LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருமந்திரம்

எட்டாம் தந்திரம்

 

1. உடலிற் பஞ்சபேதம்
2122 
காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. 1
2123
அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே. 2
2124
எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே. 3
2125
இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே. 4
2126
ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே. 5
2127
எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற
நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே. 6
2128
உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே. 7
2129
ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே. 8
2130
மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. 9
2131
காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்
சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே. 10
2132
நாகம் உடல்உரி போலும்நல் அண்டச
மாக நனாவில் கானாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே. 11
2133
உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன
கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. 12
2134
தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. 13
2135
ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்
ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்
மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே. 14
2136
விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. 15
2137
மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே. 16
2138
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே. 17
2, உடல்விடல்
2139
பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. 1
2140
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே. 2
2141
இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே. 3
3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை
2142
ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை
மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. 1
2143
முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே. 2
2144
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே. 3
2145
பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4
2146
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே. 5
2147
இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 6
2148
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7
2149
இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே. 8
2150
ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. 9
2151
மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. 10
2152
முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே. 11
2153
கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. 12
2154
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. 13
2155
தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து கழுத்தியது ஆமே. 14
2156
கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15
2157
தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. 16
2158
Yஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே. 17
2159
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே. 18
2160
மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 19
2161
உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. 20
2162
அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
நிதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாகா ஐஅவத் தைப்படு வானே. 21
2163
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. 22
2164
மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. 23
2165
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 24
2166
நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 25
4. மத்திய சாக்கிர அவத்தை
2167
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1
2168
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. 2
2169
மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே. 3
2170
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே. 4
2171
வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே. 5
2172
நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே. 6
2173
ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே. 7
2174
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே. 8
2175
ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே. 9
2176
பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே. 10
2177
விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. 11
2178
நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. 12
2179
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே. 13
2180
தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே. 14
2181
அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே. 15
2182
சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே. 16
2183
ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.
5. அத்துவாக்கள்
2184
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1
2185
நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2
2186
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. 3
6. சுத்த நனவாதி பருவம்
2187
நானவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. 1
2188
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. 2
2189
செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே. 3
2190
ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதிமா மாயை
நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. 4
2191
தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே. 5
2192
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 6
2193
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7
2194
உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. 8
2195
தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டிக் கனவுநன வாதலே. 9
2196
நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. 10
2197
ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே. 11
2198
மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்
சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாமே. 12
2199
அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே. 13
2200
ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே. 14
2201
புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு கழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. 15
2202
நனவில் நனவு புனலில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே. 16
2203
கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில் ஆன துரியமே. 17
2204
சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே. 18
2205
துரிய நனவாம் இதமுணர் போதம்
துரியக் கனவாம் அகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் கோன்றிடும் தானே. 19
2206
அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி
அறிவுஅறி வாகும் ஆன துரியமே. 20
2207
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே. 21
2208
ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே. 22
2209
ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடை யோனே. 23
2210
உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்
அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 24
2211
சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே. 25
2212
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. 26
2213
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. 27
2214
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 28
2215
கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே. 29
2216
நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவகத் தேஉள் கரணங்க ளோடு
முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே. 30
2217
நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய் நின்மல னாமே. 31
2218
ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகி
மோனம் அடைந்தொளி மூலத் னாமே. 32
2219
மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்
கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. 33
2220
போதறி யாது புலம்பின புள்ளினம்
மாது அறி யாவகை நின்று மயங்கின
வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை
சூதறி வாருச்சி சூடிநின் றாரே. 34
2221
கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே. 35
2222
ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. 36
2223
உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே. 37
2224
அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார்அறிவாரே. 38
2225
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்தண வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே. 39
2226
மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. 40
7. கேவல சகல சுத்தம்
2227
தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே. 1
2228
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. 2
2229
ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
தாம்உறு பாசம் சகலத்து ஆமே. 3
2230
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே. 4
2231
தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே. 5
2232
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. 6
2233
ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே. 7
2234
ஒரினும் மூவகை நால்வகை யும்உள
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே. 8
2235
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே. 9
2236
அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
அனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே. 10
2237
அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே. 11
2238
ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி
ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே. 12
2239
ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. 13
2240
ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே. 14
2241
ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே 15
2242
கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்
பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே. 16
2243
மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே. 17
2244
மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. 18
2245
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே. 19
2246
தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே. 20
2247
அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி
செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே. 21
2248
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே. 22
2249
கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே. 23
2250
கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம்
கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே. 24
2251
சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே. 25
2252
சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே. 26
2253
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. 27
2254
சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
ஆக்கு பரோபதி யாஉப சாந்தத்தை
நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே. 28
2255
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல்இல்லை தானே. 29
2256
எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோ டு
எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறி வாமே. 30
2257
ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. 31
2258
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்துலம் அந்தன வாமே. 32
2259
ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணும் கனவும் மாமாயை திரோதாயி
காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே. 33
2260
அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோ ர்
அருளும் அறைவார் சகலத்துற் றாரே. 34
2261
உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று
மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி
வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே. 35
2262
இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. 36
2263
ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்
பேறான ஐவரும் போம்பிர காசத்து
நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. 37
2264
தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே. 38
2265
சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. 39
2266
அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்
அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. 40
2267
அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்
உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. 41
2268
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. 42
8. பராவத்தை
2269
அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே. 1
2270
சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே. 2
2271
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. 3
2272
அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே. 4
2273
உரிய நனாத்துரி யத்தில் இவளாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே. 5
2274
பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே. 6
2275
ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே. 7
2276
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. 8
2277
நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே. 9
2278
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே. 10
2279
உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. 11
2280
கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே. 12
2281
அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆனகனவும்
அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே. 13
2282
பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே. 14
2283
பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே. 15
2284
சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்
ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே. 16
2285
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்சிவன் மேலாம் பரநனவாக
விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை
உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே. 17
2286
சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே. 18
2287
கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது வாமே. 19
2288
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே. 20
2289
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. 21
2290
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே. 22
2291
ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. 23
2292
துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே. 24
2293
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே. 25
2294
ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. 26
2295
நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. 27
9. முக்குண நிர்க்குணம்
2296
சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 1
10. அண்டாதி பேதம்
2297
பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 1
2298
ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே. 
11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்
2299
அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே. 1
2300
புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. 2
2301
காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. 3
12. கலவு செலவு
2302
கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. 1
2303
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே. 2
13. நின்மல அவத்தை
2304
ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. 1
2305
காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே. 2
2306
ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே. 3
2307
உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே. 4
2308
எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. 5
2309
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. 6
2310
ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடைத் தாய்விட
ஆன மாலதீதம் அப்பரந் தானே. 7
2311
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. 8
2312
வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. 9
2313
கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து
கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே. 10
2314
தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பலராவே. 11
2315
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. 12
2316
ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே. 13
2317
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே. 14
2318
முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே. 15
2319
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. 16
2320
தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே. 17
2321
தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. 18
2322
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே. 19
2323
அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. 20
2324
தான்அவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே. 21
2325
ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே. 22
2326
ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே. 23
2327
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. 24
2328
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. 25
2329
தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. 24
2330
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. 27
2331
தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. 28
2332
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே. 29
2333
உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே. 30
2334
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே. 31
2335
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே. 32
2336
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே. 33
2337
சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே. 34
2338
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே. 35
2339
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 36
2340
அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே. 37
2341
அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருளாமே. 38
2342
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே. 39
2343
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடன்நாக நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. 40
2344
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. 41
2345
ஆறாது அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே. 42
2346
தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. 43
2347
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே. 44
2348
தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. 45
2349
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே. 46
2350
அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. 47
2351
மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே. 48
2352
ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே. 49
2353
குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. 50
2354
ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே. 51
14. அறிவுதயம்
2355
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. 1
2356
அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. 2
2357
அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அருந்திருந் தானே. 3
2358
அறிவுக்கு அழிவில்aல ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே. 4
2359
ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. 5
2360
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் 
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. 6
2361
அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம் 
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே. 7
2362
அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாறே. 8
2363
அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே. 9
2364
அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. 10
2365
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. 11
2366
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. 12
2367
மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனை. 13
2368
தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. 14
2369
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. 15
15. ஆறு அந்தம்
2370
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. 1
2371
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே. 2
2372
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. 3
2373
நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. 4
2374
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே. 5
2375
உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் 
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. 6
2376
தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. 7
2377
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. 8
2378
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9
2379
ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே. 10
2380
தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே. 11
2381
தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. 12
2382
ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த மாமே. 13
2383
உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. 14
2384
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூளி யருளிய கோனைக் கருதுமே. 15
2385
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. 16
2386
வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. 17
2387
வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே. 18
2388
அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசக்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே. 19
2389
கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. 20
2390
ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே. 21
2391
அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே. 22
2392
வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. 23
2393
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. 24
2394
சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. 25
2395
சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே. 26
2396
தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. 27
2397
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. 28
