட்டது. கிழக்கே கிளம்பிய நிலாவைத் தொட்டுவிடத் தன் நீண்ட முக்கை நீட்டியது.
உற்சாகம்தான். படகு முழுக்க ஒரு பரவசம்தான்.
மீன்குழம்பு சாப்பிடுவதே அவர்களுக்கொரு கலைநிகழ்ச்சிதான்.
கொஞ்சநேரம் தட்டாராய்ச்சி செய்து கொண்டிருந்த இசக்கி சலித்துக்கொண்டான்.
என்ன சலீம். மீனின் நடுத்துண்டம் பாண்டிக்கு. வால் பரதனுக்கு. தலை மட்டும் எனக்கா..?
சாப்பிடுங்கள். அதில்தான் முளை இருக்கிறது. மீன் தலை சாப்பிட்டால் முளை வளரும்...
அப்படியா. நீ பிறந்ததிலிருந்து மீன் தலையே சாப்பிட்டதில்லையா..?
பொசுக்கென்று எல்லோரும் சிரித்ததில் புரையேறிவிட்டது. சத்தங்கேட்டு ஓடிவந்த தமிழ்ரோஜா தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள்.
கலைவண்ணன் அவர்கள் தலை தட்டித் தட்டி, சிரித்துப் புரையேற்றிய சிரமம் குறைத்தான்.
ஏதோ ஒரு கூச்சம். ஏதோ ஒரு நெகிழ்ச்சி. அவர்கள் பின்வாங்கினார்கள்.
படித்தவர்கள் தங்களை உபசரிக்கிறார்களே என்ற பாமரப் பதுங்கல்.
நெளிந்துகொண்டே பரதன் கேட்டான். நீங்கள் சாப்பிடவில்லையா..?
சாப்பிடுவோம். இன்று எங்களுக்கு நிலாச்சோறு... என்றவன், தமிழ்ரோஜாவை அழைத்துக்கொண்டு படகின் பின்விளிம்பில் இருள் கவிந்த பிரதேசம் ஏகினான்.
அவள், அவன் மடியில் விழுந்து குறுகிக் குறுகி ஒரு குட்டியானாள். அவன் கங்காருவானான்.
வானத்தில் நிலா. வயிற்றில் பசி.
என்னவோ நிலாச்சோறு என்றீர்களே.
சைவப்பெண்ணே. இன்றுனக்கு நிலாவே சோறு... நிலாவைத் தின்றுவிடு...
நிலா சைவமா..?
நிச்சயமாய்ச் சைவம்தான்...
எப்படி..? அங்குதான் உயிர்கள் இல்லையே.
அவள் பசியில் சிரித்தாள். அலைகளோடு சடுகுடு விளையாடும் நிலவின் கிரணங்களில் நெஞ்சுகரைந்தவள் -
பெளர்ணமி பார்த்தால் கடல் பொங்குகிறதே. அது ஏன்..? என்றாள்.
பிரிந்துபோன மகளைப் பார்த்தால் பெற்ற தாய் பொங்கமாட்டாளா..?
யார் மகள்..? யார் தாய்..?
கடல் - தாய்... நிலா - மகள்...
எனக்கு இந்தக் காதுக்குப் பூ வைக்கும் கவிதைகள் பிடிப்பதில்லை...
நான் சொல்வது கவிதையல்ல. விஞ்ஞானம். பூமியிலிருந்து தூக்கியெறியப்பட்ட துண்டுதான் நிலா என்று ஒரு விஞ்ஞான முடிவு உண்டு...
எப்படி..?
பூமி தோன்றி அதன் எரிமலைக் குழம்புகள் ஆறத்தொடங்கிய அந்த ஆதிநாளில் - சூரிய ஏற்றவற்றத்தால் ஐந்நூறு ஆண்டுகள் வளர்ந்த ஒரு பேரலை பூமியிலிருந்து பிய்ந்து விண்வெளியில் வீசப்பட்டது. சில பெளதிக விதிகளுக்குட்பட்டுத் தூக்கியெறியப்பட்ட துண்டு ஒரு சொந்தப் பாதை போட்டுச் சுற்ற ஆரம்பித்தது. அதுதான் நிலா...
ஆச்சரியம். ஆனால் - ஆதாரம்..?
இன்னும் பசிபிக் கடலில் அந்தப் பள்ளமிருக்கிறது. அந்தப் பள்ளத்திலிருக்கும் பசால்ட் என்னும் எரிமலைக் குழம்புப் பாறையும், நிலாப் பாறையும் ஒரே ஜாதி என்ற உண்மை உணர்த்தப்பட்டிருக்கிறது. நிலாவை ஈன்று கொடுத்த பசிபிக் சமுத்திரத்தின் கர்ப்பப்பை இப்போதும் காலியாயிருக்கிறது...
அவ்வளவு பெரிய பள்ளமா..?
பள்ளம். பெரும்பள்ளம். எவரெஸட்டை வெட்டி உள்ளே போட்டாலும் இன்னும் மிச்சமிருக்கும்...
கடலுக்குள் ஏன் மலையை வெட்டிப் போட வேண்டும். கடலுக்குள் ஏற்கெனவே மலைகள் இல்லையா..?
இருக்கின்றன...
அடையாளங்கள்..?
தீவுகள்...
தீவுகளுக்கும் மலைகளுக்கும் என்ன சம்பந்தம்..?
கடலுக்குள் முழ்கிய மலைகளின் முழ்காத உச்சிகளே தீவுகள்...
அப்படியா..?
அப்படித்தான்... மத்திய பசிபிக்கின் குறுக்கே இரண்டாயிரம் மைல் நீளமுள்ள மலைமுகட்டின் கடல் கொள்ள முடியாத சிகரங்களே ஹவாய்த் தீவுகள். இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவிலிருந்து அண்டார்டிகா வரை ஒரு மலைத்தொடர் போகிறது. அந்த மலைத்தொடரில் முழ்காத உச்சிகளே மடகாஸகர் - இலங்கை - மாலத்தீவுகள் - லட்சத்தீவுகள்...
அவள் இரண்டு கண்களிலும் ஆச்சரிய நிலாக்கள் அடித்தன. உள்ளிருந்து ஒரு பாட்டுச் சத்தம்.
என்னென்னமோ ஆகிப்போச்சு ஐலசா - ஓடம் எந்திரத்தில் ஏறிப்போச்சு ஐலசா... ஒங்களத்தான் கரைசேத்தோம் ஐலசா - அட எங்க கரை எப்ப வரும் ஐலசா...
ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில் சமையலறையிலிருந்து சலீம் பாடினான்.
மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால் அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.
சலீம்தானே பாடுவது..? என்றாள் தமிழ்.
கழுத்தளவு நீரில் நிற்பவனுக்கே சங்கீதம் வருமென்றால், கடல்நீரில் நிற்பவனுக்குச் சங்கீதம் வராதா..?
அவன் விதித்ததே சுதி. அவன் வகுத்ததே மெட்டு. ஆனால், இப்போது அவனது சந்தோஷத்தின் உயரத்தை எந்தச் சங்கீத வித்வானும் தொட்டுவிட முடியாது...
சமையல்கட்டில் ஒரு சுண்டெலி வந்து மாட்டிக் கொண்டது.
மிளகாய்த்தூள், கடுகுபுட்டிகளுக்குப் பின்னே இடுக்குகளில் வளைந்து வளைந்தோடி அது வால்காட்டியது.
சலீம் அந்தச் சுண்டெலியை விரட்டியும் மிரட்டியும் பார்த்தான்.
ஆனால், அது எலிமொழி பேசிக்கொண்டு அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது.
ஏய். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் படகில் ஏறிக்கொண்டு வக்கணை வேறு காட்டுகிறாயா..? ஓடிப்போ. ஓடிப்போ. என்று அவன் செல்லமாய் விரட்ட, அது அவன் தலைமேல் ஒரு எட்டு வைத்துத் தாவி, அவன் பார்வை தொடமுடியாத இடத்தில் போய்ப் பதுங்கிக்கொண்டது.
நான் சுறாமீனுக்கே பயப்படாதவன். சுண்டெலிக்கா பயப்படப் போகிறேன்..? என்று தன் வீரத்தைத் தனிமையில் பிரகடனம் செய்துகொண்டான் சலீம்.
நிலா வெளிச்சத்தில் கடல்குளிக்கும் அந்த வெள்ளை இரவில் - அலைகளின் மேலே துள்ளித் துள்ளி விளையாடின ஜெல்லி மீன்கள்.
சில நேரங்களில் அலை எது, மீன் எது என்ற வித்தியாசம் விளங்கிக்கொள்ள வெளிச்சம் போதவில்லை.
கலைவண்ணன் மடியில் கிடந்துகொண்டே அந்த மங்கலான காட்சிகளில் மனது கரைந்து கொண்டிருந்தாள் தமிழ்ரோஜா.
கடல்நோய் கொண்ட கண்மணி. கடல் உனக்கும் பிடித்துவிட்டதா..? இன்னும் கொஞ்சம் கடல் விஞ்ஞானம் சொன்னால் காது கொடுப்பாயா..?
வேண்டாம்... எனக்கிந்த இரவுபோதும். கடல் அலைகளைக் கிச்சுக்கிச்சு முட்டிச் சிரிக்கவைக்கும் கிரணங்கள் போதும். தண்ணீரிடம் சுதந்திரம் கேட்கும் ஜெல்லிமீன்களின் துள்ளல் போதும். இது என் கண்ணுக்குத் தெரிந்த நிஜம். இதற்குமேல் இதில் விஞ்ஞானம் பார்த்து, என் முளையில் நான் முள் குத்திக்கொள்ள மாட்டேன்...
நீ தமிழச்சி. தலைமுறை தலைமுறையாய்த் தமிழன் செய்த தவறைத் தமிழச்சி நீயும் செய்கிறாய்.
தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் - தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும் தான் தமிழன் செய்த தவறு. பசித்தவன் காதில் வேதாந்தம் ஓதக்கூடாது என்பார்கள். வேதாந்தம் மட்டுமல்ல. விஞ்ஞானமும் ஓதக்கூடாது...
சலீம் வந்து தனிமை கலைத்தான்.
கையில் இரண்டு தட்டுகள் ஏந்தியிருந்தான்.
இதோ. சுத்தமான பாத்திரத்தில் வடித்த சோறு. சாப்பிடுங்கள்... நீங்கள் பட்டினி கிடந்தால் எங்களுக்குச் செரிக்காது...
அவன் நீட்டியது பள்ளமும் குழியும் நிறைந்த அலுமினியத் தட்டுதான். ஆனால் ஒவ்வொரு பள்ளத்தையும் அவன் தன் பாசத்தால் நிரப்பியிருந்தான்.
தட்டாமல் வாங்கினர் தட்டை.
அவள் முதலில் பிசைந்தாள். பசி இப்போது சுத்தம் பார்க்கவில்லை. உருட்டி உருட்டி ஒரு வாய் உண்டாள்.
மென்றால் ருசி தெரிந்துவிடுமோ என்று மெல்லாமல் விழுங்கினாள்.
அவள் உண்ணும் அழகுபார்த்து அவன் உண்ணத் தொடங்கியபோது, விரைந்து சென்ற விசைப்படகு நிலைகொள்ளாமல் ஆடி நின்றுவிட்டது.
என்ன... ஏனிந்த நிறுத்தம்..? ஒருவேளை கரைக்குத் திருப்பச் சொல்லிக் கட்டளையா..?
அங்கே நிலவிய ஒரு நீளமான குழப்பத்துக்குப் பிறகு பதட்டத்தோடு வந்து பாண்டி ஒரு சேதி சொன்னான்.
சேதியா அது..?
மேலே மேகம் இல்லை. மின்னலும் மழையும் இல்லை.
ஆனால் -
இடிமட்டும் காதில் வந்து இறங்கியது. ---------------------------------------------------------------------
--------------------------------------------------------------------- 9
படகின் எந்திரம் பழுது. இனி ஓடாது. சிறு பழுதல்ல. பெரும் பழுது. இறுகிவிட்டது எந்திரம். வெடித்துவிட்டன எண்ணெய்க் குழாய்கள். 0முதல் 7 வரை எண்கொண்ட எண்ணெய்மானியில் அந்த எண்ணெய் முள் 5 வரை ஆடும். அந்த முள் செத்து பூஜயத்தில் விழுந்து விட்டது. இது படகுக்கு மாரடைப்பு. இனி ஒன்றும் செய்ய முடியாது.
அதுவரையில் அந்த விசைப்படகில் விரிந்திருந்த சந்தோஷத்தின் சிறகு தொட்டாற்சிணுங்கி இலையைப் போல் மொத்தமாய் முடிக்கொண்டது.
மென்ற உணவை விழுங்கியும் விழுங்காமலும் கலைவண்ணன் கேட்டான். பழுதுபார்க்க முடியுமா? முடியாதா?
பாண்டி ஓடிக்கொண்டே சொன்னான். இல்லை. அது நம் கையைவிட்டுப் போய் விட்டது. போன மாதமே இந்தப் படகை எடுக்க வேண்டாமென்று எச்சரித்தார்கள். நாங்கள் கேட்கவில்லை. படகு பழையது.
ஓடாதா? படகு இனிமேல் ஓடாதா?
தவணை முறையில் தாக்கிய அதிர்ச்சியில் - தட்டோ டு தட்டுத் தடுமாறித் தமிழ்ரோஜா முர்ச்சையானாள்.
தமிழ். தமிழ். என்று கத்திய கலைவண்ணன் குரலில் அந்த ராத்திரிக்கடல் உறக்கம் கலைந்தது. ஆனால் தமிழ்ரோஜாவின் முர்ச்சை தெளியவில்லை.
அவளை அவன் தன் மடி கிடத்தித் தாதியானான்.
தீப்பிடித்த வீட்டில் திரைச்சீலையை யார் கவனிப்பது?
அவர்களைக் காக்க மீனவர்களுக்கு அவகாசமில்லை.
இடு. இடு. நங்கூரமிடு. இழு. இழு. வலையை இழு. ஒரு வஞ்சகக் கஞ்சனின் கையில் காசு நகர்ந்தாலும் நகரலாம். ஆனால் நம் படகு நகரும் என்று நம்பாதே.
உதவிப் படகு வராமல் ஒன்றுமே நடக்காது. அபாய அறிவிப்புக் கொடு. விளக்குகளை அணைத்தணைத்து வெளிச்சம் காட்டு.
இங்கே சில இதயங்கள் விட்டுவிட்டுத் துடிக்கின்றன என்பதை விட்டு விட்டு எரியும் விளக்காவது விளக்கட்டும். படபடவென்று பாண்டி தந்தித்தமிழ் பேசினான்.
உதட்டுக்கும் முத்தத்துக்கும் இடைவெளியே இல்லாதது மாதிரி கட்டளைக்கும் காரியத்துக்கும் இடைவெளியே இல்லாமல் அங்கே செயல்கள் நடந்தன.
தண்ணீர் முடிச்சாய் நங்கூரம் விழுந்தது.
கடலில் நீந்திவந்த வலை படகேறியது.
ஆபத்தின் அறிகுறியாய் விளக்குகள் அணைந்தணைந்து எரிந்தன.
ஆனால் அந்த சமிக்ஞைக்கு நட்சத்திரங்களை அணைத்தணைத்து வானம்தான் பதில் சொன்னதே தவிர - கடல் பேசவில்லை. படபடத்த மீனவர்கள் பரபரத்தார்கள்.
தமிழ். தமிழ். - கலைவண்ணன் முர்ச்சை தெளிவிக்கும் முயற்சி தொடர்ந்தான்.
ஏ வெயிலில் சூம்பிய வெள்ளரிப் பிஞ்சே. ஒரே ஓர் அதிர்ச்சியிலேயே முச்சுவிடும் கல்லாய் முர்ச்சையுற்றுப் போனவளே.
கலங்காத கடல் கலங்கிநிற்பதுபோல பதறாத என் உள்ளம் பதறி நிற்கிறதே. கண்திறந்து பார்.
என்ன இது? உன் சிவந்த திருமேனி சில்லிட்டு வருகிறதே. கூடாதே. சில்லிடக்கூடாதே.
அவள் கால்களை அள்ளி மடியில் போட்டுப் பரபரவென்று பாதம் தேய்த்தான்.
முயல்காதுகளைப் போல மெல்லிய அந்தப் பாதங்களை முரட்டுத்தனமாய்த் தேய்த்தான். பாதங்கள் சூடுகண்டதும் உள்ளங்கைகளுக்கு ஓடினான். அந்தக் குவிந்த தாமரைகளைக் கொஞ்சம் மலர்த்தி மெல்லென்று தேய்த்துத் தேய்த்து மின்சாரம் தயாரித்தான்.
முர்ச்சையுற்றுக் கிடந்த மரங்களில் வசந்தகாலம் வந்ததுமே கொழுந்து எழுந்துவருமே - அப்படி அவள் இமைகள் கொஞ்சம் எழுந்தன. உடனே விழுந்தன.
தமிழ். தமிழ்.
காதலியின் காதுமடலில் குனிந்து குனிந்து கூப்பிட்டான்.
ஓடிக்கொண்டேயிருந்த பாண்டி ஒருகணம் நின்றான்.
கலையின் துயர் கண்டும் தமிழின் நிலைகண்டும் பரபரப்பிலும் பரிதாபித்தான்.
எங்களால்தானே உங்களுக்கு இத்தனை துன்பம்? மன்னித்து விடுங்கள்.
யார் மீதும் தவறில்லை. இது சந்தர்ப்பத்தின் சதி. நீங்கள் பதற்றப்படாதீர்கள். பதற்றத்தில் மனிதன் பாதிபலம் இழக்கிறான். சிதறும் உணர்ச்சியைச் சேகரித்து யோசியுங்கள். நம் மீட்சிக்கு வழியுண்டா இல்லையா?
உண்டு. முன்றே வழி...
என்னென்ன?
ஒன்று. கடந்து செல்லும் கப்பல் நம்மைக் கரை சேர்க்கலாம்.
இரண்டு. படகு ஏதேனும் வந்து நம்மைப் பாதுகாக்கலாம்.
முன்று. கட்டுமரம் வந்து நம்மை இட்டுச் செல்லலாம்.
இந்த முன்றுமே இல்லையென்றால்..?
காற்றடித்துக் காற்றடித்து நாம் கரைசேர வேண்டும். இப்போது அது முடியாது.
ஏன் முடியாது?
இது கிழக்கிலிருந்து மேற்கே காற்றுவீசும் காலமல்ல. மேற்கிலிருந்து கிழக்கே காற்றுவீசும் காலம்.
நல்லது நடக்கும். நம்பிக்கையோடிருப்போம்.
பாண்டி சிரித்தான். அதில் ஈரப்பசை இல்லை.
பாவம். அது சிரிப்பின் மீசையை ஒட்டவைத்துக் கொண்ட சோகம்.
