|
|||||
சேலம் அரசுப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை! |
|||||
சேலம் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் ஓவியம், நடனம், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். உடல் குறைபாடு என்பது மனிதனின் வெற்றிப் பயணத்திற்கு ஒரு தடை அல்ல. அதுவும் அவர்களுக்கு ஒரு அடையாளம் தான். கிராமங்களில் ஏராளமான மாற்றுத்திறன் சாதனையாளர்கள் உள்ளனர். அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறுவதை விட, தங்கள் மீதான பிறரின் சிந்தனையை மாற்றும் திறனாளிகள் என்றே கூறவேண்டும். அந்த வகையில் ஓவியம், நடனம், விளையாட்டு என்று தங்களால் முடிந்த சாதனைகளை படைத்து வருகின்றனர் சேலம் அருகே உள்ள வலசையூர் அரசுப்பள்ளி மாணவர்கள். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி என்னும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில், 21 ஒன்றியங்களில் 300 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 580க்கும் அதிகமான மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் சேலம் வலசையூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், கலை, ஓவியம், விளையாட்டு என அசத்தி வருகின்றனர். கண் பார்வையற்ற 6 பேர், காது கேளாதோர் 9 பேர், வாய் பேச முடியாத, காது கேளாத மற்றும் கைகளை இழந்த ஒருவர் உள்பட 17 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில், 2 பேர் எஸ்எஸ்எல்சி, 3 பேர் பிளஸ் 1 மற்றும் 8 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜா இரு கைகளும் செயலிழந்த நிலையில், வாய் பேசமுடியாத, காது கேட்க முடியாத துயரத்தை கொண்டு உள்ளார். ஆனால், திறமைக்கு இதெல்லாம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தனது இரு கால்களால் ஓவியங்களை தீட்டி அசத்துகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் இப்பள்ளியில் சேர்ந்து உள்ளார். விரைவில், மாநில அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்கவுள்ள இவரின் திறமையைப் பாராட்டி, கலெக்டர் ரோகிணி பரிசும் வழங்கி உள்ளார். சக மாணவர்களுடன் ஓட்டத்திலும் முந்தும் இவர், பயிற்சியாளர்களே தடுமாறும் பத்மாசனத்தை மிக எளிதாகச் செய்து முடிக்கிறார். மாற்றுத்திறன் மாணவர்கள் சாதிக்க, விளையாட்டு ஒன்றும் விதிவிலக்கு அல்ல எனக் கூறுகிறார், இதே பள்ளியில் 12- ம் வகுப்பு படிக்கு மாணவர் கவுதம். பார்வையற்றவரான இவர், சத்தமில்லாமல் ஜூடோ போட்டியில் சாதிக்கிறார். கடந்த மாதம் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற இவர், வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். கலைத்துறையில் சாதிக்க விரும்பும் கேசவமூர்த்தி நடனத்தில், வியக்க வைக்கிறார். பிளஸ் 2 படித்து வரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், நடனமாடி அனைவரது பாராட்டையும் பெற்று உள்ளார். இதேபோல், பிளஸ் 2 படிக்கும் காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவன் மகேந்திரன் கம்யூட்டரை கையாள்வதில், ஆசிரியரையே மிரள வைக்கிறார். 9ம் வகுப்பு படிக்கும் பிரேம்குமார் என்பவரும், ஓவியத்தில் தனித்திறனை கொண்டு சிறந்து விளங்குகிறார். இது குறித்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் அமிர்தவள்ளி கூறியதாவது: ‘‘கடந்த 10 வருடமாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலவழிகளை காட்டும் தூண்டுகோலாக இருந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளை தனிமைப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டுள்ள அவர்கள், ஒன்றாக விளையாட்டு, உணவு பரிமாற்றம் என ஊக்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். இப் பள்ளியை விட்டு வெளியே சென்ற பலர் எம்.காம்., பி.காம்., மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து, நிரந்தர பணியில் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் முயற்சிகளுக்கு துணையாக நின்றால், நாளைய சாதனையாளர்களாக நிச்சயம் மிளிர்வார்கள். இந்த எண்ணம் அனைவருக்கும் இயல்பாக ஏற்பட வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 11 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|