LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- புதுமைப்பித்தன்

தேக்கங் கன்றுகள்

 வில்லி ஸ்டேதம் ஆக்ஸ்போர்டை விட்டு வெளியேறியவுடன் ‘இம்பீரியல் பாரஸ்ட் (forest) ஸர்வீஸி’ல் இரண்டு வருஷங்கள் தன்னை இந்தியக் காடுகளுக்காகத் தயாரித்துக்கொண்டது வரை, நமக்கு அவ்வளவு கவலையில்லை. இங்கிலாந்தின் மூடுபனிகளுக்கும் தனது உள்ளத்தைக் கவர்ந்த அந்த டைப்பிஸ்ட் நங்கைக்கும் விடைபெற்றுக்கொண்டு, ‘ஜிஹாங்கரி’ல் கால் வைக்கும்பொழுது சிறு பையனின் களை சற்றாவது மாறவில்லை. சிரித்த கண்களும், நகைச்சுவை ஒளிந்த உதடுகளும், யாரையும் விரைவில் நண்பனாக்கிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. பம்பாய் துறைமுகத்தில் கால் வைத்த ஐந்தாவது மாதத்திலேயே D.F.O. ஆனதில் ஒரு ரகஸியம். இவர் தகப்பனாரின் நண்பர் கர்னல் ரௌபாதத்தின் – மூத்த ஸ்டேதமும், இவரும் போயர் யுத்தத்தில் தோளோடு தோள் நின்ற வீரர்கள் – உதவி கொஞ்சம் உண்டு. தனது ஆக்ஸ்போர்ட் நடை நொடி பாவனைகளை, விஷக் காய்ச்சல் பிடித்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஊளையிடும் நரிகளுக்கும், புஸ்தகத்தை ஒப்பிப்பதுபோல் பேசும் இந்திய ரேஞ்சர்களிடத்தும் காண்பிக்க வேண்டும் என்று நினைக்கவேயில்லை.

முதன்முதலில் அவருக்கு மரங்களைச் சுற்றிப்பார்ப்பதும், வெட்டப்பட்ட மரங்களையும் ரேஞ்சர்களையும் தணிக்கை செய்வதும், அங்கு கிடைக்கும் பெரிய வேட்டைகளை ஆடுவதும் வெகு உத்ஸாகத்தைத் தந்தபோதிலும், கொஞ்ச நாட்களில் புளித்துப் போய்விட்டது. ஆனால் அங்கே தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண் – அவளில்லாவிட்டால் வில்லியின் ராஜினாமா முந்தியே கவர்மெண்டுக்குக் கிடைத்திருக்கும்.

இரண்டு வருஷங்கள் சிட்டாகப் பறந்தன. வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் ‘ஹோமிற்கு’ப் போக வேண்டும். வரும்பொழுது அந்த டைப்பிஸ்ட் தன் பெயரை மாற்றிக்கொள்வாள். பிறகு கேட்பானேன்! குதூகலந்தான்.

*****

உலாந்தி ரேஞ்ச், மலேரியா, யானை, தேக்கு மரம், இத்யாதிப் பொருள்கள் அபரிமிதமாகக் கிடைக்கும் ஸ்தலம் என்பது காட்டு இலாக்கா மான்யுவலின் கொள்கை. மலேரியாவிற்கு மட்டும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். போக்குவதற்குத்தான் அதன் உதவி தேவை.

ரேஞ்ச் ஆபீஸ் என்ற தகரக்கொட்டகை, ரேஞ்சர் பங்களா என்ற மூங்கில் வேய்ந்த மரக்குடிசை, தேக்கங்கட்டைகள் அடுக்கும் பெரிய கொட்டகை, மரங்களை இழுக்கும் யானைகளின் கொட்டாரம், பத்துப் பதினைந்து காடக் குடிசைகள், வெற்றிலை, சுருட்டு முதல் ஸென்ட் சீப்பு வரை தேவைக்குரிய பண்டங்களைத் தன்னுள் அடக்கும் ‘ஷாப்’ – இதுதான் உலாந்தி ரேஞ்சின் கரு.

