திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு மாற்றாக, இந்தியாவில் இன்னொரு ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெகு நாட்களாக முயற்சித்து வருகிறது. அதற்கு, சரியான இடமாக தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு அருகில் உள்ள குலசேகரப்பட்டினம் இருக்கும் என கண்டறியப்பட்டு, அங்கு, ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என, மகேந்திரகிரியில் இருக்கும் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்து இருந்தனர்.
தென் தமிழகத்தில் இப்படியொரு ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் உப தொழில்கள் குலசேகரப்பட்டினத்தை சுற்றிலும் வருவதோடு, படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பல்வேறு கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் அறிவிப்பை, வரும் 19-ந் தேதி, கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தென் தமிழகத்தின் பொருளாதார மேம்பாடு வேகமாக உயரும் என கூறப்படுகிறது.
|