2398
பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே. 29
2399
ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. 30
2400
அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே. 31
2401
அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. 32
2402
உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. 33
2403
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. 34
2404
முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. 35
16. பதி பசு பாசம் வேறின்மை
2405
அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே. 1
2406
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 2
2407
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே. 3
2408
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே. 4
2409
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே. 5
2410
நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே. 6
2411
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. 7
2412
பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே. 8
2413
பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே. 9
2414
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமெ யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே. 10
2415
படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே. 11
2416
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே. 12
2417
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே. 13
2418
படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே. 14
2419
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயைiல் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே. 15
2420
வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே. 16
2421
நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே. 17
2422
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே. 18
2423
பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே. 19
2424
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. 20
17. அடிதலை அறியும் திறங்கூறல்
2425
காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்கைக் காட்டவீ டாகுமே. 1
2426
தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே. 2
2427
நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. 3
2428
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே. 4
2429
பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான்கழலினை சூடிநின் றேனே. 5
2430
பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. 6
2431
தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே. 7
2432
ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே. 8
2433
கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. 9
2434
பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. 10
18. முக்குற்றம்
2435
மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே. 1
2436
காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. 2
19. முப்பதம்
2437
தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன்
ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. 1
2438
போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே. 2
2439
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. 3
2440
அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே. 4
2441
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 5
2442
ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே. 6
2443
நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. 7
2444
பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே. 8
20. முப்பரம்
2445
தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே. 1
2446
மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. 2
2447
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பசுவனார்
பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே. 3
2448
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே. 4
2449
பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே. 5
2450
நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே. 6
2451
தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅக ராதியே. 7
21. பரலட்சணம்
2452
அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே. 1
2453
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. 2
2454
துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. 3
2455
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. 4
2456
வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. 5
2457
என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே. 6
2458
பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே. 7
2459
சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே. 8
2460
மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே. 9
2461
வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. 10
2462
தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. 11
2463
பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. 12
2464
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே. 13
2465
மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. 14
22. முத்திரியம்
2466
நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. 1
2467
தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே. 2
2468
அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக்
கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே. 3
2469
ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே. 4
2470
தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. 5
2471
அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 6
2472
நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே. 7
2473
தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்
அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 8
23. மும்முத்தி
2474
சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
Yமூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. 1
2475
ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. 2
2476
சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே. 3
2477
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 4
24. முச்சொரூபம்
2478
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு
ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1
2479
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 2
2480
உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே. 3
2481
பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 4
2482
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. 5
2483
கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 6
2484
உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7
25. முக்கரணம்
2485
இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 1
2486
ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே. 2
2487
முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே. 3
26. முச்சூனிய தொந்தத்தசி
2488
தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே. 1
2489
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி
வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே. 2
2490
தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3
2491
வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4
2492
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே. 5
2493
ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே. 6
2494
தாமதம் காமியம் ஆசித் தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே. 7
27. முப்பாழ்
2495
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1
2496
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2
2497
எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3
2498
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4
2499
ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5
2500
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6
28. காரிய காரண உபாதி
2501
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 1
2502
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. 2
2503
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 3
2504
உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. 4
2505
காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே. 5
29. உபசாந்தம்
2506
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1
2507
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும் உப சாந்தப் பரிசிதே. 2
2508
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. 3
2509
ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4
2510
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. 5
2511
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. 6
30. புறங்கூறாமை
2512
பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1
2513
கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. 2
2514
கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே. 3
2515
பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. 4
2516
என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வுய ராய விகிர் தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே. 5
2517
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. 6
2518
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே. 7
2519
விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்
எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே. 8
2520
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே. 9
2521
போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்
காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே. 10
2522
நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை
கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே. 11
2523
ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்
டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே. 12
2524
மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13
2525
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்
டிதமுற்ற பாச இருளைத் துரந்து 
மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. 14
2526
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 15
31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை
2527
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. 16
2528
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 17
2529
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 18
2530
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுபொருள் தானே. 19
2531
திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 20
2532
ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே. 21
2533
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 22
2534
புரியும் உலகினிற் பூண்டவெட் டானை 
திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
எரியு மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே. 23
2535
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 24
2536
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து 
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவடை யோரே. 25
32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி
2537
தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. 26
2538
நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவிற்
றுவமார் துரியஞ் சொருபம தாமே. 27
2539
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதந்
தவமான மவையாகித் தானல்ல வாகுமே. 28
2540
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்
தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே. 29
2541
உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை யோடறுத் தானே. 30
2542
நலம்பல காலந் தொகுத்தன நீளங்
குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல வாறின் நீர்மையன் றானே. 31
2543
ஆதி பராபர மாகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கமைமாயே யோரிரண் டோ ரமுத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. 32
2544
தேராத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. 33
2545
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலு நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. 34
33. சுத்தாஅசுத்தம்
2546
நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே. 35
2547
கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்
துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப்
கருவினை யாவது கண்டகன் றன்பின்
புரிவன கன்மக் கயத்துட் புகுமே. 36
2548
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே. 37
2549
மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்
கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்
ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே. 38
2550
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 39
2551
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்
ஆசூச மானிடம் ஆசூச மாமே. 40
2552
ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே. 41
2553
வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே. 42
2554
தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவு மாமே. 43
2555
தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளா தூயடிச் சொல்லே. 44
2556
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. 45.
2557
வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
வினையாளார் மிக்க விளைவறி யாரே. 46
34. முத்திநிந்தை.
2558
பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. 1.
2559
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறிந்
தாடவல் லாரவர் பேறெது வாமே. 2.
2560
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்
இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே 3.
2561
திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்
அடலிடை வண்ணனும் அங்குநின் றானே. 4.
2562
தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்
போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே. 5.
2563
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னிகி லாரே. 6.
2564
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவார் குடக்கும் குணக்கும் குறுவழி
நாவினின் மந்திர மென்று நடுவங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே. 7.
2565
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. 8.
35. இலக்கணாத் திரயம்
2566
விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்
தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்
சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே. 9.
2567
வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி யாமே. 10.
36. தத்துவமசி வாக்கியம்.
2568
சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1.
2569
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2.
2570
ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3.
2571
துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேகமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. 4.
2572
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்
உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யாரறி வாரே. 5.
2573
தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே. 6.
2574
வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்
துய்த்த பிரணவ மாமுப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்து நின்றானே. 7.
2575
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்
பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. 8.
2576
பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. 9.
2577
நீயது வானா யெனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயனந் தானந்தி யாகுமே. 10.
2578
உயிர்பர மாக உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவ வேதத்து
இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற வோமய மாமே. 11.
2579
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி
சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே. 12.
2580
அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாது பிரானென்று பேணுங்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13.
2581
அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்புங் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே. 14.
2582
அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி 
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே. 15.
2583
அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்
கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே. 16.
2584
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17.
2585
துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வான்வர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. 18.
2586
மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகில்மும்
எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. 19.
37. விசுவக் கிராசம்.
2587
அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. 1.
2588
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
படருஞ் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்
கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே. 2.
2589
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே. 3.
2590
பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்
திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்
உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்
வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. 4.
2591
அளந்து துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால் 
விளங்கிய வெட்ட வெளியனு மாமே. 5.
2592
இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து ளானே. 6.
2593
கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்குஞ் சிவபெரு மானே. 7.
2594
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே. 8.
38. வாய்மை
2595
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1.
2596
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே. 2.
2597
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. 3.
2598
தானே யுலகில் தலைவ னெனத்தகும்
தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. 4.
2599
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே. 5.
2600
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. 6.
2601
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 7.
2602
எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. 8.
2603
எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. 9.
2604
கைகலந் தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே 10.
2605
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம்
கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. 11.
2606
உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 12.
2607
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா
தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. 13
2608
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்
தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. 14
2609
மனமது தானே நினையவல் லாருக்குக்
கினமெனக் கூறு மிருங்காய மேவற்
றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 15
39. ஞானி செயல்
2610
முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 1.
2611
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே. 2.
2612
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. 3
40. அவா அறுத்தல்
2613
வாசியு மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே. 1.
2614
மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே. 2.
2615
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் 
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே. 3.
2616
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. 4.
2617
உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன
துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே. 5.
2618
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும் 
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. 6.
2619
உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே. 7.
2620
அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே. 8.
2621
கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. 9.
2622
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 10.
41. பக்தியுடைமை
2623
முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 1.
2624
அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே. 2.
2625
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே. 3.
2626
ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்
பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே. 4.
2627
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே. 5.
2628
பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே. 6.
2629
பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப்
குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே. 7.
2630
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தித்
துறுதுணை யாயங்கி யாகிநின் றானே. 7.
2631
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்
கானவன் என்றுங் கருவரை யானென்றும்
ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே. 8.
2632
நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே. 9.
42. முத்தியுடைமை
2633
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே. 1.
2634
வளங்கனி தேடிய வன்றாட் பறவை
உளங்கனி தேடி யுழிதரும் போது
களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி
நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே. 2
43. சோதனை
2635
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. 1.
2636
அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடுங் கூடுவன் நானே. 2.
2637
அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை யழகிய வாறே. 3.
2638
குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்
தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்
செறியாச் செறிவே சிவமென லாமே. 4.
2639
காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்குங் கலந்துநின் றானே. 5.
2640
விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. 6.
2641
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்
சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே. 7.
2642
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே. 8.
2643
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே. 9.
2644
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே. 10.
2645
எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே. 11.
2646
ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே. 12.
2647
அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. 13.
2648
உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே. 14.