அப்பையா ரேஞ்சர், கவர்மெண்டாரால் தனக்கு அருளப்பட்ட இருபத்தெட்டு வருஷ வனவாசத்தில் ஏறக்குறைய பாதியைக் காய்ச்சலாகப் படுப்பதிலும், காடை, மான் முதலியவற்றை வேட்டையாடுவதிலும், தினம் இம்மாதிரித் தனக்குக் கிடைக்கும் வன போஜனத்துடன் இரண்டு கொய்னா மாத்திரை தின்பதுமாகக் காலந்தள்ளி வந்தார். ஆபீஸ் தபால்களுக்கு ‘பதில்’ – ரிப்போர்டுகள் முதலியன – அவருடைய இலாக்கா எதிர்பார்த்தபடி துரிதமாகப் போவதில்லை. D.F.O. காம்ப் போட்டிருக்கும் தகவல் கிடைத்தவுடன் அவர் ஆச்சரியப்படவேயில்லை. ஒரு வனபோஜனத்தில் எல்லாரையும் ‘தாஜா’ செய்யும் அப்பையாவிற்கு இந்தக் கத்துக்குட்டியான ஸ்டேதமா ஒரு பெரிய காரியம்?

உலாந்தியில் ஒரு பெரிய பரபரப்பு.

மூட்டை தூக்கும் யானைகளின் மேல் கூடாரம், பட்லர், துரையின் நாய் இத்யாதி, முதல்நாளே வந்து ஸ்டேதத்தின் வருகையை எதிர்பார்த்து நின்றன. உலாந்தியைச் சுற்றி பத்துமைல் வட்டாரத்திற்கு பெட்ரோல் நாகரிகத்தின் ஜம்பம் சாயாது.

இதனால் 10-வது மைலில் துரையின் மோட்டாருக்கு ஒரு ஷெட், காவல்காரன் வகையறா தயார் செய்துகொண்டு துரையவர்களின் வருகையை எதிர்பார்த்து வெகுகாலையில் நிற்க வேண்டும் என்ற உத்தரவு.

அப்பையா ரேஞ்சர் ராஜதந்திரியாகப் பிறந்திருக்க வேண்டியவர். களைத்து வந்தவர்களுக்கு வயிற்றை நிரப்பிவிடுவதைப்போல் எடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கு வேறு மோகனாஸ்திரம் கிடையாது என்று கண்டவர். துரையவர்களின் பாய் (Boy) – அறுபது வயதுக் கிழவனாகிலும், துரைகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் ‘பாய்’ தான்; மார்க்கண்டன் பிறந்த நாட்டு மண் விசேஷமாக இருக்கலாம் – அவனைக் கையில் போட்டுக் கொண்டார். காட்டில் கிடைக்கும் தீனி வகையறா, நாட்டிலிருந்து டின்களில் அடைத்த சீமைச் சரக்குகள், துரையவர்களின் கண்ணில் மண்ணைப்போட, அல்ல. புத்தியை மூடிவைக்க, சாம்பெயின், பிராந்தி, விஸ்கி, இத்யாதி, இத்யாதி.

அப்பையா ஒரு பாரஸ்டர் (forester) இரண்டு கார்டுகள், இரண்டு பெரிய ரோஜா ஹாரங்களுடன் (இது இங்கு செலவில்லாமல் கிடைப்பது; ஹாரம் கார்டு கோபால நாயகரின் கைவேலை) சேணமிட்ட குதிரை சகிதம் வெகுகாலையிலேயே வந்து குறிப்பிட்ட இடத்தில் எதிர்பார்த்து நின்றார்கள். பாய் துரைக்குத் தீனி கொண்டு வந்திருக்கிறான். ‘ஸ்டேதம் மான்மியத்தை’ எடுத்துச் சரடுவிட்டான்.

காலை எட்டு மணியிருக்கும். எங்கோ ஒரு மோட்டார் ஹார்ன் காற்றோடு கலந்தது.

“துரை வந்தாச்சுரா. பூச்சி மேட்டுப் பக்கம் கேக்குது. டேய் ராமராவ், நீ போய்ப்பார்” என்று கட்டளையிட்டார் அப்பையா.

