கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்எல்ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் புரட்சிகர தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தலைமை தேர்தல் ஆணையர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வலக்கை நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், முகோபாத்யா டிவிஷன் பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘வாக்களிக்கும் தகுதியுடைய வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 4, 5ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.சிறையில் அல்லது போலீஸ் காவலில் உள்ளவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 62(5)ன்படி வாக்களிக்க முடியாது. இதனால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
|