 

1. உடலிற் பஞ்சபேதம்

 

2122 

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள

மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு

காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்

மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. 1

 

2123

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்

சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்

சத்த பரிச ரூப ரசகந்தம்

புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே. 2

 

2124

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்

கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்

ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே

கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே. 3

 

2125

இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை

மருவிய அத்தி வழும்பொடு மச்சை

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி

உருவ மலால்உடல் ஒன்றென லாமே. 4

 

2126

ஆரே அறிவார் அடியின் பெருமையை

யாரே அறிவார் அங்கவர் நின்றது

யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை

யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே. 5

 

2127

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்

கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்

புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற

நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே. 6

 

2128

உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்

ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்

கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி

அடங்கியே அற்றது ஆரறி வாறே. 7

 

2129

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்

தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்

கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே

ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே. 8

 

2130

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்

பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்

கையினில் துல்லியம் காட்டும் உடலையும்

ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. 9

 

2131

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்

சேய இடம்அண்மை செல்லவும் வல்லது

காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு

ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே. 10

 

2132

நாகம் உடல்உரி போலும்நல் அண்டச

மாக நனாவில் கானாமறந் தல்லது

போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று

ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே. 11

 

2133

உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன

கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்

பண்டு தொடரப் பரகாய யோகிபோல்

பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. 12

 

2134

தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்

ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்

ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்

வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. 13

 

2135

ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்

ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்

மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்

மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே. 14

 

2136

விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு

எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப

அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்

மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. 15

 

2137

மலமென்று உடம்பை மதியாத ஊமர்

தலமென்று வேறு தரித்தமை கண்டீர்

நலமென்று இதனையே நாடி இருக்கில்

பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே. 16

 

2138

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்

மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே

அல்ல செவிசத்த மாதி மனத்தையும்

மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே. 17

 

2, உடல்விடல்

2139

பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்

விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்

புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்

அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. 1

 

2140

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்

கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்

மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி

ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே. 2

 

2141

இலையாம் இடையில் எழுகின்ற காமம்

முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்

தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்

சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே. 3

 

3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை

2142

ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்

கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்

பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை

மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. 1

 

2143

முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்

செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி

அப்பதி யாகும் நியதி முதலாகச்

செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே. 2

 

2144

இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை

மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்

கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்

பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே. 3

 

2145

பாரது பொன்மை பசுமை உடையது

நீரது வெண்மை செம்மை நெருப்பது

காரது மாருதம் கறுப்பை உடையது

வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4

 

2146

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்

ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை

ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு

ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே. 5

 

2147

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை

படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்

உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்

அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 6

 

2148

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்பிடை நின்ற உயிரை அறியார்

உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்

மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7

 

2149

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்

மருக்கும் அசபையை மாற்றி முகந்து

கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து

உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே. 8

 

2150

ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை

அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து

அளிக்கும் கலைகளி னால்அறு பத்து

ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. 9

 

2151

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்

பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்

மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்

உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. 10

 

2152

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்

வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்

கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை

கன்னியைக் கன்னியே காதலித் தானே. 11

 

2153

கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று

உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்

பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து

அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. 12

 

2154

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து

ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்

மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை

கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. 13

 

2155

தானம் இழந்து தனிபுக்கு இதயத்து

மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி

ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்

மேனி அழிந்து கழுத்தியது ஆமே. 14

 

2156

கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி

கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி

ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து

விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15

 

2157

தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்

வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்

கானத்து எழுந்த கருத்தின் தலையிலே

ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. 16

 

2158

Yஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்

ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்

ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது

நாமயம் அற்றது நாம்அறி யோமே. 17

 

2159

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே

நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன

பரிய புரவியும் பாறிப் பறந்தது

துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே. 18

 

2160

மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்

வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு

ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து

ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 19

 

2161

உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்

அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது

நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து

எண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. 20

 

2162

அதிமூட நித்திரை ஆணவம் நந்த

அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி

நிதமான கேவலம் இத்திறம் சென்று

பரமாகா ஐஅவத் தைப்படு வானே. 21

 

2163

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்

தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்

நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை

ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. 22

 

2164

மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என

விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி

எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்

அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. 23

 

2165

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி

வடிவுடை மாநகர் தான்வரும் போது

அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்

துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 24

 

2166

நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்

நேரான வாறுஉன்னி நீடு நனவினில்

நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து

நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 25

 

4. மத்திய சாக்கிர அவத்தை

 

2167

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி

சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை

சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்

சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1

 

2168

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்

நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்

தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி

ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. 2

 

2169

மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்

ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு

மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற

மூவயின் ஆன்மா முயலும் கருமமே. 3

 

2170

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்

ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்

அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று

சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே. 4

 

2171

வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்

உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்

பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று

நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே. 5

 

2172

நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்

வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்

கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்

வேறான நாலேழு வேதாந்த தத்துவமே. 6

 

2173

ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை

கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு

மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்

காலங்கொண் டான்அடி காணலும் ஆமே. 7

 

2174

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்

ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்

கூடிய காமம் குளிக்கும் இரதமும்

நாடிய நல்ல மனமும் உடலிலே. 8

 

2175

ஆவன ஆக அழிவ அழிவன

போவன போவ புகுவ புகுவன

காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்

ஏவன செய்யும் இலங்கிழை யோனே. 9

 

2176

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்

உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்

மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்

தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே. 10

 

2177

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்

தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்

வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து

விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. 11

 

2178

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்

மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்

பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை

கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. 12

 

2179

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்

ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்

ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு

ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே. 13

 

2180

தத்துவ மானது தன்வழி நின்றிடில்

வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்

பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி

தத்துவம் ஆவது அகார எழுத்தே. 14

 

2181

அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்

அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்

அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி

அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே. 15

 

2182

சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்

ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி

போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு

நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே. 16

 

2183

ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு

ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு

ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப

ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.

 

5. அத்துவாக்கள்

 

2184

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி

மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி

ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று

வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1

 

2185

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து

ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்

கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று

தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2

 

2186

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி

ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்

தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது

தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. 3

 

6. சுத்த நனவாதி பருவம்

2187

நானவாதி தூலமே சூக்கப் பகுதி

அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி

தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து

கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. 1

 

2188

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்

நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்

நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்

நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. 2

 

2189

செறியுங் கிரியை சிவதத் துவமாம்

பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி

குறிதல் திருமேனி குணம்பல வாகும்

அறிவில் சராசரம் அண்டத் தளவே. 3

 

2190

ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்

ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்

போதம் கலைகாலம் நியதிமா மாயை

நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. 4

 

2191

தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்

ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்

மாசகல் வித்தை நியதி மகாமாயை

ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே. 5

 

2192

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்

காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்

தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்

பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 6

 

2193

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்

பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்

பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7

 

2194

உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்

அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்

கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்

அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. 8

 

2195

தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்

சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்

பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்

மற்றது உண்டிக் கனவுநன வாதலே. 9

 

2196

நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்

கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி

தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை

நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. 10

 

2197

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா

ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா

வேறான ஐந்தும் விடவே நனாவினில்

ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே. 11

 

2198

மாயையில் வந்த புருடன் துரியத்தில்

ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்

சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால்

ஆய தனுவின் பயனில்லை யாமே. 12

 

2199

அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா

அதீதத் துரியம் அதனால் புரிந்தால்

அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்

முதிய அனலில் துரியத்து முற்றுமே. 13

 

2200

ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்

கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்

பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்

மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே. 14

 

2201

புரியட் டகமே பொருந்தல் நனவு

புரியட் டகந்தன்னில் மூன்று கனவு

புரியட் டகத்தில் இரண்டு கழுத்தி

புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. 15

 

2202

நனவில் நனவு புனலில் வழக்கம்

நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்

நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை

நனவில் துரியம் அதீதத்து நந்தியே. 16

 

2203

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்

கனவினில் கண்டு மறத்தல் கனவாம்

கனவில் சுழுத்தியும் காணாமை காணல்

அனுமாதி செய்தலில் ஆன துரியமே. 17

 

2204

சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்

சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்

சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை

சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே. 18

 

2205

துரிய நனவாம் இதமுணர் போதம்

துரியக் கனவாம் அகமுணர் போதம்

துரியச் சுழுத்தி வியோமம் துரியம்

துரியம் பரமெனத் கோன்றிடும் தானே. 19

 

2206

அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்

அறிவுஅறி யாமை அடையக் கனவாம்

அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி

அறிவுஅறி வாகும் ஆன துரியமே. 20

 

2207

தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு

ஞானம் தனதுரு வாகி நயந்தபின்

தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு

மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே. 21

 

2208

ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்

எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்

மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை

ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே. 22

 

2209

ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்

ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்

ஈதென்று அறியும் இயல்புடை யோனே. 23

 

2210

உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்

அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்

நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி

இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 24

 

2211

சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி

ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு

தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்

வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே. 25

 

2212

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை

சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்

சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. 26

 

2213

மலக்கலப் பாலே மறைந்தது சத்தி

மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்

மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு

மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. 27

 

2214

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று

நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு

வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து

பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 28

 

2215

கதறு பதினெட்டுக் கண்களும் போகச்

சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்

விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்

அதிர வருவதோர் ஆனையும் ஆமே. 29

 

2216

நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்

கனவகத் தேஉள் கரணங்க ளோடு

முனவகத் தேநின்று உதறியுட் புக்கு

நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே. 30

 

2217

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்

ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்

சென்று துரியாதீ தத்தே சிலகாலம்

நின்று பரனாய் நின்மல னாமே. 31

 

2218

ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்

தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி

மேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகி

மோனம் அடைந்தொளி மூலத் னாமே. 32

 

2219

மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்

கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற

விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக

அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. 33

 

2220

போதறி யாது புலம்பின புள்ளினம்

மாது அறி யாவகை நின்று மயங்கின

வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை

சூதறி வாருச்சி சூடிநின் றாரே. 34

 

2221

கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே

பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்

திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை

பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே. 35

 

2222

ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்

தான விளக்கொளி யாம்மூல சாதனத்து

ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு

ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. 36

 

2223

உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய

விண்நாட நின்ற வெளியை வினவுறில்

அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்

கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே. 37

 

2224

அறியாத வற்றை அறிவான் அறிவான்

அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்

அறியா தவத்தை அறிவானைக் கூட்டி

அறியாது அறிவானை யார்அறிவாரே. 38

 

2225

துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்

அரியன தூடணம் அந்தண வாதி

பெரியன கால பரம்பின் துரியம்

அரிய அதீதம் அதீதத்த தாமே. 39

 

2226

மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்

மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்

கேவல மாகும் சகலமா யோனியுள்

தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. 40

 

7. கேவல சகல சுத்தம்

 

2227

தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்

பின்னம் உறநின்ற பேத சகலனும்

மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்

துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே. 1

 

2228

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே. 2

 

2229

ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து

ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று

காமியம் மாமேய மும்கல வாநிற்பத்

தாம்உறு பாசம் சகலத்து ஆமே. 3

 

2230

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்

புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்

நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்

நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே. 4

 

2231

தாவிய மாயையில் தங்கும் பிரளயம்

மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன

ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்

ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே. 5

 

2232

ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்

ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்

ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்

ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. 6

 

2233

ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்

போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு

ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்

தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே. 7

 

2234

ஒரினும் மூவகை நால்வகை யும்உள

தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை

சார்இய லாயவை தாமே தணப்பவை

வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே. 8

 

2235

பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று

எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி

மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு

எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே. 9

 

2236

அனாதி பசுவியாத்தி யாகும் இவனை

அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி

அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு

அனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே. 10

 

2237

அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு

தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்

தின்பால் துரியத் திடையே அறிவுறத்

தன்பால் தனையறி தத்துவந் தானே. 11

 

2238

ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்

மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்

துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி

ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே. 12

 

2239

ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்

மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்

கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண

எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. 13

 

2240

ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர்

பேணிய மாயைப் பிரளயா கலராகும்

காணும் உருவினர் காணாமை காண்பவே

பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே. 14

 

2241

ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்

பேணிய மாயை பிரளயா கலருக்கே

ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே

காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே 15

 

2242

கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்

கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்

பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்

மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே. 16

 

2243

மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து

மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ

மாய சகலத்துக் காமிய மாமாயை

ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே. 17

 

2244

மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்

அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்

மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து

அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. 18

 

2245

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்

சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்

மத்த இருள்சிவ னான கதிராலே

தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே. 19

 

2246

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்

பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்

சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்

தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே. 20

 

2247

அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்

குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி

செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்

கிறியன் மலவியாபி கேவலம் தானே. 21

 

2248

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்

சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி

விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்

வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே. 22

 

2249

கேவல மாதியின் பேதம் கிளக்குறில்

கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்

ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே

ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே. 23

 

2250

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்

கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம்

கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு

ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே. 24

 

2251

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்

சகல சகலமே சாக்கிர சாக்கிரம்

சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை

சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே. 25

 

2252

சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்

சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்

சுத்த சகலம் துரிய விலாசமாம்

சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே. 26

 

2253

சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்

சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே

சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே

ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. 27

 

2254

சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்

சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது

ஆக்கு பரோபதி யாஉப சாந்தத்தை

நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே. 28

 

2255

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்

சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்

அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்

சித்தமும் இல்லை செயல்இல்லை தானே. 29

 

2256

எய்திய பெத்தமும் முத்தமும் என்பன

எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோ டு

எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே

எய்தும் உயிர்இறை பால்அறி வாமே. 30

 

2257

ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்

ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்

ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர்

ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. 31

 

2258

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை

அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்

உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து

அரிய கனாத்துலம் அந்தன வாமே. 32

 

2259

ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும்

பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்

பேணும் கனவும் மாமாயை திரோதாயி

காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே. 33

 

2260

அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்

அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை

கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோ ர்

அருளும் அறைவார் சகலத்துற் றாரே. 34

 

2261

உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று

மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி

வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்

கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே. 35

 

2262

இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி

மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்

குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப்

பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. 36

 

2263

ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு

ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்

பேறான ஐவரும் போம்பிர காசத்து

நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. 37

 

2264

தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்

தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்

உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்

பின்னையும் வந்து பிறந்திடும் தானே. 38

 

2265

சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்

ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்

நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்

வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. 39

 

2266

அப்பும் அனலும் அகலத்து ளேவரும்

அப்பும் அனலும் அகலத்து ளேவாரா

அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்

அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. 40

 

2267

அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்

உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்

பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து

உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. 41

 

2268

மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட

ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே

ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி

ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. 42

 

8. பராவத்தை

 

2269

அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்

நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி

விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட

வஞ்சத் திருந்த வகையறிந் தேனே. 1

 

2270

சத்தி பராபரம் சாந்தி தனிலான

சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து

சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்

சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே. 2

 

2271

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்

ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்

ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே

ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. 3

 

2272

அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்

பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற

விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு

நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே. 4

 

2273

உரிய நனாத்துரி யத்தில் இவளாம்

அரிய துரிய நனவாதி மூன்றில்

பரிய பரதுரி யத்தில் பரனாம்

திரிய வரும்துரி யத்தில் சிவமே. 5

 

2274

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்

பரமாம் அதீதம் பயிலப் பயிலப்

பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்

பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே. 6

 

2275

ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்

வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்

தூய அறிவு சிவானந்த மாகிப்போய்

வேயும் பொருளாய் விளைந்தது தானே. 7

 

2276

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்

பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு

நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு

உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. 8

 

2277

நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்

மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்

மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்

அன்றே இவனும் அவன்வடி வாமே. 9

 

2278

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்

இருந்த இடத்திடை ஈடான மாயை

பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்

தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே. 10

 

2279

உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய்

உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்

தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்

அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. 11

 

2280

கருவரம்பு ஆகிய காயம் துரியம்

இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்

குருவரம் பெற்றவர் கூடிய பின்னை

இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே. 12

 

2281

அணுவின் துரியத்தில் ஆன நனவும்

அணுஅசை வின்கண் ஆனகனவும்

அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி

பணியில் பரதுரி யம்பர மாமே. 13

 

2282

பரதுரி யத்து நனவும் பரந்து

விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி

உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்

தெரியும் சிவதுரி யத்தனு மாமே. 14

 

2283

பரமா நனவின்பின் பால்சக முண்ட

திரமார் கனவும் சிறந்த சுழுத்தி

உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே

தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே. 15

 

2284

சீவன் துரியம் முதலாகச் சீரான

ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்

ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே

மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே. 16

 

2285

பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்

பரம்சிவன் மேலாம் பரநனவாக

விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை

உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே. 17

 

2286

சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்

மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்

பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி

தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே. 18

 

2287

கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்

உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை

அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்

குறிப்பது கோலம் அடலது வாமே. 19

 

2288

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்

தன்னை அறியில் தயாபரன் எம்இறை

முன்னை அறிவு முடிகின்ற காலமும்

என்னை அறியலுற்று இன்புற்ற வாறே. 20

 

2289

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்

பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்

தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்

தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. 21

 

2290

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே. 22

 

2291

ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி

வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி

ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்

பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. 23

 

2292

துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி

விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்

புரியப் பரையில் பராவத்தா போதம்

திரிய பரமம் துரியம் தெரியவே. 24

 

2293

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்

பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்

நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்

அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே. 25

 

2294

ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்

பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு

எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி

உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. 26

 

2295

நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்

ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்

சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்

நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. 27

 

9. முக்குண நிர்க்குணம்

 

2296

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்

வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப

ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்

மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 1

 

10. அண்டாதி பேதம்

 

2297

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்

எறிகடல் ஏழின் மணல்அள வாகப்

பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்

செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 1

 

2298

ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்

மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க்

தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை

ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே. 