கோபால நாயகர் கைவேலையில் தேர்ச்சி என்றால் ‘ராமராவ்’ கால விஷயத்தில் ‘எக்ஸ்பர்ட்’. ‘ராமராவ்’ ஜாதியில் காடன். அவனுக்குத் தந்தையிட்ட பெயர் தாடகன். காருண்ய கவர்மெண்டாரின் ரேஞ்சர்களாகத் திகழும் பிரதிநிதிகளின் வழியாக மலைக்கேறிய ஆரிய நாகரிக வாசனையைப் பெற்ற தாடகன், நாஸுக்காக ‘ராமராவ்’ என்ற பெயர்ப் பதிவிலேயே சம்பளம் பெற்றுவருகிறான். ராவ்ஜிகளுக்கு யக்ஞோபவீதம் உண்டு என்று தெரியாவிட்டால் அது அவன் குற்றமல்ல. அப்பையாவிற்கு முந்தியிருந்த ரேஞ்சர் இவனை எப்பொழுதும் “அடே காடப்பயலே” என்று கூப்பிட்டு வந்ததின் அர்த்தம் அவனுக்குத் தெரியாது.

அப்பையா கோஷ்டி அரைமணி சாவகாசம் காத்துக்கொண்டிருந்த பிறகு ஒரு சிறிய இரண்டு பேர் இருக்கும் மோட்டார் வந்து நின்றது.

அப்பையா தன்னை யார் என்று தெரிவித்துக்கொண்டு மாலையைப் போட்டார்.

“ஓஹோ, நீர் தான் ரேஞ்சரோ! அதிக நேரம் காத்திருந்தீரோ? கையிலிருக்கும் பெரிய புஸ்தகம்? அதற்கென்ன ஆபீஸில் பார்த்துக் கொள்ளலாம்” என்று சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கிப் புஷ்ப மாலையை முகர்ந்துகொண்டிருந்தார்.

‘பாய்’ உடனே காரில் துரையின் உணவை வைக்க, அவர் சாப்பிட்டுக்கொண்டே ரேஞ்சைப் பற்றிப் பேசி அப்பையா மனதில் கத்துக்குட்டி என்ற எண்ணம் படும்படி செய்துவிட்டார்.

“காட்டைப் பார்த்துவிட்டே போகலாம்” என்று துரை குதிரைமேல் ஏறிக்கொண்டார்.

ராமராவையும் கூட வரும்படி அழைக்க, “நாம் இருவரும் மட்டும் போகலாம்” என்று துரை தடுத்தால் அப்பையா என்ன செய்ய முடியும்?

எட்டு மணிக்குப் புறப்பட்டவர்கள் சாயங்காலம் நாலு மணி வரை என்னதான் செய்தார்களோ? வரும்பொழுது துரையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“இரவில் நான் கணக்கைச் ‘செக்’ செய்துகொள்வேன். நீர் அனுப்பிவைத்தால் போதும். இம்மாதிரிக் கணக்குப் புத்தகம் இருந்தால் என்னிடம் அதிக நாள் வேலை பார்க்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே கூடாரத்திற்குள் சென்றுவிட்டார்.

இந்த ஸ்டேதம் ‘அப்பாவி’ அல்ல என்று தெரிவித்துக்கொண்டாலும் தன் கையில் துருப்பு இருக்கும்வரையில் – ‘பிளான்’ போட்ட விருந்து – கடைப்பிடி தனக்குத்தான் என்று நம்பினார்.

“பாத் ரெடி ஸார்” என்றான் பாய்.

ஸ்டேதம் குளித்துவிட்டு அதிகக் களைப்பாக இருந்ததினால் ஒரு ‘பெக்’ (peg) பிராந்தி சாப்பிட்டுவிட்டு, தனக்குக் கடைசியாக வந்த காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய சுருட்டைப் பற்ற வைத்த வண்ணம், அவருடைய நாய் முன்பு ஓட, உலாவப் புறப்பட்டார். இது அவருடைய பழக்கம்.

