|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 1 குறளோடு உறவாடு –பேராசிரியர் முனைவர்.தெ. ஞானசுந்தரம் - மு.வ. பார்வையில் திருக்குறள் |
|||||
மு.வ. பார்வையில் திருக்குறள் - பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மு.வரதராசனார்: மு. வரதராசனார் அவர்கள் தெளிந்த அறிவு உடையவர். திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு் உடையவர். இவர் எழுதிய திருக்குறள் உரை கையடக்கப் பதிப்பு தான் திருக்குறள் பரவக் காரணம் என்று சொல்லலாம். இவர் மிகச்சிறந்த பண்பாளர். ‘புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை’ என்ற குறளில் ‘ஏறு’ என்பது சிங்கத்தைக் குறிக்கின்றது என்று மு.வ. நினைத்தார். ஆனால் ஒரு சமயம் ஒரு எளியவர் வந்து ‘ஏறு’ என்பது காளையைக் குறிக்கின்றது என்று கூறினார். அது பொருத்தமானதாக இருந்ததால் மு.வ. அதை ஏற்றுக் கொண்டு உடனே திருத்தம் செய்தார். மிகச்சிறந்த பண்பாளர், குறள் வழி நடப்பவர், அறத்தை நம்பு, வாழ்வில் கடைப்பிடி என்று அறிவுரை வழங்கியவர். திருக்குறள் ஈடுபாடு: பாமரர்களுக்கும் திருக்குறள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே மு.வ. திருக்குறள் உரை எழதினார். மிகவும் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதினார். பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்களுக்குத் திருக்குறளில் ஈடுபாடு வரக் காரணம் அவரது தந்தை வழி தாத்தா என்று கூறுவார். அவருக்கு அடுத்து பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்களுக்குத் திருக்குறளில் ஈடுபாடு வரக் காரணம் மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரை கையடக்கப் பதிப்பே என்று கூறுகிறார். உட்பகை: ‘உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்’ இக்குறளில் வரும் ‘மட்பகை’ என்பதற்கு ‘குயவன் கையில் வைத்திருக்கும் கருவி’ என்று பரிமேலழகர் உரை எழுதினார். ஆனால் ‘மட்பகை’ என்பதற்கான சரியான பொருள் ‘நிலநடுக்கமே’ ஆகும். திருக்குறளில் பொருள் குறித்த இடர்பாடு வரின் திருக்குறளைக் கொண்டே அதைக் களைய முற்பட வேண்டும். திருக்குறளைப் பின்பற்றியோர்: திருக்குறளைப் பின்பற்றியோர் கவிஞர்களாகி இருக்கிறார்கள். திருக்குறளுக்குப் பின் வந்த நூல்கள் எல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டி இருக்கின்றன. திருக்குறள் தாக்கம் இல்லாத பிற்கால நூல்கள் எதுவுமே இல்லை என்று கூறலாம். எக்காலத்திற்கும் திருக்குறள் பொருந்தும் என்பது சாலப்பொருந்தும். |
|||||
by Lakshmi G on 20 Sep 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|