 

11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்

 

2299

அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்

முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்

வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்

கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே. 1

 

2300

புருட னுடனே பொருந்திய சித்தம்

அருவமொ டாறும் அதீதத் துரியம்

விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்

அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. 2

 

2301

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்

நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை

ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை

ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. 3

 

12. கலவு செலவு

 

2302

கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்

மேவும் செலவு விடவரு நீக்கத்துப்

பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற

தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. 1

 

2303

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்

செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை

அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்

கல்லும் பிளந்து கடுவெளி யாமே. 2

 

13. நின்மல அவத்தை

 

2304

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள

வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்

ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. 1

 

2305

காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்

மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்

மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்

காலனும் இல்லை கருத்தில்லை தானே. 2

 

2306

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது

தான்மா மறையறை தன்மை அறிகிலர்

ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்

ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே. 3

 

2307

உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்

கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி

பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து

அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே. 4

 

2308

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி

நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்

பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்

செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. 5

 

2309

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்

வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்

ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்

தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. 6

 

2310

ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து

ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்

ஆன வகையை விடும்அடைத் தாய்விட

ஆன மாலதீதம் அப்பரந் தானே. 7

 

2311

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்

அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்

சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து

அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. 8

 

2312

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை

வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்

வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு

 

வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. 9

 

2313

கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை

நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு

அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து

கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே. 10

 

2314

தானே சிவமான தன்மை தலைப்பட

ஆன மலமும்அப் பாச பேதமும்

ஆன குணமும் பரான்மா உபாதியும்

பானுவின் முன்மதி போல்பலராவே. 11

 

2315

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு

அருக்கனும் சோமனும் அங்கே அமரும்

திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்

உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. 12

 

2316

ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்

ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு

ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு

வானகம் ஏற வழிஎளி தாமே. 13

 

2317

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்

தாடித் தெழுந்த தமருக ஓசையும்

பாடி எழுகின்ற வேதாக மங்களும்

நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே. 14

 

2318

முன்னை அறிவினில் செய்த முதுதவம்

பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்

தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்

பின்னை அறிவது பேயறி வாகுமே. 15

 

2319

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்

செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்

செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்

செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. 16

 

2320

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்

ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்

ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து

ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே. 17

 

2321

தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி

தொலையா இருளொளி தோற்ற அணுவும்

தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்

தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. 18

 

2322

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி

மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை

தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்

ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே. 19

 

2323

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்

அறிகின்ற என்னை அறியா திருந்தேன்

அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி

அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. 20

 

2324

தான்அவ னாகிய ஞானத் தலைவனை

வானவ ராதியை மாமணிச் சோதியை

ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை

ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே. 21

 

2325

ஒளியும் இருளும் பரையும் பரையுள்

அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி

அளியும் அருளும் தெருளும் கடந்து

தெளிய அருளே சிவானந்த மாமே. 22

 

2326

ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்

தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து

ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்

கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே. 23

 

2327

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே

அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. 24

 

2328

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்

சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்

சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்

சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. 25

 

2329

தானே அறியான் அறிவிலோன் தானல்லன்

தானே அறிவான் அறிவு சதசத்தென்று

ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்

தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. 24

 

2330

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே

தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்

தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே

தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. 27

 

2331

தன்னை அறிந்து சிவனுடன் தானாக

மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்

பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி

நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. 28

 

2332

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்

தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்

மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்

மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே. 29

 

2333

உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்

உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்

உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே

உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே. 30

 

2334

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்

கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்

பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு

அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே. 31

 

2335

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி

இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்

சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று

ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே. 32

 

2336

உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி

உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்

உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே

உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே. 33

 

2337

சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்

ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்

பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்

ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே. 34

 

2338

எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்

எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்

எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்

எய்தினர் செய்யும் இறையருள் தானே. 35

 

2339

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்

திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்

திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்

திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 36

 

2340

அவமும் சிவமும் அறியார் அறியார்

அவமும் சிவமும் அறிவார் அறிவார்

அவமும் சிவமும் அருளால் அறிந்தால்

அவமும் சிவமும் அவனரு ளாமே. 37

 

2341

அருளான சத்தி அனல் வெம்மை போல

பொருள் அவனாகத்தான் போதம் புணரும்

இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்

திருவருள் ஆனந்தி செம்பொருளாமே. 38

 

2342

ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்

பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப

ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்

பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே. 39

 

2343

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்

போதம் புணர்போதம் போதமும் நாதமும்

நாத முடன்நாக நாதாதி நாதமும்

ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. 40

 

2344

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்

பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி

பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்

ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. 41

 

2345

ஆறாது அகன்று தனையறிந் தானவன்

ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த

வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்

தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே. 42

 

2346

தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை

மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று

தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்

தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. 43

 

2347

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்

சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்

சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர்

சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே. 44

 

2348

தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்

தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத்

தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்

தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. 45

 

2349

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்

தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்

தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்

தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே. 46

 

2350

அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்

நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை

இருசுட ராகி இயற்றவல் லானும்

ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. 47

 

2351

மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்

உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே

கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா

அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே. 48

 

2352

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று

கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்

தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்

கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே. 49

 

2353

குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்

குறிஅறி யார்கடம் கூடல் பெரிது

குறிஅறி யாவகை கூடுமின் கூடி

அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. 50

 

2354

ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்

வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்

தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்

தானே பிறப்போடு இறப்பறி யாரே. 51

 

14. அறிவுதயம்

 

2355

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. 1

 

2356

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்

சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று

சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்

பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. 2

 

2357

அறிவு வடிவென்று அறியாத என்னை

அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி

 

அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே

அறிவு வடிவென்று அருந்திருந் தானே. 3

 

2358

அறிவுக்கு அழிவில்aல ஆக்கமும் இல்லை

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின் றனமறை ஈறுகள் தாமே. 4

 

2359

ஆயு மலரின் அணிமலர் தன்மேலே

பாய இதழ்கள் பதினாறும் அங்குள

தூய அறிவு சிவானந்த மாகியே

போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. 5

 

2360

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து

முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்

பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் 

பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. 6

 

2361

அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்

அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம் 

அறிவுஅறி வாக அணிமாதி சித்தி

அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே. 7

 

2362

அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்

அறிவுஅறி யாமை யாரும் அறியார்

அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்

அறிவுஅறி யாமை அழகிய வாறே. 8

 

2363

அறிவுஅறி யாமையை நீவி யவனே

பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது

அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்

செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே. 9

 

2364

அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது

அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது

அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்

அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. 10

 

2365

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்

காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்

சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்

பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. 11

 

2366

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது

என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. 12

 

2367

மாய விளக்கது நின்று மறைந்திடும்

தூய விளக்கது நின்று சுடர்விடும்

காய விளக்கது நின்று கனன்றிடும்

சேய விளக்கினைத் தேடுகின் றேனை. 13

 

2368

தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்

நாடுகின் றேன்நல மேஉடை யானடி

பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்

கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. 14

 

2369

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்

பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்

தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்

மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. 15

 

15. ஆறு அந்தம்

 

2370

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்

நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்

ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும்

ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. 1

 

2371

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்

அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்

அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு

அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே. 2

 

2372

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்

ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு

தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்

ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. 3

 

2373

நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்

சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்

சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து

அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. 4

 

2374

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்

மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்

மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு

ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே. 5

 

2375

உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் 

தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்

உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல்

எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. 6

 

2376

தேடும் இயம நியமாதி சென்றகன்று

ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்

பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்

கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. 7

 

2377

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்

விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு

உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்

தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. 8

 

2378

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு

ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு

அளியவ னாகிய மந்திரம் தந்திரம்

தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9

 

2379

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்

ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்

ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்

ஆகும் சிவபோ தகம்உப தேசமே. 10

 

2380

தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை

ஆசார நேய மறையும் கலாந்தத்துப்

பேசா உரையுணர் வற்ற பெருந்தகை

வாசா மகோசர மாநந்தி தானே. 11

 

2381

தான்அவ னாகும் சமாதி தலைப்படில்

ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்

ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது

ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. 12

 

2382

ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே

ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு

கூறிய ஞானக் குறியுடன் வீடவே

தேறிய மோனம் சிவானந்த மாமே. 13

 

2383

உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்

உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்

உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து

உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. 14

 

2384

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்

தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து

வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்

கூளி யருளிய கோனைக் கருதுமே. 15

 

2385

கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப

அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்

வருசமயப் புற மாயைமா மாயை

உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. 16

 

2386

வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை

போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய

நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்

மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. 17

 

2387

வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட

நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்

மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்

போதாந்த தற்பதம் போமசி என்பவே. 18

 

2388

அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்

உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி

பண்டுறு நின்ற பராசக்தி என்னவே

கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே. 19

 

2389

கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத்

தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே

பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப

ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. 20

 

2390

ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்

இருவினை உன்னார் இருமாயை உன்னார்

ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி

அருவனு மாகிய ஆதரத் தானே. 21

 