ஆனாலும் தைரியம் பேசினான். மீன் தப்பினாலென்ன? வலை இருக்கிறது. எந்திரம் போனாலென்ன? படகு இருக்கிறது. நீங்கள் தங்கையைக் கவனியுங்கள். நாங்கள் தடங்கல்களைக் கவனிக்கிறோம்.
பாண்டி கடலில் விழுந்த காசாய் இருளில் தொலைந்தான்.
விழுந்தவள் விழுந்தவள்தான். விழிக்கவில்லை. ஐம்பது கிலோ தங்கம் அசையவில்லை.
அந்தச் சுத்தத் தங்கத்தை அவன் சுடவைத்துக் கொண்டேயிருந்தான்.
தொட்டால் ஒட்டும் கெட்டி இரவு. மேலே பொத்தல் வானம். கீழே கத்தும் கடல்.
செத்துப் போன படகு. சிறகில்லாத மனிதர்கள்.
நேற்று வந்ததும் அதே நிலா. இன்று வந்ததும் அதே நிலா.
நேற்று வந்த நிலாவில் கறை என்பது அதன் கன்னத்து மச்சமாய் இருந்தது. இன்று வந்த நிலாவில் அது கண்ணீரின் மிச்சமாய்த் தெரிந்தது.
இயற்கை அப்படியேதான் இருக்கிறது. அர்த்தம் கொடுப்பவன் மனிதன்.
துள்ளி விளையாடிய ஜெல்லி மீன்களும் உள்ளே உறங்கப் போய்விட்டன.
அலைகள்கூட உறக்கத்தில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தன.
நட்சத்திரங்களைக் காவலுக்கு வைத்துவிட்டு நிலாகூட உறங்கிவிட்டது.
வாடைக் காற்றுக்குத் தூக்கத்தில் நடக்கிற வியாதி போலும். தட்டுத் தடுமாறி வீசிக்கொண்டிருந்தது.
அந்தக் கடல்வீதியில் மீனவர் நால்வரும் கலைவண்ணனும் மட்டும் கண்ணுறங்கவில்லை. விம்மிவிம்மித் தன் முகத்தில் தானே அறைந்துகொண்டு, அவன் தோளில் முட்டிமுட்டி அவள் அழுதாள்.
சுமப்பவனுக்குத்தான் தெரியும் சாலையின் தூரம். விழிப்பவனுக்குத்தான் தெரியும் இரவின் நீளம்.
கலைவண்ணன் கண்கள் போலவே கிழக்கு வானமும் சிவந்தபோது - அந்தச் சின்னமணித்தாமரை சிறுவிழி திறந்தது.
தலையை அசைத்தது. சங்கீதம் முனகியது.
இரவில் அணைந்தணைந்து எரிந்த விளக்குகளைப் போலவே அவள் விழிகளை முடிமுடித் திறந்தாள்.
அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. விழிப்படலத்தில் விழுந்த காட்சிகள் முளைக்குச் சென்று சேரவில்லை.
இப்போது நான் எங்கிருக்கிறேன்?
என் மடியிலிருக்கிறாய். ஓர் ஏழையின் உள்ளங்கையிலிருக்கும் தங்க நாணயத்தைப் போலவும் - தூக்கணாங்குருவிக் கூட்டின் ஆழத்தில் கிடக்கும் அதன் குஞ்சைப் போலவும் நீ பாதுகாப்பாயிருக்கிறாய்.
அவள் ஞாபகக் கண்ணிகளை அறுந்த இடத்திலிருந்து முடிச்சுப் போட்டாள். விளங்கிவிட்டது.
பள்ளி கொண்டவள் துள்ளி எழுந்தாள். பயந்து கத்தினாள். படகு இனி ஓடுமா? ஓடாதா?
பதறாமல் கேள். இந்தப் படகு இனி ஓடாது. இதயம் உடையாதே. எதார்த்தம் கேள். இந்தப் படகு இறந்துவிட்டது. இப்போது இது பிணம். இந்தப் பிணத்தில் மொய்த்திருக்கும் ஈக்கள் நாம். ஆனால், என் காதலியே. ஐப்பசி மாதம்போல் அழுது வடியாதே. நம் பிறவிப் பெருங்கடல் கடந்து முடிக்க இதுவொன்றே படகென்று எண்ணாதே. எல்லாக் கடலுக்கும் கரையுண்டு. எந்தத் துன்பத்துக்கும் முடிவுண்டு. பொறு. மீட்சிவரும்.
நிறுத்துங்கள். இப்போதாவது உண்மை சொல்லுங்கள்.
எப்போதும் உண்மைதான் சொல்லுகிறேன்.
இல்லை. என்னை நீங்கள் அழைத்து வந்தது சமுத்திரத்தை அறிமுகப்படுத்தவா? இல்லை சாவை அறிமுகப்படுத்தவா?
அதற்குமேல் பேச்சுவராமல் சப்தம் கேட்டு ஓடிவந்த சலீம் சமையல்கட்டுக்குச் சென்று இரண்டு கோப்பைகள் கருந்தேநீர் கொண்டு வந்தான்.
கலைவண்ணன் அதைவாங்கித் தோளில் புதைந்தவளின் தலைதடவி, தேநீர் குடி என்று செல்லவார்த்தை சொன்னான்.
கண்ணீர்விட்டுக் கண்ணீர்விட்டே உடம்பில் தண்ணீர்வற்றிப் போனவளுக்கு அது தேவைப்பட்டது. விசும்பிக்கொண்டே பருகினாள்.
இரவெல்லாம் பழுதுபார்க்கும் முயற்சியில் களைத்துப்போன மீனவர்கள் அவர்களைச் சுற்றிப் பரவினார்கள்.
இங்கிருந்து கரை எவ்வளவு தூரம் பரதன்?
இடைமறித்தாள் தமிழ். இங்கிருந்து மரணம் எவ்வளவு தூரம் என்று கேளுங்கள்.
கடலுக்குள் 45 கிலோ மீட்டர் தூரம் வந்திருப்போம். - யோசித்துச் சொன்னான் பரதன்.
ஆபத்தை உணர்த்தும் அறிகுறியாய் இரவில் விளக்கை அணைத்தணைத்து எரித்தீர்கள். பகலில்..?
அதோ பாருங்கள். பாண்டி கைகாட்டினான்.
கலைவண்ணன் அண்ணாந்து பார்த்தான்.
இசக்கியின் இடுப்பு லுங்கியை மேற்கூரையின் உச்சிக்கம்பம் கட்டியிருந்தது.
இடம் பொறுத்துப் பொருள் வேறு. இடுப்பில் கட்டினால் லுங்கி, கம்பத்தில் கட்டினால் கொடி.
அதுதான் இப்போது அபாய அறிவிப்பு.
சிவந்த கிழக்கின் உதயரேகைகள் கடல்நீரில் கவிதை எழுதின.
யார் முகத்திலும் சந்தோஷமில்லை. எல்லார் முகத்திலும் இறுக்கம். ஓ. படகின் மரணத்துக்கு மெளனாஞ்சலியா?
சலனமற்ற சித்திரங்களாய் - சப்தமற்ற வாத்தியங்களாய் அந்த ஆறு மனித ஜீவன்களும் சொல்லறுந்து செயலிழந்து துக்கப்பட்ட பொழுதிலே - வாழ்வின் சுமையறியாது, மரணத்தின் பயமுமறியாது அங்கே துள்ளிக் குதித்தாடிய ஜீவன் ஒன்றுண்டு.
அந்த ஏழாவது ஜீவன் - சுண்டெலி.
அது வால் தூக்குவதையும் வளைந்தோடு வதையும் கிரீச் கிரீச்சென்னும் ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு அது பல பாஷை பேசுவதையும் தங்களை மறந்து அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் - அங்கே நிலவிய அமைதி சகிக்காத தமிழ்ரோஜா ஆவேசம் கொண்டு கத்தினாள்.
என்னை எப்போது கரை சேர்க்கப்போகிறீர்கள்? சப்தம் கேட்டுப் பயந்த காற்று சற்றே ஒதுங்கி வீசியது.
அவள் தங்கத் தோள்களில் தடம்பதிய அழுத்திய கலைவண்ணன்- பொறுமையாய் இரு. பொறுமையாயிருந்தால் எதையும் சாதிக்கலாம்.
எதைச் சாதிப்பீர்கள்?
பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம் - அது பனிக் கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்
ஓர் இடைவேளைக்குப் பிறகு அவள் அழுகை தொடர்ந்தது.
அவள் கரம்பற்றி விரல் இடுக்கில் விரல் கோத்தவன் தன் அமைதிப்பணியை ஆரம்பித்தான். சோகம் தெரியாமல் துள்ளிக்குதிக்கிறது. நீயும் தற்காலிகமாய்ப் பகுத்தறிவை மறந்துவிடு. சோகத்தைச் சுண்டி எறிந்து ஒரு சுண்டெலியாகி விடு சுந்தரி..
படகின் விளிம்பில் வால்தூக்கி நின்ற சுண்டெலி அவளைப் பார்த்து வக்கணை காட்டியது.
அவளுக்கோ - பசித்தது. வாய்விட்டுக் கேட்க மனமில்லை. பொத்திவைத்த அழுகை பொத்துக் கொண்டது. --------------------------------------------------------------------- 10
மனிதன் நினைக்கிறான் - இந்தப் பிரபஞ்சமே தனது பிடியிலென்று.
வானம் இடிந்தாலும் பூமி பிளந்தாலும் ஊழிவெள்ளம் உயர்ந்தெழுந்து நட்சத்திரங்ளை நனைத்தாலும் தன் புகழ் அழியாதென்று தருக்கித் திரிகிறான்.
எனது புகழ் - எனது சாதனை - எனது இலக்கியம் - எனது பெயர் இவையெல்லாம் காலம் என்ற பரிமாணத்தின் கடைசி வரை, காலத்தையே வென்றுவாழும் என்று கனாக்காண்கிறான்.
ஆனால், பூமி அவனைப் பார்த்துப் பொறுமையாய்ப் புன்னகைக்கிறது.
இந்தப் பூமி பிறந்து இருநூறு கோடி ஆண்டுகள் இருக்குமென்பது ஆராயப் புகுந்தவர்களின் தோராயக் கணக்கு.
இதில் முதல் உயிர் முளைத்தது முன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதானாம்.
196 1/2 கோடி ஆண்டுகள் இந்தப் பூமி வெறுமையில்... வெறுமையில்... யாருமற்ற தனிமையில்.
காற்றின் ஓசையும் - கடலின் ஒலியும் - இடியின் பாஷையும் தவிர 196 1/2 கோடி ஆண்டுகள் வேறோன்றும் சப்தமில்லை.
முதல் உயிர் பிறந்தது முன்றரைக் கோடி ஆண்டுகட்கு முன்புதான் என்றால் குரங்கிலிருந்து மனிதன் குதித்தது 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்.
பூமியின் காலக்கணக்கில் மனிதன் என்பவன் ஒரு துளி.
இந்த இடைக்காலத்தில் இந்தப் பூமி என்னும் கிரகத்தில் எத்தனையோ ஜீவராசிகள் தோன்றித் தோன்றித் தொலைந்திருக்கின்றன.
மனிதன் என்பவனும் இந்தப் பூமி என்னும் கிரகத்தில் வந்துபோன ஒரு ஜீவராசி என்று நாளை வரலாறு பேசலாம்.
இதுவரை வந்த ஜீவராசிகளில் மனிதனே சிறந்தவனெனினும் - பூமியைப் புறங்காணும் புஜபலம் மிக்கவனெனினும் காலச்சூழலில் அவனும் காணாமல் போகலாம்.
எனவே இதில் நிலை என்றும் நிரந்தரமென்றும் சொல்வதெல்லாம் அறியாமையின் அடுக்குமொழிகளே தவிர வேறல்ல. வாழும் வாழ்க்கை வரை நிஜம். இருப்பதொன்றே இன்பம்.
இரை தேடுவதும் இரையாகாமல் இருப்பதுமே உயிரின் குணம்.
இன்பமே உயிரின் வேட்கை.
புலன்களின் தேவைகள் தீர்த்து வைப்பதே வாழ்தலின் அடையாளம்.
எனக்குப் பசிக்கிறது என்றாள் தமிழ் ரோஜா.
அப்படிக் கேளடி என் தங்கமே. மடியில் கிடந்தவளை இறக்கிவைத்துவிட்டு, உள்ளே ஓடிப்போய் மீனவர்கள் பயன்படுத்தும் பற்பசை கொண்டுவந்தான் கலைவண்ணன்.
விரலில் பசைபிதுக்கி ஈறுகளிலும் பற்களிலும் இழுக்கத் தெரியாமல் இழுத்து, கொஞ்சத் தண்ணீரில் அவள் கொப்பளித்துத் துப்பினாள்.
தட்டேந்தி வந்தான் சலீம்.
அதிலிருந்த பொங்கலுக்கும் சட்னிக்கும் வித்தியாசம் பிரித்தறியத்தக்க சாட்சியங்கள் இல்லாமல் அவள் தடுமாறினாள்.
அதை உருட்டி உருட்டி விழுங்கவைத்தது அவளை மிரட்டிக்கொண்டிருந்த பசி.
என்ன சலீம். கப்பல், படகு ஏதேனும் கண்ணுக்குத் தட்டுப்படுகிறதா?
அவன் சமையலை அவனே சாப்பிட்டதுபோல் முகம் கோணிநின்ற சலீம் உங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்றான்.
ஏன் கேட்கிறாய்? என்றான் கலைவண்ணன்.
நாற்பத்தைந்து கிலோமீட்டரை நான்கு நாட்களில் நீந்திவிட முடியாதா என்று பாண்டிக்கும் பரதனுக்கும் பட்டிமன்றம் நடக்கிறது.
சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். அவன் சொன்ன சொற்கள் மறையவில்லை.
கப்பலோ படகோ வரவில்லையென்றால் கரைசேர முடியுமா கலைவண்ணன்?
ஏதாவதொரு அதிசயம் நிகழ வேண்டும்.
அதிசயமா?
மேகங்களை விலக்கிக்கொண்டு சில தேவதைகள் வரவேண்டும். அல்லது திடீரென்று சிறகு முளைத்து இந்தப் படகே பறவையாக வேண்டும். அல்லது நீலக்கடல் வற்றி நிலமாக வேண்டும். அல்லது இந்துமகா சமுத்திரத்தில் இதுவரை இல்லாத எரிமலை ஒன்று கண்விழித்து, நிலத்தடி மண்ணை அள்ளிப் பொழிந்து மின்னல் வேகத்தில் ஒரு மேடு உண்டாக்க வேண்டும். அல்லது பால்கன் தீவு மாதிரி...
அது என்ன பால்கன் தீவு? - அவள் ஆர்வமானாள்.
ஆஸதிரேலியாவுக்குக் கிழக்கே இரண்டாயிரம் மைல் தூரத்திலிருந்த பால்கன் தீவு திடீரென்று மறைந்து விட்டது. பதின்முன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பளிச்சென்று மேலெழுந்தது. அப்படி இங்கே முழ்கிய தீவு ஏதேனும் முகம் காட்ட வேண்டும்.
அப்படிக்கூட நேர்வதுண்டா?
அங்கே நேர்ந்தது, இங்கே நேரவில்லை. இங்கு மட்டும் அப்படி நேர்ந்தால் - கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் மீண்டும் குதித்து வந்திருக்கும். தமிழர்களின் சாகாத நாகரிகத்துக்குச் சாட்சி கிடைத்திருக்கும். குணகடலின் இளவரசி என்று கொண்டாடப்பட்ட பூம்புகார் மீண்டும் பூத்து வந்திருக்கும். நேரவில்லையே. பால்கன் தீவுக்கு நேர்ந்த மறுபிறப்பு எங்கள் பழந்தமிழ் பூமிக்கு நேரவில்லையே. நேராது. கடலுக்குத் தமிழ்மேல் ஆசை.
வெயில் ஏறியது. வேறோரு வாழ்க்கைக்குப் படகு தயாராகிக் கொண்டிருந்தது.
மீனவர் ஒவ்வொருவரும் விசைப்படகின் விளிம்புக்கு வந்து வந்து கப்பலோ படகோ தெரிகிறதா என்று கடல்வெளியெங்கும் கண்களை வீசினார்கள்.
நல்ல செய்தி சொல்லிக் கரைவதற்கு ஒரு காக்கைகூடக் கண்ணுக்குத் தட்டுப்படவில்லையே.
வெயில் ஏற ஏற, உடம்பில் வேர்வையும் மனதில் சோர்வும் கசியக் கசிய அங்கங்கே உட்கார்ந்து உறைந்தார்கள்.
சோகமில்லாதது சுண்டெலி மட்டுந்தான்.
ஆறுபேர்க்கும் சேர்த்து அது சந்தோஷமாயிருந்தது.
சில்லென்று துள்ளிச் சில்மிஷம் செய்து - வேகமாய்த் தாவித்தாவி வித்தை காட்டி தன் பின்னங்கால்களைத் தளத்தில் பதித்து - முன்னங்கால்களாலும் வாலாலும் அபிநயம் புரிந்து வேடிக்கை காட்டி விளையாடியது. அஃறிணைகள் சாகும்வரை மகிழ்ச்சியாகவே இருக்கின்றன. மனிதன்தான் பாதி வாழ்க்கையிலேயே படுத்துவிடுகிறான்.
கீழே விழும்வரை ஒரு தென்னங்கீற்று காற்றோடு பாடும் சங்கீதத்தை நிறுத்திக் கொள்வதில்லை.
மரணத்தின் முன்நிமிஷம் வரை பட்டாம் பூச்சித் தன் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதில்லை.
ஒரு கலப்பையின்கொழு தன்னை இடறும்வரை ஒரு மண்புழு தன் தொழிலைக் குறைத்துக் கொள்வதில்லை.
எந்தப் பகுத்தறிவு, பிராணிகளைவிட்டு மனிதனைப் பிரித்துக் காட்டுகிறதோ அதே பகுத்தறிவுதான் கனவுகளால் நிராசைகளால் அவனை வருத்தியும் வைக்கிறது.
எங்கு பார்த்தாலும் நீலம். கீழும் மேலும் நீலம்.
பார்வை முடியும் பரப்பில் வந்து கவியும் வானவட்டம்.
தமிழ் எழு. தோழர்களுக்கு நாம் துணிவு சொல்வோம். வா. அவளைத் தாங்கி அழைத்துத் தளம் வலம் வந்தான்.
அவர்களைப் பார்த்ததும் அச்சடித்த சித்திரங்கள் அங்கங்கே அசைந்தன.
பாண்டி. பரதன். என்ன இது? படகே முழ்கிப் போன மாதிரி ஏன் முகம் கறுத்து நிற்கிறீர்கள்? எப்போதும் போலவே இருங்கள். இப்போது நம்மிடம் இரண்டு வாகனங்கள். ஒன்று படகு. இன்னொன்று நம்பிக்கை. படகு கவிழ்ந்தாலும் கரைசேர முடியும். நம்பிக்கை கவிழ்ந்தால் கரைசேர முடியுமா?
