LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 685 - அமைச்சியல்

Next Kural >

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.)
மணக்குடவர் உரை:
சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
தொகச் சொல்லி-வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கும்; போது மூலவகையாலும் ஒப்புமை வகையாலும் சுருக்கவகையாலும் தொகுத்துச் சொல்லியும் தூவாத நீக்கி நகச்சொல்லி-வெறுப்பான செய்திகளைச் சொல்லும்போது கடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூது ஆம்-தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன். பல செய்திகளை ஒவ்வொன்றாக வேறுபடச்சொல்லின், அவற்றின் பன்மைபற்றியும் நெடுநேரங் கேட்குஞ் சலிப்புப் பற்றியும் அவற்றிற்கு இசையார். ஆயின், அவற்றைத்தொகுத்து ஒரே செய்தியாய்ச்சொல்லின் சுருக்கம்பற்றியும் விளைவறியாதும் இசைவர் என்பதாம். வேற்றரசன் மகளைத் தன்னரசனுக்குப் பெண்கேட்பதும், வேற்று நாட்டில் தன்னாட்டு வணிகக்குழும்பு ஒன்று தங்கி வணிகஞ் செய்ய இடங்கேட்பதும், போன்றவை மூலவகையில் தொகுத்துக் கூறலுக்கும்; சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் வெட்டுதல், சுருங்கைகள் குடைதல் முதலியவற்றைப் போக்குவரத்து வாயிலமைப்பு என்று குறிப்பது, ஒப்புமை வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; கோமுட்டி ஒருவன் தனக்குத் தெய்வங்கொடுத்த ஒரே ஈவைக் கேட்கும் போது, "என் கொட்பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற் கலத்திற் பாற்சோறுண்பதை நான் பார்க்க வேண்டும்." என்று சொன்னதாகக் கதை கூறுவது போன்றது. சுருக்க வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; எடுத்துக்காட்டாம். இன்சொற்குப் பெரும்பாலார் வயப்படுதல் பற்றியே அது நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.
கலைஞர் உரை:
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.
Translation
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lord.
Explanation
He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).
Transliteration
Thokach Chollith Thoovaadha Neekki Nakachcholli Nandri Payappadhaan Thoodhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >