|
|||||
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு, பாகிஸ்தான் மீண்டும் அழைப்பு! |
|||||
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண, இந்தியாவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைத்து உள்ளார். காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்கவுன்டர் முடிந்த பிறகு அப்பகுதியைச் சரிவரச் சுத்தப்படுத்தாததால் ஏற்பட்ட வெடிவிபத்தால் உள்ளூர் மக்கள் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்ரான் கான் கூறி இருப்பதாவது: ''இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படைகளால் அப்பாவி காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டு இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ப, காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும்'' இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். முன்னதாக, எல்லையில் அத்துமீறல், மும்பை, பதான்கோட்டில் தீவிரவாதத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் உறவில் விரிசல் அதிகமானது. இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடங்கியது. இந்தப் பின்னணியில் தான் பாகிஸ்தான புதிய பிரதமராக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பினார். பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் கடந்த 14-ம் தேதி பதில் கடிதம் அனுப்பினார். அப்போது பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாகத் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவதாக முடிவானது. ஆனால் தீவிரவாதிகள் தாக்குதலால் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்து உள்ளார். |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|