மீனவர் உதடுகளில் ஒரு வாடிய புன்னகை ஓடியது.
நாங்கள் வருந்துவது எங்களுக்காக அல்ல. சிக்கலில் உங்களையும் சிக்கவைத்துவிட்டோ மே. அதற்குத்தான்.
இது சிக்கல்தான். எல்லோரும் சேர்ந்து சிக்கெடுப்போம். ஒவ்வொரு படகிலும் தேசியக்கொடி பறக்க வேண்டுமாமே. கொடி எங்கே?
உள்ளே இருக்கிறது.
உடனே எடுங்கள். அபாயக்கொடி மட்டும் போதாது. அதற்குப் பக்கத்தில் அதைவிட உயரமாய் தேசியக்கொடியும் சேர்ந்து பறக்கட்டும்.
ஏன்? நாம் இந்து மகா சமுத்திரத்தில்தானே இருக்கிறோம். எதற்காகத் தேசியக்கொடி? என்றாள் தமிழ்ரோஜா.
இந்துமகா சமுத்திரம் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல. எந்த நாட்டுக் கடலும் கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர்வரைக்கும்தான் அந்த நாட்டுக்குச் சொந்தம். அதன் பிறகு வருவது பொதுக்கடல்.
எந்தக் கலமானாலும் அந்த நாட்டுத் தேசியக் கொடியைத் தாங்கியிருக்கவேண்டும். தேசியக்கொடி இல்லாதது கொள்ளைக்கலம் என்று கருதப்படும். நாம் சுடப்படலாம்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அபாயக்கொடிக்குப் பக்கத்தில் இந்தியாவின் தேசியக்கொடி பறந்தது.
ஏதோ ஒரு நம்பிக்கைமொழியைத் தேசியக்கொடி அவர்களோடு படபடத்துப் பேசியது.
பார்ப்போம், பாலைவனத்தைக்கூட மேகம் கடக்கிறதே. இந்தப் படகை ஒரு படகு கடக்காதா?
அவர்களின் திருடப்பட்ட சந்தோஷத்தின் முதல் தவணை திருப்பித் தரப்பட்டது.
தத்தித்தாவும் அலைகளில் தள்ளாடிக் கொண்டேயிருந்தது படகு.
இது என்ன கலத்தின் கீழே ஒரு தளம்? - பிள்ளைக்கேள்வி கேட்டாள் தமிழ்ரோஜா.
அது பனிக்கட்டிப்பெட்டி. அதுதான் மீன் கிடங்கு. பார் அங்கே. பிடித்த மீன்களைப் பதப்படுத்தி வைக்கப் பெட்டிப் பெட்டியாய்ப் பனிக்கட்டிகள். பெரிய கிடங்கு இது. இறங்கிப் பார்ப்போமா?
அவள் மறுத்தாள். அவன் இழுத்தான்.
வலக்கரத்தால் அவன் கரத்தையும் இடக்கரத்தால் தன் முக்கையும் பிடித்துக்கொண்டே அவள் இறங்கினாள்.
ஆறடி ஆழம், பதின்முன்றடி நீளம். பன்னிரண்டடி அகலம். அது சற்றே இலக்கணம் மீறிய சதுரம்.
குப்பென்று அடித்த மீன்வாசத்தில் நெஞ்சடைத்தது.
தொகுதி தொகுதியாய்ப் பனிக்கட்டிப் பெட்டிகள்.
அங்கங்கே இறைந்து கிடக்கும் சில்லறைப் பொருட்கள்.
தரையில் செதில்களின் பிசுக்கு. ஓரத்தில் இரண்டு பீப்பாய்கள்.
உள்ளறையில் பார்வை பரப்பிய தமிழ்ரோஜா கலைவண்ணன் கையிலிருந்து தன்னைக் கழற்றிக்கொண்டு - நீங்கள் மேலே போங்கள் நான் வருகிறேன் என்றாள்.
ஒன்றும் புரியாமல் விழித்தவன் சட்டென்று பிரகாசமாகி ஓ. அதுவா? என்று சிரித்து மேலே போனான்.
தளத்திற்கு வந்தான் மீண்டும் கடல்பார்த்தான், மீண்டும் வான் பார்த்தான்.
தலைக்குமேலே ஒரு பறவைக்கூட்டம் படபடவென்று சிறகடித்துப் பறந்து தூரத்து வானத்தில் தொலைந்தது.
ஓ பறவைகளே. நீங்கள் மட்டும் கரைக்குத் தகவல் சொல்லி ஒரு கலம் அழைத்துவந்தால் சாகும்வரைக்கும் நான் சைவனாயிருப்பேனே.
சற்றுநேரத்தில் தமிழ்ரோஜா செம்பருத்திப் பூவாய்ச் சில்லென்று பூத்து வந்தாள்.
மலர்ந்திருந்தது முகம், பொலிந்திருந்தது தேகம்.
திறந்த விழிகளால் வியந்துநின்ற கலைவண்ணன், பனியில் குளித்த பாரிஜாதமாய் வந்திருக்கிறாயே... எப்படி? என்றான்.
குளித்தேன் என்றாள்.
குளித்தாயா? தண்ணீர்..?
இரண்டு பீப்பாய்கள் இருந்தன. ஒரு பீப்பாய்த் தண்ணீர் போதவில்லை. இரண்டாவது பீப்பாயிலும் கொஞ்சம் எடுத்துக் குளித்தேன். அப்போதைக்கிப்போது அழகாய் இருக்கிறேனா?
அடிப்பாவி.
அதிர்ச்சியடைந்தான் கலைவண்ணன்.
குடிக்க வைத்திருந்த தண்ணீரைக் குளித்துவிட்டாயே தாயே - சலீம் அழுதான். --------------------------------------------------------------------- 11
சொல்லின் அர்த்தம் தீர்மானிப்பது சொல்லல்ல. இடம்.
ஒரே ஒரு முத்தம் கொடு . - இந்தத் தொடருக்குக் கட்டிலில் பொருள் வேறு. தொட்டிலில் பொருள் வேறு. பாடையில் பொருள் வேறு.
குளித்தல் என்பது ஒரு செயல்தான். அதற்குக் கரையில் பொருள் வேறு. நின்றுபோன கலத்தில் பொருள் வேறு.
குளித்தல் என்பது அங்கே சுகாதாரம். இங்கே துரோகம்.
உப்புத்தூளுக்குப் பதிலாய் வைரக்கற்களை அம்மியில் வைத்து அரைத்துவிடுகிற ஒரு குழந்தை மாதிரி - குடிநீர் என்று தெரியாமல் அதில் குளித்து முடித்த தமிழ்ரோஜா இப்போது அழுது அழுது அழுக்கானாள்.
ஆனால், அதுவும் நன்மையானது. உலகமகா யுத்தத்தில் முதல் குண்டு விழுந்தவுடன் சுறுசுறுப்படைந்துவிடும் ஒரு தலைநகரத்தைப் போல இருப்புக் கணக்கெடுக்கத் தயாரானது படகு.
எப்படியும் இரண்டொரு நாளில் கரை சேரலாம். ஆனாலும் ஆபத்தைத்தான் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.
மழைக்காலத்தில் கூடு கட்டிக் கொள்ளலாம் என்று தூக்கணாங்குருவி கோடையில் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது.
சரி... சரி... சரி பார். அரிசி எவ்வளவு? அள. காய்கறி எவ்வளவு? கணக்கெடு. நீ எவ்வளவுண்டு நிறு. எண்ணெய் - மிளகாய் - கடுகு எத்தனை நாள் வரும்? எண்ணிச் சொல். உலையில் குமிழி கொதிக்குமே. அப்படிப் படபடவென்று பேசி முடித்தான் பாண்டி.
இதோ பாருங்கள் பாண்டி. முன்று நாள் தேவைக்குத்தான் உணவுப்பொருள் கொண்டு வந்தோம். அதற்குள் திரும்பிவிடுவதாய்த் திட்டம். உண்மை சொல்கிறேன். உணர்ச்சிவசப்படாமல் கேளுங்கள். கொண்டு வந்த அரிசி 12 கிலோ. முன்று நாளைக்கு. 4 கிலோ வெந்தது போக, இருப்பு 8 கிலோ. தண்ணீர் 200 லிட்டர் கொண்டு வந்தோம். அதில் குடித்ததும் - குளித்ததும் போக எஞ்சியிருப்பது 80 லிட்டர். ரவை, மைதா இன்றுமட்டும் வரும். தக்காளி அழுகாமலிருந்தால் அடுத்த நாளைக்கும் வரும். இப்போது படகில் நிறைய இருப்பது டீசல் மட்டும்தான்.
இல்லை. நம்பிக்கையும்தான். கவலைஅறிக்கை வாசித்த சலீமைக் கலைவண்ணன் இடைமறித்தான்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னும் மழை இல்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னும் மழை இருக்கப் போவதில்லை என்ற வருந்தத்தக்க வானிலை கொண்ட பாலைவனத்திலும் காற்றின் ஈரப்பசையை உண்டு வாழும் தாவரம் உண்டு. சில நாட்களுக்காவது நாம் ஜீவிக்க முடியாதா? உணவு என்பது பழக்கம். உணவிருந்தால் மனிதன் உபரியாய்த் தின்கிறான். உபரியாய்க் குடிக்கிறான். ஒரு படகு தட்டுப்படும் வரை நாம் உடம்புக்காக உண்ண வேண்டாம். உயிரின் வேருக்கு மட்டும் கொஞ்சம் ஈரம் வார்ப்போம். சொல்லுங்கள்... இன்னும் ஆறு வேளைக்குத்தான் உள்ள இந்த உணவை அதிக வேளைக்கு நீட்டிப்பது எப்படி?