2391

அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து

வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு

உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்

திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே. 22

 

2392

வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப

நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி

போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்

சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. 23

 

2393

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்

அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்

சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்

நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. 24

 

2394

சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால்

சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்

சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்

சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. 25

 

2395

சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்

அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்

நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்

தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே. 26

 

2396

தத்துவம் ஆகும் சகள அகளங்கள்

தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்

தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்

தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. 27

 

2397

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்

ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன

நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்

பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. 28

 

2398

பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்

பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்

விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்

பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே. 29

 

2399

ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்

ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்

ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற

ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. 30

 

2400

அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை

ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு

நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்

மன்றாடி பாதம் மருவலும் ஆமே. 31

 

2401

அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்

அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்

தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்

வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. 32

 

2402

உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை

அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்

செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி

அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. 33

 

2403

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்

சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன

அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்

துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. 34

 

2404

முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்

பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு

முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து

அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. 35

 

16. பதி பசு பாசம் வேறின்மை

 

2405

அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி

அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி

அறிவினைக் கட்டிய பாசம் அனாதி

அறிவு பதியில் பிறப்பறுந் தானே. 1

 

2406

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்

பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு

பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 2

 

2407

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று

நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்

தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்

குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே. 3

 

2408

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை

நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்

கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்

வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே. 4

 

2409

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி

விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்

சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்

சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே. 5

 

2410

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்

நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை

நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்

நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே. 6

 

2411

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்

ஆய பசுவும் அடலே றெனநிற்கும்

ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்

ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. 7

 

2412

பதிபசு பாசம் பயில்வியா நித்தம்

பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்

பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்

பதிபசு பாசம் பயில நிலாவே. 8

 

2413

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்

கதியும் பசுபாச நீக்கமும் காட்டி

மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்

துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே. 9

 

2414

அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்

அறிந்தணு மூன்றுமெ யாங்கணும் ஆக

அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்

அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே. 10

 

2415

படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி

இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்

படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய

படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே. 11

 

2416

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்

ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்

ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்

ஆகிய தூயஈ சானனும் ஆமே. 12

 

2417

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்

மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்

மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி

ஆகும் படிபடைப் போன்அர னாமே. 13

 

2418

படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்

துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்

சடத்தை விடுத்த அருளும் சகலத்து

அடைத்த அனாதியை ஐந்தென லாமே. 14

 

2419

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு

வேறாகு மாயைiல் முப்பால் மிகுத்திட்டுஅங்கு

ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு

வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே. 15

 

2420

வீட்கும் பதிபசு பாசமும் மீதுற

ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து

ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு

நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே. 16

 

2421

நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்

பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்

கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்

அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே. 17

 

2422

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று

மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே

ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்

ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே. 18

 

2423

பாசம் பயிலுயிர் தானே பரமுதல்

பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப

பாசம் பயிலப் பதிபர மாதலால்

பாசம் பயிலப் பதிபசு வாகுமே. 19

 

2424

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்

அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி

அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்

அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. 20

 

17. அடிதலை அறியும் திறங்கூறல்

 

2425

காலும் தலையும் அறியார் கலதிகள்

கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்

பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்

கால்அந்த ஞானத்கைக் காட்டவீ டாகுமே. 1

 

2426

தலைஅடி யாவது அறியார் காயத்தில்

தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்

தலைஅடி யான அறிவை அறிந்தோர்

தலைஅடி யாகவே தான்இருந் தாரே. 2

 

2427

நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற

வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்

பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி

தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. 3

 

2428

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி

சிந்தையின் எந்தை திருவடிக் கீழது

எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்

எந்தையை யானும் அறியகி லேனே. 4

 

2429

பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்

என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்

உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்

சொன்னான்கழலினை சூடிநின் றேனே. 5

 

2430

பதியது தோற்றும் பதமது வைம்மின்

மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்

நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்

கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. 6

 

2431

தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்

தரித்து நின்றான் அமராபதி நாதன்

கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை

பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே. 7

 

2432

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள

தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்

நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு

இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே. 8

 

2433

கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற

மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்

பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான்

மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. 9

 

2434

பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்

குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்

பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்

செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. 10

 

18. முக்குற்றம்

 

2435

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன

மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்

மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே. 1

 

2436

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து

ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி

ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்

தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. 2

 

19. முப்பதம்

 

2437

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர

ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன்

ஆகின்ற பராபர மாகும் பிறப்பற

ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. 1

 

2438

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்

ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு

பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு

வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே. 2

 

2439

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்

நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்

சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்

கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. 3

 

2440

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த

கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்

இணையறு பால்தேன் அமுதென இன்பத்

துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே. 4

 

2441

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்

நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்

அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்

செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 5

 

2442

ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்

உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்

செம்பர மாகிய வாசி செலுத்திடத்

தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே. 6

 

2443

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்

இந்தியும் சத்தாதி விடவிய னாகும்

நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து

நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. 7

 

2444

பரதுரி யத்து நனவு படியுண்ட

விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து

துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்

அரிய துரியம் அசிபதம் ஆமே. 8

 

20. முப்பரம்

 

2445

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்

மூன்று படிமண் டலத்து முதல்வனை

ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி

நான்று நலம்செய் நலந்தரு மாறே. 1

 

2446

மன்று நிறைந்தது மாபர மாயது

நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்

கன்று நினைந்தெழு தாயென வந்தபின்

குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. 2

 

2447

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்

கூறா உபதேசம் கூறில் சிவபரம்

வேறாய் வெளிப்பட்ட வேதப் பசுவனார்

பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே. 3

 

2448

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது

பற்றறப் பற்றில் பரனறி வேபரம்

பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே

பற்றறப் பற்றில் பரம்பர மாமே. 4

 

2449

பரம்பர மான பதிபாசம் பற்றாப்

பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்

பரம்பர மான பரசிவா னந்தம்

பரம்பர மாகப் படைப்பது அறிவே. 5

 

2450

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று

தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி

நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்

தனையுற்று இடத்தானே தற்பர மாமே. 6

 

2451

தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்

பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்

தற்பரன் கால பரமும் கலந்தற்ற

நற்பரா தீதமும் நாடுஅக ராதியே. 7

 

21. பரலட்சணம்

 

2452

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி

அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா

மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்

பதியிற் பதியும் பரவுயிர் தானே. 1

 

2453

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி

சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்

நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர

போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. 2

 

2454

துரியங் கடங்கு துரியா தீதத்தே

அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்

பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே

துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. 3

 

2455

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்

அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்

பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்

செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. 4

 

2456

வைச்ச கலாதி வருதத்து வங்கெட

வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து

உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே

அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. 5

 

2457

என்னை அறிய இசைவித்த என்நந்தி

என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்

பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்

தன்னை அளித்தான் தற்பர மாகவே. 6

 

2458

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு

நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்

அரந்த அறநெறி யாயது வாகித்

தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே. 7

 

2459

சத்தின் நிலையினில் தானான சத்தியும்

தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்

உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்

நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே. 8

 

2460

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்

பாலிய விந்து பரையுள் பரையாகக்

கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து

சீலமி லாஅணுச் செய்திய தாமே. 9

 

2461

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்

ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்

பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்

ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. 10

 

2462

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி

சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்

தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு

அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. 11

 

2463

பண்டை மறைகள் பரவான் உடலென்னும்

துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்

கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே

மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. 12

 

2464

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற

தனியா இயதற் பரங்காண் அவன்தான்

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற

வெளியாய சத்தி அவன்வடி வாமே. 13

 

2465

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்

ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்

சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்

பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. 14

 

22. முத்திரியம்

 

2466

நனவாதி மூன்றினில் சீவ துரியம்

தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்

நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்

இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. 1

 

2467

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்

தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்

ஆனாப் பரபதம் அற்றது அருநனா

வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே. 2

 

 

2468

அணுவின் துரியத்து நான்கும துஆகிப்

பணியும் பரதுரி யம்பயில் நான்கும்

தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக்

கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே. 3

 

2469

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்

நேர்அந்த மாகநெறிவழி யேசென்று

பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து

ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே. 4

 

2470

தொட்டே இருமின் துரிய நிலத்தினை

எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்

பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்

தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. 5

 

2471

அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று

செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே

பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி

நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 6

 

2472

நனவின் நனவாகி நாலாம் துரியம்

தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல

வினையறு சீவன் நனவாதி யாகத்

தனைய பரதுரி யந்தற் பதமே. 7

 

2473

தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல்

நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்

அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்

செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 8

 

23. மும்முத்தி

 

2474

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி

ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்

Yமூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்

ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. 1

 

2475

ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்

ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்

ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று

ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. 2

 

2476

சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்

தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்

துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்

சிவமாம் அமலன் சிறந்தனன் தானே. 3

 

2477

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய

சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த

சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்

பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 4

 

24. முச்சொரூபம்

 

2478

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து

ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு

வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு

ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1

 

2479

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்

மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள

மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்

காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 2

 

2480

உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன

நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய

பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்

அளவும் பெருமையும் ஆரறி வாரே. 3

 

