தன்னுடைய இருபது வயது மகனை சாலை விபத்தில் இழந்ததாலும், உடல்நலப் பிரச்சினைகளால் தனது கர்ப்பப்பையை நீக்க நேரிட்டதாலும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணிபுரியும் பெண்ணிற்கு பேறுகால விடுமுறையை துறை நிர்வாகம் தர மறுத்ததோடு, மருத்துவக் காப்பீட்டு அட்டையிலும் அந்தக் குழந்தையின் பெயரைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது.
மேற்கொண்ட கோரிக்கைகளோடு மருத்துவச்செலவும் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அந்தப்பெண். மனுவினை விசாரித்த நீதிபதி சந்துரு; வாடகைத் தாய் மூலம், குழந்தையைப் பெற்று எடுத்ததை, முறையற்றது என்றோ, நெறிகளுக்கு முரணானது என்றோ, இந்தக் கோர்ட் பார்க்கவில்லை. . மனுதாரரைப் பொறுத்தவரை, அந்த குழந்தையின் தாய், குழந்தைக்குத தாய் என, முடிவாகி விட்ட பின், துறைமுக விடுமுறை விதிகளின்படி, விடுமுறை பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. குழந்தைக்கும், பெற்றோருக்கும், பாச உணர்வை வளர்ப்பது தான், இந்த விதிமுறையின் நோக்கம். குழந்தையை தத்து எடுப்பவர், அந்த குழந்தையைக் கருவுற்று பெறவில்லை; ஆனால், அந்த குழந்தைக்கும், தத்து எடுப்பவருக்கும் இடையில், பாச உணர்வு வளர்வதன் தேவையை, மத்திய அரசும் அங்கீகரித்துள்ளது. எனவே விதிகளின்படி, விடுமுறை எடுக்க, மனுதாரருக்கு உரிமை உள்ளது.விடுமுறை பெறுவதற்காக, பேறுகால பலன் சட்டத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை. அந்தச்சட்டம் குழந்தைப் பிறப்பு மற்றும் அதைப் பெற்ற தாயாரை மையமாகக் கொண்டது. சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழக விடுமுறை விதிகளில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றவர்களையும் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையையும் அங்கீகரித்து, துறைமுக விடுமுறை விதிகளின்படி, மனுதாரருக்கு விடுமுறை வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினராகவும்,குடும்ப மருத்துவக் காப்பீட்டு அட்டையில் உறுப்பினராகவும், குழந்தையை சேர்க்க உத்தரவிடப்படுகிறது. செலவுத் தொகை வழங்க, உத்தரவிட விரும்பவில்லை. இவ்வாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளார். தத்து எடுக்கும் குழந்தைக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் முதல் தீர்ப்பு இது!
|