|
||||||||
துவரையும் தற்சார்புவாழ்வியலும் |
||||||||
முதல்முறையாக குத்தகைக்கு எடுத்த 4காணி (3ஏக்கர்) நிலத்தில் ஆடிமாதத்தில் முதன்மை பயிராக கருங்கண்ணி பருத்தியும், ஊடு பயிராக வரகு, பச்சைபயறு, துவரை, கொடி காய்கறிகள் கொஞ்சமும் வேலிபயிராக துவரை, இருகுசோளம், சிவப்புசோளம், மஞ்சள்சோளம், வெள்ளைசோளம் (வெஞ்சாமரை) இவற்றை மானாவரி பயிராக விதைத்திருந்தோம். எங்களது கிராமத்தில் துவரையை ஊடு பயிராகவும், நிலத்தினை சுற்றிலும் வேலியைப் போலவும் பயிரிடும் பழக்கமே இருக்கிறது, முதன்மை பயிராக பயிரிடுவதில்லை. பொங்கலுக்கு பிறகு ஒவ்வொன்றாக அறுவடை செய்து கொண்டே வந்து தை மாத முடிவிலும் மாசி மாத ஆரம்பத்திலும் துவரை அறுவடை ஆரம்பமானது, துவரையை மண்ணிலிருந்து 1 முழ நீளத்திற்கு தண்டினை விட்டு அரிவாளால் வெட்டி எடுத்து, அதனை சேர்த்து வைத்து கட்டி நிலத்திலோ அல்லது தானிய களத்திலோ கொண்டு வந்து நிற்க வைத்து சுற்றிலும் அடுக்கிவிடுவார்கள். 3அல்லது 5நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு துவரஞ்செடியையும் தனித்தனியாக எடுத்து வெயிலில் நன்றாக காயவைப்பார்கள், பிறகு ஒரு பலகையை தரையில் வைத்து ஒவ்வொன்றையும் அந்த பலகையில் அடிப்பார்கள் அப்போது காய்ந்த துவரங்காய்களும்,இலையும் கொட்டிவிடும் அதனை தனியே சேகரித்த் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த காய்ந்த துவரஞ்செடியை மாட்டு கொட்டகையிலோ அல்லது வீட்டின் கொல்லை புறத்திலோ அடுக்கிவைத்துவிட்டால் அளவை பொருத்து ஒரு சில மாதங்களுக்கு சமையலுக்கு விறகாக பயன்படுத்திக்கொள்வார்கள், ஒரு சில கேஸ் சிலிண்டர்களின் தேவையை இது குறைத்துவிடும். சமையலுக்கு பயன்படுத்தியது போக கொப்பரை கொப்பரையாக நெல் வேக வைக்க இதனை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். காய்ந்த இலையும், துவரங்காயும் கலந்து இருக்கும் கூழத்தை ஓரிடத்தில் கொட்டி முறத்தை கொண்டு விசுறுவார்கள் நன்றாக காற்று அடிக்கும் போது தூற்றுவார்கள் அப்போது இலைகளும் காய்களும் பிரிந்து விடும், அந்த காய்களை ஒரு கொம்பினை கொண்டு அடித்து அதில் உள்ள துவரம்பருப்பையும் தோலினையும் பிரித்தெடுக்க மறுபடியும் காற்றடிக்கும் நேரத்தில் தூற்றுவார்கள் இதன் மூலம் அந்த துவரம்பருப்பு தனியாகவும், துவரம்பொட்டு என்றழைக்ககூடிய துவரையின் இலையும், காயின் தோலும் ஆடுகளும் மாடும் விரும்பி சாப்பிடக்கூடிய சத்துமிகுந்த தீவணமாகும், அறுவடைக்கு பிறகு வரும் கோடையில் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடக்கும் நேரத்தில் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் இந்த துவரம்பொட்டும் உணவாக கிடைப்பதுதான் இயற்கையின் கொடை. இந்த துவரம்பொட்டினை மாட்டுகொட்டகையின் பரணில் மூட்டைகட்டி வைத்துவிட்டால் அடுத்து வரும் மழைக்காலத்திற்கும் அவற்றிற்கான உணவாக பயன்படுகிறது. சில ஆயிரங்கள் கொடுத்து மாட்டுத்தீவனம் என்கிற பெயரில் வாங்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த மூட்டைகளை தவிர்த்துவிடலாம். பிரித்தெடுக்கப்பட்ட துவரம்பருப்பை அளவாக சிறிது எடுத்து தண்ணீரில் ஊறவைத்து அப்படியே சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். சொல்ல மறந்து விட்டேன் அறுவடைக்கு முன்பும் பச்சையாக இருக்கும் துவரங்காய்களை பறித்து, அப்படியே கொஞ்சம் மொச்சை காய்கள், தட்டைபயிறு காய்களையும் சேர்த்து இதே போல தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து சாப்பிட்டவர்கள் மட்டுமே இந்த சுவையை உணர முடியும். ஒரு மாதம் நாம் சாப்பிடும் உணவுகளின் வழியாக கிடைக்கும் சத்தும், ஆற்றலும் அந்த ஒரு நாளில் நாம் பெற்றுவிடலாம் என்பதே உண்மை. முக்கியமாக குழந்தைகளுக்கு கடைத்திண்பண்டங்களையும் அதற்கான செலவுகளையும் தவிர்க்கலாம். வருடம் முழுவதும் வீட்டுத்தேவைக்கான துவரம்பருப்பும் கிடைத்துவிட்டது, ஆடுமாடுகளுக்கான தீவணம் கிடைத்துவிட்டது, திண்பண்டமும் கிடைத்துவிட்ட்து, வீட்டிற்கு விறகும் கிடைத்துவிட்ட்து. அறுவடையின் போது நிலத்தில் ஒரு முழத்திற்கு விட்டு விட்டு வந்திருந்த துவரங்குச்சியும் கோடை உழவிற்கு பிறகு எடுத்து வந்து விறகாக பயன்படுத்துவார்கள். பூச்சரித்த காய்களிலிருந்தும், பிஞ்சுக்காய்களிலிருந்தும் கிடைக்கும் பொடிப்பருப்புகளை அரைத்து கோழிகளுக்கு தீவனமாகவும் கொடுக்கலாம். தண்ணீர் பாய்ச்சாமல், உழுவதும் விதைப்பதும் அறுப்பதுமாகா இருந்த துவரஞ்செடி மட்டுமே நமக்கு இத்தனை தேவைகளை பூர்த்தி செய்கிறது. அப்போ உடன் பயிர் செய்த கருங்கண்ணி பருத்தி, வரகு, பச்சைபயறு, உளூந்து, சோளம், நிலக்கடலை(குத்துக்கடலை), கொடிக்காய்கறிகள் .. இதுவே போதும் இதுதானே தற்சார்பு ..
-அசோக்குமார் |
||||||||
by Swathi on 08 Apr 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|