LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1325 - கற்பியல்

Next Kural >

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தவறு இலராயினும் தாம் வீழ்வார் மெல்தோள் அகறலின் - ஆடவர் தம்மிடத்துத் தவறல்லாதவராயினும் உடையார்போல வூடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களினின்று சிறிது போழ்து நீங்கியிருத்தலால்; ஆங்கு ஒன்று உடைத்து அவ்வூடல் அவர்க்கு அத்தகையதோரின்பம் பயத்தலுடையது. ஆடவர்பால் தவறிருப்பினும் இல்லாவிடினும் ஊடலெல்லாம் உணர்த்தப்பட்டுப் பேரின்பம் கூடலில் முடிவதால், அதனால் எவ்கையிலுங் கேடில்லையென்பான் 'தவறிலராயினும்' என்றும் , அதனாலுண்டாகும் இன்பம் சொல்லொணாது அளவிறத்தலின் 'ஆங்கொன்று' என்றும் , கூறினான். தவறின்றி யூடியதும் எனக்கின்பமாயிற் றென்பதாம்.
கலைஞர் உரை:
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.
Translation
Though free from fault, from loved one's tender arms To be estranged a while hath its own special charms.
Explanation
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
Transliteration
Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol Akaralin Aangon Rutaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >