சட்ட விரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை சேகரிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் 14,000 பேர், ஐ.நா அகதிகள் தூதரக அலுவலகத்தில் பதிவு செய்து இந்தியாவில் வசித்து வருகின்றனர். இது தவிர 40 ஆயிரம் பேர் சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர்.
கடந்த ஜூலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், `இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க வேண்டும்’ என பாதுகாப்பு படையினரை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் கைரேகை, கருவிழி படலம் ஆகிய பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
ரோஹிங்கியர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஆதார் பெற்றிருக்க முடியாது. எனவே, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
|