|
|||||
சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்த தமிழக அரசு புதிய திட்டம் |
|||||
சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை துரிதப்படுத்தும் வகையில் பத்து அம்ச திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்ட சபையில் அறிவித்தார், அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
* தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் அமைக்கப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்படும் குறு தொழில் நிறுவனங்கள் மற்றும்
* அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்படும் வேளாண் சார் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அவற்றின் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் வாங்க
* அவற்றின் மொத்த மதிப்பில் 15 சதவீதம் என்ற அளவில் இப்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் இனி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும். இந்த மானியத்தின் உச்ச வரம்பு ரூ.30 லட்சமாக இருக்கும்.
* சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழிற்பேட்டைகளை அமைக்க, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் நில வங்கி படிப்படியாக உருவாக்கப்படும்.
* சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்களின் அருகில் அமையும் வாய்ப்பைப் பெற்று ஒருங்கிணைந்த பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சிப்காட்டால் உருவாக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்படும் தொழிற்பேட்டைகளில் உள்ள மொத்த நிலப்பரப்பில் குறைந்தபட்சம் இருபது சதவீதம் நிலம் ஒரே தொகுப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக சிட்கோவுக்கு உரிய நிலக் கிரய விலையில் வழங்கப்படும்.
* பெரிய நகரங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தொழிற் குழுமம் மற்றும் தொழிற் பேட்டைகளை நகருக்கு வெளியே தனியார்கள் அமைக்க முன் வந்தால் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குதல், நீர் வழங்குதல், காட்சி, கருத்தரங்கக் கூடங்கள், விற்பனை வசதி மையங்கள் முதலிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொது வசதிகளை ஏற்படுத்த அரசு மானியம் 75 சதவீதம் என்ற அளவில் அதிகபட்சமாக ரூ.15 கோடி வரை வழங்கப்படும்.
* தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள் புதிய தொழில் நிறுவனங்களுக்கென புதிய தொழிற் குழுமம் மற்றும் தொழிற்பேட்டைகளை அமைக்க முன்வரும் பட்சத்தில் அரசு மானியம் 50 சதவீதம் என்ற அளவில் அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை வழங்கப்படும்.
* சிட்கோவின் நடைமுறையில் உள்ள நில விலை நிர்ணய முறை நிலையானதாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, இப்போதுள்ள முழு விலை விற்பனை மற்றும் தவணை முறை விற்பனை ஆகியவற்றை மாற்றியமைத்து லாப நோக்கமற்ற விலை நிர்ணய கொள்கை உருவாக்கப்படும். அரசு மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் மற்றும் தொழிற் கூடங்களை 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்கவும், அதற்குப் பின் தொழில் முனைவோருக்கு முழு கிரய விலையில் வாங்கவும் வாய்ப்பு அளிக்கப்படும்.
* புதிய தொழிற்பேட்டைகளை அமைப்பதில் தகுதியான தனியார் மற்றும் அரசு நிலங்களை தேர்வு செய்து பெறுவதில் ஏற்படும் கால விரயத்தை போக்க தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் ஒற்றைச் சாளர தீர்வுக் குழு ஏற்படுத்தப்படும்.
* சிட்கோ நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் அதற்கு ரூ.16 கோடி அரசின் பங்கு மூலதனமாக வழங்கப்படும்.
* அரசின் தொலைநோக்குப் பார்வை 2023-ல் குறிப்பிட்டபடி, பல்வேறு தொழில் குழுமங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் பயிற்சிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சுயதொழில் நடத்தி வரும் மகளிர் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்களுக்கென சிறப்புப் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.5 கோடி மானியம் அளிக்கப்படும்.
* கூட்டு முயற்சியை உருவாக்கும் வகையில், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க முன்வந்தால் சிட்கோ நிறுவனம் அவற்றுடன் இணைந்து 10 சதவீதம் வரை மூலதனத்தைச் செலுத்தி புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கும் என முதல்வர் சட்ட சபையில் தெரிவித்தார். |
|||||
by Swathi on 08 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|