தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ் பணியை பெருமைப்படுத்தும் வகையில், அவரது 200வது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழறிஞர் கால்டுவெல் அவர்கள் 7.5.1814-இல் அயர்லாந்தில் பிறந்து 1891-ல் தமது 77-ஆவது வயதில் தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலையில் உயிர் துறந்தார். அவரது உடல் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் அவர் எழுப்பிய திருச்சபை ஆலயத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று 23-ஆவது வயதில் சமயப் பணிபுரிவதற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் இடையன் குடியை இருப்பிடமாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றி வந்த இவர் இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரஞ்சு போன்ற மேலைநாட்டு மொழிகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் போற்றத்தக்கப் புலமை பெற்றிருந்தார். அதன் பயனாக "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் ஒப்பிலா உயர் தமிழ் மொழியில் ஆய்வு நூல் ஒன்றை எழுதினார். தனித்து இயங்கக் கூடியது தமிழ் எனத் தக்க சான்று காட்டித் தருக்க முறையில் அறுதியிட்டு கூறியவர் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல்.
இந்நூலே, தமிழ் மொழியின் மொழியியல் ஆய்வுக்கு முன்னோடியாக அமைகிறது. திராவிட மொழிகள் ஒரு தனியினம், அவற்றிற்குத் தாய் தமிழே என விலக்கி உலகுக்கு உணர்த்தி மொழியியல் ஆராய்ச்சியில் நமக்கு வழிகாட்டிய விடிவெள்ளி ஆவார். திராவிட மொழிகட்குப் புத்துயிர் அளித்தவர். இவரது ஒப்பிலக்கண ஆய்வு பணியைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகமும், இராயல் ஏசியாடிக் சொசைட்டியும் அவருக்கு இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் என்ற பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்தின,. எத்தனையோ பேர் கூடிச் செய்ய இயலாப் பெரும்பணியை, எத்தனையோ பிறவி எடுத்துச் செய்யும் தமிழ்த் தொண்டினை ஒரு பிறவியில் ஒருவராகவே இருந்து செய்து, செந்தமிழை உலகறியச் செய்தார்.
தமிழ்மொழி நூல் ஆய்வுக்கு முன்னோடியாக இருந்த தமிழறிஞர் கால்டுவெல் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது இருநூற்றாண்டை சிறப்பிக்கும் வகையிலும் அவரின் இருநூற்றாண்டு நினைவு நாளான 7-5-2014 அன்று காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் இடையான்குடியில் அமைந்துள்ள நினைவில்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலையணிவித்து பெருமைப்படுத்தவும், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து பெருமைப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
|