தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கயவர் தேவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கயவர் தேவர் அனையர் - கயவர் தேவரை யொத்தவர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அவரும் தேவரைப்போல முழுவுரிமையுடையவராய்த் தாம் விரும்பியவற்றை யெல்லாம் செய்து முடித்தலால். தேவர்க்குங் கயவர்க்குமுள்ள ஒப்புமை வினையியல்பு பற்றாது அதன் முடிப்புப் பற்றியதாம். இதுவும் வஞ்சகப்புகழ்ச்சி.உம்மை எச்சம்.
கலைஞர் உரை:
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.
Translation
The base are as the Gods; they too
Do ever what they list to do!.
Explanation
The base resemble the Gods; for the base act as they like.