நினைவுகள் பலப் பலவாக ஓடின. வெகு தூரம் நடந்துவிட்டால் வெளி. அதில் ஒரு சண்பக மரம் கீழ்த்திசையில் இருக்கும் பள்ளத்தாக்கை நோக்கி இருந்தது.

மேட்டில் ஏறி, ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டு, கடிதத்தை மறுபடியும் படித்து உள்ளத்தில் பொங்கும் நினைவுகளில் திளைத்துக் கொண்டிருந்தார்.

சற்று இருட்டவாரம்பித்தது. எழுத்துக்கள் தெரியவில்லை.

அதோ அந்தக் கீழ்த்திசையில் பூரண சந்திரன். அப்படியே கவனித்து மெய்மறந்தார்.

நாய் மெதுவாக, பரிதாபமாக, ஊளையிட்டுக்கொண்டு அவர் பக்கத்தில் ஒண்டியது. நேரமாகிவிட்டது. எழுந்தார். அந்தச் சண்பக மரத்தடியிலே என்ன? காதலி லில்லி கார்ட்டர்! எப்படி வரமுடியும்?

அவள்தான் விஷமக் குட்டியாச்சே!

வெள்ளுடை தரித்துச் சிரித்துக்கொண்டே கைகளை அசைக்கிறாள். முகம் மட்டும் சற்று வெளிறி இருக்கிறது.

கைகளை விரித்தவண்ணம். ‘டார்லிங் லில்லி’ என்று சொல்லிக்கொண்டு அவளை ஆரத்தழுவப் பாய்ந்து ஓடினார்.

யாராவது வெறும் வெளியை, நிலாக் கற்றையைத் தழுவ முடியுமா?

வேர்தான் தடுக்கிற்று.

‘என்ன முட்டாள்தனம், அந்த பிராந்திதான்’ என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்.

நாய் கிளைகளின் ஊடே பாய்ந்த நிலவொளியைப் பார்த்துக் குரைத்தது.

காற்று எங்கிருந்தோ அசைந்தது. சண்பகம் தனது கனவுகளைச் சொரிந்தது.

ஸ்டேதம் கூடாரத்திற்கு வந்தபொழுது மணி எட்டிருக்கும்.

“டின்னர் ரெடி சார்” என்றான் பாய்.

மேஜையில் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிளேட்டில் ஒரு ‘கேபிள்’ (Cable).

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சாவகாசமாய், அதை எடுத்துப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார்.

“ஐயோ!”

நெஞ்சில் இரும்புச் சம்மட்டியைக் கொண்டு அடித்ததுபோல் மேஜை, கூடாரம் எல்லாம் சுழலுகின்றன.

நிஜமா?

நடுங்கிக்கொண்டே திரும்ப வாசிக்கிறார்.

மிஸ்.லில்லி கார்ட்டர் நேற்று சாயங்காலம், பிக்காடில்லி மூலையில் மோட்டாரால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டு, இன்று காலை உயிர்துறந்தாள். அவள் வேண்டுகோளின்படி தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எங்கள் மனமார்ந்த அனுதாபம்.

டாக்டர் பர்ன்!

“கண்ணா! லில்லி! உனக்கு யாருமில்லையே! அனாதையாகவா? ஐயோ!”

“டார்லிங்! டார்லிங்!”

கையிலிருந்த தந்தி, பிடித்த பிடியில் கசங்குகிறது.

“பாய், போ! நான் பார்த்துக்கொள்ளுகிறேன்.”

ஏக்கமும் பரிதாபமும் நிறைந்த உள்ளத்தின் துயரம் அந்தக் காட்டில் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது.

அன்று இரவு முழுவதும் இருவர் தூங்கவில்லை.

பாட்டில்கள் கீழே உருண்டன. துயரம், அழியாத சோகம் கலந்த சிரிப்புகள்.

விடியற்காலத்திலேயே துரை கீழே இறங்கிவிட்டார்.

அப்பையாவுக்கு நோட்டுப்புத்தகத்தைப் பார்த்ததும், என்னை மிரட்டினாலும் ஸ்டேதம் கத்துக்குட்டிதான் என்பது உறுதியாயிற்று.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.