கேள்வியின் பயங்கரத்தில் அங்கே மையம் கொண்டதொரு மெளனம்.
படகின் தளக், தளக், ஓசை மட்டும் அந்த மெளனம் பார்த்துச் சிரித்தது. பரதன் அந்த மெளனத்தைக் கனைத்துக் கலைத்தான்.
இனிமேல் ஒரு நாளுக்கு ஒரு வேளைதான் உணவு. ஒரு டம்ளர்தான் தண்ணீர். சரிதானா?
அதை முதலில் ஒரு தைரியசாலி வழிமொழியட்டும் என்று எல்லோரும் பேசாமலிருந்தார்கள்.
சரி...
ம்...
ஆகட்டும்...
அப்படியே செய்வோம்... ஆண்களில் எல்லோரும் அவசரமாய் வழிமொழிய, தமிழ்ரோஜா மட்டும் உதடுதிறக்கவில்லை.
பத்துக் கண்களும் அவள் இரண்டு கண்களை மொய்த்தன.
இறுதியில் அவள் எண்ணத்தை எழுத்துக் கூட்டினாள்.
குடிப்பதற்குச் சரி... குளிப்பதற்கு..?
குடிப்பதற்கு ஒரு டம்ளர்தான் இருக்கிறது. நீ குளிப்பதற்கு ஒரு கடலே இருக்கிறது.
கலைவண்ணன் தன் வார்த்தைகளையும் அவள் உள்ளங்கைகளையும் ஒரே நேரத்தில் அழுத்தி உச்சரித்தான்.
எடுத்த முடிவு அடுத்த நிமிடத்தில் அமல்படுத்தப்பட்டது.
அதுவரை அரிசியை அளந்து சமைத்துக்கொண்டிருந்த சலீம் எண்ணிச் சமைக்க ஆரம்பித்தான். முன்பெல்லாம் உருளைக்கிழங்கை அவித்துத் தோலைஉரித்தெறிகிறவன், இப்போது அதிலும்கூடச் சத்திருக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொண்டான்.
யுத்தம் உயிரின் மதிப்பைக் குறைக்கிறது. பஞ்சம் உணவின் மதிப்பை உயர்த்துகிறது.
படகின் பின்விளிம்பில் மீண்டும் ஓர் அகதியின் போராட்டம் ஆரம்பமானது.
தமிழ்ரோஜா கண்ணீர்வற்றிய கண்களில் கோபம் குமுறியது.
இங்கே பஞ்சுமெத்தை இல்லை. பரவாயில்லை. தலையணை இல்லை. தவறில்லை. மீன் பிசுக்கடிக்காத போர்வை இல்லை. வருந்தவில்லை. என் குறைந்தபட்சத் தேவை, குளிப்பது. அதற்கும் வழியில்லை என்றால் நான் வாழ்வதா, சாவதா?
தமிழ். உனக்கின்னும் விளங்கவில்லை. குளிப்பதைவிட ஒரு பெரிய பிரச்னை வரும்போது குளிப்பது இரண்டாம்பட்சமாகிவிடும். இப்போது குளித்தல் என்பது உயிர்வாழ்தலின் அம்சமல்ல. குளித்தே ஆகவேண்டுமென்றால் கடலில் விழு. எழு. உனக்குள்ள குடிதண்ணீரில் ஒரு டம்ளர் ஒதுக்கித் துண்டை நனைத்துத் துடை. கரைசேரும் வரை டம்ளர்தான் உன் குளியல் அறை.
முடியவே முடியாது. என் உடம்பும் மனசும் நான் சந்திக்காத வாழ்க்கைக்குத் தயாராகாது.
உயிர்ஆசையிருந்தால் நிறம் மாறித்தான் தீரவேண்டும். இந்த விஷயத்தில் நீ விலங்குகளிடம் நிறைய விளங்கிக்கொள்ள வேண்டும்.
விலங்குகளா?
ஆமாம். கடல் விலங்குகள். இதோ, விரிந்து பரந்து செறிந்து நெகிழ்ந்து நிற்கிறதே இந்த நீலத்தண்ணீர்... இதற்குக் கீழே பவளம் மட்டுமல்ல. மனிதனுக்குப் பாடமும் இருக்கிறது. இந்தச் சூரியக்கதிர் இருக்கிறதே, இது 350 அடி ஆழம் வரைதான் தண்ணீர்துளைக்கும். அதற்குக் கீழே இருள்தான். இருள்தான். இந்தக் கடல் தோன்றிய நாள்தொட்டு இன்றுவரை அங்கே இரவுதான். ஆனால், அங்கே வாழும் பிராணிகள் இருளில் இறந்து போகவில்லை. ஸகுவிட்போன்ற பிராணிகள், தங்கள் உடம்பிலேயே வெளிச்சம் போட்டு உலவுகின்றன - தங்கள் சொந்தச் செலவில் சுயவெளிச்சம் போட்டுக்கொள்ளும் சில மனிதர்களைப்போல.
அப்படியா?
ஆமாம். எல்லாப் பிராணிகளுக்கும் இரண்டே லட்சியங்கள்.
என்னென்ன?
இரை தேடுவது. இரையாகாமல் இருப்பது. ஆக்டோ பஸ என்ன செய்யும் தெரியுமா?
தெரியாது.
எதிரி துரத்தினால் அதன் உடம்பு சில வண்ணத் திரவங்கள் கக்கும். கடல் நீரை நிறம்மாற்றி எதிரியின் கண்ணைக் குருடாக்கும். தண்ணீர் தெளிவதற்குள் தப்பித்தோடிவிடும்.
இந்தக் கதையெல்லாம் எனக்கெதற்கு?
சூழ்நிலையை வெற்றி கொள்ளும் சூத்திரம் தெரிய வேண்டும் உனக்கு. வாழ்க்கையை வாழப்பார். அல்லது வாழ்க்கைக்கேற்ப உன்னை வார்க்கப்பார். அழுவதுதான் அவமானமே தவிர - அவதி தாங்குதல் அவமானம் அல்ல. வெற்றி என்ற தேருக்கு எதிர்ப்பு, துன்பம் என்று இரண்டே சக்கரங்கள். சிரமம் வாழ்வின் சேமிப்பு. வளையாத அம்பின் சக்தி என்பதென்ன? வளைந்த வில்தானே. சந்தர்ப்பம்தான் சக்தி தருகிறது.
எல்லாம் கற்பனாவாதம். அவள் கத்திமுடித்துக் காது பொத்தினாள்.
அவன் நெருங்கி உட்கார்ந்தான். அவள் ஒதுங்கி உட்கார்ந்தாள்.
நீங்கள் மனிதகுல மீட்சிக்காகப் பேசுகிறீர்கள். எனக்கோ ஓட்டைப் படகிலிருந்து உடனே மீட்சி வேண்டும். இப்போது எனக்குத் தனிமை வேண்டும். விட்டுவிடுங்கள். என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள். அவள் சத்தமிட்டுப் பின்னேறினாள்.
உழக்கில் என்ன கிழக்கு மேற்கு? முட்டையில் என்ன வட துருவம் - தென் துருவம்? நாற்பத்தொன்பதடி நீளம் கொண்ட சின்னப் படகில் என்ன தன்னந்தனிமை?
அவன் முனகிக்கொண்டே எழுந்து நடந்து முன்விளிம்பில் கலந்தான்.
தனிமை. வெறுமை. பெயர் தெரியாத ஒரு கிரகத்தில் வழிதெரியாமல் விழுந்தவர்களைப்போல் ஒரு பிரமை.
அந்தப் படகின் ஒரே ஓர் ஆறுதல் தாளிப்பு வாசனைதான்.
அளந்து வைத்த சாப்பாடு. ஆளுக்கொரு மீன். சாப்பாட்டின் கடைசியில் மிச்சமானது போல் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் குழம்பு. ஒரே ஒரு தட்டில் மட்டும் சாப்பாடும் சாம்பாரும்.
எல்லாச் சோற்றையும் பசிபிசைந்தது.
தமிழும் பிசைந்தாள். அவசரத்தில் பிசைந்ததில் சோற்றின் சூட்டில் அவள் ரோஜாத்தோல் வெந்தது. உருட்டிய கவளத்தை எல்லோரும் உண்ணப்போனபோது - நிறுத்துங்கள் என்று சத்தமிட்டுக் கத்தினான் சலீம்.
அதிர்ச்சியில் யாரும் அசையவில்லை.
ஒவ்வொருவர் பங்காய்க் கொஞ்சம் கொஞ்சம் சோறு கொடுங்கள்.
அவன் இரு கை ஏந்தினான்.
ஏனென்று யாரும் கேட்கவில்லை.
விசாலமாய் விசாரிக்க அவர்களின் பசிக்குப் பொறுமை இல்லை.
எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தார்கள்.
இரு கைகள் ஏந்தியும் ஒரு கையும் நிரம்பவில்லை.
வசூலித்த சோறெடுத்து உள்ளே ஓடினான்.
ஓடிய வேகத்தில் உடனே திரும்பினான்.
சுண்டெலிக்குச் சோறு கொடுத்துவிட்டேன். எல்லோரும் சாப்பிடலாம் என்று கூவினான். அவர்கள் கோரஸில் புன்னகைத்தார்கள்.
தமிழ். சாப்பாடு எப்படி? கலைவண்ணன் கண்ணடித்தான்.
