அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து கட்சிகள் பெறக்கூடிய நன்கொடையின் அளவை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
அரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது ரூ.20 ஆயிரம் வரை நன்கொடையாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கணக்கு காட்ட தேவை இல்லை. ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை வாங்கினால் மட்டும் கணக்கு காட்ட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29சி - 1951 ன்படி இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ‘நன்கொடை பெறுவதில் அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக நன்கொடை வாங்குவதில் கட்டுப்பாடுகள் தேவை. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29 சி.யில் திருத்தம் செய்ய வேண்டும்’
இவ்வாறு கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இப்போது மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
அதில், ‘அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் வரை கணக்கு காட்டாமல் நன்கொடை பெறலாம் என்பது முறைகேடுக்கு வழி வகுக்கும். ஏனெனில், இதை ரொக்கமாக வாங்கவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அதுபோன்ற நிலைமையைத் தடுக்க, இந்த நன்கொடையின் அளவை ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
|