நமது மாநிலத்திற்கு சென்னை மாகாணம் என இருந்த பெயரை மாற்றி, தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு, விருதுநகர் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, விருதுநகரில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவரும், தேசபக்தி மிகுந்தவரும், நமது நாட்டின் முன்னோடி சுதந்திரப் போராட்ட வீரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவைப் போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் - கயத்தாறில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் திறந்துவைக்கப்பட்ட மணிமண்டபங்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 97 லட்சம் ஆகும்.
|