சாம்பார் - சோறு இரண்டில் ஏதோ ஒன்றில் உப்பில்லை. எது என்று தெரியவில்லை.
அதுவரை அமைதியாயிருந்த பாண்டி அதிர்ந்தெழுந்தான். சாப்பிடுவது பிச்சைச் சோறு. இதில் உப்புப் பார்ப்பது உங்கள் தப்பு.
வாயிலிருந்த சோற்றைக் கலைவண்ணன் தட்டில் துப்பினான். பாண்டி. இதுவரை உங்கள் வார்த்தை தடித்ததில்லையே. நாங்கள் தன்மானிகள். ஞாபகமிருக்கட்டும். எங்கள் உடம்பில் ஓடுவது தமிழ்ரத்தம்.
எங்கள் உடம்பில் ஓடுவது மட்டும் இங்கிலீஷ ரத்தமா? தமிழ்ரத்தம்தான். உரத்துப்பேசினான் பாண்டி.
கொடுப்பது இலவசம். அதிலென்ன நவரசம்? இசக்கியும் சேர்ந்து கொண்டான்.
இவர்கள் கால்வைத்த நேரம் படகு பழுதாகிவிட்டது. பரதன் பழிபோட்டான்.
விசைப்படகின் விளிம்பில் அமர்ந்திருந்த கலைவண்ணன் எழுந்து நின்றான். இப்படியெல்லாம் அவமானப்படுத்தினால் நான் கடலில் குதித்துவிடுவேன்.
நீயென்ன குதிப்பது? நாங்களே தள்ளிவிடுகிறோம்.
மீனவர் முவரும் எழுந்து கலைவண்ணன் நெஞ்சில் கைவைத்து அழுத்தினார்கள். அவன் திமிறினான்.
வேண்டாம். வேண்டாம்.
தமிழ்ரோஜா ஆடும் படகில் ஆடிக்கொண்டே ஓடி வந்தாள். அதற்குள் முவரின் மிருகபலமும் கலைவண்ணனைப் புரட்டிக் கடலில் தள்ளியது.
உள்ளே விழுந்தவன் முழ்கினான். வெளிவந்தான். மிதந்தான். மறைந்தான், கைகால்கள் உதறினான், நீர் குடித்தான், நிலை மறந்தான்.
காப்பாற்றுங்கள் என்று சைகை செய்தான் யாரும் அவனைக் காப்பாற்ற முனையவில்லை.
அய்யோ. அய்யய்யோ. அவரைக் காப்பாற்றுங்கள் - தமிழ் ரோஜா கதறினாள்.
எல்லோரும் இறுகி நின்றார்கள், யாரும் இரங்கவில்லை.
தண்ணீரில் தத்தளித்தவன் முழ்கிவிடுவான் போலிருந்தது.
அவன் ஏதேதோ உளறினான். தண்ணீர் குடித்துத் தமிழ்பேசியதில் ஒன்றும் புரியவில்லை.
அவ்வளவுதான். அவன் தன் சுயபலம் இழந்துவிட்டான் போல் தோன்றியது.
காப்பாற்றுங்கள், தயவுசெய்து காப்பாற்றுங்கள்.
அவர்கள் மசியவில்லை முதுகுதிருப்பிக் கொண்டார்கள்.
தொப்பென்று சத்தம் கேட்டது., திரும்பிப் பார்த்தார்கள்.
தமிழ்ரோஜாவைக் காணவில்லை.
குதித்தவள் அவள்தான். --------------------------------------------------------------------- 12
என்னை மன்னித்துவிடு தமிழ். நானே இயக்கிய நாடகத்தில் நீமட்டும்தான் நிஜமான பாத்திரம்.
மன்றாடிக் கேட்கிறேன். மன்னித்துவிடு.
மொட்டுக்களை உடைத்துவிட்டதற்காகச் செடியிடம் தென்றல் மன்னிப்புக் கேட்பதில்லை.
சிவக்கச் சிவக்கச் சுட்டுவிட்டதற்காகத் தங்கத்திடம் நெருப்பு மன்னிப்புக் கேட்பதில்லை.
தண்ணீரில் உன்னைக் குதிக்கவைத்ததற்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்.
தென்றல் முட்டியது - மொட்டுக்களை மலர்த்த. நெருப்பு சுட்டது - தங்கம் நகையாக.
நாடகமாடி நாங்கள் தண்ணீரில் உன்னைக் குதிக்கவைத்தது - உனக்குள் உறங்கும் வீரத்தை உசுப்ப.
தைக்கும் பருத்தித் துணியைத் தண்ணீரில் ஊறப் போடும் ஒரு தையற்காரனைப் போல் - உன்னை வேண்டுமென்றே நனைத்தேன். இப்போது சொல். எப்படி வந்தது இந்தச் செப்படி வித்தை?
அலைகண்டு மயங்கிவிழும் நீ ஆழ்கடலில் குதித்ததெப்படி?
அச்சம் என்பது ஒரு நினைப்பு நிலை. மறந்தால் அச்சமில்லை.
என்னைக் காப்பாற்றும் அவசரத்தில் நீ தன்னை மறந்து தாவிக் குதித்தாயே. அதுதான் இத்தனை நாளாய் உனக்குள் உறக்கநிலையில் இருந்த சக்தி.
உன் பங்களாவாசத்தில் உறங்கிக் கொண்டிருந்த சக்தி. வங்காளவிரிகுடாவில் விழித்திருக்கிறது. மீண்டும் உறங்கவிட்டு விடாதே.
இதோ. சொட்டிக் கொண்டிருக்கும் உன் ஆடையின் ஈரம் வடிய வடிய உன் அச்சமும் வடிந்துவிட வேண்டும். வடிந்தே தீரும்.
ஏ தெப்பமாய் நனைந்துபோன சிற்பமே. கவிழ்ந்த தலை நிமிர்ந்து பார். கண்ணெடுத்துப் பார்.
நல்ல நடிகர்கள் நம் மீனவ நண்பர்கள்.
வாத்தியாரின் நோட்டில் கிறுக்கிவிட்ட மாணவர்களைப் போலக் குற்ற உணர்ச்சியில் அவர்கள் குறுகிநிற்பது பார்.
என்னை மன்னிப்பாயோ... மாட்டாயோ... அவர்களை நீ மன்னிக்கத்தான் வேண்டும்.
அவர்களை ஏன் நான் மன்னிக்க வேண்டும்?
முழங்காலில் முகம்புதைத்துத் தண்ணீர் சொட்டக் குனிந்திருந்த தமிழ், பளிச்சென்று நிமிர்ந்தொரு பட்டாசு வெடித்தாள்.
எல்லோரும் தவித்துநிற்க, அவளே தொடர்ந்தாள். அவர்களுக்குரியது மன்னிப்பல்ல. நன்றி.
நன்றியா? எதற்கு?
என் பயத்தைக் கடல்நீரில் கழுவினார்களே. அதற்கு.
எனக்குள்ளிருந்த வீரத்தை எனக்குத் தெரியாமல் விழிக்க வைத்தார்களே. அதற்கு.
என்னையும் உங்களையும் காப்பாற்றிக் கலம் சேர்த்தார்களே. அதற்கு.
கொஞ்சம் கொஞ்சம் புரிகிறதெனக்கு. பொறுங்கள். நான் முழுப்பெண்ணாக முயன்று பார்க்கிறேன்.
அவள் பேசப் பேச, அத்தனை முகங்களிலும் ஆச்சரியப் புன்னகை.
ஓ.
முதல் வெற்றி.
முன்று சூரியன்கள் தொலைந்துவிட்டன. முன்று நிலவுகள் விழுந்துவிட்டன. ஆனால், அவர்களின் கண்ணுக்கெட்டியமட்டும் கப்பலோ படகோ தட்டுப்படவில்லை.
மேலே ஏற்றிய தேசியக்கொடிகூடப் பறந்து பறந்து படுத்துவிட்டது.
அபாயக்கொடியான லுங்கி அவிழ்ந்துகொண்டது.
பீப்பாயிலும் அவர்கள் உடம்பிலும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது.
உணவைப் போலவே உரையாடலும் மெள்ள மெள்ள சுருங்கிவிட்டது.
பார்வைகளால் மட்டுமே ஒருவரை ஒருவர் நலம் கேட்டுக்கொண்ட ஊமை வாழ்க்கை அங்கே தொடங்கிவிட்டது.
அசைந்தால் சக்தி செலவாகுமென்று கலைவண்ணன் மடியில் சலனமின்றிக் கிடந்தாள் தமிழ்ரோஜா.
அவள் தங்கத்தோல் மங்கத் தொடங்கிவிட்டாலும் அவள் முகத்தில் மட்டும் தைரியரேகைகள்.
அவள் நெற்றியில் புறப்பட்ட அவன் சுட்டுவிரல், புருவமத்தியிலும் முக்கின் பள்ளத்தாக்கிலும் முக்கின் சிகரத்திலும் பயணப்பட்டு - மேலுதட்டில் குதித்து - கீழுதட்டில் தாவி - நாடிப் பள்ளம்விட்டு நகர்ந்து - அவள் பிஞ்சுக் கழுத்தில் பிரயாணம் முடித்துச் சற்றே யோசித்துச் சட்டென்று நின்றது.
அதற்குமேலும் எதிர்பார்த்தவள், விரலின் வேலைநிறுத்தம் உணர்ந்து விழித்துக்கொண்டாள்.
தமிழ். அடியே தமிழ். என் உயிரின் திடப்பொருளே. இந்தப் பிரபஞ்சத்தின் என் பங்கே. உனக்குத்தான் என்மேல் எத்தனை ஆசை.