2481

பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து

அருவாய் உருவாய் அருவுரு வாகிக்

குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை

உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 4

 

2482

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து

மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத்

தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்

பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. 5

 

2483

கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட

நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்

சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து

அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 6

 

2484

உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி

நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்

அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்

விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7

 

25. முக்கரணம்

 

2485

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்

கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்

திடமது போலச் சிவபர சீவர்

உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 1

 

2486

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி

வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி

வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்

தெளியத் தெளியும் சிவபதம் தானே. 2

 

2487

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்

கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி

மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக

ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே. 3

 

26. முச்சூனிய தொந்தத்தசி

 

2488

தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்

தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே

நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்

சொற்பத மாகும் தொந்தத் தசியே. 1

 

2489

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி

வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்

இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே. 2

 

2490

தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே

அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு

அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து

உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3

 

2491

வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4

 

2492

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்

அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்

நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்

உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே. 5

 

2493

ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து

ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்

ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு

ஆகிய சீவன் பரசிவன் ஆமே. 6

 

2494

தாமதம் காமியம் ஆசித் தகுணம்

மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு

ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்

தாமாம் துரியமும் தொந்தத் தசியதே. 7

 

27. முப்பாழ்

 

2495

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்

காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்

காரிய காரண வாதனை கண்டறும்

சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1

 

2496

மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்

சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்

ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்

தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2

 

2497

எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்

பதியெனும் நந்தி பதமது கூடக்

கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை

உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3

 

2498

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை

அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்

அரிய பரம்பரம் என்றே துதிக்கும்

அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4

 

2499

ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு

வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்

ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ

தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5

 

2500

உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்

உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்

பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை

உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6

 

28. காரிய காரண உபாதி

 

2501

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்

பற்றும் பரோபதி ஏழும் பகருரை

உற்றிடும் காரிய காரணத் தோடற

அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 1

 

2502

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு

வேறாய் நனவு மிகுந்த கனாநனா

ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்

பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. 2

 

2503

அகாரம் உயிரே உகாரம் பரமே

மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்

சிகாரம் சிவமே வகாரம் பரமே

யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 3

 

2504

உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று

அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து

உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி

வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. 4

 

2505

காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு

காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்

காரிய காரணம் கற்பனை சொற்பதப்

பாரறும் பாழில் பராபரத் தானே. 5

 

29. உபசாந்தம்

 

2506

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே

பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே

சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்

சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1

 

2507

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்

காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி

காரிய காரண வாதனைப் பற்றறப்

பாரண வும் உப சாந்தப் பரிசிதே. 2

 

2508

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்

முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி

மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்

தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. 3

 

2509

ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்

பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி

கூறாத சாக்கிரா தீதம் குருபரன்

பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4

 

2510

வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்

ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்

தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே

ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. 5

 

2511

பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்

திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று

உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்

கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. 6

 

30. புறங்கூறாமை

 

2512

பிறையுள் கிடந்த முயலை எறிவான்

அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்

கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்

நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1

 

2513

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்

கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க

பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே

அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. 2

 

2514

கருதலர் மாளக் கருவாயில் நின்ற

பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை

மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்

தருவலர் கேட்ட தனியும்ப ராமே. 3

 

2515

பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்

இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்

கணம்பதி னெட்டும் கழலடி காண

வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. 4

 

2516

என்னிலும் என்னுயி ராய இறைவனைப்

பொன்னிலும் மாமணி யாய புனிதனை

மின்னிய எவ்வுய ராய விகிர் தனை

உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே. 5

 

2517

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை

ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்

வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து

ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. 6

 

2518

நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்

எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்

பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை

விண்அறி வாளர் விரும்புகின் றாரே. 7

 

2519

விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்

கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்

எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ

பண்ணிடில் தன்மை பராபர னாமே. 8

 

2520

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்

பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்

கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்

பொன்றாத போது புனைபுக ழானே. 9

 

2521

போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி

ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்

காற்றின் விளக்கது காயம் மயக்குறும்

அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே. 10

 

2522

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை

ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை

கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்

மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே. 11

 

2523

ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்

தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்

டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு

வானகஞ் செய்யு மறவனு மாமே. 12

 

2524

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்

தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்

தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்

காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13

 

2525

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்

டிதமுற்ற பாச இருளைத் துரந்து 

மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே

திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. 14

 

2526

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்

சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்

முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்

சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 15

 

31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை

 

2527

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்

துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு

மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்

நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. 16

 

2528

ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்

மருங்கிய மாயா புரியத னுள்ளே

சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே

ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 17

 

2529

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்

விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்

எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்

பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 18

 

2530

ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு

நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்

கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்

வேறே யிருக்கும் விழுபொருள் தானே. 19

 

2531

திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்

வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை

வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து

முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 20

 

2532

ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்

வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்

ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்

தாழ்வது வான தனித்தன்மை தானே. 21

 

2533

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்

நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்

செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்

அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 22

 

2534

புரியும் உலகினிற் பூண்டவெட் டானை 

திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்

எரியு மழையும் இயங்கும் வெளியும்

பரியுமா காசத்திற் பற்றது தானே. 23

 

2535

ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்

ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு

சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்

பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 24

 

2536

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து 

நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்

வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்

சென்றும் இருந்தும் திருவடை யோரே. 25

 

32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி

 

2537

தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்

நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்

பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்

பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. 26

 

2538

நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்

பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்

தவமான சத்திய ஞானப் பொதுவிற்

றுவமார் துரியஞ் சொருபம தாமே. 27

 

2539

சிவமான சிந்தையிற் சீவன் சிதைய

பவமான மும்மலம் பாறிப் பறிய

நவமான அந்தத்தின் நற்சிவ போதந்

தவமான மவையாகித் தானல்ல வாகுமே. 28

 

2540

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்

தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள

பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்

தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே. 29

 

2541

உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்

பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி

அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்

இகந்தன வல்வினை யோடறுத் தானே. 30

 

2542

நலம்பல காலந் தொகுத்தன நீளங்

குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்

பலம்பல பன்னிரு கால நினையும்

நிலம்பல வாறின் நீர்மையன் றானே. 31

 

2543

ஆதி பராபர மாகும் பராபரை

சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்

ஓதுங் கமைமாயே யோரிரண் டோ ரமுத்தி

நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. 32

 

2544

தேராத சிந்தை தெளியத் தெளிவித்து

வேறாத நரக சுவர்க்கமும் மேதினி

ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்

வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. 33

 

2545

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி

நன்பாற் பயிலு நவதத் துவமாதி

ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்

செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. 34

 

33. சுத்தாஅசுத்தம்

 

2546

நாசி நுனியினின் நான்குமூ விரலிடை

ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்

பேசி யிருக்கும் பெருமறை யம்மறை

கூசி யிருக்குங் குணமது வாமே. 35

 

2547

கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்

துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப்

கருவினை யாவது கண்டகன் றன்பின்

புரிவன கன்மக் கயத்துட் புகுமே. 36

 

2548

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்

மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்

மாயை மறைய மறையவல் லார்கட்குக்

காயமும் இல்லை கருத்தில்லை தானே. 37

 

2549

மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்

கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்

ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து

தாழ அடைப்பது தன்வலி யாமே. 38

 

2550

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்

காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்

தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்

காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 39

 

2551

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்

ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்

ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்

ஆசூச மானிடம் ஆசூச மாமே. 40

 

2552

ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு

ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு

ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு

ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே. 41

 

2553

வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச்

சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்

குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்

கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே. 42

 

2554

தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்

தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை

தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்

தூய்மணி தூயனல் தூயவு மாமே. 43

 

2555

தூயது வாளா வைத்தது தூநெறி

தூயது வாளா நாதன் திருநாமம்

தூயது வாளா அட்டமா சித்தியும்

தூயது வாளா தூயடிச் சொல்லே. 44

 

2556

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை

அருளது போற்றும் அடியவ ரன்றிச்

சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்

மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. 45.

 

2557

வினையா மசத்து விளைவ துணரார்

வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்

வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்

வினையாளார் மிக்க விளைவறி யாரே. 46

 

34. முத்திநிந்தை.

 

2558

பரகதி யுண்டென இல்லையென் போர்கள்

நரகதி செல்வது ஞாலம் அறியும்

இரகதி செய்திடு வார்கடை தோறும்

துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. 1.

 

2559

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு

நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்

பாடகில் லாரவன் செய்த பரிசறிந்

தாடவல் லாரவர் பேறெது வாமே. 2.

 

2560

புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்

திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி

அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்

இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே 3.

 

2561

திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே

உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்

கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்

அடலிடை வண்ணனும் அங்குநின் றானே. 4.

 

2562

தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்

போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்

காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்

தீநெறி செல்வான் திரிகின்ற வாறே. 5.

 

2563

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்

கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்

காடும் மலையுங் கழனி கடந்தோறும்

ஊடும் உருவினை யுன்னிகி லாரே. 6.

 

2564

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்

போவார் குடக்கும் குணக்கும் குறுவழி

நாவினின் மந்திர மென்று நடுவங்கி

வேவது செய்து விளங்கிடு வீரே. 7.

