தமிழகத்திலும் புதிதாக 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் 55 இடங்களை அடையாளம் கண்டு, அங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கான நிறுவனங்களையும் மத்திய அரசு தேர்வு செய்து இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
அதன்படி ஓ.என்.ஜி.சி. (இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும், வேதாந்தா நிறுவனத்துக்கு மற்ற இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்து ஆகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் என்ற இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டம் நடந்ததால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான், தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.
|