கடல் வீழ்ந்தான் காதலன் என்று கண்டதும் நீ தன்னை மறந்தாய். தன் நாமம் கெட்டாய். தண்ணீர்பயம் களைந்தாய். நீச்சல் தெரியாதென்பதை நினைவிலிருந்து அழித்தாய். எப்படியடி குதித்தாய்?
என் இரண்டாம் உயிரே.
காவிரி கொண்டுபோன ஆட்டனத்தியை மீட்க ஆதிமந்திகூட வெள்ளத்தில் விழவில்லை. கரையில் நின்று அழுதுதான் காவியைக் கரிக்கவைத்தாள். நீயோ கடல்குதித்தல்லவா காதலனை மீட்க நினைத்தாய். எப்போது என்னுயிர் காக்க நீ தண்ணீரில் குதித்தாயோ - அப்போதே நாம் சாவென்ற சம்பவத்தைத் தாண்டிவிட்டோ ம்.
ஐம்பூதங்கள் தந்த இந்த உடலை நாளை ஐம்பூதங்களும் பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், மரணம் என்ற பெளதிகச் சம்பவத்தால் நாம் மரிக்கப் போவதில்லை.
சூரியன் சுடரும்வரை அதன் ஏதாவதொரு கிரணத்தில் நம் கண்ணொளி கலந்திருக்கும். காற்றின் சுழற்சியில் நாம் விட்டுவிட்டுப் போகும் சுவாசம் இழைந்திருக்கும்.
அந்த நிலப்பரப்பில் நாம் பதித்த சுவடுகளைக் காற்றின் கரங்கள் அழித்துவிட்டாலும், நம் உள்ளங்கால்களின் உஷணத்தை அது பத்திரமாகவே பாதுகாத்து வைத்திருக்கும்.
காதல் என்ற அருவத்தின் உருவங்கள் நாம். தடயங்கள் அழியலாம். தத்துவங்கள் அழிவதில்லை.
அவன் பேசிக்கொண்டேயிருக்க - அந்தப் பேச்சுப் பாடகனை அவள் கேட்டுக்கொண்டேயிருக்க - வீசிக் கொண்டேயிருக்கும் காற்றோசை மட்டும் அவனை ஆம் ஆம் என்று வழிமொழிந்தது.
இன்னொரு மோசமான இரவும் முடிந்தது. லுங்கிக்குள் கூட்டுப் புழுக்களாய் அங்கங்கே சிதறிக் கிடந்தனர் மீனவர்கள்.
எழுந்திருங்கள். தயவுசெய்து எல்லோரும் எழுந்திருங்கள்.
என்ன இது, வித்தியாச விடியல். யார் குரல் இது?
புரண்டுபடுத்துச் சோம்பல் முறித்தவர்கள் ஒரு கண் திறந்து பார்த்தார்கள்.
இது என்ன, தேநீர்க் கோப்பைகளோடு ஒரு தேவதை. எல்லோரும் சோர்வுதுடைத்துச் சுறுசுறுப்பானார்கள்.
அம்மா. நீயாம்மா? ஆச்சரியம் காட்டினார்கள்.
நானே தயாரித்தேன்.
எல்லோருக்கும் தேநீரை அவளே நீட்டினாள்.
பாண்டியும் இசக்கியும் கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தார்கள்.
ம்.. வாங்கிக் கொள்ளுங்கள். நானும் உங்கள் வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டேன்.
தேநீர் கறுத்திருந்தது. அவள் சிரிப்பு பால் கலந்தது.
கலைவண்ணன் கைதட்டினான்.
வா. வாழ்க்கைக்குள் இப்படி வா. இடி-மழை இரண்டுமே வாழ்க்கை.. மழைக்கு வாய்திறக்கும் பூமி, இடியை ஏற்க மாட்டேன் என்றால் எப்படி?
தமிழ். இதுதான் சரி. இப்போதுதான் நீ மனிதராசியில் சேருகிறாய்.
கொடு உன் தேநீரை. அது விஷமாயிருந்தாலும் குடித்துவிடுகிறேன்.
நான் விழுந்தால் கடல்நீர் குடிநீராகும் என்றீர்கள். நான் தயாரித்தால் விஷம்கூட அமுதமாகாதா?
அமுதத்தின் நிறம் கறுப்பல்ல.
அவன் குடித்தான். அவள் சிரித்தாள். சிரிப்பு மட்டுமே ருசியாயிருந்தது.
அது நான்காம் பகல்.
ஒரு படகும் தெரியவில்லை. கட்டுமரங்களும் தட்டுப்படவில்லை.
கப்பலின் அடையாளமாய் அவர்களின் தலைக்கு மேலே இருந்த வானத்தில் ஒரு புகைக்கோடுகூட விழவில்லை.
அவ்வப்போது சிறகடிக்கும் பறவைக் கூட்டங்கள் மட்டுமே ஏதோ ஒரு நம்பிக்கையை எழுதிப்போயின.
வானத்தில் திட்டுத்திட்டாய் மேகங்கள் படகில் திட்டுத்திட்டாய் சோகங்கள்.
நாம் என்ன துரோகம் செய்தோம்? இந்தக் கடலுக்கு நம்மேல் கருணை இல்லையா? தமிழ்ரோஜா இளைத்த குரலில் பேசினாள்.
ஐந்து கண்டங்களுக்கே கருணைகாட்டும் கடல் நம் ஆறு பேருக்குக் கருணைகாட்டாதா? பொறு தோழி பொறு.
கண்டங்களுக்குக் கருணையா?
ஆமாம். கடலடியில் இரண்டு நீரோட்டங்கள். ஒன்று வெப்ப நீரோட்டம், இன்னொன்று குளிர்நீரோட்டம். கடலின் வெப்ப நீரோட்டம் தான் ஸவீடன், நார்வே போன்ற நாடுகளைக் கொஞ்சம் சூடுபடுத்தி வைத்திருக்கிறது. இல்லையென்றால். கிரீன்லாந்தைப் போல அந்த நாடுகளும் பனிப்பாலைகளாய் இருந்திருக்கும்.
கடல் வெறும் கடலல்ல கருணைக்கடல் அது இன்னொரு கருணையும் புரிகிறது. பூமியின் தட்பவெப்பத்தை வாங்கிப் பகிர்ந்தளிக்கும் வங்கி அது.
பூமத்திய ரேகைக்கு அருகில் கிடைக்கும் வெப்பத்தைத் துருவப் பிரதேசங்களுக்கும் - துருவப் பிரதேசங்களின் குளிரை பூமத்திய ரேகைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.
இத்தனை வேலை செய்யும் கடலுக்கு நமக்கு ஒரு படகு மட்டும் அனுப்பத் தெரியாதா? அவள் சுருதி குறைந்து பேசினாள்.
அதுவரை அமைதிகாத்த படகின் முன்விளிம்பில், உச்சக்குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது.
என் பங்கு மட்டும் ஏன் குறைகிறது? இது என்ன மிச்சச் சோறா? எச்சில் சோறா? நீ கொடுக்கும் குழம்பு பத்துப் பருக்கை நனைக்கவே போதாது. இதைச் சாப்பிடுவதை விடச் சாப்பிடாமலே இருக்கலாம்.
எட்டிப்பார்த்தார்கள்
இசக்கி.
இருவரும் முன்விளிம்பு நோக்கி முன்னேறினார்கள்.
சற்றே மெளனம் சாதித்த சலீம் வாய்திறந்தான்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாளை முதல் சாப்பிடமுடியாது. இன்னும் இருப்பது அரைகிலோ அரிசிதான். இருபது லிட்டர் தண்ணீர்தான் என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.
அது எல்லோரும் எதிர்பார்த்ததுதான், எதிர்பார்த்து வந்தாலென்ன - எதிர்பாராமல் வந்தாலென்ன - இடி இடிதான்.
என்ன செய்யலாம்?
ஒரு முடிவுக்கு வந்தபிறகு பாண்டி அந்த மெளனத்தில் கல்லெறிந்தான்.
சொல்கிறேன், கேளுங்கள். அந்த அரைகிலோ அரிசியைச் சோறாக்கிவிடலாம். ஆனால், அந்தச் சோற்றை யாரும் சாப்பிடாமல் நீருற்றி வைக்கலாம். அந்தக் கஞ்சித் தண்ணீர்தான் நம் உணவு, ஆளுக்கு அரை டம்ளர். சோற்றில் நீர் குறையக் குறைய நீர் மட்டும் ஊற்றிக் கொண்டேயிருக்காலாம். என்ன சொல்கிறீர்கள்?
மீண்டும் அங்கே மெளனம் நிலவியது.
அந்த மெளனம் என்பது சம்மதமில்லை, ஆனால் சம்மதிக்காதிருப்பது அங்கே சாத்தியமில்லை. கொஞ்சநேரத்தில் அவர்களின் அரைகிலோ நம்பிக்கை உலையில் கொதிக்கத் தொடங்கியது.
அன்று நள்ளிரவில் தேய்பிறை நிலவின் அழும் வெளிச்சத்தில் .. தூக்கம் வராமல் புரண்ட ஓர் உருவம் மட்டும் மெள்ள எழுந்தது.
உறங்கும் உருவங்களை உறுதி செய்து கொண்டு பூனையின் பாதங்களால் நடந்தது.
சமையல் அறையில் நுழைந்து கஞ்சிப்பாளையில் கைவிட்டது.
அவ்வளவுதான்.
திருட்டுநாயே. இன்னோர் உருவம் அதைப் பாய்ந்துபிடித்துக் கடல்கிழியக் கத்தியது.
|