 

2565

மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்

தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்

சினக்குறப் பேசின தீவினை யாளர்

தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. 8.

 

35. இலக்கணாத் திரயம்

 

2566

விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்

தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்

விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்

சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே. 9.

 

2567

வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்

கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன

வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்

கல்கலன் என்னக் கதிரெதி யாமே. 10.

 

36. தத்துவமசி வாக்கியம்.

 

2568

சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்

தாவு பரதுரி யத்தனில் தற்பதம்

மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத

மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1.

 

2569

ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்

ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்

பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து

வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2.

 

2570

ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து

ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து

ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப

ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3.

 

2571

துவந்தத் தசியே தொந்தத் தசியும்

அவைமன்னா வந்து வயத்தேகமான

தவமுறு தத்துவ மசிவே தாந்த

சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. 4.

 

2572

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை

அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்

உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்

அருநிலம் என்பதை யாரறி வாரே. 5.

 

2573

தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்

நம்பிய முத்துரி யத்துமே னாடவே

யும்பத மும்பத மாகும் உயிர்பரன்

செம்பொரு ளான சிவமென லாமே. 6.

 

2574

வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்

துய்த்த பிரணவ மாமுப தேசத்தை

மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்

வைத்த படியே யடைந்து நின்றானே. 7.

 

2575

நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்

பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்

தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி

மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. 8.

 

2576

பூரணி யாது புறம்பொன்றி லாமையின்

பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்

ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்

காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. 9.

 

2577

நீயது வானா யெனநின்ற பேருரை

ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்

சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்

ஆயது வாயனந் தானந்தி யாகுமே. 10.

 

2578

உயிர்பர மாக உயர்பர சீவன்

அரிய சிவமாக அச்சிவ வேதத்து

இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன

உரிய உரையற்ற வோமய மாமே. 11.

 

2579

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்

ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்

தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி

சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே. 12.

 

2580

அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்

செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்

பிறிவறி யாது பிரானென்று பேணுங்

குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13.

 

2581

அறிவார் அறிவன அப்பும் அனலும்

அறிவார் அறிவன அப்புங் கலப்பும்

அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்

அறிவான் அறிந்த அறிவறி யோமே. 14.

 

2582

அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி 

அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா

மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்

பதியிற் பதியும் பரவுயிர் தானே. 15.

 

2583

அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்

முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்

படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்

கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே. 16.

 

2584

நின்மல மேனி நிமலன் பிறப்பிலி

என்னுளம் வந்திவன் என்னடி யானென்று

பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்

நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17.

 

2585

துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு

பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே

மறந்தறி யாவென்னை வான்வர் கோனும்

இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. 18.

 

2586

மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்

தவ்வாய அந்தக் கரணம் அகில்மும்

எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்

கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. 19.

 

37. விசுவக் கிராசம்.

 

2587

அழிகின்ற சாயா புருடனைப் போலக்

கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்

எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்

பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. 1.

 

2588

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்

படருஞ் சிவசத்தி தாமே பரமாம்

உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்

கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே. 2.

 

2589

செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்

அவியின் றியமன மாதிகள் ஐந்துங்

குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து

தவிர்வொன் றிலாத சராசரந் தானே. 3.

 

2590

பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்

திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்

உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்

வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. 4.

 

2591

அளந்து துரியத் தறிவினை வாங்கி

உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்

கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால் 

விளங்கிய வெட்ட வெளியனு மாமே. 5.

 

2592

இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்

பரம்பர மான பரமது விட்டே

உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி

இருந்தஎன் நந்தி இதயத்து ளானே. 6.

 

2593

கரியுண் விளவின் கனிபோல் உயிரும்

உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்

அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்

திரிய விழுங்குஞ் சிவபெரு மானே. 7.

 

2594

அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்

தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்

நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே

நந்தி யிருந்தனன் நாமறி யோமே. 8.

 

38. வாய்மை

 

2595

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்

குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை

அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்

செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1.

 

2596

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு

எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை

எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்

எல்லாம் அறிந்த இறையென லாமே. 2.

 

2597

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து

முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்

புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து

கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. 3.

 

2598

தானே யுலகில் தலைவ னெனத்தகும்

தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்

வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்

ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. 4.

 

2599

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்

இருளற்ற சிந்தை இறைவனை நாடி

மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்

பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே. 5.

 

2600

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை

பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை

உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்

மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. 6.

 

2601

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்

பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை

கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்

கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 7.

 

2602

எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்

மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்

பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்

ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. 8.

 

2603

எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்

உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி

பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்

மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. 9.

 

2604

கைகலந் தானை கருத்தினுள் நந்தியை

மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்

பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்

பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே 10.

 

2605

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்

கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை

பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம்

கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. 11.

 

2606

உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்

மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்

பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு

ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 12.

 

2607

வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு

தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா

தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்

செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. 13

 

2608

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்

துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்

தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்

உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. 14

 

2609

மனமது தானே நினையவல் லாருக்குக்

கினமெனக் கூறு மிருங்காய மேவற்

றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்

புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 15

 

39. ஞானி செயல்

 

2610

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்

பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்

தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள்

நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 1.

 

2611

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்

சென்னியின் வைத்த சிவனரு ளாலே. 2.

 

2612

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்

மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா

மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்

தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. 3

 

40. அவா அறுத்தல்

 

2613

வாசியு மூசியும் பேசி வகையினால்

பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை

ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்

ஈசன் இருந்த இடம் எளிதாமே. 1.

 

2614

மாடத்து ளானலன் மண்டபத் தானலன்

கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்

வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்

மூடத்து ளேநின்று முத்திதந் தானே. 2.

 

2615

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் 

ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்த மாமே. 3.

 

2616

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே

படுவழி செய்கின்ற பற்றற வீசி

விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்

தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. 4.

 

2617

உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன

துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்

அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்

தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே. 5.

 

2618

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்

துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும் 

பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்

துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. 6.

 

2619

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்

பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்

திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்

வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே. 7.

 

2620

அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்

சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்

பவனிவன் பல்வகை யாமிப் பிறவி

புவனிவன் போவது பொய்கண்ட போதே. 8.

 

2621

கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்

பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்

விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்

நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. 9.

 

2622

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்

கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்

சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்

முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 10.

 

41. பக்தியுடைமை

 

2623

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்

அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்

சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்

பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 1.

 

2624

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்

கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன்

அடியார் அருளால் அவனடி கூட

அடியா னிவனென் றடிமைகொண் டானே. 2.

 

2625

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்

ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்

பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்

ஊரில் உமாபதி யாகிநின் றானே. 3.

 

2626

ஒத்துல கேழும் அறியா ஒருவனென்

ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்

பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது

முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே. 4.

 

2627

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்

நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை

வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்

ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே. 5.

 

2628

பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்

முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்

அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்

பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே. 6.

 

2629

பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப்

குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி

நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்

இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே. 7.

 

2630

உறுதுணை நந்தியை உம்பர் பிரானை

பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்

செறிதுணை செய்து சிவனடி சிந்தித்

துறுதுணை யாயங்கி யாகிநின் றானே. 7.

 

2631

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற

தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்

கானவன் என்றுங் கருவரை யானென்றும்

ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே. 8.

 

2632

நிலைபெறு கேடென்று முன்னே படைத்த

தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்

மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்

உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே. 9.

 

42. முத்தியுடைமை

 

2633

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்

தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி

மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்

பத்தியி லுற்றோர் பரானந்த போதரே. 1.

 

2634

வளங்கனி தேடிய வன்றாட் பறவை

உளங்கனி தேடி யுழிதரும் போது

களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி

நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே. 2

 

43. சோதனை

 

2635

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து

அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம்

எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்

சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. 1.

 

2636

அறிவுடை யானரு மாமறை யுள்ளே

செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்

பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த

குறியுடை யானொடுங் கூடுவன் நானே. 2.

 

2637

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்

அறிவறி யாமையை யாரும் அறியார்

அறிவறி யாமை கடந்தறி வானால்

அறிவறி யாமை யழகிய வாறே. 3.

 

2638

குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்

தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்

நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்

செறியாச் செறிவே சிவமென லாமே. 4.

 

2639

காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்

பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்

பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை

காவலன் எங்குங் கலந்துநின் றானே. 5.

 

2640

விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்

பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல

இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்

நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. 6.

 

2641

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து

வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள

எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்

சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே. 7.

 

2642

தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்

புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்

பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே. 8.

 

2643

தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது

தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே

படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை

கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே. 9.

 

2644

அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்

இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்

செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்

இவ்வழி நந்தி இயல்பது தானே. 10.

 

2645

எறிவது ஞானத் துறைவாள் உருவி

அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்

செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்

பறிவது பல்கணப் பற்றுவி டாரே. 11.

 

2646

ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின்

வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை

சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்

ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே. 12.

 

2647

அந்தக் கருவை யருவை வினைசெய்தற்

பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்

சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை

சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. 13.

 

2648

உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்

கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்

திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்

புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே. 14.

 

by Swathi   on 24 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.